விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு

இரா.முருகன்


1916 ஜனவரி 16 ராட்சச வருஷம் தை 3 ஞாயிற்றுக்கிழமை

வைத்தாஸே, இங்கே இப்போ விடிகாலை ஆறு மணிதான் ஆறது. சீக்கிரமே முழிப்ப்புத் தட்டிடுத்து. இன்னிக்கு ஒரு வேலையா வெளியிலே போக வேண்டி இருக்கு. சொன்னேனே, இந்த ஜேம்ஸானவன் என்ன மாதிரியான விநியோகம் பண்றான், இதோட அபிவிருத்தி எப்படி இருக்கும், கைக்காசு போனா உடுதுணியாவது மிஞ்சுமா, சர்க்கார் உத்யோகஸ்தன், போலீஸ் இப்படி எவனெவன் பிருஷ்டத்தைத் தாங்கி விருத்தியாகணும் எல்லாம் கொஞ்சம் போலவாவது தெரிஞ்சுக்கணுமே. அவனோடு பல்லி மாதிரி ஒட்டிண்டு ஒருநாள் முழுக்க இருந்து கவனிச்சா எல்லாம் கிரமமா மனசில் பதியும்னு நப்பாசை. எட்டு மணிக்கு அவன் வந்ததும் கிளம்ப வேண்டியதுதான்.

இன்னிக்கும் தொழிலுக்குப் போகலை. ரஜா. ஞாயிற்றுக்கிழமை உழைக்கிறது தப்பு என்று எந்த வேதத்திலேயோ சொல்லியிருக்காம். இங்கே தொண்டமான் முதல்கொண்டு தோட்டி வரைக்கும் சனிக்கிழமை ராத்திரியே முழுக்க சுதியேத்திக் கொண்டு உருண்டு பிரண்டு ஸ்திரி சுகம் அனுபவிச்சபடி ராப்பொழுதைக் கழித்துவிட்டு ஞாயித்துக்கிழமை முழுக்க முழுக்க சிரம பரிஹாரம் பண்ணிக் கொள்வது வழக்கம். அதே ரீதியிலே, இன்னிக்கு தொழில் செய்யாம நானும் விஸ்ராந்தியா இருக்கப் போறேன்.

எனக்கேது தொழில்னு பார்க்கறியா? பிச்சை எடுத்தால் என்ன அதுவும் ஒரு வேலை தானே. யாரையாவது அடித்துப் பிடித்து அடிமடியில் கைபோட்டு மூத்ரம் நனைஞ்சு நாறும் காசைப் பறிச்சாலோ, நாலு பவுன் ஒட்டியாணத்தையோ தங்கச் சங்கிலியையோ ஸ்தூலமான ஸ்திரி உடம்பில் இருந்து வியர்வைக் கசகசப்போடு உருவி எடுத்துண்டு ஓடினாலோ அதெல்லாம் தான் திருட்டு. வாங்கோ துரைகளே, ஒரு பென்னி, ரெண்டு பென்னி தர்மம் பண்ணி புண்ணியம் தேடிக்க வாங்கோடீன்னு துரைசானித் தேவிடிச்சிகளே கூவி அழைக்கறதுலே கபடம் ஏது உண்டு சொல்லு?

இந்தப் பிரதேசத்திலே சனிக்கிழமை ராத்திரி இவன்கள் கொட்டமடிப்பான்கள் பார், அதைக் காண ஆயிரம் கோடிக் கண் வேணும். சாராயம் விற்கிற கடைகளில் எல்லாம் சட்டமாக முக்காலி போட்டு ஆரோகணித்து உட்கார்ந்து குப்பி குப்பியாக மாந்தித் தள்ளிக் கொண்டிருப்பார்கள். பெண்பிள்ளைகளும் அத்தனைக்கு லஜ்ஜையில்லாமல் கூடச் சேர்ந்து குடிக்கிறதும் மெல்லப் புகுந்து கொண்டிருக்கு. அவாளும் மனுஷ ஜன்மம் தானே. சந்தோஷமாக இருக்கப்படாதா?

நேற்றைக்கு ராத்திரி பனி கவிந்தபடிக்கு இருட்டு இறங்கினது. நான் கரி அடுப்பில் வாட்டின நாலு ரொட்டியும் கொஞ்சம் உருளைக்கிழங்கும் வெங்காயம் வதக்கியதுமாக சாப்பிட்டு விட்டு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு அக்கடா என்று டவர் பக்கம் உட்கார்ந்திருந்தேன்.

இந்த நேரத்திலும் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைத்துக்கொண்டு ஏசுநாதர் படத்தையோ யுத்தத்தில் நான் தரித்த குப்பாயத்தையோ காட்டி, காலை பாதி ஒடிந்து போனதாக ஜோடனை செய்து மறைத்து நாலு காசு வாங்கலாம் தான். ஆனால் ராத்திரியிலும் தொழில் நடத்தி இதுவரை பழக்கம் இல்லை.

மேலும், துஷ்ட சக்திகள் நடமாட்டம் இருட்டு கூடக்கூட அதிகமாகி சேர்த்த காசை எந்தத் தடியனாவது பிடுங்கிக்கொண்டு கொட்டையில் உதைத்துக் கூழாக்கி விரட்டி விடலாம். என்னத்துக்கு வம்பு? வேண்டாம் என்று நதிக்கரைக் காற்று வாங்கிக் கொண்டு இருந்தேன்.

பிக்பென் என்கிற ஒரு மணிக்கூண்டு கடியாரம் பத்திக் கேட்டிருக்கியோ? லோகப் பிரசித்தம். லண்டன் பட்டணத்துக்கே கேட்கிற தோதில் காண்டாமணி முழக்கி நேரத்தை ராப்பகலாக தெரிவிக்க்கும் இது. இதுக்காகவே ஒரு பிரம்மாண்டமான கோபுரத்தை சர்வேஸ்வரனான மூணு தலைமுறைக்கு முந்திய வெள்ளைக்காரச் சக்கரவர்த்தி எழுப்பி லோகம் இருக்கிற மட்டுக்கும் கணகணவென்று மணி அடித்துக் கொண்டே இருக்க வைத்துப் போனான்.

பாரத தேசத்து புடுங்கி மகாராஜாக்களும் ஜமீந்தார் தாயோளிகளும் சொந்த மணியடித்துக் கொண்டு ஒரு குடி விடாமல் புகுந்து புறப்பட்டு போகத்துக்காக ஊர் மேய்கிறபோது இங்கே நடந்த சத்காரியம் இது.

பிக்பென் பக்கமாக, டவர் பாதாள ரயில் ஸ்டேஷன் மறுவாசலில் தேம்ஸ் நதி தீரம். அங்கே இப்படிக் காத்தாடப் பெஞ்சில் உட்கார்ந்திருந்தபோது ஜேம்ஸ் வந்து சேர்ந்தான். அவன் அங்கே என்னை சந்திப்பதாக சாயந்திரமே ஏற்பாடு.

இது முட்டை வியாபாரம் பற்றி தெரிஞ்சுக்க இல்லை. நானும் நாடகம் பார்க்கணும் என்று நப்பாசை. ஸ்ட்ராண்ட் பேட்டை கொட்டகையில் நடக்கிற நாடகத்தில் தான் ஒரு சின்ன வேஷம் கட்டி ஆடுகிறதாகவும் அது காரணமாக தன்னோடு கூட வருகிற ஒரு நபருக்கு இலவசமாக அனுமதி என்றும் சொல்லியிருந்தான். அப்படியாகத்தான் நான் ஓசிச் சீட்டில் கூத்து பார்க்கப் போய்ச் சேர்ந்தேன்.

பிக்பென் சுநாதமாக ஏழு அடிக்கிற நேரத்தில் ஒரு பாதிரி வந்து பக்கத்தில் நின்றான். பக்கத்து விளக்குக் கூண்டில் மங்கின வெளிச்சத்தில் நான் அந்த மனுஷரைப் பார்த்து விட்டு மரியாதை நிமித்தம் எழுந்து நின்று கர்த்தருக்கும் சர்வ மங்களேஸ்வரி மாதாவுக்கும் முணுமுணுவென்று ஸ்தோத்ரம் சொன்னேன். உங்கம்மா லோலா சொல்லிக்கொடுத்தது. ஞாயிற்றுக்கிழமை அவள் மாதாகோவிலுக்குப் போகும்போது கூடப்போய் இருந்து, மற்றவர்களோட வாய் பார்த்து சும்மா இராமல் சுபாவமாக நடக்க இந்த வழக்கம் வேண்டியிருந்தது.

ஸ்தோத்ரமுமாச்சு மண்ணாங்கட்டியுமாச்சு, கிளம்பு போகலாம்.

அவன் வாயைத் திறந்தாலே விஸ்கி வாசனை மூக்கில் குத்தியது.

பாதிரி சொல்கிற வார்த்தையா இது? முட்டக் குடித்து விட்டு வந்த பாவாடை சாமியா இது? இந்த ஊரிலே இப்படியும் பிரகிருதிகள் நடமாடுவது உண்டோ?

நான் மலைத்துப் போய் நிற்க பாதிரி சிரித்தான். அட, ஜேம்ஸ் இல்லியோ இது?

கொட்டகைக்குப் போய் வேஷம் தரித்துக் கொள்ள நேரம் எடுக்காமல் வரும் வழியிலேயே போட்டுக் கொண்டு போய்விட்டால் சட்டுப் புட்டென்று வேலையை ஆரம்பித்து விடலாம் என்றான் ஜேம்ஸ். ஆனாலும் அவன் வீட்டில் இருந்து கிளம்பும்போது பார்த்திருந்தேன். சாக்குப்பையும் கையுமாக நாலு மனுஷாள் போல் சாமானிய உடுப்போடு தான் கிளம்பிப் போனான். இந்தக் குப்பாயத்தை பையில் சுருட்டி எடுத்துப்போய் வெளியே எங்கேயாவது வைத்து மாட்டிக்கொண்டு, முகத்தில் மாவை ஈஷிக்கொண்டிருக்கலாம். கூத்தும் குடியும் மனுஷனை எப்படி எல்லாம் கோமாளியாக்கி குரங்காட்டம் போடச் சொல்றது பார்.

நாடகமும் கூத்தும் கச்சேரிப் பாட்டுமான கிறக்கடித்துப் போடுகிற வியவகாரங்களில் ஏதாவது உனக்கு சிரத்தை ஏற்பட்டிருந்தால் மேற்படி சுகத்தை அளவோடு வச்சுக்கோ. குடி விஷயத்திலும் ஜாக்கிரதை தேவை. ஸ்திரி விஷயம் குறித்து உனக்கு புத்தி சொல்ல எனக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லை.

எப்படி இருக்கு இந்த பாதிரி ஜோடனைன்னு கேட்டான் ஜேம்ஸ். ஓஹோன்னு தலையாட்டினேன். பாதிரி எக்கேடும் கெட்டுப் போகட்டும். நாளைக்கு முட்டை விற்கிற தொழில் ரகசியம் சொல்லித் தரப் போறவன் ஆச்சே.

போகலாம் வா, நேரமாச்சுது என்றபடி அவன் பாதாள ரயிலுக்குப் படியிறங்கினான்.

சரியென்று கூடப் போனேன். அவனோடு கூட பாதாள ரயில் ஏறி அரை மணி நேரம் போல் சவாரி செய்து ஏர்ள்ஸ் கோர்ட் என்ற பிரசித்தமான லண்டன் பேட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம். மேற்படி ரயிலிலே போக அவன் தான் காசு கொடுத்து எனக்கும் சேர்த்து சீட்டு வாங்கினது. திரும்பும்போது மறக்காமல் நான் பிரதியுபகாரமாக அவனுக்கும் என் காசில் சீட்டு எடுக்க வேண்டும் என்று மனதில் முடிபோட்டு வைத்துக் கொண்டேன்.

மனசு முழுக்க சிண்டும் சிடுக்குமாக எத்தனை முடி. எதுக்குப் போட்டோம் எப்போ போட்டோம், என்னத்தை உள்ளே வச்சு அடைச்சிருக்கோம்னு நினைவு கூட இல்லாம, அத்தனையையும் ஒண்ணொண்ணா அவிழ்த்து முடிக்கிறதுக்குள் ஆயுசே முடிஞ்சுடும்டா குழந்தே.

ஏர்ள்ஸ் கோர்ட்டில் இறங்கி அங்கே ஊர் முச்சூடும் மொய்க்கிற ஒரு சாராயக் கடையில் படியேறினான் ஜேம்ஸ். ஐநூறு வருஷமாக அங்கேயே இருக்கப்பட்ட பாரம்பரியம் கொண்ட கடையாம். தாத்தா குடிச்ச குவளையிலே தளும்பத் தளும்பக் குடிச்சே வம்சம் வளர்த்திருக்கான்கள். எதுக்கெல்லாம் நாலு, எட்டு தலைமுறைன்னு பெருமைப்படறதுக்கு ஒரு அளவே கிடையாது போல் இருக்கு.

நான் ஒரு குவளை பியர் மட்டும் வாங்கிக் கொண்டேன். அதுக்கும் அவன் தான் காசு எடுத்துக் கொடுத்தான். அவனும் பிராந்தி குடித்து தாகசாந்தி செய்து கொண்டான். இப்படி இன்னும் நாலு இடத்தில் விடையாறினால், இவன் நடிக்கிற நாடகம் இன்னிக்கு ஆரம்பிச்ச மாதிரிதான். ஒரு வேளை ராத்திரி முழுக்க நடக்கிற தமிழ் பிரதேச நாடகம் வள்ளித் திருமணம் போலவோ இதுவும்?

நேரமாச்சு என்று நான் மெல்லச் சொன்னேன்,

என்னத்துக்கோசரம் கவலைப்படறே. ராத்திரி வயிறு எக்களிக்க உண்டு பானம் பண்ணி வந்து சாவகாசமாகத்தான் திரையைத் தூக்கற வழக்கம். போய்ச் சேர்ந்து உன்னை முதல் வரிசையிலே உட்கார வைக்க வேண்டியது என் பொறுப்பு.

உற்சாகமாக என் தோளில் தட்டினான் பாழாய்ப் போன அந்த ஜேம்ஸ்.

அந்த மிடாக்குடியன் ஒரு உத்திரிணி மாத்ரம் ஆசமனீயம் பண்ணினதுபோல் அமெரிக்கையாக நடந்து வர, ஒரெ ஒரு குவளை லேசான லாகிரி வஸ்துவை உள்ளே இறக்கின நானோ பரமானந்த சாகரத்தில் மூழ்கி மிதந்தபடி வந்தேன் என்பது நிஜம். வயசானால், லாகிரி லேசும் கடினமும் எல்லாம் ஒண்ணுதான். மனுஷனனைப புரட்டிப் போட்டுக் குப்புறத் தள்ளிடும் பார்த்துக்கோ.

ராத்திரியும் புகை மாதிரி மேலே கவிகிற பனியும் ஆள் ஓய்ந்த அகலமான தெருக்களும், ரெண்டு வசத்திலும் பிரம்மாண்டமாக எழும்பி வெளிச்சத்தில் மினுக்கிக் கொண்டிருக்கிற கட்டிடங்களும், அவ்வப்போது ஓடி வந்து கடந்து போகிற சாரட் வண்டிகளுமாக ஒரு பூலோகம் கடந்த சூழ்நிலை. இந்த சுவர்க்கத்தை அனுபவிக்கவே பிறவி எடுத்திருக்கேன் என்று மனதில் ஒரு சுகமான நினைப்பு. பாதரட்சை அணிந்த கால் தரையில் பாவாமல் அலைபாய்ந்து, மனசும் லேசாகி, வாடா பறக்கலாம் என்று நைச்சியமாகச் சிரிக்கிற பிரமை.

வாயில் பாட்டு சரமாரியாக வந்தது. சாமஜ வர கமனாவும், சத்திய ஸ்வரூபன் ஏசு பிறந்தாரே பெத்லஹேமில் நித்திய ஜோதியாய் நின்று வளர்ந்தாரேயும் சுவரம் தப்பினாலும் குரல் அடங்காது பீறிட பாடிக்கொண்டே ஜேம்ஸ் பாதிரியின் தோளைத் தாங்கிப் பிடித்தபடி நடந்தேன்.

ஒரு மாதாகோவில். பூர்வீகர்கள் ஏர்ள்ஸ் கோர்ட் சாராயக்கடை ஸ்தாபிப்பதற்கும் முன்னால், ஒரு ஏழெட்டு நூறு வருஷம் முன்னால் ஏற்படுத்தினது போல கல் சுவரில் அங்கங்கே காட்டுச் செடி முளைத்தது. கதவு அடைச்சுப் பூட்டி வைத்திருந்தது.

இங்கே இன்னும் பிரார்த்தனை எல்லாம் நடக்கிறதா ஜேம்ஸே என்று விசாரித்தேன்.

போய்ப் பார்த்துத்தான் சொல்லணும்.

ஜேம்ஸ் என்னை மாதாகோவில் வாசலில் ஓரமாக நிறுத்தினான். உள்ளே போய் ஒரு வினாடி பிரார்த்தித்து விட்டு ஸ்ட்ராண்ட் பேட்டைக்கு போக வேண்டியதுதான்.

ராத்திரியிலே அதுவும் லாகிரி பானம் செய்த பிற்பாடு தொழுகையா?

அட, என்னமோ தோணறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் அசந்து தூங்கி பிரார்த்தனைக் கூட்டம் போகிற வழக்கமே அற்றுப் போனது. இப்படி மனசு உத்தரவிடுகிறபோதாவது தொழுதுவிட்டு வந்துடறேன்.

ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு விதம். கோவில் பூட்டி வச்சிருக்க மாட்டார்களோ? ஜேம்ஸைக் கேட்டேன். இரும்புக் கதவு வழியாகவாவது பார்த்து ஹரஹரன்னு கன்னத்தில் போட்டுக்க இதென்ன கபாலீஸ்வரன் கோவிலா?

அதெல்லாம் திறந்து தான் இருக்கும். உனக்கு எதுக்கு வீண் கவலை? நாடகம் ராத்திரி பத்து மணிக்குத் தொடக்கம் என்றான் ஜேம்ஸ் என் மனசைப் படித்த மாதிரி. அவன் ராத்திரிக்கு ஆடப்போவது இங்கிலீஷ் பாஷை வள்ளித் திருமணமே தான் போல் இருக்கு.

ஜேம்ஸ் கோவிலைச் சுற்றிப் பின்னான் நடந்தான். போகும்போது என்னைப் பார்த்துச் சொன்னான் – உமக்குப் பாட வேண்டும் போல் இருந்தால் நீர் பாட்டுக்குப் பாடும். தேவகீதமாக இருக்கிற வரையில் சந்தோஷமான விஷயம்தான்.

அந்நியர் நடமாட்டத்துக்கு இடைஞ்சலாக இருக்குமே என்று சொன்னேன்.

இதெல்லாம் குருமார்கள் இருக்கப்பட்ட பிரதேசம். வாய்விட்டுப் பாடும். யாராவது எதிர்ப்பட்டுக் கடந்து போனால் பாடும். உமக்கு ஸ்தோத்ரம் சொன்னால் பாடும். ஒரே நிமிஷம் தான். போனேன் வந்தேன்னு வந்துடறேன்.

அவன் மெல்ல நாலு திசையும் பார்த்தபடி உள்ளே போனான். ராத்திரி வெளிச்சமும் இருட்டும் மாறி மாறி விளையாட்டுக் காட்டுகிற கோவில் உள்பாதையில் அந்த ஒற்றைக்கை பாதிரி மெல்ல நடக்கிறது பார்க்க நூதனமாக இருந்தது.

நான் விட்ட இடத்தில் இருந்து சாமஜ வரகமனாவைப் பாட ஆரம்பித்தேன். , கூடவே சுவர்க்கோழியும் சுருதி பேதமாக இரைய ஆரம்பித்ததால் நிறுத்தினேன். தூரத்தில் பிக்பென் சத்தமாக முழங்கினது காதில் விழுந்தது. ஒற்றை மணி. எட்டரையோ ஒன்பதரையோ தெரியலை.

ஜேம்ஸ் மாதாகோவில் உள்ளே இருந்து ஓட்டமும் நடையுமாக வந்தான். போகலாம் வா என்றபடி அவன் மூட்டையைக் கைமாற்றினான். ஒரு நிமிஷம் பிடிச்சுக்கோ. இடுப்பு வாரை இறுகக் கட்டிக்கறேன் என்றான். பொணம் கனம் கனத்தது அந்த மூட்டை. எல்லாம் ஒப்பனை பண்ணிக்கற சாதனங்களும் வேறே உடுப்புகளுமாம்.

நாடகக் கொட்டகை பக்கம் இருந்த வைக்கோல் சந்தைப்பேட்டை சந்துக்குப் போய்ச் சேர்ந்தபோது ரெண்டு தாணாக்காரர்கள் என்னைத் தடுத்து நிறுத்தி மூட்டையில் என்ன இருக்கு என்று விசாரித்தார்கள். ஜேம்ஸ் கொடுத்த மூட்டையை இன்னும் நானே சுமந்து கொண்டு வந்திருக்கிறேன் என்பது அப்போது தான் போதமானது.

தான் பாதிரி மற்றும் உதிரி வேஷங்களில் நடிப்பதாகவும், ஒற்றைக் கையோடு ஒப்பனைக்கான ஜாமான்களை சுமந்து போக கஷ்டமாக இருப்பதால் அவனுக்கு சிநேகிதனான நான் கூடவே அதை எல்லாம் தூக்கிக் கொண்டு வருவதாகவும் சொன்னபோது நானும் பலமாக ஆமோதித்தேன். தாணாக்காரர்கள் விலகிப் போனார்கள். அர்த்த ராத்திரிக்கு ஒரு நாழிகை முன்னால் ஜேம்ஸுக்கு அடைப்பக்காரன் என்று அடையாளம் கிடைக்க என்ன கொடுத்து வச்சிருந்தேனோ.

கொட்டகையில் நுழைந்தபோது முதல் மணி அடித்திருந்தது.

ஜேம்ஸ் ரொம்பத் தாமதம் நீ. ரெண்டாம் சீன்லே கூட்டத்துலே முன் வரிசையிலே நிக்கணும். எதுக்கு பாதிரியார் குப்பாயம்? தப்பாப் போட்டுக்கிட்டு வந்திட்டியா? யுத்தத்திலே கை போன ரோமானியப் போர்வீரன் வேஷம் ஆச்சே.

யாரோ சடசடவென்று அவனுடைய பாதிரி குப்பாயத்தை அவிழ்த்து அவன் உள்ளே தரித்த கோவணாதிகளோடு நிற்க ராணுவ வீரன் உடுப்பை மாட்டினார்கள். நான் பாதிரி குப்பாயத்தை கவனமாகச் சுருட்டி என் தோளில் தொங்கின பையில் வைத்தேன். அதில் நங்கென்று கை இடிக்க ஏதோ உலோக வஸ்து. ரோமாபுரி வீரன் சாராயம் குடிக்கிற கோப்பையாக இருக்குமோ என்னமோ.

முதல் வரிசை, ரெண்டாம் வரிசை எல்லாம் நிறைந்து கிடந்ததால் நான் கடைசி வரிசையில் தான் உட்கார்ந்தேன்.

ஒரு எழவும் புரியலை. ஆட்டமும் பாட்டும் சுவாரசியமாக இருந்தது வாஸ்தவம்தான். கதை புரிந்தால் இன்னும் ரசமாக இருக்குமே?

அது சரி, காசு கொடுத்தா இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட வந்திருக்கிறேன்? இனாமாகக் கிடைத்ததுக்கு இதுவே ஜாஸ்தி இல்லையோ.

ஆமா, மேடையில் ஜேம்ஸ் எங்கே? ஊஹும் ஆளையே காணோம். கடைசியில் நாடகம் முடிந்து படுதாவை இறக்க நாலு நிமிஷம் முந்தி யுத்தத்தில் அடிபட்ட படைவீரர்கள் பரிதாபமாகப் பாடிக்கொண்டு போகிற காட்சி.

சொல்லப் போனால் மகா யுத்தத்தில் அடிபட்ட நான் கூட அந்தக் கூட்டத்தில் போக வேணும். இன்னும் நன்றாகவும் பாடுவேன். சாமஜ வரகமனா, ஹிந்தோளத்தில்.

முட்டை வியாபாரம் விருத்தியாகட்டும். நாடகம் எதுக்கு?

கூட்டத்தில் கடைசியாக ஜேம்ஸும் போவதைக் கண்டு புளகாங்கிதமடைந்து அதி உச்சத்தில் கரகோஷம் செய்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். அவங்களுக்கு என்ன போச்சு?

நாடகம் முடிந்து ரோமாபுரி வீரன் உடுப்பை உள்ளேயே வைத்து களைந்துவிட்டு திரைக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்து என்னைக் கூப்பிட்டான் ஜேம்ஸ். அவனுடைய பையில் முன்வசத்தில் ஒரு திறப்பில் வைத்திருந்த கால்சராயையும் குப்பாயத்தையும் மாட்டிக் கொண்டு வா கிளம்பலாம் என்றான்,

நாடகம் பார்க்க வந்து போகிறவர்கள் சாரட் வண்டிகளில் ஏறிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒரு வண்டியில் மேனி கறுத்த ஒரு மேடம் வீற்றிருந்தாள். கூடவே உயர் உத்யோகஸ்தனான ராணுவக்காரன் என்று தோன்றும் மீசையும் கண்ணும் உசரமான தொப்பியுமாக ஒரு வெள்ளைக்காரன் ராஜமுழி விழித்துக் கொண்டு போனான். மேஜராக இருப்பானோ அல்லது ஜெனரலோ. நிச்சயம் லங்கர் கமாண்டர் இல்லை. அது என் போல சமையல்காரர்களைக் கட்டி மேய்க்கிற பணி.

பீட்டர், இந்த சால்வையைப் போர்த்திக்கோ, குளிர் ஜாஸ்தி

மேட்ம சொன்னதை அந்த மேஜர் லட்சியமே பண்ணாமல் புன்முறுவல் பூக்க வண்டி நகர்ந்தது.

என் வாடிக்கைக்காரங்க தான். கென்சிங்க்டன் பக்கம் இருக்கப்பட்டவங்க. என் பெண்டாட்டி மரியா இவங்க வீட்டுலே தான் கல்யாணத்துக்கு முந்தி வேலை பார்த்தா.

நான் வெறுமனே கேட்டுக்கொண்டே நடந்தேன்.

பரம்பரைப் பணக்காரன்னு நான் சொல்லி உனக்குப் புரிய வைக்க வேண்டியதில்லை. நாளைக்கு ஞாயித்துக் கிழமை ஆச்சே. இவங்க வீட்டுலே முட்டையும் பாலாடைக் கட்டியும் கொண்டு போய்த் தரணும். இவங்க மட்டுமில்லே, தெருவிலே இருக்கப்பட்ட எல்லா டெரஸ் அவுசுக்கும் தான்.

ஜேம்ஸ் நடந்தபடி சொன்னான். நான் கனமான அவன் மூட்டையை இன்னும் சுமந்துகொண்டு வந்தேன்.

டெரஸ் அவுஸ் என்னாக்க என்ன ஜேம்ஸே?

