பொன்
மார்கழி வெண்பனி சுற்றுப்புறம் சூழ்ந்து நிற்க
வெண்சேலை மங்கையவள் நெடுஞ்சாலை ஓரந்தனில்
பன்சாதிச் சாரதிகள் விழிகளின் பூரிப்பினில்
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்
வைகாசி வசந்தத்தின் பூப்பினது அணைப்பினிலே
அம்மங்கை சேலையின் பசும்பச்சை நிறந்தன்னை
நெடுஞ்சாலைச் சாரதிகள் பார்வையினால் ரசித்திடவே
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்
கோடையின் கொடையினால் கொண்டையில் பூச்சூடி
அங்கமெல்லாம் மலர்சூடிப் பூரித்து நின்றதனை
நெடுஞ்சாலை இளைஞர்கள் கண்குளிர ரசித்திடவெ
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்
ஐப்பசி மாதம்தனில் குளிர்தென்றல் வீசிடவே
பலவர்ணச் சேலைகளை மங்கையவள் மாற்றிவிட
பல்சாதி வழிப்போக்கர் விழிபிதுங்கி வியந்திட
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்
இலையுதிர் காலந்தனில் சருகுகள் புடைசூழ
சேலையின்றி நிர்வாணமாய்த் துனிந்தே நின்றுவிட
நெடுஞ்சாலைப் பயணிகள் கவனத்தைக் கவராது
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்
திண்ணை
You may also like... |