நான் நானாக …ஒரு வரம்

பிராட்டி(வேதா)


நீ
கடந்த பின்பு
காலியான சாலையில் – உன்
காலடி ஓசை தேடிய நான்!

நீ
எழுந்த பின்பு
உதிர்ந்து விட்ட கடற்கரை மணலில்
உன் பாதச் சுவடு தேடிய நான்!

நீ
பேசிய பின்பு
கரைந்து விட்ட காற்றில் – உன்
குரலதிர்வு தேடிய நான்!

நீ
சிரித்த பின்பு
சிதறிய அலைகளில்
சிந்திய பனித்துளி தேடிய நான்!

நீ
பார்த்துவிட்ட பரவசத்தில்
பதைபதைப்பில் பருவம் உணர்ந்த நான்!

நீ
முடிக்காத கவிதையின்
கடைசி புள்ளியில்
முழுவதுமாய் என்னை
தொலைத்துவிட்டுத் தேடிய நான்!

‘நான் ‘ இழக்காத நான்,
நானாகவே திரும்ப வேண்டும்,
தருவாயா நீயாகவே ?

-பிராட்டி(வேதா)
a_manavazhahan@hotmail.com

Series Navigation

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

பிராட்டி(வேதா)

பிராட்டி(வேதா)