நீதான் நாளைக்குக் கூட வரும்போது பார்க்கப் போறியே?

ஜேம்ஸ் சிரிச்சான். காலையிலே எட்டு மணிக்கு தயாரா இரு.

கடன்காரனுக்கு நூறாயுசு. ஜேம்ஸ் வந்துண்டிருக்கான். அவனோடு போய்ட்டு வந்து மிச்சத்தை எழுதறேண்டா வைத்தாஸே.

(தொடரும்)

Series Navigation34 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34 >>

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76

இரா.முருகன்


1916 ஜனவரி 14 ராட்சச வருஷம் தை 1 வெள்ளிக்கிழமை

என் பிரியமுள்ள புத்ரன் வைத்தாஸே,

இந்தத் தேதியிலே தமிழ்ப் பிரதேசத்துலே பொங்கலோ போகியோ கொண்டாடற வழக்கம். சுபதினம். உனக்கும் ஈஸ்வர அனுக்கிரஹத்துலே எல்லா சுபமும் கைகூடி வரட்டும். அமோகமா இருடா கண்ணே.

உனக்கு ஒரு கடுதாசியிலே யோகக்ஷேமம் விசாரிச்சு இவிடத்து வர்த்தமானம் எல்லாம் எழுதி அரைகுறையா நிறுத்தினேன் இல்லியா? ஏன் கேக்கறே, அன்னிக்கு இருட்டிடுத்து. வந்த புதுசு. இருட்டானா விளக்கு ஏத்தி வைக்கறதுக்கு அப்போ இந்த லண்டன் பட்டணத்திலே வீடும் வாசலுமா எனக்கு இருந்தது?

ஏத்தி வச்சு நாமம் சொல்ல, ராமாயணமோ மகாபாரதமோ எல்லோரையும் கூட்டி இருத்தி வச்சு பெலமா படிச்சு பாராயணம் பண்ண. கொடுப்பினை இல்லை அப்போ.

பாரதம் வேண்டாம். அகத்துலே அதைப் பாராயணம் பண்ணினா கலகமும் வீண் சண்டையும் தான் வரும்பார் என் தகப்பனார் ஸ்வர்க்கஸ்ரீ வைத்தியநாத ஐயர். மதராஸ் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கப்பல் ஆபீஸ்லே நேவிகேஷன் க்ளார்க். இப்போ உன் சித்தப்பனும் என் தம்பியுமான நீலகண்டன் அந்த உத்தியோகத்திலே இருக்கான். அதிலே இருக்கானோ, ப்ரமோஷன் கிடைச்சு சப் கலெக்டர் ஆயிட்டானோ தெரியலை. க்ஷேமமா இருக்கட்டும் அவனும் அவனோட குடும்பமும்.

அவன் படிச்ச படிப்புக்கும் மாதா பிதாக்கள் மெச்ச ஏற்பட்ட நடத்தைக்கும் பித்ரு காரியங்களை கிரமமாப் பண்ணி மூணு தலைமுறை பூர்வீகர்களை பட்டினி போடாம வச்சுக்கற நறுவுசான போக்குக்கும் அவன் மேலே மேலே செழிப்பா வருவான். சந்தேகமே இல்லே.

இன்னிக்கு என்னமோ எல்லாருக்கும் ஆசீர்வாதம் செய்யணும்னு, எல்லோரும் அமோகமா இருக்கணும்னு மனசு நிறைஞ்சு இருக்கு. உன் அம்மாவும் என் பெண்டாட்டியுமான லோலா உட்பட சுகமாயிருக்கட்டும். உன் புது அப்பனும் கூட.

மனசுலே சந்தோஷம் பொங்கி வழிய, தொழிலுக்குக் கூடப் போகாமால் உனக்கு கடுதாசு எழுத உட்கார்ந்துட்டேன். நம்ம கதைக்கு வரலாம்.

நான் எப்படி உன் அம்மா லோலாவை அலங்கோலப்படுத்திட்டு குடி புகுந்த நாட்டுலே இருந்து தப்பிப் பிழைச்சு யுத்தத்துலே போய்ச் சேர்ந்தேன்னு ஆறு மாசம் முந்தி அனுப்பின கடுதாசியிலே உனக்கு விஸ்தாரமா எழுதின ஞாபகம்.

எங்களை பிரஞ்சு பாஷை புழங்கற ஒரு பிரதேசத்துக்குக் கூட்டிப் போனான்கள். யுத்தம் பண்ணுங்கோடா என்று ஏவி விட்டுட்டு காக்கிச் சட்டை போட்ட வெள்ளைக்காரத் தாயோளிகள் கையைக் கட்டிண்டு சும்மா நோக்கி நின்னதுகள்.

வெள்ளைக்காரனுக்கும் வெள்ளைக்காரனுக்கும் தான் இந்த லோக மகா யுத்தம் அப்படீன்னு உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. துப்பாக்கி, பீரங்கி, கண்ணி வெடி என்றபடிக்கு சகல ஆயுதங்களும் பிரயோகமான சூழ்நிலை.

திடுதிப்பென்று ஜெர்மன்கார வேசி மகன்கள் இங்கிலீஷ்கார, பிரஞ்சுக்கார அதே ரீதியிலான உத்தம புத்ரர்கள் மேலே ஏதோ விஷ வாயுவைத் திறந்து விட, அதன் பேர் கூட குளோரினோ என்னமோ சொல்றது, ஒரே அதகளம் போ. அப்படி ஒரு சர்வ நாசம்.

ஏராளமான உசிர்ச் சேதம். விஷவாயுவை சுவாசித்து நெஞ்சடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறி ஏகமான ஜவான்களும் ஜனங்களும் மடிந்து போகலாச்சு. வழக்கமா நடக்கற தோதிலே கண்ணி வெடியும் துப்பாக்கியும் வெடிச்சு கை, கால், கண்ணு போனதோ இன்னும் பலபேர். எனக்கும் சுவாசம் முட்டி மயக்கமாச்சு. சுகவீனம். பலவீனம். ஆஸ்பத்திரியிலே படுக்க வைச்சு சிகிச்சை. ஆனாலும் உயிர் உண்டு.

என்னை மாதிரி தப்பிப் பிழைச்சவங்களை ஸ்வதேசங்களுக்குக் கொண்டு போய் விட ஏற்பாடு மும்முரமா நடந்தது.

ரெட்டி, உமக்கு எங்கேங்காணும் போகணும்னு கேட்டார் மேஜர். எங்களோட படைத்தலைவர்.

நான் ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இருந்தாலும், பாரத தேசம்னு உடனே சத்தமா சொன்னேன்.

மன்னிச்சுக்கோடா என் குழந்தே. உன் அம்மா காப்பிரிச்சி லோலாவைக் கைப்பிடிச்சு கல்யாணம் பண்ணி உன்னையும் வாரிசாக குலம் விளங்க, என்னத்தை விளங்க, பெற்று வைச்சாலும் மனசாலே நான் இன்னும் பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோஹோன்னு இருக்கப்பட்ட மதறாஸ் பட்டண தரித்திர வாசி.

தமிழ் பாஷை பேசி, இங்கிலீஷ் படிச்சு பொடிக்கடை உத்தியோகத்துக்குப் போய், காராகிரகத்துக்கும் ஒருவிசை போய் எட்டிப் பார்த்து வந்தது எல்லாம் அந்தப் பட்டணத்திலே தான்.

என் ப்ரியமான ஆத்மசகி லலிதாம்பிகை, உன் பெரியம்மாடா வைத்தாஸே, மறந்துடலியே. அவளை காசி யாத்திரை போய் கன்யாதானம் வாங்கி மாங்கல்ய தாரணம் செஞ்சு கூட்டி வந்து மைலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் குச்சில் இருத்தி குடும்பம் நடத்தினேண்டா குழந்தே.

அவளை நிர்க்கதியா விட்டுட்டு வந்து எங்கெங்கேயோ திரிஞ்சு லோல்படறேன். பட்டதெல்லாம் போறும். பாரதத்துக்கே திரும்பிடலாம்னு பிடிவாதமா முடிவு பண்ணினேன்.

கொஞ்சம் போல் காசு கொடுத்து கையெழுத்து வாங்கிண்டானுங்கள். இந்தியாவுக்குப் பிரயாணத்துக்கான காகிதமும் கூடவே கொடுக்கப்பட்டது.

ஆனா பாரு, கப்பல் ஏற்றி அனுப்பற ஆபீசரான பிரம்மஹத்தி என்னை தவறுதலா சவுத் ஹாம்டன் போற கப்பல்லே ஏத்தி அனுப்பிடுத்து அதாண்டாப்பா, இங்கிலீஷ் தேச சமுத்திரக்கரை.

மற்ற நேரத்திலேன்னா இப்படி தேசம் தப்பி தேசம் போகறது மகா கஷ்டம். கையிலே கொடுத்தனுப்பின ராஜாங்க முத்திரையும் ராணுவ முத்திரையும் பதிச்ச காகிதத்தைப் பார்த்துத் தான் நடவடிக்கை எடுக்கற வழக்கம். ஆனா என்னமோ நாங்க வந்த கப்பல் நங்கூரம் இட்ட நேரத்துலே சுங்க அதிகாரி வங்க அதிகாரின்னு ஒருத்தனையும் ஹார்பர் ஆபீசிலே காணலை.

மூட்டை முடிச்சோடு வெளியே வந்து சுத்திமுத்தும் பார்த்தேன். தேசமும் திக்கும் சுத்தமா புலப்படலை.

தெருவெல்லாம் தூசி போக துப்புரவாப் பெருக்கிண்டிருந்த ஒரு காப்பிரிச்சியை நம்ம பாஷையிலே விசாரிச்சேன். அவளுக்கு அர்த்தமாகல்லை. அதுக்குள், தெரு முனையிலே குப்பை கூளத்தைக் குடைஞ்சுண்டிருந்த அவ ஆம்படையான் பாய்ஞ்சு வந்து என் சட்டையைப் பிடிச்சுட்டான். நான் ஏதோ அவன் பொண்டாட்டியை விடிகாலையிலே சம்போகத்துக்குக் கூப்பிடறதா அவனுக்கு சந்தேகமாயிருக்கும்.

நான் சட்டையை விடுவிச்சபடி அந்த பெண்பிள்ளை கிட்டே கேட்டதையே அவன் கிட்டேயும் கேட்டேன். அவனுக்கு ஓரளவுக்கு அர்த்தமாயிடுத்து. நீ ஆப்பிரிக்கா வாசியா, ஆசியாக் காரனான்னு கேட்டான் அவன். இங்கிலீஷ்லே சுருக்கமா பூர்வோத்ரம் சொன்னேன்.

அவனுக்குச் சொல்லவொண்ணா ஆனந்தம். நம்ம பிரதேசத்தான் தானாம் அவனும். பெண்சாதியோ தெற்கு ஆப்பிரிக்கா தேசத்திலேருந்து வந்த குடும்பமாம். ஆப்பிரிக்காவிலேயும் ஆயிரம் இனம் இருக்காமே.

என் மேலே பரிதாபப்பட்டு காப்பிக்கடைக்கு அழைச்சுப் போய் ஆகாராதிகளும் மூத்திரச் சூட்டில் ஒரு சிராங்காய் காப்பியும் வாங்கிக் கொடுத்தான். இங்கே எல்லாம் காப்பி டீகாக்ஷனை முதலில் சூடு பண்ணி அப்புறம் பச்சைப் பாலைக் கலக்கற வழக்கம்னு ஏற்கனவே யுத்த பூமியிலே கூட இருந்தவங்க சொல்லிக் கேட்டிருக்கறதாலே அந்தக் காப்பி ஒண்ணும் வித்தியாசமாத் தெரியலை.

சவுத் ஆம்ப்டன் பட்டணத்திலே எனக்கு ஏதாவது வேலை வெட்டி கிடைக்குமா, நித்தியப்படிக்கு கொஞ்சம் போல் துட்டு கிடைச்சாலும் கூட கிரமமா மூச்சு விட்டு அக்கடான்னு கிடப்பேன்னு சொன்னேன். தெருப் பெருக்குவியான்னான் சிரிச்சுண்டே அவனோட வாரியலைக் காட்டி. அது ஒண்ணு தான் இன்னும் பண்ணலே, பொழைக்கணும்னா அதுக்கும் தயாராத்தான் இருக்கேன்னேன்.

ஆனாக்க, அந்தச் சின்ன நகரத்திலே அப்படியான ஜோலியும் கிடைக்காத படியாலே, அதிகம் தாமதியாமல் பக்கத்தில் இருக்கப்பட்ட மகா நகரமான லண்டன் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தேன். இங்கே கும்பாரமா வேலை குவிஞ்சிருக்குன்னு நினைப்பு. சவுத் ஆம்டன் கறுப்பனும் அதான் சொன்னான்.

ரெண்டு நாள் அலைஞ்சு திரிஞ்சு அல்லாடி யாரோ கை காட்ட வார் ஆபீசுக்கு வந்து சேர்ந்தேன். புகைக் குழாயிலே புகையிலை அடைச்சு இழுத்து வலிச்சு புகைபிடிச்சபடி இன்பத்தோடு ஒரு அதிகாரி. அதிகாரின்னா எப்பவும் வெள்ளைக்காரன் தான். அட்டணக்கால் போட்டு உட்கார்ந்திருந்தான். என்னடா பயலேன்னு பார்வையிலேயே விசாரிச்சான். அடிமை வந்திருக்கேன் எஜமானே. கை கூப்பினேன்.

என் அழுக்குப் படிஞ்ச மிலிட்டேரி உடுப்பை ஒரு க்ஷணம் கவனிச்சான். கையிலே மடக்கிப் பிடிச்சிருந்த கசங்கிப் போன டிஸ்சார்ஜ் சர்ட்டிபிகேட்டையும் வாங்கிப் பார்த்தான். நீ இங்கே என்ன எழவெடுக்க வந்திருக்கே. உங்க தேசத்துக்குப் போக வேண்டித்தானே யுத்த பூமியிலேருந்து அனுப்பினது? சத்தமாக் கேட்டான்.

அது என் தப்பா? கப்பல் மாத்தி ஏத்தி விட்டுட்டானுகள்.

நீ இங்கிலீஷ் நாலு எழுத்து படிக்கத் தெரிஞ்சவன் தானே. என்ன ஏதுன்னு கேட்டு சரியானபடி பிரயாணம் பண்ண சொல்லித் தரணுமா?

என்னமோ தப்பு நடந்து போச்சு. எனக்கு இங்கே வேலை ஏதாவது கொடுத்தா நன்றி பாராட்டுவேன் எஜமானே. தோட்டி வேலை, தோட்ட வேலை, ரேக்ளா ஓட்டற ஜோலி, சீமாட்டிகளுக்கு எண்ணெய் தேச்சு முதுகு நீவி விடறது இத்யாதி.

அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம். நீ பொத்திண்டு போய்ச் சேரு.

அதுக்கு காசு?

தெருப் பொறுக்கு. ஜேப்படி பண்ணு. என்னை எதுக்கு இம்சை பண்றே?

எங்க மேலே க்ளோரின் வாயுவை அபிஷேகம் பண்ணின ஜெர்மன்காரங்க இந்த மாதிரி பிரகிருதிகள் ஆசனத் துவாரத்திலேயும் அதை நுழைச்சு லோக க்ஷேமத்துக்கு வழிவகுத்திருக்கலாம்.

நான் அதுக்கு அப்புறம் அந்த எழவெடுத்த வார் ஆபீஸ் படி ஏறவே இல்லை. பிரதேசம் பிரதேசமா கடை கடையா ஏறி இறங்கி வேலை கேட்டேன். கோவண்ட் கார்டன்னு பட்டணத்துலே கொத்தவால் சாவடி மாதிரி ஒரு மார்க்கெட்டு இருக்கு. உனக்கு கொத்தவாலும் தெரியாது, கோவண்டும் தெரியாதுடா வைத்தாஸே. தெரிஞ்சா மட்டும் என்ன, வெள்ளைக்கார அதிகாரி மெடல் குத்திவிடப் போறானா?

கையிலே இருந்த காசு ரொட்டியும், தேத்தண்ணியும், பன்னி இறைச்சி சாசேஜும் வாங்கித் தின்னு பசியாறினதுலே கொஞ்சம் கொஞ்சமாக் கரைஞ்சு பத்து நாள்லே ஐவேஜி சுத்தமாக் காலி. அப்புறம் வேறே வழியில்லாம தொப்பியை கையிலே பிடிச்சுண்டு விக்டோரியா டெர்மினஸ் ரயில்வே ஜங்க்ஷன் பக்கமா தரையிலே உட்கார்ந்து கையேந்த ஆரம்பிச்சேன். அது போன வருஷம் ஆகஸ்ட் மாசம்.

நம்புவியோ என்னமோ, இந்த ஆறு மாசத்துலே யாசகம் வாங்கறதுலே கைதேர்ந்த ஒருத்தனாகிட்டேன். வேலை பார்த்தா கிடைக்கிறதை விட எதேஷ்டமா கிடைக்கறது போ. ஒரு நாளைக்கு ஒரு பேட்டைன்னு வச்சுண்டு சுத்தி வந்து காசு தண்டி, தின்னது போக மிச்சத்தை இடுப்புக்கு அடியிலே தோல் சஞ்சியிலே வச்சு இறுக்கிப்பேன். அங்கே கைவைக்க எவனுக்கும் தோணாது. அட்டுப் பிடிச்சு இருக்கறதாலே தொழில்காரி கூட அண்ட மாட்டா. ஆக, பத்திரமா பணத்தோட பாலத்துக்கு அடியிலே படுத்துப்பேன். அதுவும் சுகமாத்தான் இருந்தது போ.

கொஞ்சம் வசதி வந்ததும் லண்டன் டவர் பக்கமா சேரிப் பிரதேசத்துலே ஒரு சின்ன குச்சுவீட்டுலே ஒண்டுக் குடித்தனமா ஜாகை மாத்தினேன். அங்கே யாருக்கும் நான் பிச்சை எடுத்து ஜீவிக்கிறவன்னு தெரியாது. தெரிஞ்சா மட்டும் என்ன குறைஞ்சு போறது? அவங்க எல்லாம் என்ன கவ்னர் உத்தியோகமா பார்க்கிற துரைகள்? கக்கூஸ் அலம்பறதுலே இருந்து ஆட்டுக்குக் காய் அடிக்கறதுவரை அத்தனை குற்றேவலும் செய்து பிழைக்கிற ஜனங்கள். எனக்கு வார் ஆபீஸ்லே உத்யோகம் வாங்கிக் கொடுத்திருந்தா நானும் அதெல்லாம் செய்து ஜீவிச்சிருப்பேன். போறது, அவனவனுக்கு விதிக்கப்பட்டது தானே நடக்கும்?

ஒண்டுக் குடித்தனத்துலே மருந்துக்குக் கூட ஒரு மொரிஷியஸ், பிஜிக்காரனோ, பாரத தேசத்து ஆசாமியோ கிடையாது. பல தேசத்துலே இருந்து வந்த பாமர கலப்பு இன மனுஷர்கள், ஆப்பிரிக்க வம்சாவளி ஜனங்கள் இப்படித்தான்.

இந்தக் கூட்டத்திலே தான் ஜேம்ஸ்னு ஒருத்தன் பழக்கம் ஆனான். வெள்ளைக்காரனுக்கே உரிய புருஷ லட்சணம். மொறிச்சுன்னு வஸ்திரம் தரிச்சு, மிடுக்கா நடந்து, பேசி, கவுரவமான தோரணை எப்பவும். சின்ன வயசுப் பையன். உன்னை விட நாலஞ்சு வயசு பெரியவனா இருப்பான்னு நினைக்கறேன். இவனுக்குப் பொறுத்த மட்டில் ஒரே ஒரு குறைச்சல். புள்ளையாண்டானுக்கு ஒத்தைக் கைதான். அருவாமணையிலே புடலங்காய் அரிஞ்சு தள்ளின மாதிரி வலது முழங்கைக்குக் கீழே இருக்கப்பட்ட பாகம் காணாமப் போயிருக்கும்.

அவனுக்கு நான் கரும்பு தேசத்துலே இருந்து வந்தவன்னு மாத்திரம் தெரியுமே தவிர பழைய புராணம் ஏதும் நான் சொல்லலே. அவனும் கேட்கலை. சொன்னாலும் அவனுக்கு அதெல்லாம் கேட்க பொறுமை ஏதும் இருக்கப் போறதில்லே.

ஜேம்ஸ் குடும்பத்தோட இருந்தான். குடும்பம்னு சொன்னா, அவன் பொண்டாட்டி மரியா. அப்புறம் மாமியார்க்காரி. அவ பெயர் எல்லாம் தெரியாது. டமாரச் செவிடு. சதா கையிலே ஏதோ போத்தல்லே உப்பை வச்சு மோந்து பார்த்துண்டு சகலரையும் தெய்வத்தையும் சபிச்சுண்டு குரிச்சி போட்டு உட்கார்ந்து புலம்பிண்டு இருப்பா. என்னைக் கண்டதும் தவறாம இப்போ எத்தனை மணின்னு கேட்பாள். தெரிஞ்சு என்ன ஆகப் போறது? ஆனாலும் சொல்லுவேன்,

கடியாரம் கூடப் புதுசா வாங்கிட்டேன். கூடவே வாட்ச்சை இடுப்பிலே தொங்க விட்டுக்கற ஒய்யாரமான செயினும். காசு கொஞ்சம் கையிலே சேர்ந்தா செலவழிக்க விதம் விதமா என்னவெல்லாம் தோண்றது பாரு.

இங்கத்திய பொண்கள் அதாவது நடுவயசு கடந்த ஸ்திரிகள் சிலபேர் வந்து என்னை ஆகர்ஷிக்கப் பார்த்தா. எனக்கு என்னமோ அலுத்துப் போச்சு போகமும் கழுதை விட்டையும். வயசான மணியமா இருக்கே. ஆடின ஆட்டமெல்லாம் போறாதா? இன்னும் கொஞ்சம் காசு சேர்ந்ததும் கப்பலேறி மதராஸுக்குப் போய் அங்கே கட்டையை வேகவிட வேண்டியதுதான்.

ஜேம்ஸ் என்ன வேலை பார்க்கிறான்னு தெரியலை. ஆனா அவன் பொண்டாட்டி மரியா இருக்காளே அந்தப் பொண்ணு கென்ஸிங்டன் வட்டாரத்திலே நாலஞ்சு பெரிய மனுஷாள் வீடுகள்லே எடுபிடி வேலை, பாத்திரம் துலக்கிப் பெருக்கி மெழுகறதுன்னு வீட்டு வேலைக்காரியாம். முகத்திலே எப்பவும் சிநேகிதமான சிரிப்பும் வாயிலே நல்ல வார்த்தையுமா இருக்கற அவளைப் பார்த்தாலே சந்தோஷமா இருக்கும். இது கிழட்டு வயசிலே வர்றது. காமக் கலப்படமில்லாதது.

நாலு நாள் முன்னாலே ஜேம்ஸ் தயங்கித் தயங்கி என் குச்சுக்கு வந்தான். என்ன விஷயம் ஜேம்ஸேன்னு கேட்டேன். தொழில் அபிவிருத்திக்கு ஒரு ஐம்பது பவுண்ட் கடனாத் தர முடியுமான்னு கேட்டான்.

நான் கொஞ்சம் யோசிச்சேன். இவனுக்காக இல்லாட்டாலும் இவன் பெண்டாட்டியோட நல்ல குணத்துக்காக பணம் கொடுக்கலாம். எதுக்கும் அவ கிட்டே சொல்லிட்டுத்தான் கொடுப்பேன். வசூலிக்க கஷ்டம் வராது பார்.

நீ என்ன தொழில் பண்றே ஜேம்ஸேன்னு கேட்டேன்.

வீடு வீடா கோழிமுட்டையும் தாரா முட்டையும் கருவாடும் விநியோகிக்கறதுன்னான். எங்கேயெல்லாம் விநியோகிப்பேன்னேன். லண்டன்லே வெஸ்ட்மினிஸ்டர்லே எங்கே எல்லாம் பாதாள ரயில் போறதோ அங்கே எல்லாம். முக்கியமா கென்சிங்டன், நைட்ஸ்ப்ரிட்ஜ் மாதிரி பெரிய மனுஷாள் இருக்கப்பட்ட பேட்டைகள்லே.

அவனுக்கு ஐம்பது பவுண்ட் கடன் கொடுத்தேன். வட்டி எட்டு சதவிகிதம். மாசாந்தரம் கூட்டு வட்டியா கணக்குப் போட்டு வசூலிக்க ஏற்பாடு.

எனக்கு ஒரு யோசனை. எத்தனை நாள் தான் பிச்சை எடுத்து காசு சேர்க்கறது? நாமும் இப்படி ஒரு வியாபாரத்திலே இறங்கினா என்ன?

அதுக்கு முன்னாடி ஸ்திதி விவரங்கள் தெரிஞ்சா தேவலைன்னு பட்டுது.

ஜேம்ஸே, நானும் உன் கூட ஒரு நாள் கூடமாட ஒத்தாசையா வரட்டான்னு கேட்டேன்.

அப்படித்தான் நான் கென்சிங்க்டன் போனது. மலையாளம் பேசற வெள்ளைக்காரச்சியைப் பார்த்தது.

(தொடரும்)

Series Navigation33 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33 >>

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தைந்து

இரா.முருகன்


1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

மனசுக்கு உகந்தவனும் உயிர் போன்றவனுமான ப்ரிய புத்ரன் வைத்தாஸ் என்ற வைத்தியநாதனுக்கு தகப்பன் வரதராஜ ரெட்டி என்ற மகாலிங்கய்யன் எழுதுவதிது.

ஆசீர்வாதம் அனந்தகோடி உனக்கு. அஞ்சு வயசுப் பிராயம் பூர்த்தியான தினம் இல்லையா இன்றைக்கு? ஆடிக் கோடியிலே பிறந்த தலைச்சன் பிள்ளையாச்சே நீ. எல்லா சுபிட்சமும் ஈஸ்வர கடாட்சமுமாக நீ அமோகமாக இருக்கணும்.

அடே வைத்தா.

வைத்தா வைத்தா அப்படீன்னு உன்னை நீட்டி முழக்கிக் கூப்பிடும்போது சுக்கிலமாக என்னைச் சுமந்து என் பூஜைக்குரிய தாயாரின் வயிற்றில் என்னை உயிர் கொடுத்து வளரவிட்ட என் அப்பன் வைத்தியநாதய்யர் ஞாபகம் வந்த படிக்கே இருக்கிறது.

அதுவும் உன்னை அடே என்று சுபாவமாகக் கூப்பிடும்போது அவருடைய மடியில் சிசுவாக உட்கார்ந்தபடிக்கு கழுத்திலே போட்டிருந்த மைனர் செயினைப் பிடித்து இழுத்து அப்படி அவரையும் செல்லமாகக் கூப்பிட்டது மங்கலாக நினைவுக்கு வந்து ஆனந்தம் கொள்ள வைக்கிறது. ஆனால் அந்த ஆனந்தம் கூட வரவில்லை.

நான் கடுதாசு எழுதியே ஜீவிக்கவும் அந்தப்படிக்கே மரிக்கவுமாகச் சபிக்கப்பட்டவன் என்பது உனக்குத் தெரியாதுடா வைத்தா.

