Press "Enter" to skip to content

உழவன்

பொன்னி வளவன்


கரிய இருட்டின்
கொடுங்கோலாட்சியை
ஒழிக்க
கதிரவன்
புறப்படும் முன்பே
கலப்பையை
தோளில் சுமந்து சென்று…..

கரிய இருளிடம்
போராடி வெற்றி பெற்ற
இருமாப்பால்
கதிரவன்
பவனி வரும்
பகல் பொழுது முழுவதும்
நெற்றி வியர்வை
நிலத்தில் விழ உழைத்து…..

கரிய இருளிடம்
இரண்டாம் கட்டப்போரில்
தோல்வியைத் தழுவிய
கதிரவன்
ஓடி மறைந்த பின்பு
வீடு திரும்பும்
உழைப்பாளி!

***
Ravichandran_Somu@yahoo.com

Series Navigation

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

Comments are closed.

உழவன்

தேன்சிட்டு.


காய்ப்படைந்த கைகள்,
வெயிலால் சுடப்பட்டு
கருமை ஏறிய தேகம்,
மண்ணோடு பழகிப் போன பாதம்,
குழிந்த வயிறு,
கூடு கட்டிய நெஞ்செலும்பு,
வானம் பார்த்தே தேய்ந்த இமை,

யார் அது ? ஓரமாய்..
உதிர்ந்து விட்ட ஒரு துளியாய்..
நடு நிசி நேரத்தின்
விசும்பல் சத்தங்கள்
அறுந்து போன இழையாய் …

பொலிவிழந்த ஓவியம் இன்று,
பொடிப் பொடியாய்
நொறுங்கியது இங்கே …

கண்ணீர் பொய்த்தாலும்,
உள்ளுக்குள் ஓடியாடும்
உதிரம் சிந்தி,
வளர்த்த பயிரெல்லாம் வாடியதே ..
வானமும் தந்திடுமா கண்ணீரை ?

மண் வாசமாம், நம் சுவாசத்தின்
தலைப் பாகையில் தங்க கிரீடமாம்
தமிழுக்கே, தனிச் சிம்மாசனமாம்
தேர்தல் களத்தில் மட்டும்
வானைத் தொடும் வாக்குறுதிகள்
வண்ண வண்ணமாய் !!

முப்போகம் விளைந்திடுமா ?
முரசு கொட்டும் நாள் வருமா ?
கல்லறையிலேனும்
‘கழனி செய்யுங்கள் ‘
உதிரும் உழவனின் ஓலக் குரலே
ஓங்கி ஒலிக்கிறது எங்கெங்கும்….

காளை பூட்டிய கட்டை
வண்டிகள் குலுங்கி நடக்க,
நாட்டுப் பாடல்கள்
நான்கு திசையும் ஒலித்து சிரிக்க,
உதவியென்னும் ஒளிக் கரத்தால்
வளைந்து போன முதுகினை
வாளாக்கும் நாள் வருமா ?

thenchittu@yahoo.com

Series Navigation

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

Comments are closed.

Mission News Theme by Compete Themes.