ஒரு கன்யகை படுகொலையானதைக் காரணம் சொல்லி என்னைக் காராகிருஹத்தில் வைத்து தூக்கு மாட்டி பரலோக யாத்திரை புறப்பட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் ராஜாங்கத்துக்கு விரசாக என்மேல் பட்சம் வர பிரார்த்தித்துக் கொண்டு நான் எழுத ஆரம்பித்தது அடுத்த பதினைந்து வருஷமாகத் தொடர்ந்தபடிதான் இருக்கிறது.

அந்தக் கருணை மனுக் கடுதாசு லார்டு துரை கைக்குக் கிடைத்ததா, அதைப் படித்துப் பார்த்தானா, பிருஷ்டம் துடைத்து அந்தாண்டை போட்டானா என்பதெல்லாம் தெரியாத சங்கதி. ஆனாலும் சாவிலே இருந்தும் ஜெயிலேலே இருந்தும் நான் ரட்சைப் பட்டது என்னமோ நிஜம்.

உன்னைப் பெற்ற அம்மாவும் என் மாஜி சகதர்மிணியுமான லோலா என்ற லோலிடா விக்டோரியா அம்மையின் மூத்தாளான லலிதாம்பிகா அம்மாளைத் தேடி நான் அலைந்து திரிந்ததும், சமுத்திரம் தாண்டி வந்து கரும்புத் தோட்ட நிலவாரத்தை எல்லாம் அவ்வப்போது அவளுக்கு தெரிவிக்க வேண்டி கடுதாசு எழுதியதும் அப்புறம் கிரமமாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நடந்தேறியது.

மேற்படி லலிதாம்பாளுக்கும் நான் எழுதி அனுப்பிய வர்த்தமானம் எல்லாம் போய்ச் சேர்ந்து அதையெல்லாம் படித்து மனதில் இருத்தி என் ஞாபகம் லவலேசமாவது கொண்டு எங்கேயாவது கையும் காலுமாக ஜீவிக்கிறாளா என்று தெரியாது. ஆனால், அதெல்லாம் கிட்டியிருந்தால் அவள் துடைத்துப் போட மட்டும் உபயோகப்படுத்தியிருக்க மாட்டாள் என்பது திண்ணம்.

ஐந்து வயசு நிறையும் உனக்கு அப்பன் ஸ்தானத்தில் இருந்து அப்த பூர்த்திக்காக கணபதி ஹோமமும் நவக்ரஹ ஆராதனையும் பண்ணிய பிற்பாடு இந்த வருஷம் உபநயனம் நடத்தவும் நாள் குறிக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு.

அதையெல்லாம் துறந்து உன்னையும் உன்னம்மை லோலா சீமாட்டியையும் நட்டாற்றில் விட்டு நடு ராத்திரியில் ஓடி வந்து இப்போது லண்டன் பட்டணத்தில் தெருப் பொறுக்கிக் கொண்டிருக்கிற தறுதலை நான்.

நீ உன் கைக்குக் கிடைத்தாலும் எழுத்து தெரியாத காரணத்தால் இந்தக் கடுதாசைப் படிக்கப் போவதில்லை. ஆனாலும் பத்திரமாக வைத்திருந்து தமிழ் எழுதத் தெரிந்த யாரிடமாவது கொடுத்துப் படித்து அர்த்தமாக்கிக் கொண்டு என்னையும் புரிந்து கொண்டால் எதேஷ்டம்.

மற்றப்படிக்கு நீ பூணூல் மாட்டிக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணி பிராமண சிரேஷ்டனாக இருக்கவேண்டும், நான் மரித்த பிறகு எள்ளும் தண்ணியும் எறச்சு எனக்கு திவசம் கொடுக்கணும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் எனக்கில்லை. அதுக்காக உன்னைப் பெத்துப் போட்ட மகராஜி லோலா மாதிரி லோல்படவும் வேணாம்.

அப்பன் என்ற ஸ்திதிக்கு உனக்கு நான் எதுவும் சேர்த்து வைக்கலைதான். சேர்மானமான தொகையை எல்லாம் அந்தக் கடன்காரி கல்யாணியும் அவளுடைய கையாலாகாத களவாணி வீட்டுக்காரனும் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன இடம் தெரியலேடா என் குழந்தே.

உன் நல்ல அதிர்ஷ்டம், உன்னம்மை லோலா என்னை ரத்துப் பண்ணித் துரத்திவிட்ட அப்புறமாக இதெல்லாம் நடந்தது. இல்லாவிட்டால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மணியாரன் பணியாரத்தைக் கடித்த கதையாக லோலா சொத்தெல்லாம் கூட கோர்ட்டு நடவடிக்கையில் விழுந்து நசித்திருக்கக் கூடும்.

எனக்கு என்ன ஆச்சு என்று நீ இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனாகும்போது அரசல் புரசலாக யாராரோ சொல்ல ஆரம்பிப்பார்கள். அப்புறம் வயசுக்கு வரும்போது அந்தக் கதையெல்லாம் கை, கால், பீஜம் பெருத்து வளர்ந்து போயிருக்கும்.

அவனவன் தன் மனசில் நினைத்து ஏங்கி செய்ய முடியாமல் போன வக்கிரத்தையும் காமாவேச துர்க்காரியங்களையும் ஒண்ணு விடாமல் இதிலே நுழைத்து பூர்த்தி செய்த அந்தக் கதையெல்லாம் நான் சொல்ல வருவதை விட சுவாரசியமாக இருக்கவும் கூடும். ஆனால், அது எதுவும் இது போல் முழு முதல் சத்தியமில்லை.

அடே வைத்தா, உன் பொசைகெட்ட அப்பன் சொல்றேன் கேளு. ஸ்திரி சகவாசமே இல்லாத பூமி ஏதாவது இருந்தால் முதல் காரியமாக அங்கே ஜாகை மாற்றிக் கொள். முடியாத பட்சத்தில் காலாகாலத்தில் உன் மனசுக்குப் பிடித்த கன்யகை யாரையாவது கல்யாணம் பண்ணி உடம்பில் உயிர் இருக்கிற காலம் வரை அவளுக்கு விசுவாசமாக இருந்து உய்யும் வழியை மேற்கொள்வது உசிதம்.

பெண்டாளும் பித்துப் பிடித்து தெரு நாயாக மைதுனதுக்கு ஓடி அலைந்த கழிசடைத்தனம் என்னோடு மண்ணாகி ஒழியட்டும்.

நீ வைத்தாஸாக இருந்தாலும், உன்னம்மை லோலா காப்பிரி எவனையாவது அடுத்த கல்யாணம் பண்ணிக் கொண்டு. செஞ்சிருப்பாள் தடிச்சி. சுற்று வட்டாரத்து காப்பிரி தடியன்கள் பல தரத்திலும் வயசிலும் அவளை மோப்பம் பிடித்து சுற்றி வந்தது எனக்கும் தெரியும். நானும் அதேபடிக்கு வெளியே அலைந்ததால் அதை ஒரு பொருட்டாக கவனத்தில் இருத்திக் கொள்ளவில்லை.

ஏன், உனக்கு நாலு அட்சரம் கஜானனாம் பூத கணாதி சேவிதம் என்று கணபதி ஸ்லோகமும், ஆறுவது சினம் என்று ஆத்திசூடியும் கூடச் சொல்லிக் கொடுக்காமல் உடம்பு திமிர்த்து திரிந்தேன் நான்.

என்ன சொல்ல வந்தேன்? ஆமா, உன்னம்மை காப்பிரிச்சி லோலா அடுத்த கல்யாணம் முடிந்து உனக்குக் கிடைத்த புது அப்பன் உன்னை முழு கிறிஸ்துவனாக வளர்க்க முடிவு செய்திருக்கலாம். நீ யாராக எப்படி இருந்தாலும் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நான் சொல்கிற இந்த புத்திமதி பொருந்தி வரும்.

தோளுக்கு வளர்ந்த பிள்ளை தோழன்னு ஒரு பழமொழி உண்டு. நீ என் உசரமும் அதுக்கு மேலேயும் உன்னம்மை லோலா மாதிரி திடகாத்திரமாக வளர்ந்து சகல ஆரோக்கியத்தோடும் இருக்கணும். உன்னை உற்ற சிநேகிதன் போல் பாவித்து. அப்படி யாரும் எனக்கு இதுவரை கிடைக்கலை. சிநேகிதனாக பாவித்து மனசு திறந்து சொல்கிறது இதெல்லாம்.

நான் பலாத்சங்கம் செய்து படுகொலைப் படுத்தினேன் என்று என்னை தூக்கு மரத்தை தரிசிக்க வைத்த தெலுங்கச்சி கல்யாணி செத்தாலும் எப்படியோ என்னை விடாப்பிடியாகத் தொடர்ந்து தமிழ் மட்டும் பேசுகிற பெண்டாக சமுத்திரம் கடந்தும் வந்த கதையை உனக்கு சாவகாசமாகச் சொல்கிறேன். அதையெல்லாம் நம்புவதும் நம்பாததும் உன் இஷ்டம்.

இவளும் அவளும் கல்யாணி என்கிற பெயரும், ஒரே சாயலும் கொண்ட ரெண்டு பெண் ஜன்மங்கள் என்று நீ எடுத்துக் கொண்டாலும் பாதகமில்லை. ஆனாலும் தெலுங்கச்சியை நான் இச்சித்து திருக்கழுக்குன்றம் பாறையில் பூமியும் ஆகாயமும் தகிக்கும் ஒரு பகல் வேளையில் கிடத்தி அவள் உடம்பில் அடக்கி வச்ச சுகத்தை அனுபவிக்க முற்பட்டது முழுக்க இவளுக்கு எப்படியோ தெரியும்.

ஆனால் என்ன? அதே உடம்பு. அதே சுகந்தமான வியர்வை வாடை. அதே மாதிரி சிருங்காரமான பாவனைகள். ஆக, நான் திரும்ப என் கல்யாணி என்ற மாயச் சுழலுக்குள்ளே ஆனந்தமாக விழுந்தேன். சுற்றிச் சுழற்றி அலையடித்து என்னை கீழே ஒரு வினாடி தள்ளி அடுத்த நொடியில் மேலே எறிந்து விளையாடி உடலை, மனசை, நினைப்பை எல்லாம் எல்லா நேரமும் ஆக்கிரமித்த மோகம் அது.

உன்னம்மை லோலாவைக் கல்யாணம் செய்தாலும் கல்யாணியோடு என் தொடுப்பு தொடர்ந்தபடி தான் இருந்தது. அவள் வீட்டுக்காரனும் அதுக்கு அனுசரணையாக இருந்ததைச் சொல்லியாக வேணும்.

நான் தான் இப்படி வேலை வெட்டி இல்லாமல், இல்லை அதெல்லாம் அம்பாரமாகக் குவிந்திருந்தும் எதையும் சட்டை பண்ணாமல் ரதி சுகத்தில் மூழ்கிக் கிடந்தேன் என்றால் என்னைச் சுற்றி இருக்கிற மொத்த உலகமுமே அந்தப்படிக்கு லகரி லகரியென்று மூச்சு விட்டுக் கொண்டிருக்குமா என்ன?

பாரத தேசத்தில் இருந்தும் லங்கையில் இருந்தும் கொஞ்சம் போல் மிலேயா, சயாமில் இருந்தும் கரும்புத் தோட்ட வேலைக்கு கப்பல் கப்பலாக ஆணும் பெண்ணுமாக வந்து இறங்கியது ரெண்டு வருஷம் முந்தி வரை ஒரு குறைச்சலும் இல்லாமல் நடந்தேறி வந்தது.

சொல்லப் போனால், நம்ம தேசம், என் ஜன்ம பூமியான மதராஸ் பட்டிணத்திலும் சுற்றிப் பரந்து விரிந்த தமிழும் தெலுங்கும் உச்சரிக்கும் துரைத்தனத்து ராஜதானியிலும் உழைக்கிற உழைப்புக்குக் கிடைக்கிறதை விட கூடுதலாக இங்கே கிடைத்ததாலும், அங்கே இருக்கப்பட்ட ஆயிரத்துச் சொச்சம் தீட்டு சமாசாரங்கள் இங்கே இல்லாமல். முழுக்க இல்லேன்னு சொல்ல முடியாது.

ஆனாலும் நான் மகாலிங்க அய்யனா, வரதராஜ ரெட்டியா என்று நதிமூலம் பார்த்து யாரும் ராத்தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளவில்லை. அந்த அளவுக்கு ஜாதி விஷயம் இங்கே பெரிசாக எடுத்துக் கொள்ளப்படாதததாலும், மதராஸ் ராஜதானி, வங்காளம், இந்துஸ்தானி பேசுகிற பிரதேசம் இப்படிப் பல இடத்தில் இருந்தும் தோட்ட வேலைக்கு ஆட்கள் இங்கே வந்த மணியமாக இருந்தது உண்மை.

இதிப்படி இருக்க, போன வருஷம் இந்த நிலைமைக்கு சீர்கேடு உண்டாச்சு. இதுவரைக்கும் இல்லாத தோதில், பூலோகத்து தேசங்கள் எல்லாம் கட்சி கட்டி மோதி சர்வ நாசம் விளைவிக்கிற யுத்தம் ஏற்பட்டதே காரணம். நீ இதைப் படிக்கிற காலத்தில் அதெல்லாம் ஓய்ந்து போய் எல்லோரும் எவ்விடத்திலும் சமாதானமாகித் தத்தம் ஜீவனோபாய அபிவிருத்திக்கு வழி செய்து கொண்டு சகஜமாகப் போய்க் கொண்டிருக்கலாம்.

இன்னும் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில், துப்பாக்கியும் வெடிமருந்தும் கொண்டு லோகமே அழிந்து போகும் என்று பாதிரி ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் சொன்னால் அதையெல்லாம் நம்பாதே. பயப்பட வைத்து காசு பார்க்கிறது எல்லாக் கோவில் பூசாரியும் எங்கேயும் செய்கிறதுதான்.

கிரகணம் பிடித்தால் பீடை. அதுக்குப் பரிகாரம் என்று நெற்றியில் ஓலைச் சுவடியைப் பரிவட்டம் மாதிரிக் கட்டிக் கொண்டு நான் கூட உட்கார்ந்து புகை படிந்த கண்ணாடிச் சில்லு மூலம் ஆகாசத்தில் சூரியன் அஸ்தமிப்பதைப் பார்த்திருக்கிறேன். வேம்பு சாஸ்திரிகள் பரிகாரம் பண்ணிய விதத்தில் வசூலித்த தட்சணையை இடுப்பில் முடிந்து கொண்டு கிளம்பறச்சே சூரியன் திரும்ப வரும்.

சூரிய கிரகணம் கிடக்கட்டும். நான் என்னைப் பிடித்த கல்யாணி கிரகணத்தைப் பற்றி இல்லையோ சொல்லிக் கொண்டிருந்தேன்?

ரெண்டு வருஷம் முன்னால் ஒரு ராத்திரி உன்னம்மை லோலாவை ப்ரீதிப் படுத்தி விட்டு அரையில் வேட்டியைத் தளர்த்தியபடி கல்யாணி இருந்த குச்சுக்கு நடந்தேன். நித்திய கர்மம் மாதிரி இந்த விஷயத்தில் காட்டின சிரத்தையை வேறே கல்வி கேள்வி, தொழில் அபிவிருத்தியில் காட்டி இருந்தால் நான் இன்னேரம் மெச்சத் தகுந்த பெரிய மனுஷனாக ஆகியிருப்பேன். என்ன செய்ய, என் தலைவிதி.

நிலாக் காய்ந்து கொண்டிருந்த நேரம். கல்யாணி தோளில் கை வைத்து உலுக்க அவள் இதுக்காகக் காய்ந்து காத்துக் கொண்டிருந்த மாதிரி என் இடுப்பைப் பற்றி இழுத்து மேலே கிடத்திக் கொண்டாள். அந்தப் பேடிப் பயல் போன இடம் தெரியலை.

ஒரே புழுக்கமாக இருந்ததால் குச்சுக்குள் ரெண்டு பேரும் வெந்து போவானேன், நிலாக் காய, வாசலிலேயே விச்ராந்தியாகப் படுத்து மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போமே என்று நான் யோசனை சொன்னேன். அவளை வெளியே கிடத்தி அனுபவிக்க வேணும் என்று என்னமோ அன்று அடங்கா வெறி.

அர்த்த நக்னமாக வீட்டு முற்றத்தில் ஆகாசத்துக்கும் நட்சத்திரங்களுக்கும் தன் சௌந்தரியம் எல்லாம் காட்டிக் கொண்டு மல்லாந்து கிடந்த கல்யாணிக்குள்ளே நான் அடைக்கலமானேன். தூரத்தில் சமுத்திரம் அலையடிக்கிற சத்தம் ரம்மியமாக காதில் விழ, ராப்பறவை கூவல் அதுக்கு ஒத்தாசையாக அடியெடுத்துக் கொடுக்க, நான் சொர்க்கம் போனதாகக் கற்பனை செய்தபடி அப்புறம் அவள் பக்கத்தில் கிடந்தேன்.

மெல்ல என் காது மடலை முன் பல்லால் கடித்து உதட்டில் முத்தம் ஈந்தாள் கல்யாணி. கண் இமைகளையும் எச்சில் படுத்தி அவள் காதில் குறுகுறுத்தாள்.

நம்ம ஊர்லே இருந்து ஆளுங்களைக் கொண்டு வந்தா கமிஷன் கிடைக்கறதாமே.

ஆமா, கேள்விப்பட்டேன்.

நானும் நாலு காசு பாக்க வேணாமா?

அவள் ஆலிங்கனத்தில் அழுத்தியபடி கேட்டாள்.

நானும் உன்னை முழுசாப் பார்க்கணும்.

ராஜா நீங்க நினைச்சா எல்லாம் நடக்கும்.

அவள் அணைப்பில் உறங்கிப் போனேன் அந்தப்படிக்கே.

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திநாலு

இரா.முருகன்


1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

பகவதி ரெண்டு கையையும் குவித்துக் கும்பிட்டாள். அவள் கண்கள் ஆழமான லயிப்போடு கவிந்திருந்தன. போன ஆத்மாக்கள் நல்ல கதிக்குப் போகட்டும். இனி வரும் தலைமுறைகள் அவர்களைக் கூப்பிட்டு உறவாடி, இதமாக வார்த்தை சொல்லி எள்ளும் தண்ணீரும் இறைக்க மாட்டார்கள். அவரவர் பாடு அவரவருக்கு. மருதையனையோ சாமாவையோ சொல்லிக் குற்றம் இல்லை.

போன திதிக்கு பகவதி வீட்டுக்காரன் சங்கரனுக்கு சிரார்த்தம் கொடுக்க சுப்பா சாஸ்திரிகள் நாலு நாள் முன்னதாக ஞாபகப்படுத்த வந்தார். வழக்கமான வருஷா வருஷம் முன்னறிவிப்பு கொடுக்க வருகிறவர்தான்.

கார்த்திகை சுக்ல பட்சம் திரயோதசி. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்றது. உங்க அப்பா தெவசம்டாம்பா. கோதானம், வஸ்த்ர தானம் எல்லாம் எப்பவும் போல ஏற்பாடு பண்ணிடு. சுத்துக் காரியம் செய்யறதுக்கும் வடை தட்டறதுக்கும் மாமியை நான் சொல்லி வச்சுடறேன். விஷ்ணு எலைக்கு அந்த ராமசுப்பன் உண்டு.

பகவதி சிரத்தையாகக் கேட்க, சாமா இடைமறித்தான்.

இந்த வருஷம் தோதுப்படாது போல இருக்கு. திங்கள்லே இருந்து சென்னைப் பட்டிணத்து துரை ஜமாபந்தின்னு ஆர்ப்பாட்டமா வந்து உட்கார்ந்துடறான். அப்பா திவசத்தை ஆர அமர முடிச்சு அப்பம் வடை தின்னு ஏப்பம் விட்டுண்டு ஆபீஸ் போறதுக்குள்ளே அவன் ஆகாசத்துக்கும் பூமிக்குமா எழும்பிக் குதிப்பான்.

விடிகாலையிலேயே வந்துடறேனே. ஆபீசு போறதுக்குள்ளே எலை போட்டுடலாம்.

இல்லே, சரிப்படாது. அந்தச் சாப்பாடும் ஹோமப் புகையும் நாள் முழுக்க தூக்கம் தூக்கமா கண்ணைச் சுழட்டிண்டு வரும். தாசில்தார் தூங்கினா ஆபீஸே தூங்கிடும்.

பகவதி பரிதாபமாக பிள்ளையைப் பார்த்தாள்.

அரசூர் சங்கரய்யரே, உமக்கு இந்த வருஷம் பிண்டப் பிராப்தி இல்லே. எள்ளை இறச்சு தர்ப்பையாலே ஆசனம் போட்டு உபசாரம் பண்ணி உட்கார வச்சுப் பசியாத்தி அனுப்ப சிரமமாம். சமத்தாப் போய்ட்டு அடுத்த வருஷம் வாங்கோ.

சங்கரன் உயிரோடு இருந்தபோது சகலமானதுக்கும் உபயோகப்பட்ட ஊஞ்சலைப் பார்த்தபடி மனதில் சொல்லிக் கொண்டாள் பகவதி.

சங்கரன் ஊஞ்சலில் உட்கார்ந்து இடது காலால் விந்தி விந்தி ஆடியபடி சிரித்தான்.

வாழைக்காயும், சேனைக்கிழங்கும் இந்த விசை கெடையாதா? போறது. பழகிக்க வேண்டியதுதான். நீயாவது இப்படி ஊஞ்சல்லே வந்து உக்காறேண்டி ராஜாத்தி.

கொஞ்ச நாள் பொறுத்துக்குங்கோ. ராஜாத்தி, கண்ணம்மால்லாம் கட்டிப் பிடிச்சுண்டு அழ அங்கேயே வந்து சேர்ந்துடலாம்.

பகவதி அவனிடம் ஏங்கலும் முறையீடுமாக சொல்ல, கண்ணீர் அடக்க முடியாமல் கன்னங்களில் வழிந்தது.

பரவாயில்லே. இரண்ய சிரார்த்தமும் நியம நிஷ்டைப்படியான தெவசம் கொடுக்கற அதே பலன் தான் தரும். சிருங்கேரி மடாதிபதி, இப்போ இருக்கற பட்டத்துக்கு ரெண்டு பட்டம் முந்தினவா இருந்தாளே அந்த மகான் ஸ்பஷ்டமா கிரந்தமா எழுதி வச்சிருக்கா.

சுப்பா சாஸ்திரிகள் ஏதோ சுலோகத்தை அரைகுறையாகச் சொல்லி நிறுத்தினார். அவருக்கும் சந்தோஷம்தான். நாலு மணி நேரம் சமித்தை ஒடித்துப் போட்டு, நெய்யை ஊற்றி அக்னி வளர்த்து கண் எரிச்சலும் உடம்பு முழுக்க தொப்பமாக நனைக்கிற வியர்வையுமாக மெனக்கெட வேண்டாம். வந்தோமா போனோமா என்று நறுவிசாக இரண்ய சிரார்த்தத்தை முடித்து விட்டு, இடுப்பில் வாத்தியார் சம்பாவனையை முடிந்து கொண்டு கிளம்பி விடலாம். கண்ட எண்ணெயையும், நெய்யையும் விட்டுப் பொறித்த அதிரசமும் பாதி சொத்தையான எள்ளைத் திரட்டிப் பிடித்த எள்ளுருண்டையும் இலையிலே சரமாரியாக வந்து விழுந்து அஜீர்ணம் ஏற்படுகிற அபாயமும் இல்லை.

சங்கரனுக்காவது இரண்ய சிரார்த்த பாக்கியம் இருந்தது. ராஜாவுக்கு அதுவும் இருக்கும் என்று பகவதிக்குத் தோன்றவில்லை. மருதையன் கொஞ்ச நாளாகவே நாஸ்திகத்தில் ஒரு காலும், பழகின சம்பிரதாயத்தில் இன்னொரு காலுமாக இருக்கிறதாக சாமா சொல்லியிருக்கிறான். அது ராஜா மரித்த அடுத்த நாள்.

இதென்னடா, இன்னிவரைக்கும் இல்லாத வழக்கமா இவன் புத்தி இப்படிப் போகணுமா? அவனோட அப்பாவை கொலைப் பட்டினி போட்டுடுவானா இனிமே?

அவள் ஆச்சரியப்பட்ட போது சாமா கேட்டான்.

இதென்ன புடலங்கா சமாச்சாரம். உங்க அண்ணா, அதான் எங்க மாமா ஜான் கிட்டாவய்யர் என்ன எள்ளும் தண்ணியுமா வருஷாப்தீகமா வாங்கிண்டு இருக்கார்?

ராஜா விதி அப்படீன்னா பகவதி என்ன செய்ய முடியும்? கிட்டா அண்ணா கதி?

பக்கத்தில் வேதையனும் பரிபூர்ணமும் நிற்பது நினைவுக்கு வர அவர்களை விசனத்தோடு பார்த்தாள் பகவதி. கிட்டா அண்ணாவை மறந்திருப்பார்களோ.

நாங்க இங்கே இருக்கலாமா இல்லே கிளம்பட்டுமா?

வேதையன் மெல்லிய சப்தத்தில் பகவதியைக் கேட்க, அவன் பெண்டாட்டி பரிபூரணம் இதையெல்லாம் முழுக்கப் பார்த்து விட்டுத்தான் போகப் போறேன் என்பது போல் ஓரமாகப் போய் உட்கார்ந்து பனை ஓலை விசிறியால் விசிறியபடி நடக்கிறதை எல்லாம் சுவாரசியமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

கிட்டா அண்ணாவுக்கு கிறிஸ்து மகரிஷி சொன்னபடி வேதையன் வருஷா வருஷம் ஏதாவது சடங்கு சம்பிரதாயம் செய்து தீர்ப்பான் என்று பகவதிக்குத் தோன்றியது. அவன் விட்டாலும் அவன் பெண்டாட்டி பரிபூரணம் விடமாட்டாள். கருத்தான பொண்ணு. மதம் ஏதானால் என்ன, அவளும் நல்ல ஈஸ்வர விஸ்வாசி இல்லையோ.

ஜோசியக்காரர் என்ன மந்திரம் என்று தெரியாமல் அரை முணுமு
ணுப்பும் கனைப்புமாக ஏதோ சொல்லிக் கொண்டே போக, வேதையன் கையைக் கூப்பிக் கொண்டு நின்றான். அவன் நிற்கிற சாயல் அசல் கிட்டா அண்ணா தான். விருச்சிகம் ஒண்ணு சாஸ்தா கோவிலுக்கு மாலை போட்டுக் கொண்டு விசாலம் மன்னியை நமஸ்கரிக்க கிட்டாவய்யன் இப்படித்தான் பவ்யமாக நிற்பான்.

அதெல்லாம் எந்த ஜன்மத்தில்? நிஜமாகவே நடந்ததா இல்லே மனசு கற்பனை செய்கிறதா?

பகவதிக்குப் புரியவில்லை. எங்கேயோ ஜனிக்க வைத்து எங்கேயோ வாழ்க்கைப்பட்டு மிச்ச காலம் முழுசும் ஜீவிக்க வைத்து கொஞ்சம் லாபப்பட, நிறைய நஷ்டப்பட வழி செய்து இன்னும் அலையடித்துக் கொண்டு பொங்கிப் போய்க்கொண்டிருக்கும் பெயர் தெரியாத பிரவாகத்தில் அவள் ஒரு துரும்பு.

கிழக்குப் பார்த்து உட்கார்ந்து இந்தப் பூணலைப் போட்டுக்கறேளா?

ஜோசியக்காரர் நீட்டிய பூணூலை மரியாதையோடு தொட்டு வேணாமே என்று சொல்லி விட்டான் மருதையன்.

பகவதிக்காகத் தான் இவ்வளவு வணங்கிக் கொடுத்து வந்து உட்கார்ந்து பித்ரு காரியம் பார்க்கிறான் அவன். அவள் சொன்னால் சாமா கூட எதிர்ப்பேச்சு பேசுவான். மருதையான் மாட்டான்.

ஒரு நாள் தானேடா மருதையா. போட்டுண்டு கழட்டிடேன்.

பகவதி கேட்டு முடிக்கும் முன்னால், அதில்லாட்ட என்ன, பரவாயில்லே என்று தாராள மனசோடு சொல்லி விட்டார் ஜோசியக்காரர்.

பெரிய இடத்துப் பிள்ளைகள். ஆயிரம் ஜோலி இருக்கும். போனவர்கள் போய்ச் சேர்ந்தாச்சு. இந்த படையலும் மற்றதும் அவர்களுக்கு பத்திரமாக ஏதாவது ரூபத்தில் போகுமா என்று ஜோசியக்காரருக்கும் சந்தேகம் தான். தவிரவும் கர்மத்தை செய்து முடிக்க முடியாதபடியான விதி விலக்கு சந்தர்ப்பங்களில் என்ன மாதிரி செயல்படணும் என்று கிரந்தங்களில் சொல்லி இருக்கிறது. அவர் தட்சணையை பத்து ரூபாயாக்கி சாயந்திரம் பனை வெல்லம் கலந்த தயிரை மருதையன் பானம் செய்தால் போதும். பரலோகம் போன ராஜா பங்குக்கு இன்னும் ஒரு வருஷத்து ஆகாரமும் பானமும் அதி விரசாகப் போய்ச் சேர்ந்து விடும்.

மருதையன் இஷ்டமே இல்லாமல் தட்சிணையை கூட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டான். பகவதி பனை வெல்லத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி கையில் கொண்டு வந்திருந்த அப்பம், வடை, அதிரசத்தை எல்லாம் விரித்து வைத்த வாழை இலையில் பரிமாறினாள்.

சாமிகளே, கொஞ்சம் சீக்கிரம் உங்க படையலை முடிச்சீங்கன்னா வேறே வேலையை ஆரம்பிச்சுடலாம். அம்மா வேறே பாவம் காலை முச்சூடும் அடுப்படியிலே வெந்து எல்லாம் செஞ்சு எடுத்து வந்திருக்கு.

மருதையன் பகவதியை வாஞ்சையோடு பார்த்தபடி சொன்னான்.

உனக்கு என்னடியம்மா கொறச்சல்? ஒண்ணுக்கு ரெண்டா பிள்ளைகள். இந்த அப்பம் வடையிலே கொஞ்சம் நானும் எடுத்துக்கறேன். ராஜா வேண்டாம்னா சொல்லப் போறார். எத்தனை நாள்பட்ட பழக்கம் ரெண்டு குடும்பத்துக்கும்.

சமித்துப் புகையில் பகவதி கண்ணில் மங்கலாகப் பட்டு சங்கரன் மறைந்து போனான்.

புதுத் துண்டில் காய்கறியை மூட்டை கட்டிக் கொண்டு இலையில் பொதிந்த ஏழெட்டு அதிரசமும் வடையுமாக ஜோசியக்காரர் கிளம்பியபோது அவர் முகத்தில் அலாதியான ஆனந்தம் தெரிந்தது. மருதையன் இருபது ரூபாய் தானம் கொடுத்திருந்தான்.

இவன் கொடுக்கிற கடைசி தட்சணை இது.

அடங்கிக் கொண்டிருந்த ஹோமப் புகையில் திரும்ப எழுந்து வந்த சங்கரன் பகவதி காதில் கிசுகிசுத்தான்.

அடுத்த வருஷம் முழு நாஸ்திகனாயிடுவான் இந்தப் பிள்ளையாண்டான்.

மூணு தலை, ஏழு கை பிறவி மாதிரி மருதையன் ஆகிறதாக பகவதி கற்பனை செய்ய, அதொண்ணும் இல்லை என்றான் சங்கரன் அவள் தோளை ஆதரவாகத் தழுவி அணைத்துக் கொண்டு.

மனுஷ்ய சிநேகியா இருப்பான். அது போறும். ராஜாவோட வம்சத்துக்கு முழுக்க பித்ரு கடன் அடைச்ச புண்ணியம் அவனுக்கு சித்தியாகப் போறது.

இதெல்லாம் இப்போ சாப்பிடறேளாடா இல்லே மதியச் சாப்பாட்டுக்குப் போட்டுக்கறேளா?

பகவதி தூக்குப் பாத்திரத்தோடு கிளம்பும்போது மருதையனையும் சாமாவையும் கேட்டாள்.

ஒண்ணு ரெண்டு எடுத்து வச்சுட்டு பிள்ளைங்களுக்குக் கொடுத்திடுங்கம்மா.

அதுக்கு இன்னும் கொஞ்சம் பண்ணி வச்சிருக்கேனே.

நான் இதெல்லாம் சாப்பிடலாமோ?

வேதையன் சந்தேகத்தோடும் சங்கோஜத்தோடும் கேட்டான்.

ஆஹா, அதுக்கென்ன? வாங்களேன். எல்லோருமா மதியச் சாப்பாட்டை முடிச்சுடலாம்.

மருதையன் சட்டென்று சொன்னான். வேதையன் மனைவி பரிபூரணம் அவன் இப்படி யாசிக்கிறது மாதிரிக் கேட்டதுக்காக சங்கடப்பட்டு வெளியே கிளம்ப யத்தனித்திருந்ததை அவன் கவனித்திருந்தான்.

சரி, இங்கேயே எல்லோரும் உட்காருங்கோ. பரி, நீயும் நானும் அப்புறமா சாப்பிட்டுக்கலாம். ரெண்டு பேரா பரிமாறினா எளுப்பமா இருக்கும். ஒரு கை கொடுடியம்மா.

பரிபூரணம் முகத்தில் உடனே அலாதியான ஆனந்தம் தெரிந்தது. தன்னையும், வீட்டுக்காரனனயும் இங்கே தனியாக ஒதுக்கி வைத்து யாரும் பார்க்கவில்லை. இதுவும் அவளுடைய சொந்த வீடு மாதிரித்தான். நல்ல மனுஷ்யர்கள். அத்தை அவளைச் செல்லமாகப் பரி என்றில்லையா கூப்பிடுகிறாள்.

குதிரைக்கு கொள்ளு தின்னக் கொடுக்கலாமா?

வேதையன் கேட்டபடி பரியைப் பார்க்க, இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லே என்றாள் அவள் முகத்தில் சிரிப்பு மாறாமல்.

ஜாதிக் குதிரை மாதிரி ஜிவ்வுனு இருக்கேடி என்று அவன் போக சுகத்தில் பிதற்றுகிறது வழக்கம் தான். இது வேறே மாதிரி பரிவான அழைப்பு அவளுக்கு.

சாமா பிள்ளைகளும் வேதையனோடு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட இஷ்டப்பட்டார்கள். மலையாளம் கலந்த தமிழில் அந்த மாமன் விஞ்ஞானம், சரித்திரம், லகுவான முறையில் கணிதம் எல்லாம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். பதிமூன்றாவது பெருக்கல் வாய்ப்பாடை அவர்கள் கரதலப் பாடமாகச் சொல்ல முடியும் இப்போது. இங்கிலீஷிலும் நூதனமான பாட்டுகளை துரைத்தனத்து மெட்டுக்களில் பாட அவர்களுக்குக் கற்பித்திருக்கிறான் வேதையன்.

திவச வீட்டுக்குப் பொருந்தாத கோலாகலத்தோடு அங்கே விருந்து நடக்க, வாசலிலே ஏதோ சத்தம்.

நாடிமுத்துக் கொத்தனாரும், தச்சு ஆசாரியும் இன்னும் யாரோ நாலைந்து பேரும் தலலயை உள்ளே நீட்டிப் பார்த்து விட்டுப் பின்வாங்கினார்கள்.

மகாராஜா போஜனம் பண்றாப்பல இருக்கு. மெதுவா முடிச்சு வந்தாப் போதும். வாசல்லே காத்தாட உக்கார்ந்து வார்த்தை சொல்லிட்டு இருக்கோம்.

நாடிமுத்து கொத்தனார் குரல் மட்டும் வெளியே இருந்து வந்தது.

வேதையன் சிரித்து விட்டான். அவனுக்கு மருதையனை கிரீடம் வைத்த மகாராஜாவாகக் கற்பனை செய்ய உற்சாகமாக இருந்தது.

நாடிமுத்து அண்ணாச்சி, மகாராஜா எல்லாம் இங்கே இல்லே. வெறும் பய மருதையன் தான் அப்பம் வடை சுவியம் தின்னுக்கிட்டிருக்கேன். உங்களுக்கு நாலு எடுத்துத் தரச் சொல்லட்டா?

அய்யோ, மகராஜா என்னத்துக்கு சிரமம்? நாங்க இப்பத்தான் மூக்குப் பிடிக்கத் தின்னு முடிச்சு வரோம். சித்தாள் பொம்பளை பொன்னாத்தா இருக்குல்லே. அதோட மக ருதுமதியான சடங்கு. ஆடு வெட்டி அமர்க்களம் பண்ணிட்டா போங்க. கண்ணு கெறங்குது. அய்யா கூப்பிட்டு விட்டீங்களேன்னு கிளம்பிட்டோம்.

பள்ளிக்கூட விஷயம் பேசத்தானே வந்திருக்காங்க?

சாமா மருதையனை விசாரித்தான்.

சாப்பிட ஆரம்பித்த வேதையன், எந்தப் பள்ளிக்கூடம் என்பது போல் மருதையனைப் பார்த்தான்.

அரண்மனையை இனிமேல் கொண்டு பள்ளிக்கூடமாக்கிடலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்.

திருப்தியாக இன்னொரு அதிரசத்தை எடுத்துக் கடித்தபடி மருதையன சொன்னான்.

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று

இரா.முருகன்


1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

ஏண்டா பரதேசிங்களா என்ன ஊருடா இது?

ராஜா சத்தமாகக் கேட்டார். இருமலில் பிசிறடிக்காமல், கபத்தை முழுங்கிக் கொண்டு கொழகொழவென்று எதிரொலிக்காமல் கணீரென்று இருந்த அவருடைய குரலைக் கேட்க அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. அட, கேக்குதே எளவு இம்புட்டுத் துல்லியமா!

யாரோ றெக்கை கட்டின சாமியான் மாதிரி பறந்து வந்து பக்கத்தில் நின்றது கவனத்தில் பட்டது. புஸ்தி மீசையும் புதுசாக் கல்யானம் ஆன மிடுக்குமா இது அந்த மாமனார்க் கிழவன் இல்லியோ?

ஆமா, நீ இன்னும் இளந்தாரின்னு நெனப்போ.

புஸ்தி மீசைக் கிழவன் கொக்கரித்தான்.

வக்காளி, நெனைக்க விட மாட்டேங்கறான். சரி, கொஞ்சம் மரியாதையாத்தான் கதச்சுப் பார்ப்போம்.

நல்லாயிருக்கீகளா மாமா?

ஏதோ இருக்கேன்’பா. காலையிலே தான் நம்ம பொம்பளை சொன்னா நீ வந்து சேர்த்துட்டேன்னு. போக்குவரத்து எல்லாம் பிரச்சனை இல்லியே?

என்ன போக்கு வரத்து? எங்கிட்டு இருந்து எங்கிட்டுப் போறதுக்கு?.

ராஜாவுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை. மசங்கலாக அவருக்கு நினைவு இருக்கிறது. நினைப்பும் கனவுமாக ஒரு மாசம் போல கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார். மருதையனோ, அடுத்த வீட்டு தாசீல்தார் அய்யர் பையனோ சட்டியிலே இவர் மூத்திரம் போக, கொண்டு போய்க் கொண்டிக் கொண்டிருந்தார்கள். பழனியப்பன் இல்லை அது நிச்சயமாக. அவன் சொர்க்கவாசி ஆகி நாலு மாசம் ஆகிவிட்டது. ராஜா பயிர் செய்து வைத்திருந்த புகையிலையை ஆசை தீர மென்றபடிக்கே அவன் மேற்கொண்ட யாத்திரை அது. போகட்டும் அவனுக்காவது அரண்மனை சாகுபடி பிரயோஜனப்பட்டதே.

பழனியப்பன் வியோகமானதற்கு ரெண்டு நாள் கழித்து மீதி புகையிலையை மண்வெட்டியால் கெல்லி தூரப் போட்டு விட்டு அரண்மனைத் தரையில் காரைக் கட்டடம் எழுப்ப மருதையன் மெற்பார்வை பார்த்தபடி நின்றதை ராஜா கட்டிலில் இருந்தே கவனித்திருக்கிறார்.

தீர பசி என்பதே இல்லாமல், சகல நேரமும் தாகம், அதுவும் தேத்தண்ணியோ காப்பியோ குடிக்க இச்சை. தாசீல்தார் சாமா வீட்டில் இருந்து படிக் கணக்கில் அனுப்பின காப்பித் தண்ணி குடிக்க வேண்டியது, யாரையாவது மூத்திரச் சட்டியைப் பிடிக்கச் சொல்ல வேண்டியது, தூங்க வேண்டியது இப்படியே போன ஜீவிதம் என்ன ஆச்சு?

நேத்து பகல் ஒரு மணிக்கு அது முடிஞ்சுது மாப்புளே.

புஸ்திமீசையான் ரொம்ப சந்தோஷமாகச் சொன்னான். மூணு சீட்டு விளையாட ஒரு கை குறைந்த நேரத்தில் ஏப்பை சாப்பையாக ஒருத்தன் நானும் வரேன் என்று வந்து உட்கார்கிற மாதிரி அவன் சந்தோஷம் அவனுக்கு.

ஏதோ பொம்பளை என்றானே வந்ததும் வராதுமாக. எந்தப் பொம்பளை? இந்தாளு இங்கேயும் வந்து தொடுப்பு வச்சுக்கிட்டானா? செய்யக் கூடியவன் தான். சரி நமக்கு எதுக்கு வம்பு?

ராஜா கொஞ்சம் அடக்கி வாசிக்க முடிவு செய்தார்.

வந்தது வந்தாகி விட்டது. இது அவன் இருக்கப்பட்ட இடம். ரொம்ப நாள் முன்னாடியே துண்டையோ கோவணத்தையோ உருவிப்போட்டு இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறான். ராஜா அனுசரித்துத் தான் போகணும் அவனை.

மாமா உடம்பெல்லாம் சொடக்கு எடுத்து விட்ட மாதிரி சீரா இருக்குது.

எதையாவது பேச வேண்டியிருக்கிறது. கஷ்டத்தை சொன்னால் இவன் சந்தோஷப் படுவான். சந்தோஷத்தைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாமே.

மாப்புளை தொரை, உடம்பா? அது எங்கே இருக்குது இங்கே? அலங்காரமாப் பாடை கட்டித் தூக்கிப் போய் அடக்கம் பண்ணிட்டாங்களே.

கிழவன் கபடமாகச் சிரித்தான். என்ன கருமாந்திரமோ அவனுக்கு மட்டும் தொளதொளவென பாதிரியார் ஞாயித்துக்கிழமை மாதா கோவிலுக்குப் போக அங்கி மாட்டிக் கொண்டு வந்த மாதிரி ஒரு உடுப்பு, முகமும் உடம்பும் அன்னிக்கிக் கண்ட மேனிக்கு அழிவில்லாமே அப்படியே தான் இருக்குது. சுகலோலப் பிரியனாக இன்னும் எத்தனை காலம் சுற்றி வருவானோ.

அதென்னமோ தெரியலே மாமா, என் கண்ணுக்கு நீங்க தெரியறீங்க நல்லாவே. உங்க குரல் கூட அட்டகாசமாக் கேக்குது. கூடவே தொப்பு தொப்புன்னு சத்தம் வேறே.

என் இடுப்புக்குக் கீழே குனிஞ்சு பாரு. முடி உதுர்ற சத்தம்.

நாறப் பயபுள்ளே. இவன் எத்தனை காலம் இங்கனக்குள்ளே சுத்திக்கிட்டுக் கெடந்தா என்ன, கவட்டுக்குள்ளே தான் புத்தி.

ஆமா மாப்பிளே, வாச்சிருக்கறவன் வச்சுக்கிட்டு என்ன வேணும்னாலும் செய்யுவான். உனக்கு ஏன் பொச்சாப்பு?

அட போடா வக்காளி, உன்னை அப்பாலே கவனிச்சுக்கறேன்.

ராஜா நடந்தார். அவர் நினைப்பு முழுக்க ராணியைத்தான் சுற்றி இருந்தது. எங்கே போனாளோ? அறியாப் பொம்பளையாச்சே பாவம். நாலு வருசம் முந்தி மதுரைத் தேர்த் திருவிழா முடிஞ்சு அழகர் ஆத்துலே இறங்கற நாள்லே புட்டுக்கிட்டுக் கிளம்பினவளாச்சே. என்னதான் கடிஞ்சுக்கிட்டாலும், என்னப் பார்க்க வராம இருப்பாளா என்ன?

நாச்சி, ஏம்புள்ளே எங்கிட்டு இருக்கே?

அவர் சத்தம் நாலு திசையிலோ அதுக்கும் மேலே கீழே எல்லாம் எதிரொலித்தும் பிரயோஜனம் இல்லை. புஸ்தி மீசைக் கிழவனைக் கேட்கலாமா? மகளாச்சே? இருப்பிடம் தெரியாமலா இருக்கும்?

மாமோய்.

கூப்பிடத் திரும்பினார் ராஜா. கிழவன் போய் விட்டிருந்தான்.

இதென்னமோ மேளமும் கொம்பு வாத்தியமுமாகச் சத்தம்.

அட, அரண்மனை இல்லையோ. நடந்து நடந்து இங்கேயா வந்து சேர்ந்திருக்கோம்.

இத்தனை கம்பீரமாக அவருடைய அரசூர் அரண்மனை இருந்து இந்த ஜன்மத்திலே பார்த்ததில்லையே. சுத்தமாக வெள்ளை அடித்து, ஓட்டை உடைசல் ஏதும் தட்டுப்படாமல் அங்கங்கே காரை அடைத்து தில்லி சுல்தான் கோட்டை மாதிரி என்னமா எழும்பி நிக்குது. அரண்மனையிலே ஒரே சந்தடி.

நடுநாயகமாக மருதையன் நிற்கிறான். பக்கத்தில் அடுத்த வீட்டுக்காரப் பிள்ளை டெப்புட்டீ தாசீல்தார் சாமா. என்னமோ படையல் நடக்கிறது போலிருக்கு. ஜோசியக் காரர் வேறே சட்டமா நட்ட நடுவிலே பூசணிக்காயை வைப்பாட்டி மாதிரி அணைச்சுப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கார். எம்புட்டு காசு பிடுங்கினானோ அந்த ஓமம், இந்த சுக்கு, திப்பிலின்னு வாக்குதத்தம் கொடுத்து.

முன்னாடி ரோஜாப்பூ மாலையெல்லாம் போட்டு சார்த்தி வச்சிருக்கற படம்? ராஜாவே தான். தான் இத்தனை கோலாகலமாக எப்போ இருந்தோம் என்று அவர் யோசித்தார். கல்யாணமான போது இருந்திருக்கலாம். அப்போது அரண்மனை நிதிநிலைமை ஏதோ இழுத்துப் பிடிச்சு மெச்சத் தகுந்த தரத்தில் இருந்ததால் அவரை எல்லா ராஜ உடுப்போடும் நாற்காலியில் நட்டக்குத்தலாக உட்கார வைத்துப் படமாக எழுத ஆரம்பித்தது. காரியஸ்தன் ஏற்பாடு அது. அந்தப் பயலும் இங்கே தான் எங்கேயோ செனைப் பூனை மாதிரி கீச்சுக் கீச்சென்று இரைந்து கொண்டு கிடப்பான். கிடக்கட்டும். அவனை சாவகாசமாப் பார்த்துக்கலாம்.

ஆமா, அந்தப் படம் என்ன ஆச்சு? முடிஞ்சாத்தானே என்ன ஆச்சுன்னு கேட்க? வங்காளத்தில் இருந்து வந்த சித்திரக்காரனை மேற்படி வர்ணச் சித்திரம் வரைய அமர்த்த, அவன் உள்ளூர்ச் சாப்பாட்டு ருசி பிடிக்காமல் சமையல்காரி அழகம்மையோடு சவாரி விட்டு விட்டான். அழகம்மை மேலே அமர்க்களமா சதா மீன்வாசனை அடிக்கும். ராஜா ஏகப்பட்ட தடவை ஆசைதீர அனுபவித்திருக்கிறாள். அவள் கூட வங்கிழடாக இங்கே தான் இருப்பாளோ?

அப்புறம் இந்தக் களவாணி குட்டையன் நெட்டையன். பனியன் பிரதர்ஸ்னோ என்னமோ மருதையனும் தாசீல்தார்ப் பையனும் அவங்களைப் பத்திப் பேசி சிரிக்கிறது அரைகுறையாக ராஜா காதில் விழுந்திருக்கு. அப்போ அவர் சீக்கு முத்திப் போன கோழியாக படுக்கையே கதியாகக் கிடந்ததால் ரொம்ப ஒண்ணும் எதைப் பத்தியும் யோசிக்க முடியவில்லை.

குட்டை பனியன், நெட்டை பனியன் ஆளுங்களும் இங்கே தான் திரிஞ்சுக்கிட்டு இருப்பாங்க. எத்தனை கேட்டானுங்க, ராஜா ஒரு படம் பிடிச்சிருந்தா இப்போ அதை இல்லே வச்சு ஐயர் சகலமானதையும் படைச்சுக்கிட்டு இருப்பார். மூஞ்சியும் கைகாலும் கோணண கோணையா இருந்தாலும் அவர் இருந்த மாதிரிக்கு அச்சு அசலாப் படம் அமைஞ்சிருக்குமே.

சாமா, முடிஞ்சுதா இன்னம் இருக்குதா? எனக்கு இந்த சடங்கு சம்பிரதாயத்துலே எல்லாம் நம்பிக்கை விலகிப் போய்க்கிட்டே இருக்கு.

அதான் நூறு தடவையாவது சொல்லிட்டியே மருதா. இப்போ சும்மா இரு.

சாமா அவனை சத்தம் போட்டு அடக்கினான்.

டெபுடி தாசீல்தார் நீ ஆர்டர் போட்டு இருக்கே. ஆர்டினரி சிட்டிசன் ஆஜராகம முடியுமா? புண்ணியமாப் போகுது. சீக்கிரம் முடிப்பா. காலேஜ்லே அடுத்த வாரம் பாடம் எடுக்க ஏகத்துக்குப் பழைய புத்தகத்தைப் புரட்ட வேண்டியிருக்கு.

தோ முடிஞ்சாச்சுடா மருதையா. செத்தெ இரு. அம்மா வந்துண்டு இருக்கா. ஜோசியக்கார அய்யங்கார் ஏதோ பதார்த்தம் பண்ணி எடுத்துண்டு வரச் சொன்னாரோல்லியோ. கொண்டு வரா.

பகவதி ரொம்பவே தளர்ந்து போய் கையில் தூக்குப் பாத்திரத்தோடு உள்ளே வந்ததை ராஜா பார்த்தார். பாவம் இந்தம்மாவும் சீக்கிரமே இங்கனக்குள்ளே வந்துடும் போல இருக்கே.

காலம் தான் என்னமா பறக்குது. நேத்துக்குத்தான் இது சங்கரய்யரைக் கல்யாணம் கட்டி மலையாளச் சீமையிலே இருந்து அரசூருக்கு அடியெடுத்து வச்ச மாதிரி இருக்கு. கருக்கடையான பிள்ளை. இப்படியா தலை நரைச்சு கிழவியாகி ஓய்ஞ்சு போகணும்?

கம்பங்காடு கரிசல்காடு வித்தியாசமில்லாம மேயற புஸ்தி மீசையான் இம்புட்டு நாள் போயும் உரமா பேசிக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு கிடக்கான். இந்த மாதிரி நல்ல ஜென்மங்க தான் தும்பப்படும் போல.

பகவதியம்மா கூட வந்த பெண்ணை இதுக்கு முன் பார்த்ததாக ராஜாவுக்கு நினைவு இல்லை. இது தாசீல்தார் பொண்டாட்டி இல்லை. அந்தக் குட்டியை விட கொஞ்சம் வயது அதிகம். உடுப்பும் அது என்ன வேட்டியை இடுப்புலே சுத்திக்கிட்டு மேலே ஆம்பளைக் குப்பாயத்தை மாட்டிக்கிட்ட மாதிரி? காது முழுக்க மறைக்கற மாதிரி தங்கத்துலே காதுவாளி. நம்ம பக்கத்து சமாச்சாரம் இல்லியே. யாரு இதுன்னு ராஜா யோசித்தார்.

அந்தப் பெண்ணுக்குப் பின்னால் ஒரு ஓலைக் கொட்டானில் வெற்றிலை பாக்கும், பூவன் பழக் குலையுமாக வந்த மனுஷனைப் பார்த்ததும் ராஜாவுக்கு எல்லாம் விளங்கியது. மலையாளத்துப் பிள்ளை. பகவதியம்மா உடம்புறந்தான் வேதத்துலே ஏறி பிள்ளை பெத்துக்கிட்டானே. திருவனந்தபுரமோ கொல்லமோ பள்ளிக்கூட வாத்தியார். அட, அவனும் வந்தாச்சா.

எங்கே எங்கே இருந்தெல்லாம் வேண்டப்பட்டவங்க வந்து மரியாதை செலுத்தறாங்க. ராஜ சாவுதான் தனக்கு. கௌரதை அப்படி. புஸ்திமீசைக் கிழவனா என்ன? தாரை தப்பட்டையோடு தோலான் துருத்தியான் எல்லாம் கள்ளுத் தண்ணி முட்டக் குடிச்சுட்டு குழிக்குள்ளே கொண்டு தள்ள?

இந்த மலையாளத்தான் பேரு என்ன? ராஜா நினைவு படுத்திப் பார்த்தார். ஊஹும், புஸ்தி மீசைக் கிழவனின் ரோமம் உதிர்கிற சத்தம் தான் காதுக்குள்ளே கேக்குது.

மருதையன், அரண்மனையை பிரமாதமா ஆக்கிட்டீங்களே. ராஜ குடும்பத்து ரத்தமாச்ச்சே. நினைச்சா முடிச்சுட்டுத்தான் மத்த வேலை.

வேதையன் மனசு திறந்து பாராட்டிச் சொன்னான்.

வேதையன் சார், ராஜ குடும்பத்து ரத்தமும் இல்லே. அரண்மனையும் இல்லே. இன்னொரு அரசூர்க்காரன், இன்னொரு அரசூர்க் கட்டிடம். அம்புட்டுத்தான், இந்தத் தாசீல் சாமா அய்யரு ஆளு அம்பு எல்லாம் ஏற்பாடு பண்ணித் தராட்ட, நம்ம மாதிரி வாத்தியாருங்களுக்கு ஏது செல்வாக்கு? பார்ப்பார ராஜா. சர்க்காருக்கு வேண்டப்பட்டவன் ஆச்சே.

சாமா தோளில் மருதையன் பலமாகத் தட்டிச் சிரிக்க, ஏதுக்கென்று தெரியாமல் ஜோசியக்கார ஐயரும் சிரித்து வைத்தார்.

அசமஞ்சமான பயலா இருக்கானே. ராஜா அவனைப் பார்த்ததுமே நினைத்தார். அரசூரில் ஜோசியக்காரக் குடும்பங்களே அஸ்தமித்துப் போய், வேறே எங்கே இருந்தோ தாசில்தார் சாமா முயற்சியில் கொண்டு வந்து இறக்கப்பட்டவன்.

என்ன இருந்தாலும் அந்தக் காலத்தில் அரண்மனையில் யந்திரம் பிரதிஷ்டை செய்த ஜோசியருடைய புத்திசாலித்தனத்தில் அரைக்கால்வாசி கூட இந்தப் பிள்ளையாண்டானுக்கு வராது. வராகன் வராகனாக சிரித்துக் கொண்டே பிடுங்கி, அரசூர்ச் சக்கரவர்த்தி, மயிராண்டி மகாராஜன் என்றெல்லாம் உரக்க சுலோகம் சொல்லி உற்சாகப் படுத்திய அந்த ஜோசியக் கார அய்யரும் இங்கே தான் எங்கேயோ மிதந்து கொண்டிருப்பார் போல. மனுஷன் சவரனையும் பத்திரமாக அரைஞாண்கொடியில் முடிச்சுக் கொண்டு வந்திருப்பார். புஸ்தி மீசையானுக்கு சளைத்த ஆள் இல்லை அந்த அய்யனும்.

யாரோ தயங்கித் தயங்கி பின்னால் நிற்கிற ஓசை. ராஜா திரும்பிப் பார்த்தாள். மத்திய வயது பிராமணப் பெண். எங்கேயோ பார்த்த ஞாபகம் ராஜாவுக்கு.

பகவதி, என் பொன்னு பகவதிக் குட்டி.

அந்த ஸ்திரி தீனமாக அரற்றினாள். கையை கையை முன்னால் நீட்டி இங்கே இருந்தே பகவதியம்மாவைத் தொட்டுத் தோளைத் திருப்பி பேச முயற்சி செய்கிறவளாகத் தெரிந்தாள் அவள்.

அம்மா, நீங்க?

ராஜா மரியாதை விலகாமல் கேட்டார்.

விசாலம். அம்பலப்புழை விசாலம். பகவதிக்குட்டிக்கு மன்னி. யாராவது எங்க குடும்பத்தை கடைத்தேத்துவாளான்னு பிச்சைக்காரியா அலைஞ்சிண்டு இருக்கேன் மகாராஜா.

அவள் அழ ஆரம்பித்தாள்.

உயிரோடு இருக்கப்ப்பட்டவர்கள் தானே அழ சபிக்கப்பட்டவர்கள்?

உசிரோடு சந்தோஷமா இருந்தேன். செத்ததும் தான் துக்கமே.

அந்த ஸ்திரி ஓரமாக விலகி நின்று முணுமுணுக்கிற ஸ்வரத்தில் பேசினாள். அவள் மூச்சுக் காற்று ஓசை கூட ராஜா காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது.

செத்தாத்தான் துக்கம். சாவும் இல்லாம ஜீவனும் இல்லாமே, அது இன்னொரு மாதிரி.

அந்த ஸ்திரி சொல்லியபடிக்கு கரைந்து போனாள்.

அரண்மனையில் எள்ளுருண்டை வாடை எழும்பி ராஜா மூக்கில் சுகமாகக் கவிந்தது. அவர் கண்ணைச் சற்று மூடிக் கொண்டார். இதுதான் சாவு வாசனையா?

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது

இரா.முருகன்


25 ஜூலை 1910 – சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை

எத்தனை சீக்கிரம் எழுந்தாலும் ஆபீசுக்குப் போய்ச் சேரும்போது தாமதமாகி விடறது. அதுவும் இந்த திங்கள்கிழமை வந்தாலே தலைக்கு என்னமாயொரு எரிச்சல்! மனுஷனை மட்ட மல்லாக்கப் புரட்டிப் போட்டு கொட்டையை நெறித்து அடிமை உத்தியோகத்துக்கு வாடா தேவடியா மகனே என்று கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி பல்லை நெரிக்கிறது.

அதுக்கு டவாலி ரங்கசாமி நாயக்கனும் ஒண்ணுதான், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஆரோக்ய டிப்பார்ட்மெண்டு ஆபீசு தலைமை குமஸ்தன் நீலகண்டனும் ஒண்ணுதான். ஏன், பரிபாலனம் பண்ணுகிற துரைமார்களுக்கும் கொட்டை இருக்கிறதால் அவர்களும் ஜாப்தாவில் அடக்கம்.

சந்தர்ப்பமும் கூடி அந்தப்படிக்கு அமைந்து போகிறது. ஞாயிற்றுக்கிழமை என்னத்தை வேணாம் வேணாம் என்று புத்தி சொன்னாலும் சின்ன வெங்காயத்தை அப்படியே வேகப் பண்ணி கமகமவென சாம்பார் வைத்து கற்பகம் இலையில் வட்டிக்கும்போது இன்னும் ஒரு கரண்டி வெங்காயமாப் போடுடி பெண்ணே என்று வாங்கி ஆசையாக ருஜித்துத் தின்ன வைக்கிறது. அப்புறம் தாராளமாக பெரிய வெங்காயம் அரிந்து போட்டு மிளகாய்ப் பொடி சன்னமா விதறி கிழங்கு பொடிமாஸ்.

அப்பா வைத்தியநாதன் காலத்தில் எப்போதாவது வீட்டில் தலையைக் காட்டிய வெங்காயமும் உருளைக்கிழங்கும் இப்போது சர்வ சகஜமாக மாசாந்திர தர்ப்பணம் பண்ணி வைக்க வருகிற சீனு வாத்யார் மாதிரி பிரதி ஞாயிறு காலையில் ஆஜராகி விடுகிறது.

வாங்க மறந்தாலும் கற்பகம் விட மாட்டாள். சனிக்கிழமை பாதி நாள் ரஜா என்பதால் ஆபீசுக்குக் கிளம்பும்போதே துணிப்பையும் காகிதத்தில் பென்சிலை அழுத்தப் பதித்து எழுதின காய்கறி பட்டியலோடும் தான் அனுப்பி வைக்கிறாள்.

எழுத மறந்தால் கூட பாதகம் இல்லை. ஆபீஸ் கிளம்புகிற அவசரத்திலும் நீலகண்டனின் கிராப்புத் தலையை முன்னுக்கு இழுத்து உதட்டில் மணக்க மணக்க கிராம்பு வாசனை முத்தத்தோடு கரதலப் பாடமாகச் சொல்கிறாள்.

முட்டைக்கோசு அரை வீசை, சின்ன வெங்காயம் ஒரு வீசை, போறாது, ஒண்ணரை, அப்புறம் பெல்லாரி வெங்காயம் அது அரை வீசை, சீமைக் கத்திரிக்காய் ஒரு வீசை.

ஏண்டி நாட்டுச் சரக்கே இல்லையாடி நம்மாத்து சமையல்கட்டுக்கு?

அவனும் சனிக்கிழமைக்கே ஆன சொகுசோடு அவள் இடுப்பை நிமிண்ட, கொஞ்சம் விலகி பங்கனப்பள்ளி ஒரு கூடை வாங்கிடுங்கோ என்பாள் கற்பகம்.

மல்கோவாவை வச்சுண்டு அது வேறே என்னத்துக்குடி?

சரி, நீங்க ஆபீஸ் கிளம்பலாம்.

அவசரமாக முந்தானையை இழுத்து மூடிக் கொண்டு அவள் உள்ளே ஓடுவதில் முடியும் சனிக்கிழமை காலை முத்தத்துக்கு சாயந்திரம் வரைக்கும் தீராத சக்தி உண்டு. நீலகண்டன் மதியம் கொத்தவால் சாவடிக்குக் கொண்டு போய் கற்பகம் சொன்னது, சொல்லாதது எல்லாம் வாங்கி நிறைக்கும்போது சமயத்தில் கை கனம் அதிகமாகி ஆள் வைத்து வீட்டில் கொண்டு சேர்ப்பித்தது உண்டு.

இது என்ன சனியன் பீர்க்கங்காய் வாங்கிண்டு வந்திருக்கேள்? பெரியவா பார்த்தா கொன்னே போட்டுடுவா.

பீர்க்கங்காய் தொகையல் நன்னா இருக்குமேடி. நாளக்கு ஞாயித்துக்கிழமை காலம்பற இட்லிக்கு தொட்டுக்க.

நன்னா இருக்கு. அதுக்கு ஒரு முழுக்காய் என்னத்துக்கு? அரிஞ்சு தரச் சொன்னா கொடுத்துட்டுப் போறான்.

அவ முடியாதுன்னு சொல்லிட்டாடீ. முழுசா வாங்கினா வாங்கு அய்யரே இல்லே எடத்தைக் காலி பண்ணுங்கறா.

ஓ, பொம்மனாட்டி வியாபாரம் பண்ற கடையா? சுரைக்காயைக் காட்டினாலும் வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டேளே? உங்க முழியும் மூஞ்சியிலே அசடும் பார்த்துட்டு சும்மா விட்டுடுவாளா என்ன?

கழுக்குன்றத்தில் இருந்து காய்கறி கூடையில் கொண்டு வந்து கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்த படுகிழவியை ஒரே நொடியில் கற்பகம் குரல் ரூபமாக அதி சுந்தரி அழகு ராணிப் பெண்ணாக்கி விடுவது வாடிக்கை.

நல்ல வேளை, போன வாரம் ஒரு வீசைக்கு பதில் சின்ன வெங்காயம் மலிவாக் கொடுக்கறான்னு மூணு வீசை வாங்கி வந்தபோது கொஞ்சம் மலைத்தாலும், கற்பகம் முடிவாகச் சொன்னாள் – நாளையிலே இருந்து தினசரி வெங்காய சாம்பார்தான்.

அமாவாசை, திவசம் என்று எதுவும் குறுக்கிடாததால் கற்பகத்தின் அடுக்களை சாம்ராஜ்யத்தில் ஒரு வாரம் கொடி கட்டிப் பறந்த சின்ன வெங்காயம் தினசரி நீலகண்டனை நடு ராத்திரிக்கு உசுப்பி விட்டது. அதுவும் நேற்று ஞாயிற்றுக் கிழமை பகல் நித்திரையும் இருந்ததாலோ அல்லது பீர்க்கங்காய் துவையல் சேர்ந்ததாலோ என்னமோ, கிட்டத்தட்ட ராத்திரி ஒரு மணிக்கு காவல் சேவகன் பிகில் ஊதிக் கொண்டு பாரா கொடுத்துப் போகிற வரை கற்பகத்தை தூங்க விடவில்லை.

இனிமே வெங்காயம் பக்கம் போகாதீங்கோ.

அவள் தூங்க ஆரம்பிக்கும் முன்னால் கடைசியாகச் சொன்னது பாதி அலுப்பும் பாதி திருப்தியுமாக நீலகண்டன் காதில் பட்டுக் கொண்டிருக்க அவனும் நித்திரையில் அமிழ்ந்தான்.

ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டிய நியமம் இந்த எழவெடுப்பான் வெங்காய நிமித்தம் தவறிப் போய் ரெண்டு பேருக்குமே ஏழு மணிக்கு முழிப்பு தட்ட அப்புறம் களேபரம் தான்.

இலுப்பச்சட்டி நிறைய ரவை உப்புமாவைக் கிண்டி குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்து அதையே மதியத்துக்கும் இலையில் பொதிந்து தந்தாள் கற்பகம். நீலகண்டனும் வேண்டாத விருந்தாளியை வரவேற்கிற தோரணையில் அதை விழுங்கி வைத்தான்.

எனக்கு மதியத்துக்கு டிபன் கேரியர்லே இந்த கருமாந்திரம் வேணாம். கூட்டமா சாப்பிடறபோது பக்கத்திலே எவனாவது பேமானி என்ன கொண்டு வந்திருக்கேடா பழின்னு கழுத்தை நீட்டிப் பார்த்தா அவமானமாப் போயிடும். நான் ஆபீஸ் பக்கம் சாப்பாட்டுக் கடையிலே பார்த்துக்கறேன். எலுமிச்சங்கா சாதம் அமிர்தமா கிடைக்கும். தைர் சாதம் புளிச்சாலும் அதிலே திராட்சைப் பழத்தையும் கொத்தமல்லியையும் போட்டு சரிக்கட்டிடுவான் லாலாப்பேட்டை பிராமணன்.

அவன் கிட்டேயே நித்தியப்படிக்கு வச்சுக்க வேண்டியதுதானே? அவாத்து பொம்மனாட்டியும் வியாபாரம் பண்றேன்னு கூட நின்னா, அவளுக்கும் சின்ன வெங்காய சேவை சாதிச்சுக்கலாமே. நான் நிம்மதியா இருப்பேன் பிடுங்கல் இல்லாம.

கற்பகம் அந்த அவசரத்திலும் வாய் வார்த்தையால் குத்தி வேடிக்கை பார்க்க மறக்கவில்லை.

ஏண்டி, தலை முடியை தழைச்சுண்டு நீயும் தானேடி ரதி சுகம் வேணும் வேணும்னு கூப்பிட்டே. உள்ளே வாடா உள்ளே வாடான்னு எத்தனை தடவை வந்து போய் உடம்பே நோகறதுடீ.

சொல்ல முடியாது. அதுவும் திங்கள்கிழமை ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இப்படி சாங்கோபாங்கமாகப் பேச முடியாது.

போன வாரம் மூர் மார்க்கெட்டில் பக்கத்து வீட்டு வக்கீல் வாங்கி படித்து விட்டுக் கொடுத்த நீதி போதனை புத்தகம் நேரம் கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்தது.

காலையில் எழுந்திருந்து எந்தப் பக்கம் உட்கார்ந்து எவ்வளவு நாழிகை வெளிக்குப் போக வேண்டும், என்ன தேவதையை எப்படி பிரார்த்தித்து பிருஷ்டம் சுத்தப் படுத்த வேணும், எப்படி குளிக்கணும், எப்படி சாப்பிடணும், இலையில் கொஞ்சம் மிச்சம் வைத்து வாசலுக்கு கொண்டு வந்து அதை எறிந்து விட்டு நாய்க்கும் காக்காக்கும் எத்தனை தடவை தோ தோ தோ மற்றும் கா, க்கா, க்க்கா சொல்லணும், அப்புறம் நாலு திசையிலும் என்ன என்ன சகுனம் தோன்றும் வரை காத்திருந்து வெளியே கிளம்பணும், அதுவும் கிழமை வாரியாக சகுன சம்பிரதாயம். எல்லாம் விலாவாரியாக அச்சுப் போட்ட புத்தகம்.

இதையெல்லாம் பார்த்து சகுனம் சரியாக நிண்ணுண்டு இருந்தால், சாயந்திரம் ஆகி ஆபீசே மூடிடுவா. தள்ளு சனியனை.

சொன்னாலும் அந்தப் புத்தகத்தை பத்திரமாக ஆபீசுக்கு எடுத்துப் போகிற சஞ்சியில் எடுத்து வைத்திருந்தான் நீலகண்டன்.

டிராமில் வாய் நிறைய வெற்றிலையை மென்றபடி சஞ்சிக்குள் கையை விட்டு புத்தகத்தை எடுத்தான் நீலகண்டன்.

இது என்ன பைண்ட் புஸ்தகம்? அவன் சஞ்சிக்குள் வழக்கம் இல்லாத வழக்கமாக வேறே ஏதோ புத்தகம். குழந்தைகள் விளையாடுகிற போது பாடப் புத்தகத்தை ஒளிச்சு வச்சிருக்குதுகளா என்ன? புஸ்தகம் கொண்டு போகாமல் போய் பாதிரியாரிடம் பிரம்படி வாங்கினால் கஷ்டமாச்சே.

அதுவும் சின்னவனுக்கு பாடம் எடுக்கிற பாதிரி, பிள்ளைகளை இடுப்புக்குக் கீழே கிள்ளுவதாக பிராது வேறே.

சனியன் இந்த பள்ளிக்கூடமே வேணாம். மாத்துங்கோ என்றாள் கற்பகம்.

இங்கே இருக்கற மாதிரி இங்கிலீஷ் படிப்பு வேறே எங்கேயும் கிடைக்காதே. பாதிரி கிள்ள வந்தா, கையைத் தட்டி விட்டுடுடா. நான் எட் மாஸ்டரைப் பார்த்துப் பேசறேன்.

போக முடியவில்லை இதுவரைக்கும். இப்போ அந்த களவாணி பாதிரி சின்னவனின் இடுப்பில் சில்மிஷம் பண்ணிக் கொண்டிருப்பானோ?

கையை முறிச்சு அடுப்பிலே வைக்க.

நீலகண்டன் கொஞ்சம் உரக்க முணுமுணுக்க டிக்கட்டுக்காக கையை நீட்டிய டிராம் கண்டக்டர் அவசரமாகப் பின்னால் வலித்துக் கொண்டான்.

சாமிகளே, டிக்கட் வாங்கறதும் வாங்காததும் அவ்விடத்து இஷ்டம். வாரம் பிறந்ததும் எனக்கு பிராமண சாபம் என்னத்துக்குங் காணும் கொடுக்கறீர்?

வருஷக் கணக்காக இதே வண்டியில் போய் வந்து சிநேகிதமான குரலில் அவன் சொல்ல, நீலகண்டன் நெளிந்தான்.

உம்மை இல்லைய்யா முதலியாரே. ராத்திரி பிரவசனம். திரௌபதி வஸ்திராபஹரணம் கோவில்லே. மனசெல்லாம் இன்னும் அதுதான்.

மனசறிந்து பொய் சொன்னபடி டிக்கட்டுக்கு சில்லரையாக ஒரு அணா எடுத்துக் கொடுத்தான் நீலகண்டன். கையில் வைத்திருந்த பைண்ட் புத்தகத்தைப் பிரிக்க, அதில் ஒரு பக்கம் நீள நீளமாக கோலம். பாதியில் புத்தகம் முடிந்து தலைகீழாக இன்னொரு புத்தகம். அதில் அற்பவீரன் கதை. நூதனமான கற்பனையும் நுண்மான் நுழைபுலனுமாக ஆரணிப் பக்கம் இருந்து யாரோ யாத்த வசனப் புத்தகம்.

கற்பகம் படிக்கிற விஷயம் இதெல்லாம். தூரமானால் பின்கட்டு மச்சில் ஒதுங்கும்போது படிக்க என்றே பிறந்த வீட்டில் இருந்து அவள் கொண்டு வந்த சீதனத்தில் இதுவும் அடக்கம்.

இந்த தூரமீனா புஸ்தகம் சஞ்சிக்குள் எப்படி வந்தது? கூடவே என்னத்துக்கு ஒரு வெற்றிலைக்குள் கட்டின மஞ்சள் துண்டு?

அதென்னமோ, அஞ்சாறு வருஷமாக இப்படி ஏன் எது என்று தெரியாமல் ஏதோ வீட்டில் சின்னச் சின்னதாக நடந்தபடி இருக்கிறது.

அந்த ஸ்தாலிச் செம்பில் இருந்து அவ்வப்போது விட்டு விட்டு குழந்தே குழந்தே என்று ஒரு பெண்குரல் விளிக்கும். பக்கத்தில் போய்ப் பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது.

நாலைந்து தடவை சொப்பனத்தில் அம்மா வயசில் ஒரு ஸ்திரி காசிக்கு என்னை கூட்டிண்டு போடா குழந்தே என்றாள் நீலகண்டனிடம். சின்ன வெங்காயம் சாப்பிட்டு காசிக்குப் போகலாமா என்று அவன் சந்தேகம் கேட்டபோது சொப்பனம் முடிந்திருந்தது.

வீட்டில் வைத்த பொருள் காணாமல் போவது, எங்கேயோ காணாமல் போனது சம்பந்தம் இல்லாமல் வேறே எங்கோ திரும்பக் கிடைப்பது என்று அவ்வப்போது நடக்கிறது.

போன அமாவாசைக்குத் தேடின பஞ்சபாத்திரம் உத்தரிணியில் உத்தரிணி மட்டும் காணாமல் போய், வருஷாந்திர புளி அடைத்து வைத்த அண்டாவில் கிடைத்ததும் இதில் அடக்கம். எலி இழுத்துப் போய்ப் போட்டிருக்கும் என்றாள் கற்பகம். எலி என்ன அமாவாசை தர்ப்பணமா பண்ணுகிறது?

ஹைகோர்ட் பக்கமே டிராமை நிறுத்தி விட்டார்கள். ராஜ பிரதிநிதி கோட்டைக்கு வரப் போகிறதால் கூடுதல் பந்தோபஸ்து ஏற்பாடு.

ஐயய்யோ, ஏற்கனவே தாமதம். இதில் ராஜப் பிரதிநிதி வேறே வந்து.

வந்து என்ன ஆஜர் பட்டியலைப் படித்து எந்த குமஸ்தன் வரலை வந்திருக்கான் என்று கொட்டை நெறிக்க முஸ்தீபோடு கணக்குப் பார்க்கப் போகிறானா என்ன?

ஓட்டமும் நடையுமாக நீலகண்டன் கோட்டைக்குள் நுழைந்தபோது குமஸ்தர்கள் ஏக காலத்தில் பேசிக் கொண்டு அவன் காரியாலய வாசலில் நின்றார்கள்.

சூப்ரண்டெண்ட் துரை இன்னிக்கு காலமே காலமாகிட்டாராம்.

நீலகண்டனுக்கு றெக்கை கட்டி ஆகாசத்தில் பறக்கிற சந்தோஷம்.

ஹெட் கிளார்க் வந்தாச்சு. போகலாமா?

இதோ, வந்தேன்.

எங்கே என்று கூட கேட்காமல் பையை நாற்காலியில் வைத்து விட்டு வாசலுக்கு வந்தான் நீலகண்டன்.

அதை ஏன் விட்டுட்டுப் போகணும்? எடுத்துண்டு வாரும். இனிமே இன்னிக்கு எதுக்கு ஆபீசுக்கு திரும்ப வரணும்? நீர் உம்ம ஆத்துக்குப் போய்க் குளிச்சு சுத்தி பண்ணிக்க வேணாமா? கலெக்டர் துரை நம்ம டிபார்ட்மெண்டுக்கு ரஜா அறிவிச்சிருக்கார். தெரியுமோல்லியோ.

சீனியர் டபேதர் நாதமுனி செட்டியார் பார்ப்பனக் கொச்சையில் நீட்டி முழக்கினார். அவருக்கும் மனசுக்குள் சந்தோஷம் சின்ன வெங்காயம் சாப்பிட்ட மாதிரி பொங்கிக் கொண்டிருப்பதாக நீலகண்டனுக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

சாந்தோம் சர்ச் பக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு போகணும். நாலு வண்டி கொண்டு வரச் சொல்லு.

நாதமுனி இதர கடைசி நிலை சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருக்க, யாரோ அவசரமாக நீலகண்டனை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள்.

நீலகண்டன் திரும்பினான்.

ஹைகோர்ட் ஹெட்கிளார்க் நாயுடு பதற்றமாக பக்கத்தில் வந்து நின்றான்.

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது

இரா.முருகன்


10 ஜூன் 1910 – சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை

நீங்க யார்யார்னு எனக்குத் தெரியலே. நான் பேசற பாஷை உங்களுக்கு அர்த்தமாகுமான்னு கூடத் தெரியாது. முதல்லே நான் இருக்கேன், உயிரோடு கூட சுவாசிச்சுண்டு இருக்கேன், எங்கேயோ இருந்து வேறே எங்கேயோ வந்து சேர்ந்திருக்கேன்கறதை எல்லாம் நீங்க நம்பணும்.

உங்களைப் பார்த்தா அதை சந்தேகிக்கறவா மாதிரி தெரியலை. வெள்ளைக்காரி சீமாட்டி, கூட அவளோட ஒத்தாசையா இருக்கற வேலைக்கு நிக்கற பொண்ணு. அப்படித்தானே.

இல்லையா? நீங்க வேறே வேறே பூமண்டல பிரதேசத்துலே இருந்து வரப்பட்டவாளா? எங்க தெரிசா அக்காவுக்கு வேண்டப்பட்டவா இல்லையா?

பார்த்திருக்கேன். ரெண்டு நாளா பின்னாலேயே அலைஞ்சுண்டிருக்கேனே. தெரிசா அக்கா என்னைப் பத்தி உங்க கிட்டே ஒண்ணும் சொல்லலியா?

பேய் அலையற ராத்திரியிலே நீங்க இப்படி வந்தது எனக்கும் என் கொழந்தைக்கும் கொஞ்சமும் பிடிக்கலே.

பொம்மனாட்டின்னா தைரியம் இருக்க வேண்டியதுதான். கொஞ்ச நஞ்சம் அது இருந்தா, நான் எங்காத்துக்காரர் கொல்லூர் போகலாம்னு கிளம்பினபோதே அஸ்து கொட்டியிருக்க மாட்டேனா?

காசர்கோட்டுலே தேமேன்னு சோத்துக் கடை நடத்திண்டு குடும்பத்தை சம்ரட்சணம் பண்ணிண்டு கோவில், குளம், அடுத்து அயல்லே வம்பு, சின்னதா சண்டை. கோலத்துலே கூட சண்டை வந்திருக்கு தெரியுமோ.

நம்மாத்து வாசல் வரைக்கும் அடைச்சு சூனிய மாசத்துலே கோலம் போட்டுட்டா அந்த ராயர் மாமி சட்டமா. நானும் கொழந்தையும் பெரிய தோதிலே எழுபது புள்ளி நூறு வரிசை ஏற்பாடு பண்ணி ஒரு கோல நோட்டு முழுக்க வரைஞ்சு பார்த்து பொடி எல்லாம் திரிச்சு எடுத்துண்டு விடிகாலையிலே வாசலுக்கு வந்தா, ராயச்சி நடுவாசல் வரைக்கும் கோடு இழுத்து வச்சிருக்கா. அதுவும் பிசிறு பிசிறா.

அன்னிக்கு வந்த வாக்குவாதம் முத்தி ரெண்டு நாள் பேசலே அந்தப் பக்கத்து வீட்டுலே. ஆனாலும், தன் கொழந்தைக்கு திரண்டுகுளி வந்திருக்குன்னு ராயர் மாமி நம்மாத்து வாசல்லே நின்னு சொன்னதும் மனசே கரைஞ்சு போச்சு.

என் குழந்தை மாதிரின்னா ராதையும். ஓடிப் போய் குழந்தையை வாரி அணைச்சுண்டேன். ராயச்சி கிறுக்கச்சி. ஏண்டி சண்டை போட்டேன்னு கூட கேட்க வாயில்லாம, அஸ்காவைக் கொண்டு வந்து என் வாயிலே கொட்டி முழுங்குடி முழுங்குடிங்கறா,

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்ண்டு இருக்கேன் பாருங்கோ. நீங்க ரெண்டு பேரும் தைரிய லட்சுமி அவதாரம் தான். தைரிய லட்சுமி தெரியாதா? அக்கா கிட்டே கேட்டுப் பாருங்கோ. மறந்திருக்க மாட்டா இன்னும்.

சின்ன வயசுலே இருந்து அம்பலத்துலே புராணம் கேட்டு, படிச்சு பழகினது எப்படி மறக்கும்?

அவளையும் வேறே பிரேத ஆத்மாக்களைப் பார்க்க கூட்டிண்டு வந்துட்டேளா? சரியாப் போச்சு. ஏற்கனவே பூஞ்சை சரீரம், இப்படி ராத்திரி அலைஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்? உங்களுக்கும் தான் சொல்றேன். தைரியத்துக்கும் ஒரு பரிதி உண்டல்லே?

நீ ஏண்டி எந்த தைரியத்திலே இப்படி ஊர் விட்டு ஊர் வந்து காலம் விட்டு காலம் மாறி ராத்திரியா பகலான்னு இல்லாம திரிஞ்சிண்டு இருக்கேன்னு கேட்கறேளா? என்ன பண்ணச் சொல்றேள். எல்லாம் இந்த வயத்துக்குத்தான்.

எனக்கு இன்னும் பசியும் தாகமும் தெரியும். நான் பிரேத ஆத்மா இல்லே. உசிர் இன்னும் இருக்கு. வாதனைப் படறதுக்குன்னு இன்னும் இருக்கு. உடம்பும் இருக்கு. எனக்கு மட்டும் இல்லே. என் பொண்குழந்தைக்கும். குட்டியம்மிணியும் பசியோட தான் இருக்கா.

கொஞ்சம் நான் சொல்றதை உட்கார்ந்து கேட்கறேளா. பிசாசு பார்க்கறதுக்கு இன்னும் நேரம் இருக்கு. அதுகள் வந்து இருந்தாலும் இந்த மனுஷா தாகசாந்தி பண்ணிண்டு செருப்புலே காலை நொழச்சுண்டு கிளம்ப வேணாமா?

அந்தக் கிழவன் உங்களை எல்லாம் கூட்டிண்டு போறேன்னு காசை வாங்கி பையிலே போட்டுண்டு நிக்கறானே, அவன் சொல்றதை எல்லாம் முழுக்க நம்ப வேணாம். அம்புட்டு பேய் இந்த ஊர்லே கிடையாது. நான் தான் சுத்திண்டு இருக்கேனே. எனக்கு தெரியாதா?

ரொட்டி கொண்டு வந்திருக்கேளா? அக்கா கையிலே வச்சிருப்பாளே அந்தப் பையிலே எப்பவும் நாலு துண்டு ரொட்டியும் கிச்சிலி பழப் பாகுமா எடுத்து வச்சிருப்பா. எப்போ எங்களைப் பார்த்தாலும் கூட்டி வச்சு, கொடுத்துட்டுத்தான் போவாள்.

சித்த சிரமத்தைப் பார்க்காம அவ பையை இங்கே எடுத்துண்டு வரேளா? ஒண்ணும் தப்பா நினைச்சுக்க மாட்டா. நீங்க அவளுக்கு ஆப்த சிநேகிதிகளாச்சே. அவ பணம் எல்லாம் பையிலே எடுத்துண்டு போக மாட்டா. ஒரு பொல்லாப்பும் உங்களுக்கு வராது. நான் ஜவாப்தாரி.

உங்க பேரு சாரான்னு தெரியும். இங்கிலீஷ் காரா மாதிரி உங்க ஊர் பாஷையிலும் இதுக்கு நன்னி சொல்றது எப்படின்னு சொல்லிக் கொடுங்கோ. சொல்லிடறேன்.

இங்கே வந்த புதுசுலே தெற்கே ஒரு தெரு, பெயர் கூட, ஆமா, கார்வர் தெருவோ என்னமோ, அங்கே ஒரு கிழவன் திரிஞ்சிண்டிருக்கான். அவன் கண்ணுலே பட்டேன் பாருங்கோ. எச்சூஸ் மீ எச்சூஸ் மீன்னு சொல்லிண்டே பின்னாலே வந்துட்டான்.

பிரேதமாம். யாரைப் பார்த்தாலும் மரியாதை விலகாமல் அப்படி மன்னிப்பு கேட்டுண்டே இருப்பானாம்? என்னத்துக்காம்? எனக்கு என்ன தெரியும்? நீங்க தான் பார்க்கப் போறேளே. அவன் வந்து உங்க கிட்டேயும் சொல்வானா இருக்கும்.

இவ தான் குட்டியம்மிணி, என் ஒரே பொண்ணு, அஞ்சு வயசா? அதெல்லாம் எந்தக் காலத்திலேயோ. நாங்க இப்படி அலைய ஆரம்பிச்சே கொல்ல வருஷம் பத்து ஆயிடுத்து.

இவ இப்போ பெரியவளாயிட்டா. அதான் அக்காவோட சல்லாத் துணியை இடுப்புலே குறுக்கே சுத்தி விட்டிருக்கேன். வயசு வெளியிலே தெரியாட்டாலும் பெத்தவளுக்குத் தெரியாதா என்ன? அப்படியே நம்மாத்துக் குழந்தையை பொறத்தியான் கொள்ளிக் கண்ணை வச்சுண்டு வெறிச்சுப் பார்க்க விட்டுடுவோமா என்ன? உங்க ஊர்லேயும் இதானே நடைமுறை?

இந்த மாமி வெள்ளைக்கார தேசமில்லையோ? அமெரிக்கையான ஊரா அது? பெயர் தான் வாயிலே நுழையலே. எனக்கு என்னத்து இங்கிலீஷும் மத்ததும். உள்ளதையே உபயோகப்படுத்திக்கத் தெரியாம கோட்டை விட்டுட்டு நிக்கறேன்.

ஆனா இங்கே எப்படியோ வந்து சேர்ந்துட்டேன். அக்கா கிட்டே போ போன்னு என் மாமியார் தான் கொண்டு வந்து தள்ளினா போல இருக்கு. ஒண்ணும் புரியலை.

மாமியாரா? அவளைத்தான் ஒரு குடத்துலே கொல்லூருக்குக் கொண்டு போனோம். நன்னாப் பேசிண்டு தான் வந்தா. அவ பிள்ளை மேலே ரொம்ப பிரியம். ஒத்தைக் குழந்தை ஆச்சே. நான் கல்யாணம் ஆகி வரதுக்கு முந்தியே அவ சிவலோகப் பிராப்தி அடைஞ்சுட்டா. அக்கா அதுக்கும் முந்தியே அம்பலப்புழையிலே இருந்து கிளம்பியாச்சு. அக்காவோட அப்பா வேதத்துலே ஏறினதுக்கு அப்புறமாம் அது.

எங்க மாமியார் பேரு விசாலாட்சி அம்மாள். மாமனார் பேரு குப்புசாமி அய்யர். பெரியவா பேரை எல்லாம் சொல்றது எங்க பக்கத்துப் பழக்கம் இல்லே. ஆனா, நீங்க அக்காவோட சிநேகிதிகள். என்னை மாதிரி, குட்டி அம்மிணி மாதிரி பெண் ஜன்மம் எடுத்தவா.

நாங்க படற சித்ரவதை உங்களுக்கோ அக்காவுக்கோ இதுலே லட்சத்துலே ஒரு பங்கு கூட ஏற்படக்கூடாது. பாவம் தாங்க மாட்டேள் நீங்க.

இங்கே விண்ட்போர்ட் தெருவிலே சுத்திண்டு இருக்கற சீமாட்டி ஒருத்தி இப்படித்தான் ஆதரவு வார்த்தை சொன்னா. ஆமா, ஆவி தான். இவா எல்லாம்.

நானும் என் குழந்தையும் இவாளைப் போல இன்னொரு தரத்திலே இருக்கப்பட்டவான்னு நினைச்சோ என்னமோ எங்களோட நன்னா பழகறா.

இப்போ உங்க கிட்டே நான் பேசறது புரியற மாதிரி, நீங்க சொல்றது எனக்கு அர்த்தமாகிற மாதிரி இந்த ஊர்லே இருக்கற அமானுஷ்ய ஆத்மாக்களும் பேசப் பழகச் செய்யறா.

என்ன சொல்லிண்டு இருந்தேன். ஆமா, விண்ட்போர்ட் தெரு சீமாட்டி. அவ தான் சொன்னா, இப்படி நீயும், குழந்தையுமா ஒரு பக்கம், எங்கே திரிஞ்சிண்டிருக்கான்னு தெரியாம உங்காத்துக்காரன் இன்னொரு பக்கம். உங்க மட்டுலே உங்க மூணு பேரை மட்டுமாவது சேர்த்து வைக்கறதுக்கு பிரயத்தனம் பண்ணச் சொல்லி மகாராஜாவுக்கு மகஜர் கொடுங்களேன்.

நான் சொன்னேன். அது மட்டும் இல்லே, என் மாமியார் நல்ல கதிக்குப் போகணும். அவ இருக்கப்பட்ட ஸ்தாலிச் சொம்பு கிடச்சு அதை கங்கையிலோ வேறே நீர்நிலையிலோ கரைக்கணும்.

அது எல்லாம் அப்புறமாடியம்மா. மகாராஜா கிட்டே மகஜர் கொடுத்தா சர்க்கார் சிலவிலே விக்ஞானம் படிச்ச பண்டிதர்களை நியமிச்சு உன்னோட காலத்தை நேராக்கிடக்கூட முடியும்னு தோணறது. அட, பத்து வருஷம் உனக்குத் திரும்ப கிடைக்கலேன்னாலும் அதுலே பாதி, முக்கால் வாசி கிடைச்சாலும் பிரத்யட்சமான காலபோதம் வந்துடுமே. அப்புறம் அலையாம கொள்ளாம, உங்க ஊர்லேயே போய் வேதத்துலே ஏறி ஊழியம் பண்ணலாமேன்னு கேட்டா அவள்.

வேதத்துலே எல்லாம் ஆயிரம் ருபாய் தட்சிணை வச்சாலும் எங்காத்துக்காரர் ஏற மாட்டார். கொல்லூர், மங்கலாபுரம், அம்பலப்புழை. ஒரு அம்பலம் விடாம தொழுதுட்டு நாங்க பாட்டுக்கு தேமேன்னு காசர்கோட்டுலே சாப்பாட்டுக்கடை திரும்ப தெறந்து வச்சு ஒத்தருக்கும் விரோதம் இல்லாமே நடத்திண்டு வருவோம்.

நான் சொன்னதை எல்லாம் பெட்டிஷனா எழுதி எடுத்திண்டு போய் மகாராஜா கிட்டே கொடுக்கச் சொன்னா சீமாட்டி.

எங்க ஆத்துக்காரர் சாயல்லே லண்டன் பட்டணத்துலே யாரையோ யந்திரம் பூட்டின சாரட் வண்டியிலே பார்த்தேன்னு அக்கா கூட சொல்லியிருந்தா. அவர் அங்கே தான் இருக்காரோ, வேறே எங்கே எல்லாம் அலைஞ்சுண்டு இருக்காரோ.

அவர் பெயரா, மகாலிங்க ஐயர். பெயரைச் சொன்னா ஆயுசு குறைச்சல்னு சொல்வா. அது எதுக்குக் குறையப் போறது? என்றும் முப்பது அவர். இருபத்து நாலு நான். என் குழந்தை நாலு வயசு.

இது மாதிரி தண்டனை வேறே யாருக்காவது உங்க கிறிஸ்து மகாரிஷி உபதேசிக்கற புராணத்திலே சொல்லி இருக்கா?

எங்க புராணத்துலே இருக்கான் ஒருத்தன். மார்க்கண்டேயன். ஆனா, அவனை எங்களை மாதிரி காலத்திலே பறிச்சுப் போட்டு எங்கேயோ இருந்து எங்கேயோ இழுத்துண்டு போய் பசியோட, தாகத்தோட சுத்த வச்சதா எந்த பௌராணிகனும் சொல்லலே. நான் தான் எத்தனை கதை கேட்டிருக்கேன் கோவில்லே.

ரொட்டி தேவாமிர்தமா இருந்தது. கொஞ்சம் வெள்ளம் தரேளா? பரவாயில்லே. நீங்க குடிச்சு மீந்ததுனாலும் சரிதான். தண்ணிக்கு என்ன தீட்டும் மத்ததும்? அதெல்லாம் பார்க்க ஸ்திதியிலா நாங்க இருக்கோம். சொல்லுங்கோ.

மகஜர் எல்லாம் எழுத ஆள் கிடைக்காததாலே, நீயே நேர்லே ராஜாவைப் பார்த்துச் சொல்லிடு, அவர் லண்டன் பட்டணத்துலே இருந்து கிளம்பி இந்த ஊருக்கு வந்துண்டு இருக்கார்னு சீமாட்டியும், இன்னொரு அழுகை மூஞ்சி ஆசாமியும் சொன்னாங்க.

ஆமா, அவர் விண்ட் தெருவிலே இருக்கப்பட்டவர். உங்க கண்ணுலே இன்னிக்குப் பட்டாலும் படுவார். ஐயரம்மான்னு கேட்டுப் பாருங்க. நன்னாத் தெரியுமேம்பார்.

ராஜா வந்த ரயில் வண்டியிலே ஏறி நானும் குழந்தையும் ஆளொழிஞ்ச ஒரு பெட்டியிலே காத்திண்டு இருந்தோம். மருத்துவன் ஏதோ கலக்கி எடுத்துண்டு போய்ப் போய் ராஜாவுக்கு ராத்திரி முழுக்கக் கொடுத்துண்டே இருந்ததாலே திருமனசை தரிசிச்சு பிரார்த்தனை சொல்ல நேரமே வாய்க்கலை. ராஜாவும் தான் பாவம் என்ன பண்வார்? கடுத்த அஜீர்ணத்தோடு லண்டன்லேருந்து கிளம்பி வந்தாராமே?

வண்டியிலே ஸ்நான, மூத்ரம் ஒழிக்கற சௌகரியம் எல்லாம் நன்னா இருந்ததாலே, குட்டி யம்மிணிக்கும் குளிச்சு விட்டு நானும் குளிச்சேன். இங்கே இல்லாட்டா கடல் ஸ்நானம்தான் அனுதினமும்.

அஜீர்ணமா? எனக்கா? காலம் மறிஞ்சு இப்படி ஆனதிலே ஒரே நல்ல விஷயம் மல மூத்ர விசர்ஜனம் பத்தின கவலைக்கே இடம் இல்லாம உடம்பு நேராயிடுத்து. தூரம் கூட நின்னு போயிடுத்து எனக்கு. இருந்தா மட்டும் என்ன பண்ணப் போறேன்.

குட்டி அம்மிணிக்கு வந்தாத்தான் பிரச்சனை. இந்த ஸ்திதியிலே இருந்துண்டு எங்கே போய் எப்படி மாப்பிள்ளை பார்க்கறது?

யாரோ படி ஏறி வர்ற மாதிரி இருக்கு. சித்தெ இருங்கோ. பார்க்கறேன். எல்லாம் அந்த வழிகாட்டுற கிழவன் தான்.

இங்கே ரெண்டு சின்ன வயசுப் பசங்களுக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து நிலவறைக்கு அனுப்பி வச்சிருக்கான். நிலவறை தெரியாதா? நீங்க போய்ப் பார்க்கத்தானே போறீங்க. அங்கே ஏழெட்டு பிசாசு இருக்கு. எல்லாம் சாத்வீகமானவா தான்.

ஆனா, அப்புறம் அதுலே என்ன சுவாரசியம்? நீங்க நிலவறையிலே நிக்கும்போது பிசாசு தூங்காமா இருந்து பொழுது போகாம இருந்தா ஒரு ஓரமா வந்து நின்னு பார்த்துட்டுப் போயிடும். ஆனா இருட்டுலே உங்க கையிலேயோ, தோள்ளேயோ ஒரு கீறல் விழறதுக்கு வாய்ப்பு உண்டு.

பிசாசு பண்றது இல்லே. கிழவன் அனுப்பின பசங்க இருட்டுலே உட்கார்ந்து உத்தேசமா யாரையாவது இப்படிப் பண்ணிடுவா. வாச்சி வாச்சியா கையிலே நகம் வச்சுண்டு இருக்கு இந்த பசங்கள்.

ஒரு நாள் இல்லாட்ட ஒரு நாள் பாருங்கோ, நான் இதுகள் கை நகத்தை பழம் நறுக்கற கத்தியாலே முழுசா மழிச்சுத் தள்றேன். அது என்ன அன்னிய ஸ்திரி தோள்லே நகக்குறி வைக்க இவன் யாரு கட்டிண்ட புருஷனா?

நகக்குறி தெரியாதா? கொஞ்சம் இருங்கோ. அப்பாடா, அம்மணி தூங்கிட்டா.

நகக்குறிங்கறது கொக்கோக சாஸ்திரம். புஸ்தகம், ஓலைச்சுவடி எல்லாம் எங்க நாட்டுலே பிரசித்தம். நீங்க எங்க ஊர்லே போனா இங்கிலீஷ்லே அச்சுப் போட்டதே கிடைக்க்கும். பாவாடை சாமி, கன்யாஸ்திரி இல்லியே உங்க கூட்டத்துக்கு வந்தவா? குடும்பஸ்தரா இருந்தபடி ஸ்வாமி கும்பிடறவா தானே? நகக்குறி தெரிஞ்சுக்க வேண்டிய ஒண்ணுதான் அப்போ.

என்ன சொல்லிண்டு வந்தேன்? ரயில்லே மகாராஜாவை தரிசனம் பண்ணி குறை தீர்க்க பரிகாரம் கேட்டு பிரார்திச்ச்க்கற உத்தேசத்தோடு நான் ரயில்லே ஏறினதுதானே?

குளிச்சுட்டு படுத்து நானும் குஞ்சுவும் தூங்கியே போய்ட்டோம். எவனோ பத்திரிகைக்காரனாம், சட்டமா ஏறி நாங்க படுத்துண்டு இருந்த இடத்துக்கு பக்கத்துலே ஒண்டிண்டு உக்காந்து புகை விட ஆரம்பிச்சான் படுபாவி.

குடலைப் பிடுங்கற நாத்தம். நான், கொழந்தையை கூட்டிண்டு இறங்கிட்டேன். ராஜா ஆயுசோடு இருந்தா மகஜரை அப்புறமாக் கொடுத்துக்கலாமே?

உங்க மகாநாட்டுக்கு அவர் வருவாரா? வேறே யாராவது பெரிய மனுஷா வந்திருந்தா, எங்க துன்பத்தை அவா கிட்டே சித்தெ சொல்லி தீர்த்து வைங்கோ அக்கா. புண்ணியமாப் போகும். சரி நான் கிளம்பறேன். தெரிசா அக்கா வரா.

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி எட்டு

இரா.முருகன்



10 ஜூன் 1910 – சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை

தெரிசா ராத்திரி ஆகாரம் ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். விடுதி வேலைக்காரிப் பெண் வற்புறுத்தி இரண்டு ரொட்டியும் கொஞ்சம் பாலும் கொடுத்துக் கழித்து விட்டுப் போகச் சொன்னாள்.

ஊர் பூரா சுற்றி நடந்து பிரேத ஆத்மாக்களைத் தேட உடம்பில் கொஞ்சம் போல பெலம் ஒட்டிக் கொண்டிருப்பது சிலாக்கியம் என்று விடுதிக்காரனும் சொன்னான்.

வழக்கமாக இந்த மாதிரி இடங்களுக்கு அழைத்துப் போகிற வழிகாட்டிகள் தேடும் ஆவிகள் தவிர இன்னும் நாலைந்து பெயர்களை அவன் சொன்னான். ஐம்பது வருடம் முன்னால் கொடி கட்டிப் பறந்து மர்மமான முறையில் உயிர் விட்டவர்கள் என்று கிடைத்த தகவல்படி அதில் மூன்று இளம் பெண்களும் ஒரு ஆணும் உண்டு. எல்லாரும் வேண்டப்பட்டவர்களாம். முக்கியமாக அந்த ஸ்திரிகள்.

அவங்களைப் பார்த்தால் நீங்க விசாரிச்சதா சொல்றோம்.

சாரா சொல்லி விட்டுச் சிரித்தாள்.

வேணாம், வந்துடச் சொல்லப் போறாங்க. நான் இப்போ கிளம்பற உத்தேசம் இல்லை.

விடுதிக்காரன் மரியாதையாகக் குனிந்து வணங்கியபடி சொன்னபோது அவன் இடுப்பில் ஸ்காட்டிஷ் கில்ட் பாவாடை அவிழ ஆரம்பிக்க, கிளாரா சிரிப்பு உச்சத்தை அடைந்தது.

இவர்களை இப்படியே கூட்டிப் போனால், பியர் குடித்த உற்சாகமான பெண்கள் என்று தான் படுமே தவிர மிஷினரி மகாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

சிரிப்பை நிறுத்த அவர்களை அவசரமாக அப்பால் நடத்திப் போனாள் தெரிசா.

கிளாராவும், சாராவும் நடந்தே மிண்ட் தெருவுக்குப் போகலாம் என்று ஒருமித்துச் சொல்லி விட்டதால் ராத்திரியில் கோச் வண்டியை வரச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ராத்திரி பயணத்துக்கு ஏகத்துக்குக் காசு வாங்குகிறதோடு வண்டி ஓட்டி வர ஆள் கிடைப்பதும் கஷ்டம்.

ஊரோடு குடிக்கும் நேரத்தில் இப்படி அற்பமான உத்தியோகம் பார்த்துக் காசு பார்க்கத் தயாரானவர்கள் சொற்பமான இடமாச்சே இந்த எடின்பரோ.

நிலா வெளிச்சத்தில் இடது பக்கத்தில் அமெரிக்க வெள்ளைக்காரியும் வலது வசத்தில் ஆப்பிரிக்கக் கறுப்பியுமாக தெரிசா நடந்தபோது மனசுக்கு இதமாக இருந்தது. ரெண்டே நாள் பழக்கத்தில் அவர்கள் இரண்டு பேரும் நல்ல சிநேகிதிகளாகி இருந்தார்கள்.

வயதில் சின்னவளாக இருந்தாலும் சாரா கறுப்பி தெரிசாவுக்கு அம்மா மாதிரி அவளை கிட்டத்தட்ட ஏவி பிரியத்தைக் காட்டினாள். அம்மா வயசு என்றாலும் கிளாரா சவலைக் குழந்தை மாதிரி தெரிசா கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டே வழி முழுக்க நச்சரித்துக் கொண்டு வந்தாள்.

எடின்பரோவிலே ராத்திரி பெண்கள் தனியாப் போகறது பாதுகாப்பு இல்லாத ஒண்ணா?

கிளாரா கேட்டாள்.

வாஷிங்டன்லே பகல்லேயே அப்படியாமே?

சாரா அவளைச் சீண்டினாள்.

நான் வீட்டை விட்டு வெளியே போனாலே மோட்டார் வண்டியிலே போய் இறங்கிடுவேன். வண்டி ஓட்டிப் போறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு டிரைவர் தேட வேண்டிப் போச்சு.

ஏன், காசு விட்டெறிஞ்சா நிறையப் பேர் வரிசையா வீட்டு வாசல்லே வந்து நிப்பாங்களே

சாரா கேட்டாள்.

நிப்பாங்க தான். வேலை பார்க்க எடுக்கறதுலே ஜாக்கிரதையா இருக்கணும். ஊர்லே இருக்கற கறுப்பு.

அவள் சட்டென்று நிறுத்தி காலில் செருப்பு கடிக்கிறது என்று குனிந்து முனகிய போது முதல் தடவையாக தெரிசாவுக்கு சிரிப்பு வந்தது.

ஹோலிராட் அரண்மனை பக்கம் இவர்கள் வந்து சேரும் முன்பே பிரேத ஆத்மாக்களைச் சந்தித்துக் குசலம் விசாரிக்க அங்கே ஒரு கூட்டம் தயாராக நின்றார்கள்.

மூணு சீட்டு குறைச்சுதுன்னியே ஜாக், வந்தாச்சு.

கல்யாண விருந்துக்குப் புறப்படத் தயாரானவன் போல் உடுப்பணிந்து இருந்த கிழவன் பக்கத்தில் நின்ற பையனைப் பார்த்துச் சொன்னான். அவனை செயிண்ட் ஜான் தேவாலய வாசலில் அழிக் கம்பியை நனைத்துக் கொண்டு நின்றபடிக்கு பார்த்ததாக தெரிசாவுக்கு என்னமோ நினைப்பு.

என்ன கர்மாந்திரமோ. இருந்து விட்டுப் போகட்டுமே. இந்த விருந்தாளிப் பெண்டுகள் சுற்றிப் பார்த்து முடிக்கிற வரை இதை எல்லாம் பொறுத்துக் கொள்வதால் ஒன்றும் குடி முழுகிப் போகாது.

தெரிசா அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்தாள். கிட்டத்தட்ட எல்லோரும் ஐம்பது வயசு கடந்த ஆசாமிகளாக இருந்தது வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொருத்தராகக் கூப்பிட்டுக் குறுக்கு விசாரணை செய்தால் அதில் கிட்டத்தட்ட எல்லோரும் மிஷனரி மகாநாட்டுக்காக வந்தவர்களாக இருக்கலாம்.

இந்தத் தெருவிலேயே ஆரம்பிக்கலாமா? முன்னூறு வயசுக்கு மேலே ஆன சில பேரை உங்களுக்கு பரிச்சயப்படுத்தலாம்னு பார்க்கறேன். அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். என்ன ஒரு அரை மணி நேரம் போல. வர வேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வரவேண்டாமா?

அவன் கால் தரையில் பரவாது நடக்கிறதாக பாவனை காட்டியபடி கைக்கடியாரத்தைப் பார்த்தான். நேரம் பார்த்து வந்து போகிற புண்யாத்மாக்களோடு தினசரி சுமுகமாக வார்த்தை சொல்லிப் பழகின கைபோல.

அதுக்கு முன்னாடி தெம்பா பக்கத்துலே ஹார்டி பார்லே ஒரு பியர் அடிச்சுட்டு வரதுன்னா நல்லது. நம்ம சீட்டைக் காட்டினா, கடையிலே கணிசமாக தள்ளுபடி உண்டு.

அட, இப்படியும் ராத்திரியிலே ஒரு கூட்டுக் களவாணி வியாபாரமா? தெரிசாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஸ்காட்லாந்தில் பணம் பண்ண என்ன எல்லாம் செய்கிறார்கள். இங்கிலீஷ்காரர்களுக்கு இந்த சாமார்த்தியம் கிடையாது.

இருந்தால் பீட்டர் மெக்கன்சியின் அப்பா மாதிரி வீட்டுப் பெயரில் இவ்வளவு கடன் வாங்கிக் குடித்தே அழித்திருப்பாரா?

ஒவ்வொரு தடவை லண்டன் போகும்போதும் பீட்டருடைய பாங்க் கணக்கில் இருந்து கணிசமான தொகை அந்தக் கடனை அடைக்கப் போயிருப்பதை பேங்கில் நுழையும்போது சொல்கிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் போய், யாரையோ எதிர்த்து என்னத்துக்கோ யுத்தம் செய்து கூலி வாங்கி அவன் சேர்க்கிற காசு இப்படியா வீணாகப் போகவேண்டும்?

மாமனார் மக்கென்சி குடல் அழுகிக் கெட்டுப் போய் இறந்தபோது கென்சிங்க்டன் வீட்டுக் கடன் பாதிதான் அடைந்திருந்தது என்று நேரம் கெட்ட நேரத்தில் தெரிசாவுக்கு நினைவு வந்தது.

பீட்டர், நீ இன்னும் எத்தனை வருஷம் எல்லா சவுகரியத்தையும் விட்டுப் பிரிஞ்சு போய் காசு சம்பாதிக்கறதுக்காக தனியா இருக்க வேணுமோ. உனக்குப் பிரியமான தேவ ஊழியம் செய்யறதுக்காவது எனக்கு உடம்பிலே தெம்பு வேணும். பியர் குடிச்சு வர்ற தெம்பு இல்லே அது. மனசில் தானே பீறிட்டுக் கிளம்புவது.

தேவ ஊழியத்தில் பிசாசு பிடிக்கறதும் உண்டா என்று பீட்டர் உரக்கச் சிரித்தபடி அவன் மார்பை அழுத்தினான்.

ஏய், நடுத் தெருவிலே என்ன விளையாட்டு. கையை எடுறா.

காயா, பழமா பார்க்கறேண்டி, கொஞ்சம் பொறு.

உதுந்து போற ஸ்தானத்திலே இருக்குடா ஸ்தனம் ரெண்டும். கையை எடுடா உதவாக்கரை.

மனசு தான் எப்படி எல்லாம் குறக்களி காட்டுகிறது.

தெரிசா சட்டென்று மேல் சட்டையைப் போர்த்தியிருந்த கம்பளிச் சால்வையை இறுக்க இழுத்து மூடிக் கொண்டாள்.

குளிருக்கு இதமா ஜின்னும் லெமனும் சாப்பிடலாமா என்றாள் சாரா.

அவள் குரல் கேட்டு வழிகாட்டிக் கிழவன் பக்கத்தில் தயங்கி நின்றான்.

சீமாட்டிப் பெண்டு பிள்ளைகள் தனியாக பத்திரமாக உட்கார்ந்து ஜின் அப்புறம் இன்னும் வேறே நாசுக்கான சமாச்சாரம் பலதும் சாப்பிட வசதி இருக்கு அம்மணி.

அவன் நிச்சயம் மதுக்கடையில் தினசரி கூலி பியராக வாங்கி மாந்தி விட்டுத் தேவாலய வாசலுக்கு உடுப்பைத் தளர்த்திக் கொண்டு நடக்கக் கூடியவன்.

ஐயோ போதையான வஸ்து ஒண்ணும் வேணாம். அப்புறம் நாளைக்கு காலையிலே மகாநாட்டுக்குப் போய் உட்கார முடியாது.

கிளாரா அவசரமாக முட்டுக்கட்டை போட்டாள்.

இல்லாவிட்டாலும் இந்த மூன்று பேரில் ஒருத்தரும் கடை வாசல்படி ஏறி ஒரு துள்ளி பானம் கூடப் பண்ணப் போவதில்லை. மூணு பேருக்குமே அது தெரியும்.

பக்கத்தில் நகரசபை கட்டடம் இருளில் மூழ்கிக் கிடந்தது. சாரா அங்கே போய் எப்படி இருக்கிறது ராத்திரியில் சபை என்று பார்க்கலாம் என்றாள்.

கிளாராவுக்கு பயமாக இருந்தாலும், ஆள் ஒழிந்த அந்த பிரம்மாண்டமான கட்டிடம் இருட்டில் எப்படி தட்டுப்படும் என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தது என்று அவள் ஆர்வமாக தெரிசாவைப் பார்த்ததில் இருந்தே தெரிந்தது.

அங்கே கதவெல்லாம் அடைத்து வச்சிருப்பாங்களே என்றாள் தெரிசா.

தேவையில்லாமல் அவசியம் இல்லாத இடத்தில் எல்லாம் நேரம் கெட்ட நேரத்தில் போய்வர அவளுக்கு உண்டான சஞ்சலம் அம்பலப்புழையில் இருந்து அவள் கட்டி எடுத்து வந்தது.

இதென்னடி கூத்து. கன்யகையான ஸ்திரி அகால நேரத்துலே தெருவிலே நடக்கறதுக்கு மிந்தி ஒண்ணு தீர யோசிக்கணுமின்னே உனக்கு போதமாகாதா? நீ கிறிஸ்து பகவானை தொழுதா என்ன, ஸ்ரிகிருஷ்ணனை சந்தியா காலம் கழிஞ்சு அம்பலம் போய் தொழுதா என்ன, பொண்ணுன்னா ஒரு விவஸ்தை வேணாமோடீ?

அம்மா சிநேகாம்பாள் வீட்டு வாசல் படி இறங்க நினைக்கும்போதே குரலால் கட்டிப் போட்டது. இன்னும் கட்டு அவிழவில்லை.

வா தெரிசா, இந்த மிடாக் குடியன்மார் எல்லாம் கடையிலே இருந்து படி இறங்க இன்னும் அரை மணிக்கூறாவது ஆகும். அதுக்கு அப்புறம் பிசாசு வேட்டை.

சாரா தெரிசாவைக் கையைப் பிடித்து அழைத்தபடி நகராட்சி கட்டடத்துக்குள் நுழைந்தபோது கிளாரா அவசரமாக தெரிசாவோடு ஒட்டிக் கொண்டு புறப்பட்டாள்.

தெரிசா எதிர்பார்த்ததற்கு மாறாக கட்டடம் மட்ட மல்லாக்கத் திறந்து கிடந்தது. சர்க்கார் கட்டிடத்தில் ராத்திரியில் நுழைந்து அதை இதை கிளப்பிக் கொண்டு போவது இதுவரை நடக்காத ஒன்று போல.

முணுக் முணுக் என்று லஸ்தர் விளக்கு ஒன்று விஸ்தாரமான நடு மண்டபத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது.

உள்ளே நுழைந்தபோதே என்னமோ தெரியலை தெரிசாவுக்குத் தலை சுற்றி கண் அயர ஆரம்பித்து விட்டது. இன்னும் நடக்க ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே இப்படி ஒரு ஆயாசமா?

வரிசையாகப் போட்டிருந்த நாற்காலி ஒன்றில் அவள் ஒரு வினாடி உட்கார்ந்தாள்.

கொஞ்சம் இப்படியே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டு, கூட்டத்தோடு மிச்ச நேரத்தைக் கழிக்கலாமே.

அவள் பக்கத்தில் நின்ற இரண்டு பேரையும் பார்த்தாள். இந்த ஊர் சுற்றல் முடிய ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலே ஆகிவிடும். அப்புறம் விடுதிக்குப் போய்ப் படுத்துத் தூங்கி, ஏழு மணிக்கு எழுந்திருந்து. மலைப்பாக இருந்தது.

தெரிசா, நீ வேணும்னா இப்படியே உட்காரு. நானும் கிளாராம்மாவும் ஒரு சுத்து சுத்தி வந்துடறோம்.

நான் வரல்லே. தெரிசாவை தனியா விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன். பேய் உலாவற நேரம் வேறே. அந்நிய நாட்டுக்காரி நாம் ரெண்டு பேரும். வம்பு ஏன்?

கிளாரா தப்பிக்கப் பார்த்தாலும், சாரா அவளை விடவில்லை.

அமெரிக்காவிலே இருந்து எங்க ஊருக்கு தலைமுறை தலைமுறையா வந்து ஆள் பிடிச்சுப் போன பேயை விட இங்கே இருக்கற பேயும் பிசாசும் தன்மையானதாத்தான் இருக்கும் கிளாராம்மா. இல்லேன்னா, நான் அதுகளை வேண்டியபடிக்கு கைகாரியம் செஞ்சுடறேன். ரொம்ப அலட்டிக்கிட்டா கட்டிப் பிடிச்சு ஒரு முத்தம். மிஷனரி பொண்ணு முத்தம் சுவர்க்கத்திலே கொண்டு போய் விடுமாக்கும். உதட்டுலே கரி படிஞ்ச படிக்கே போனாலும் குத்தமில்லே.

தெரிசாவுக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. கறுப்பிக்கு மதமும், நம்பிக்கையும், நிறமும், இனமும் எதுவும் பொருட்டில்லை. மிஷனரி மகாநாட்டுக்கு வந்தாலும் ஊர் சுற்றிப் பார்க்க சும்மா வந்து சேர்ந்தாலும் இதே மனோநிலைதான் அவளுக்கு இருக்கும். ஆனாலும் அபிசீனியாவில் அதிகம் மத மாற்றம் ஏற்படுத்திய இயக்கத்தை வழி நடத்திப் போகிறவள் அவள் என்று பிஷப் சொல்லி இருக்கிறார்.

சரி, நானும் வரேன். வா, சீக்கிரம் சுத்திட்டு திரும்பி வந்துடலாம். இல்லே மத்த பிசாசு எல்லாம் நம்மளை விட்டுட்டு வேறே மதுக்கடைக்குப் போயிடும்.

தெரிசா மெல்ல எழுந்தாள். மனசு சந்தோஷமாக இருந்தாலும் உடம்பு இன்னும் ஒத்துழைக்க மாட்டேன் என்று நாற்காலியோடு கட்டிப் போட்டு இருக்கிறது.

ஆனாலும் இது ஒரு வித்தியாசமான ராத்திரி. அவள் உடம்பு அசௌகரியத்தைப் பொருட்படுத்தப் போவதில்லை. எழுந்திருக்க இந்த ரெண்டு பேரில் யாராவது கைகொடுத்தால் போதும்.

உடம்பு ஒத்துழைக்க முடியாது என்று ஒரே சண்டித்தனம் செய்தது. உட்கார்ந்த படிக்கே கொஞ்சம் தூங்கினால் என்ன?

சாரா, தெரிசாவை கொஞ்சம் இளப்பாற விட்டுட்டு நாம் போய்ட்டு வந்துடலாம் வா.

கிளாரா கிளம்பினாள். தெரிசா ஒரு வினாடி அவர்களைப் பார்த்து விட்டு கண்களை மூடிக் கொண்டாள். தெரு சத்தங்கள் தேய்ந்தும் உரத்து ஒலித்தும் அவளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்க மனம் சூனியமான பிரதேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. இப்படியே மிச்ச வாழ்க்கையும் போகுமானால் என்ன?

சாரா, மெல்ல, மெல்ல.

கிளாரா குரல் எங்கேயோ கேட்டு விட்டு அஸ்தமித்துப் போனது. அவர்கள் போய்விட்டிருந்தார்கள்.

கிளாராவும் சாராவும் முதல் மாடிப்படி ஏறும்போது லஸ்தர் விளக்கு அணைந்து போனது. அது கூட தெரிசாவுக்குப் போதமானது. எப்படி? தெரியவில்லை.

எங்கேயோ யாரோ மெழுகுவர்த்தியை ஏற்றும் வாடை நாசியில் தீர்க்கமாக படிந்தது. அப்புறம் தெரிசாவுக்கு ஒரு போதமும் இல்லை.

மினுக் மினுக் என்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு இந்தியப் பெண்ணும் சிறிய வயசில் ஒரு பெண் குழந்தையும் முதல் மாடியில் எதிர்ப்பட்ட அறையில் உட்கார்ந்திருந்தார்கள்.

சேச்சியுடெ கூட்டுக்காரிகள் அல்லே நிங்ஙள் ரெண்டு பேரும்?

அவள் மலையாளத்தில் தான் பேசினாள். ஆனால் கிளாராவுக்கும் சாராவுக்கும் ஸ்பஷ்டமாகப் புரிந்தது அந்தப் பெண்மொழி.

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு

இரா.முருகன்


10 ஜூன் 1910 – சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை

கிளாரா என்றாள் இந்தப் பக்கம் நின்ற பெண். வெளுத்து மெலிந்த வெள்ளைக்காரி. அவளுக்குப் பின்னால் நின்றவள் கறுப்பி. கொஞ்சம் சதை போட்டு, முன் உதடு பெருத்த குட்டைப் பொண்ணு. சாரா என்றாள் அவள் தன் பெயரை.

ரெண்டு பேரும் மிஷனரி மகாநாட்டுக்கு வந்தவர்கள். வெள்ளைக்காரி அமெரிக்காவில், வாஷிங்டனில் இருந்து வந்து சேர்ந்தவள். கறுப்பி ஆப்பிரிச்சி. அபிசீனியாக்காரி. சீனாவில் வேதம் பரப்புகிற ஊழியம் செய்கிறவள். அங்கேயும் வேதாகமம் கப்பலும் வண்டியும் ஏறிப் போய்ச் சேர்ந்துள்ளது. பரத வர்ஷே பரத கண்டே மேரோஹு என்று கிழக்கே வந்த பிற்பாடு ரொம்ப நாள் கழித்துத்தான் அது. அப்படித்தான் தெரிசாவுக்குப் பட்டது.

எடின்பரோ கிறிஸ்துவ மிஷனரி மகாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகளை ஹோட்டல், விடுதி என்று தங்க வைப்பதை விட, கூடிய மட்டும் விருந்தினர்களாக வீடுகளில் தங்க வைத்தால் நலம் என்று முடிவானபோது தெரிசா சொன்னாள் –

நானே விடுதியில் தான் தங்கியிருக்கிறேன். என்னால் முடிந்த காரியம் இரண்டு பெண் பிரதிநிதிகளை நான் தங்கியிருக்கும் தோப்புத் தெரு விடுதியில் இருத்திக் கொள்கிறேன். அவர்களுடைய ஆகார சௌகரியம், போக்குவரத்து, இளைப்பாற ஒத்தாசை எல்லாத்துக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்ளுவேன்.

அவள் சொன்னதற்கு உடனடியாக பிஷப் சம்மதம் தெரிவித்ததோடு, அம்மாதிரி கட்டணம் குறைச்சலான விடுதிகளில் மகாநாட்டுக்கு வரக்கூடிய பிரதிநிதிகளைத் தங்க வைக்க பண உதவி செய்ய மற்றவர்களும் முன்வர வேண்டும் என்று யோசனை சொன்னார். அதை முன் யோசனையுடன் துண்டு சீட்டில் எழுதி ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை நேரத்தில் கடத்தி விடாமல், பிரசங்கத்தை ஆரம்பித்ததுமே காரியத்தில் கண்ணாக சொல்லிப் போட்டார்.

பெண் பிரதிநிதிகள் ரொம்பவே குறைவாக இருந்ததால் அவர்களை விடுதிகளில் தங்க வைப்பதை விட வீடுகளில் தங்க வைப்பதே பத்திரமான ஏற்பாடு என்று சபை உறுப்பினர் ஒருத்தர் ஆலோசனை சொன்னாலும், தெரிசா கண்காணிப்பில் தோப்புத்தெரு விடுதியில் வருகிற பெண்கள் எல்லோரையும் தங்க வைக்கலாம் என்று முடிவாயிற்று.

இதைத் தவிர, குடும்பத்தோடு வரும் பிரதிநிதிகளின் ஒத்தாசை இருந்தால் நாலைந்து ஆண்கள் ஒரு விடுதியிலும் அவரவர்களுடைய பெண்சாதிகள் வேறே இடத்திலும் சேர்த்துத் தங்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் சொல்லப்பட்டு, உடனே நிராகரிக்கப்பட்டது. இது வந்தவர்கள் விருப்பத்தைப் பொறுத்ததில்லையோ.

ஆகக் கூடி நேற்று லண்டனில் இருந்து ஃப்ளையிங் ஸ்கோட்மேன் ரயில் எடின்பரோ வந்து சேர்ந்ததும், தெரிசா பங்குக்கு இரண்டு பெண் பிரதிநிதிகளை வரவேற்றுத் தோப்புத் தெரு விடுதிக்குக் கூட்டிப் போனாள். கிளாராவும், சாராவும்.

கிளாரா அவள் குடும்ப வேர்கள் ஸ்காட்லாந்தில் இருப்பதாகவும் மிஷரரி மகாநாட்டில் பங்கெடுப்பதோடு பூர்வீக கிராமத்தைப் பார்த்து வர வேண்டும் என்றும் புறப்பட்டு வந்ததாகவும் ஆசை ஆசையாகச் சொன்னாள்.

தெரிசாவுக்கு அம்பலப்புழை நினைவு வந்தது. எத்தனை தடவை போக நினைத்து முடியாமல் தள்ளிப் போட்டிருக்கிறாள்.

அடுத்த வருடம் போகணும் என்று முடி போட்டு வைத்தால், அடுத்த வருடம் வேறே ஏதாவது காரியம் முளைக்கும். ஒதுக்குப்புற பகுதி தேவாலயத்தை ஒட்டி பெண்கள் பள்ளிக்கூடம், அல்லது கில்மோர் தெருவில் பியானோ வகுப்பு எடுக்க கோரிக்கை.

கில்மோர் தெருவில் இருந்த கத்தோலிக்க கன்யாஸ்த்ரிகளின் கன்னிமாடத்தில் இருந்து கூட இப்படி வகுப்பெடுக்க கோரிக்கை வந்தபோது பிஷப்புக்கே தாங்க முடியாத ஆச்சரியம். அவருடைய ஜீவிதத்தில் கத்தோலிக்கர்கள் இவ்வளவு இணக்கமாக இதுவரை வந்ததாக ஒரு நிகழ்ச்சி நடந்ததே கிடையாது. அவசியம் போய்ச் சொல்லிக் கொடுக்கச் சொல்லி அவர் கோரிக்கை விடுத்ததால் போன வருடமும் தெரிசா இந்தியா போவதைத் தள்ளிப்போட வேண்டிப் போய்விட்டது.

கிளாராவுக்கு வயசு அறுபதாவது காணும். சாரா சின்ன வயசு. தெரிசாக்கு இடமும் வலமுமாக ஒவ்வொருத்தரும் இருபது வயசு வித்தியாசம் என்றாலும் பார்த்த மாத்திரத்திலேயே அவளோடு பிரியமாக ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.

நாளைக்கு மகாநாடு இருக்கு. அதுக்குள்ளே எடின்பரோவை கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா?

சாரா கேட்டபோது தெரிசாவுக்கு சிரிப்பு வந்தது. அவளே எடின்பரோவை இந்தப் பத்து வருடத்தில் முழுக்கப் பார்த்ததில்லை. இரண்டு வாரத்துக்கு ஒருதடவை லண்டன், அங்கே வீட்டைப் பராமரிப்பது, ஓட்டம் ஓட்டமாகத் திரும்பி வந்து எடுத்துக் கொண்டிருக்கும் வகுப்புகளைத் தொடர்வது, திரும்ப அடுத்த லண்டன் பயணம் இப்படி ரயில் வண்டியில் தான் பாதி வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

எல்லா தேவாலயமும் போகணுமா? தெரிசா கேட்டபோது சொல்லி வைத்தாற்போல் இரண்டு பேரும் அதொண்ணும் வேண்டாம் என்று தீர்மானமாக அறிவித்துவிட்டார்கள். கோவில், மதப் பிரச்சாரம், வேதாகமம், அனுஷ்டானம் இத்யாதி விஷயங்களைத்தான் திகட்டத் திகட்ட இன்னும் ஒரு வாரம் பேசித் தீர்க்கப் போகிறோமே. வேறே எடின்பரோவில் பார்க்க என்ன எல்லாம் இருக்கு?

கோட்டை. அதில் அரச பரம்பரையின் வீர வாள், மகுடம்.

தலை இல்லாத கிரீடமும் வாளும் ரசிக்காது என்று சொல்லி விட்டாள் கிளாரா. லண்டனில் இப்போதான் லண்டன் கோபுரப் பகுதியில் சுற்றித் திரிந்து அனிபோலினைச் சிரச்சேதம் செய்த இடம் விடாமல் தரிசித்து சரித்திரத்தை தொண்டைக்குழி வரைக்கும் விழுங்கி விட்டேன். இதுக்கு மேலே ஸ்காட்லாந்த் சரித்திரம் வேறே என்றால் கடுத்த அஜீர்ணமாகிவிடும், வேணாம் என்றாள் சாரா.

நாடகம், ஓபரா? தெரிசா கேட்டாள். அவளே இந்தப் பத்து வருடத்தில் இரண்டே இரண்டு நாடகம் தான் பார்த்திருக்கிறாள். அதில் ஒண்ணு பாதியில் இறங்கி வந்த ஓ சோசன்னா நாடகம். தங்கியிருந்த விடுதி தீயில் கருகிப்போன ராத்திரி அது. நாடகம் என்றாலே ஏனோ அடிவயிற்றில் பயம். வற்புறுத்தி நாலைந்து வருடம் முந்தி கிறிஸ்துமஸ் சமயத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் நடித்த ஏசு பிறப்பு நேட்டிவிட்டி நாடகம் பார்த்தபோது கூட பாதியில் எழுந்து போய் விடுதி என்ன ஆச்சு என்று பார்க்கத் தோன்றிக் கொண்டே இருந்தது.

நாடகம், சங்கீதம் எல்லாம் சாவகாசமாகப் பார்த்துக் கொள்ளலாம். அதான், மகாநாட்டில் சாயந்திரம் கொஞ்சம் கொஞ்சம் இந்த இனங்களை கைகார்யம் செய்வார்களாமே. வேறே பரபரப்பான ஏதாவது.

சாரா இழுத்தாற்போல் சொல்ல, தெரிசாவுக்கு செயிண்ட் ஜான் தேவாலய கம்பி அழிக் கதவின் மேல் மூத்திரம் ஒழித்துக் கொண்டிருந்த குடிகாரக் குப்பன்கள் ஏடாகூடமாக நினைவுக்கு வந்தார்கள்.

என்ன தெரிசா சிரிக்கறே?

சாரா ஆர்வமாக விசாரித்தாள்.

ஒண்ணுமில்லே. ஸ்காட்லாந்தில் சாப்பாடும், குடியும் தவிர வேறே மும்முரமான, சுவாரசியமான விஷயம் இருக்கறதா தெரியலே. சாப்பாட்டு விஷயத்திலே நான் சுத்த சைவம். அடுத்த சமாசாரம் அருகே அண்டக்கூட விடமாட்டேன்.

அது ஏன் இந்தியாக் காரங்க எல்லாரும் சுத்த சைவம்? மீன், முட்டை கூட இல்லையா? புத்த மதத்திலே இதுவும் ஒரு ஆசாரம் தானே?

கிளாரா கேட்டாள். அமெரிக்கப் பெண்மணிக்கு இந்தியா தெரியாததில் அதிசயம் இல்லை. ஆனாலும் தெரிசா வேறு மதம் என்று நினைத்துக் கொண்டிருந்தது தான் ஆச்சரியமாக இருந்தது. அதுவும் புத்த மதம்.

அவளிடம் தான் வேதத்தில் ஏறின கதையை சாவகாசமாகச் சொல்லிக் கொள்ளலாம். வேறே எடின்பரோவில் என்ன சுவாரசியமான விஷயம்? மழை? அதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது? வருஷம் முழுக்க மழையில் கருப்புக் கல் கட்டிடங்கள் நனைந்து சதா துக்கம் அனுஷ்டிக்கிறதைப் பார்க்க மனசு முழுவதும் அழுகை பீறிட்டு வரும். இதயம் இருக்கப்பட்ட எல்லோருக்கும் தோணும் இப்படி.

ஊர் பார்க்க வந்தவர்களிடம் இப்படியான துக்கத்தை என்னத்துக்கு பகிர்ந்து கொள்ளணும்?

ஆமா, இங்கே பேய் பிசாசு எல்லாம் நிறைய உலாவுவதாகச் சொன்னார்களே.

சாரா கேட்டாள்.

ஆமா, நானும் கேட்டிருக்கேன். அமானுஷ்ய அனுபவங்கள் இங்கே இருக்கற இடங்கள்லே கிடைக்கும்னு என் மாமி சொல்லியிருக்காங்க. அவங்க கிளாஸ்கோவிலிருந்து நாற்பது வருஷம் முந்தி வாஷிங்டன் வந்தவங்க.

கிளாராவும் அமானுஷ்யத்தில் ஆர்வம் காட்டினாள். இதெல்லாம் கிறிஸ்துவம் இல்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிடலாம் தான். ஆனால் தெரிசா இங்கிதம் தெரிந்தவள். விருந்தாளிகள். பெண்ணுக்குப் பெண் துணையாக இருக்க வந்த கூட்டுக்காரிகள்.

அப்புறம், அமானுஷ்யம் தெரிசாவைத் தொடர ஆரம்பித்து எத்தனை வருஷம் ஆகி விட்டது.

சேச்சி, அக்கா என்று மாறி மாறி அழைத்தபடி அவளை எங்கே போனாலும் தொடர்கிற பெண். கூடவே வருகிற அவளுடைய குழந்தைப் பெண். ஒரு வினாடி எதிர்ப்பட்ட வாகனத்தில் உட்கார்ந்தபடி அவளை விளித்த தெக்கத்தி சாயல் கொண்ட குடுமிக்காரப் பையன். எல்லோரும் இருக்கப்பட்டவர்களா?

காலத்தின் சுழற்சியில் எப்படியோ இசகு பிசகாக இடம் மாறி கதி கிட்டாமல் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள் தெரிசாவுக்கு உற்றவர்கள். உறவுக்காரர்கள். பீட்டர் போல், இப்போது விலகிப் போனாலும் பீட்டரைக் கல்யாணம் கட்டியதால் உறவான தாமஸ் மக்கென்ஸி போல, சில நேரங்களில் அவர்களையும் விட இத்திரி அதிகமாக தொடர்கிற உறவுகள். அதிலே அமானுஷ்யம் எங்கே இருக்கு?

சாரா படம் போட்ட ஒரு புத்தகத்தைப் பிரித்தாள். இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் பார்க்க வேண்டிய இடங்கள், வரைபடம், பிரயாண வசதிகள் என்று சகல தகவலும் கொண்ட புத்தகம்.

இந்த இடம் எங்கே இருக்கு?

அவள் படத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்ட இடத்தை தெரிசாவுக்கு நன்றாகவே தெரியும். அங்கே பக்கத்தில் கல்யாணம், பொது நிகழ்ச்சி என்று எத்தனையோ தடவவ போயிருக்கிறாள். கிரமமாக அரைப் பாவாடை கட்டிய நாலைந்து கிழவர்கள் பேக்-பைப் வாசித்து வரவேற்பார்கள். அந்த சங்கீதம் அசைப்பில் மகுடியும் நாதசுவரமும் சேர்ந்ததுபோல் அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலத்தை நினைவுபடுத்தும். இத்தனை வருடம் கழிந்தும் மறக்காத இசை. ஆனாலும் இடக்க வாசித்து சோபான சங்கீதம் பாடுகிற மாரார் ஸ்திரி போல பாவாடை உடுத்தியிருக்க மாட்டார்.

இங்கே ராத்திரி ராத்திரி விநோதமான அனுபவம் எல்லாம் ஏற்படுகிறதாமே. நம்பாவதர்களும் ஒரு தடவை அனுபவப்பட்டால் இந்த உடம்பில்லாத பிரகிருதிகளை நம்பி அவர்களைத் தொடர வைத்து விடுவார்களாமே.

சாரா புத்தகத்தில் இருந்து கண்ணை எடுக்காமலேயே சொன்னாள்.

நான் பார்த்ததில்லையே அதெல்லாம் என்றாள் தெரிசா.

வாங்க, இன்னிக்கு ராத்திரி பார்த்துட்டு வரலாம். மதியத்திலேயே போனால், இன்னிக்கு ராத்திரி பேய் பிடிக்கக் கூட்டிப் போகறதுக்கு பதிவு பண்ணிக்கலாம்னு போட்டிருக்கே புத்தகத்திலே.

சாரா பலமாகச் சிரித்தாள்.

தெரிசாவுக்கு எடின்பரோ தெரிந்ததைவிட அபிசீனியாவில் இருந்து வந்த சாராவுக்கு இந்த ஊரை அங்குலம் அங்குலமாகத் தெரிந்திருக்கிறது.

சாயந்திரம் மூன்று மணிக்கு தெரிசா பதிவு செய்கிற இடத்துக்குப் போனபோது ஏற்கனவே பத்து பேர் ராத்திரி கல்லறைகளையும் பேய் அலையும் கட்டடங்களையும் பார்க்க பெயர் பதியக் காத்திருந்தார்கள்.

தெரிசாம்மா, நீங்க கூடவா இதைப் பார்க்க நிக்கறீங்க?

யாரோ பின்னால் இருந்து கூப்பிடும் சத்தம். திரும்பிப் பார்த்தாள் தெரிசா. தோப்புத்தெரு விடுதி சொந்தக்காரன் காணாததைக் கண்ட சந்தோஷத்தில் சிரித்தபடி நின்றிருந்தான்.

எனக்கு இல்லே. நம்ம விருந்தாளிகள் வந்திருக்காங்களே, அவங்களுக்கு நிஜமாகவே பேய் அலையுதான்னு பார்க்க இஷ்டம்.

நீங்க வேணும்னா பாருங்க. இன்னும் அரை மணி நேரத்திலே முப்பது பேர் சேர்ந்தா, பேயைக் காட்டறேன்னு சாயந்திரமே ஒரு கோஷ்டியைக் கூட்டிட்டுக் கிளம்பிடுவாங்க. பிசாசு தட்டுப்படுதோ என்னமோ, ஊர்லே நல்ல பியர் கிடைக்கிற ஒரு கடை விடாமல் படி ஏறிடலாம். மப்புலே அவனவன் அலையறபோது எதிர்ப்பட்டது எல்லாம் பிசாசாத்தான் தெரியும். ஆனா, நல்ல பியர். மர பீப்பாய்லே அடைச்சு பதப்படுத்தின சரக்கு. பேய் கிடைக்காட்டாலும் அதுக்கே போகலாம்.

விடுதிக்காரக் கிழவன் பியர் சுகத்தில் கண் கிறங்கிச் சிரித்தான். இவன்களுக்கு போக சுகம் கூட மறந்து போகும். குடிக்கிற சொர்க்கம் அந்திம உறக்கம் வரை கூட வருவது ஒருக்காலும் நிற்காது போல.

பாவம், விருந்தாளிகள் மிஷனரி மகாநாட்டுக்கு வந்துட்டு பியரையும் பீப்பாயையும் பார்க்கணும்னு ஏன் ஆசைப் படறாங்களோ தெரியலை.

தெரிசா அவனுக்கு பதில் மரியாதையாகச் சிரிப்பைத் திருப்பிக் கொண்டே சொன்னாள். அவளுக்கும் ஏனோ இந்த மாதிரி ஒரு குழுவாக அலைய வேணும் என்று தோன்றியது. பிசாசு இருந்தால் நல்லது தான். இருக்கட்டுமே. அதோடும் அலைந்தால் போச்சு. பெண் பிசாசாக இருக்கணும். அத்ரயே உள்ளூ.

எத்தனை பேர்?

சீட்டு கிழித்துக் கொண்டிருந்தவன் கேட்டான்.

அஞ்சு.

எதுக்காக ஐந்து கேட்டோம் என்று தெரிசாவுக்குப் புரியவில்லை.

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஆறு

இரா.முருகன்



22 மே 1910 – சாதாரண கர வருஷம் வைகாசி 9 ஞாயிற்றுக்கிழமை

பியானோ வகுப்பு முடிந்து தெரிசா செயிண்ட் ஜான் தேவாலயத்தை விட்டு இறங்கும்போது கோவில் மணி ஒன்பது அடிக்கத் தொடங்கி இருந்தது. ராத்திரி குளிர் விலகியும் குளிர்ச்சி விலகாமல் இருட்டோடு இழைந்த நேரம். பிரின்சஸ் தெருவில் இரண்டு மணி நேரம் முன்னால் இருந்த பரபரப்பு எல்லாம் ஓய்ந்து போய் குடிகாரன்கள் அலைய ஆரம்பித்திருந்தார்கள். எல்லா வயசிலும் இருக்கப்பட்டவர்கள். வாயைத் திறந்தால் வசையைத் தவிர வேறே எதையும் உதிர்க்க முடியாதவர்கள்.

தெரிசா செயிண்ட் ஜான் வாயில்படி இறங்கி வெளியே இடப்புறம் தெருவுக்கு வர கம்பி அழிக்கதவைத் திறந்தபோது அந்தக் கதவின் மேலேயே சிறுநீர் பொழிந்து கொண்டிருந்த ரெண்டு மத்திய வயது ஆண்களைக் கண்டாள். அருவறுப்போடு அவள் வந்த வழியே திரும்பி தேவாலயத்தில் நுழைந்தபோது பின்னால் இருந்து லேடி லேடி என்று சத்தம்.

மூத்திரம் ஒழித்தாலும், மூக்கு முட்டக் குடித்தாலும் பெண்பிள்ளை வாடை மாத்ரம் இந்தக் கடன்காரன்களுக்கு புத்தியில் உறச்சுடும்.

அவள் கல்லறை வளாகம் வழியாக வெளியேற முடிவு செய்து பிரார்த்தனை இருக்கை வரிசைகளுக்கு நடுவே மெல்ல நடந்தாள்.

பியானோ பயில வந்த பெண்களோடும் அவர்களுக்குத் துணையாகக் கூட்டிப் போக வந்த கனவான்களான தமையன், தகப்பன்மாரோடும் போயிருந்தால் இன்னேரம் கல்லறைப் பக்கம் போக வேண்டியிருக்காது. பிஷப் வருகைக்காகக் காத்திருந்தது நேரமாகி விட்டது.

அடுத்த மாதம் மிஷனரி மாநாடு எடின்பரோவில் நடக்கப் போகுதே. அறுநூறு பிரதிநிதிகள் அமெரிக்கா, கனடாவிலே இருந்து, இங்கேயிருந்து ஏன், கிழக்கே மதராஸ்லே இருந்தெல்லாம் வராங்க. அவங்களை எங்கே தங்க வைக்கறதுன்னு பேசி முடிவு செய்யணும். இன்னிக்கு சாயந்திரம் உட்கார்ந்து முடிச்சுடுவோம்.

பிஷப் அனுப்பிய வர்த்தமானம்.

காலை பிரார்த்தனை நேரத்தில் பிரசங்கிக்க ஆரம்பிப்பதற்கு முன் அவர் துண்டு சீட்டில் கோழி கழிந்த மாதிரி கிறுக்கி இருந்தார். நட்டமாக நின்றபடிக்கே எழுதியது இது.

அவர் கோவில் நுழைவாசலில் நின்று வழக்கமாக பிரார்த்தனைக்கு வருகிறவர்களை வரவேற்கிறது மட்டுமில்லாமல் தெருவில் பராக்கு பார்த்தபடி நகர்ந்து போகிற வழிப்போக்கன், சுற்றுலாப் பிரயாணி, சும்மா வேலை வெட்டி இல்லாமல் தண்டத்துக்கு மூச்சு விட்டபடி ஊர் சுற்றுகிறவன் என்று ஒருத்தர் விடாமல் உரக்கக் கூப்பிட்டு உள்ளே அழைப்பார்.

சூடாக ஒரு சாயா குடிச்சுட்டு போகலாம் வாங்க.

சர்ச்சுக்கு வரவழைக்க இப்படி சாயாக் கடை மாதிரி கூப்பிடுவதை தெரிசா அறவே விரும்பவில்லைதான். ஆனால் என்ன, வழி தவறிய ஆடுகளை மந்தைக்குக் கொண்டு வர இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று பேராயர் மெக் நிக்கல் அடித்துச் சொன்னபிறகு அவள் வாயைத் திறக்கவே இல்லை.

தேவ ஊழியம் செய்ய வந்து, அதுவும் தரக்கேடில்லாமல் நடந்து கொண்டிருக்கும்போது இருக்க இடம் கொடுத்தவர்களைப் பகைத்துக் கொண்டு உள்ளதும் போச்சுது என்று திரும்ப முடியாது அவளால்.

பிஷப் ஒரு துண்டு சீட்டில் எழுதி கூட்டத்தில் அனுப்பியதை, கூடுதல் காணிக்கைக்கான விண்ணப்பம் என்று நினைத்தோ என்னமோ பல பேர் படிக்காமலேயே அடுத்தவரின் கைக்கு மாற்றி விட்டார்கள்.

அந்த சீட்டு கடைசி வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு வந்தபோது கீதம் முடிந்து பிரசங்கிக்க பேராயர் கம்பீரமாக உள்ளே நடந்து வந்தார்.

சீட்டு அனுப்பினதற்கு பதிலாக அவரே ஒவ்வொருத்தராகக் கூப்பிட்டு சாயாவுக்காக உள்ளே வரும்போதே சொல்லியிருக்கலாம். அல்லது பிரசங்கத்தின் இடையில் அறிவிப்பாக இதை நுழைத்திருக்கலாம் என்று தெரிசாவுக்குப் பட்டது.

தேவாலய மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு சதா மழை வெள்ளம் உள்ளே சால் கட்டித் தேங்குகிறது. அதில் கொசு முட்டையிட்டு இனவிருத்தி செய்த வகையில் பிரசங்க நேரத்தில் தேவைப்படாத இடத்தில் எல்லாம் கைதட்டி கொசு விரட்டுகிற சத்தம் மிரள வைக்கிறது. இது நாலு மாதம் முன்பு அனுப்பிய சீட்டு.

கூரையை தார்ச்சீலை போட்டு மூடலாம் என்று நாலைந்து கிழவர்கள் சீட்டிலேயே கிறுக்கி அனுப்பினார்கள் அப்போது. அதில் ஒருத்தர் சர்ச் கல்லறை வளாகத்துக்கு போன வாரம் தான் உறக்க ஸ்தலத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

பிஷப் புதுசாக குரோவ்னர் தெருவில் வீடு வைத்தபோது சுண்ணாம்பு அடிக்கப் பணம் தேவைப்படுவதால் நன்கொடை கேட்டு சீட்டு அனுப்பி வைத்திருந்தார்.

கல்லறை வளாகத்தில் அடிக்க போன தடவை நன்கொடை கேட்டு வாங்கிய சுண்ணாம்பு மிச்சம் இருக்கிறதாமே, அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாமே என்று ஒரு முதிர்கன்னி பிரசங்கத்தின் இடைமறித்து அபிப்பிராயம் சொல்லி ரசாபாசமாகி விட்டது ரெண்டு மாசம் முன்பு. இவ்வளவுக்கும் அவள் பிஷப் மேல் பட்சம் உள்ளவள் தான்.

இந்தச் சீட்டு உள்ளபடிக்கே கால் காசு தருமம் கேட்டு பிஷப் அனுப்பவில்லை. பொத்திப் பொத்திச் சேர்த்து வைத்திருக்கும் தேவாலய சொத்திலிருந்து கொஞ்சம் செலவு கணக்கில் போய்ச் சேர்ந்து விடும். என்ன மாதிரி அதை மிச்சம் பிடிக்கலாம் என்றுதான் ஆலோசனை கேட்கிறார் அந்த மனுஷர்.

எடின்பரோ மிஷனரி மாநாடு இரண்டு வருடமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இங்கிலாந்து, ஸ்காட்லாந்தில் இருக்கப்பட்ட புராட்டஸ்டண்டுகள் தவிரவும், ஐரீஷ் கத்தோலிக்க பாதிரியார்களும் இது என்ன மாதிரி நடக்கிறது, யாரெல்லாம் பேசி என்ன திட்டம் எல்லாம் உருவாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்ததாக சர்ச் வட்டாரத்திலும், வெளியே சும்மா பொழுது போகாமல் அரட்டை அடிக்கிற நேரத்திலும் பலரும் பேசிக் கொண்டது.

வாத்திகனில் போப் கூட இந்த மகாநாடு ரொம்ப பிரம்மாண்டமாக வெற்றி பெற்று விட்டால் ஐரோப்பாவில் நம் செல்வாக்கு கிஞ்சித்தும் மிச்சம் இருக்காதே என்று துக்கித்து ராத்தூக்கம் தொலைத்து அவதிப்பட்டதாகச் செய்தி.

கிறிஸ்துவத்தில் நம்பிக்கை வைக்காத, அதைப் பற்றி யாதொரு விதமான அறிவும் இல்லாத பெரும்பான்மை உலக மகாஜனங்களை ஞானஸ்நானம் செய்வித்து வேதத்தில் ஏற்றுகிற விஷயம் தான் இங்கே முக்கியமாக விவாதிக்கப்படும் என்று முடிவு செய்தாகி விட்டது. முக்கியமாக இந்தியா மாதிரியான அஞ்ஞான நிலப்பரப்புகளில் லட்சோப லட்சம் அறியா ஜீவன்களை ஆகமத்துக்குத் திருப்ப வேண்டியிருக்கிறதால் ஆயர்களுக்கு தலைக்கு மேல் வேலை காத்திருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து எண்ணூறு பேரும் இங்கே இருக்கப்பட்ட ஆர்ச் பிஷப், பிஷப் தொடங்கி, கோவில் குட்டியார் வரைக்குமாக ஒரு எண்ணூறு பேர், அப்புறம் இந்தியா, ஆப்பிரிக்கக் கண்டம், மலேயா தீபகற்பம், இலங்கை இங்கே இருந்து வரப்பட்ட பிரதிநிதிகள் என்று திருவிழாக் கூட்டம் அடுத்த மாதம் எடின்பரோவில் கூடிவிடும். இவர்களை எங்கே தங்க வைப்பது? எப்படி போஜன, ஸ்நான, உறக்க சௌகரியங்கள் செய்து கொடுப்பது? ஆர்ச் பிஷப் சதா தலையைக் குடைகிறார்.

தெரிசா தேவாலய ஊழியை இல்லைதான். ஆனாலும் தேவ ஊழியம் செய்ய லண்டனில் இருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறவல். அதுவும் இந்தியாவில் பிறந்த பெண்பிள்ளை. இதைவிட விசேஷம் ஒரு பிராமண ஸ்திரியால் ஒரு வைதீக பிராமணனுக்கு கர்ப்பம் தரித்து பிராமண கன்யகையாக வளர்ந்து அப்புறம் மதம் மாறியவள். படிப்பும், மிடுக்கும் துணை செய்ய இங்கிலீஷ்காரன் தாமஸ் மெக்கன்சியைக் கல்யாணம் செய்து இங்கே நிரந்தரமாகக் குடியேறியவள் என்பது உபரியான விசேஷம்.

யார் பிஷப் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்துக்கு இருக்கிறார்களோ இல்லையோ, தெரிசா நிச்சயம் இருப்பாள். ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் மனசு ஒட்டாமல் கடனே என்று உட்கார்ந்து கேட்டதற்கு அது பிராயச்சித்தம் ஆகும்.

இந்தப்படிக்கு அவள் பிரசங்கம் முடிந்து வந்த கூட்டம் எல்லாம் கலைந்து போனபிறகும் இருந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தாள். அவ்வப்போது கைப்பையைத் திறந்து கொஞ்சம் பழசான ஒரு கடிதாசைப் படிக்கிறதும், கண்ணை மூடி யோசிக்கிறதுமாக இருந்தாள் அவள்.

பீட்டர் மக்கென்சி போயர் யுத்தத்துக்குப் போன இடத்தில் இருந்து எழுதித் தபாலில் சேர்ப்பித்தது அந்தக் கடிதம். எழுதி மூன்று மாதமாகி விட்டது. உலகம் முழுக்க பிரதட்சணம் செய்தது போல் ஏகப்பட்ட தபால் முத்திரைகளை உடம்பெல்லாம் வாங்கிக் கொண்டு அந்தப் பழுப்பு உறை தெரிசா கைக்குக் கிட்டியபோது அவள் மிஷனரி ஸ்கூல் மூணாம் பாரம் பெண்பிள்ளைகளுக்கு தேவ கீதங்கள் பாடக் கற்பித்துக் கொண்டிருந்தாள்.

போன வருடம் வரைக்கும் பீட்டர் தெரிசாவுக்கு அனுப்பிய கடிதம் எல்லாம் ‘தாமஸ் மெக்கன்சி மேற்பார்வையில் பட்ட தெரிசா மெக்கன்சி சீமாட்டி’ என்றுதான் விலாசம் எழுதி வரும். தாமஸ் லண்டனுக்குத் திரும்பிப் போய் இனி வரமுடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது முதல் அது மாறிப்போய் விட்டது.

தாமஸை லண்டனுக்கு ஒரே முடிவாக அனுப்பி வைக்க பிஷப் வரை தகவல் போய் சர்ச்சைக்குரிய விஷயம் ஆனது தெரிசாவை வெகுவாக பாதித்துப் போட்டது.

பின்னே இல்லையா? ஒரு டாக்டர். அதுவும் லண்டன் பட்டணத்தில் ஸ்ட்ராண்ட் பக்கம் அபோதிகரி ஒருத்தனையும், டிரஸ்ஸர் இரண்டு பேரையும், இன்னும் மருந்து கலக்கித் தருகிற கம்பவுண்டர் ஒருத்தனையும் பகுதிநேர ஊழியத்துக்கு வைத்துக் கொண்டு நோய் சிகிச்சைக்கு கடை திறந்தவன் அவன். தரக்கேடில்லாத வருமானம் வந்தாலும், எடின்பரோவில் இன்னும் கொஞ்சம் அதிகம் காசு பார்க்கலாம் என்று தேவ ஊழியத்தை சாக்காக வைத்து இங்கே வந்தான். பீட்டர் மக்கென்சி தெரிசாவுக்குப் பாதுகாப்பாக வரச் சொன்னது ஒரு சாக்கு. இந்த இந்தியக் கறுப்பியின் மர்ம ஸ்தான வாடையை முகரவும், நேரம் கூடிவந்தால் முயங்கவும் சந்தர்ப்பம் வாய்க்கும் என்றும் எதிர்பார்த்துத்தான் கூட வந்தான் தாமஸ்.

வந்த இடத்தில் அவனுக்கு கிடைத்த சிநேகிதம் தான் சரியாக அமையாமல் போய்விட்டது. நாடகக்காரன் தானியல் நல்ல சேக்காளிதான். ஆனால், எத்தனை நாள் அவனோடு நாடகத்தையும், கவிதையையும், பிரஞ்சு மதுவகைகளையும் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பது? அவன் இல்லாத நேரத்தில் அவனுடைய சிநேகிதியின் மாரைப் பிசைய முயற்சி செய்வதை கொஞ்சம் யோசித்து செய்திருக்கலாம் தான். நாடகக் காரன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் டாக்டர் தாமஸை அப்போது. அவன் எடின்பரோவில் ஏற்படுத்தவிருந்த ஆஸ்பத்திரியும் திறக்காமலேயே ஆயுசு முடிந்து போனது அப்போதுதான்.

தாமஸ் அப்புறம் ஒண்ணுக்குள் ஒண்ணாக இருந்து பழகிய சிநேகிதர்களை தெரிசா நினைத்துப் பார்த்தாள். சிநேகிதர்கள் கூட இல்லை. பெண்வாடை பிடித்துத் திரிந்து அவன் டால்கிரேவ் பக்கம் ஒரு வீடு வைத்துக் கொண்டான். அங்கேயே மேல் மாடியில் தெரிசாவைத் தங்கி இருக்க அவன் யாசித்தாலும், இடம் தோதுப்படாது என்பதோடு இவனுக்கு நெருக்கமாக இருப்பதும் உசிதமானதாக இருக்காது என்றுபட, தெரிசா தோப்புத்தெரு விடுதியிலேயே தங்கிவிட்டாள். இன்று நேற்றல்ல, கடந்து போன பத்து வருஷமாக இதுதான் ஸ்திதி.

அப்புறம் தான் தாமசுக்கு பெண் சீக்கு வந்து சேர்ந்தது. டாக்டருக்கு சீக்கு வந்தாலே கொஞ்சம் அந்தஸ்து குறைச்சல் ஆகிவிடும். அதுவும் பெண்சீக்கு வந்த ஸ்திரீலோலன் மருத்துவனாக அவதாரம் எடுத்து நாடி பிடித்துப் பார்க்க வந்தால், குல ஸ்திரிகள் மட்டுமில்லை, கூட வரப்பட்ட கனவான்களும் அவன் அண்டையில் வர யோசிப்பார்களே. தெரிசாவுக்கு நிலைமை தெரிந்திருந்தாலும் தாமசை நினைக்கப் பாவமாக இருந்தது. அவனை தேவாலயத்திலேயே படி கடத்தாத போது தேவ ஊழியம் செய்ய ஒத்தாசைக்குக் கொண்டு போய் எப்படி நிறுத்துவது?

அவன் கல்யாணம் கட்டியிருந்த ஸ்திரி ரத்துப் பண்ணி விட்டுப் போய் வேறு ஒரு தடியனோடு கூட அமெரிக்காவுக்கு ஓடிப் போகாமல் இருந்தால் தாமஸ் வேலி தாண்டி இருக்க மாட்டானோ என்னமோ.

தாமஸ் பிரச்சனை இருக்கட்டும். பிஷப் இன்னும் வரவேயில்லையே, விடுதிக்கு எப்போது போய்ச் சேர்ந்து ராத்திரி ஆகாரம் கழித்து நித்திரை போவது என்று தெரிசா குழம்பியிருந்தபோது தான் பிஷப் வந்து சேர்ந்தது.

காண்டர்பரி ஆர்ச் பிஷப் அனுப்பிய போதகர் லண்டனில் இருந்து காலையில் வந்து சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்ததால் உத்தேசித்தபடி இந்தக் கூட்டத்தை நடத்த தாமதமானதாக அவர் அறிவித்தபோது தெரிசாவைத் தவிர இரண்டே இரண்டு விசுவாசிகள் மாத்திரம் பாக்கி இருந்தார்கள்.

அப்புறம் சர்ச் ஊழியர்களை அனுப்பி மற்ற முக்கியஸ்தர்களை தருவித்து, அவர்கள் வருவதற்காகக் காத்திருக்க வேண்டிப் போனது. சொல்லி வைத்தாற்போல் பலருக்கும் காலை பிரார்த்தனைக்கு வந்து போன பிற்பாடு உடம்பெல்லாம் வலி, நோவு, சுகவீனம். பிஷப்பின் பிரசங்கத்துக்கு இப்படியான சக்தி உண்டென்று ஊரெல்லாம் பிரசித்தமான செய்தியாகிப் போனது பழங்கதை.

கடைசியில் அப்படி இப்படி எட்டு பேரோடு ஆரம்பமான ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் ஆளாளுக்கு ஒரு திசையில் பேச்சை வளர்த்துக் கொண்டே போனார்கள். வயசர்கள் அவர்கள் எல்லோருமே என்பதால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், சாயங்காலத்தை வெருதாவாக செலவழிக்காமல் கோவில் கணக்கில் சாயா குடித்தபடி லோக விவகாரம் பேசி நேரம் கடத்த உத்தேசித்து வந்ததாக தெரிசாவுக்குத் தோன்றியது.

எல்லோரையும் ஒவ்வொரு விசுவாசியின் வீட்டிலும் ஒரு பிரதிநிதியாகத் தங்க வைத்துக்கொள்ளலாம் என்று பிஷப் சொன்னபோது எட்டு வயசன்மார்களும் அது சரிப்படாது என்று சொல்லி விட்டார்கள்.

அமெரிக்கர்கள். வெள்ளைக்காரன், அதுவும் இங்கே ஸ்காட்லாந்திலிருந்து போனவர்களின் வம்சாவளி. என்றாலும் நாகரீகமும் மரியாதையும் தெரியாத கூட்டம் இல்லையா அது.

தேவ ஊழியம், மிஷனரி மகாநாடு என்று வந்தாலும், வீட்டு ஆண்பிள்ளைகள் இல்லாத நேரத்தில், மகாநாடுமாச்சு மத்ததுமாச்சு என்று வீட்டுக்குள் சுற்றி வந்து பெண்பிள்ளைகளைத் தொட்டுப் பார்க்கவும் செய்வார்கள். பொலிகாளை மாதிரியான அந்த பிரகிருதிகளை பாவம் வெள்ளந்தியான இங்கிலீஷ், ஸ்காட்டீஷ் பெண்களும் பெருவாரியாக இச்சிக்க இடமுண்டு என்பது வயசர்கள் சுற்றி வளைத்துப் பேசியதில் தெரிசாவுக்குத் தெரிந்த விஷயமானது.

ரயில்வேக்காரர்கள் திறந்திருக்கும் பல்மோரா ஹோட்டல் வேவர்லி ஸ்டேஷன் பக்கம் தானே இருக்கு. அங்கே அறைக்கு மூன்று அல்லது நான்கு பேராக தங்க வவத்தால், பிரின்சஸ் தெருவில் இருந்து போக வர, ஆகாரம் போன்ற சமாசாரங்களுக்கு எளுப்பமாக இருக்குமே என்று தெரிசா சொன்னபோது பிஷப் வேண்டாம் என்று சொல்லி விட்டார். அந்த அளவு காசு நம்ம சபையில் கிடையாது சீமாட்டியே என்றார்.

போன வாரம் தான் புதுசாக கட்டின வீட்டில் கக்கூஸில் மர வாளி முதல் கொண்டு ரெட்டைக் கட்டில் வரைக்கும் சபை செலவில் வாங்கிப் போட்டார் அவர் என்று சபையில் தகவல் உண்டு. தேவ ஊழியத்தில் அதுவும் தான் சேர்த்தி. தெரிசா கேள்வி கேட்கப் போவதில்லை.

செவ்வாய்க்கிழமை மதியத்துக்கு மேல் ஒரேயடியாக உட்கார்ந்து ஏழு மணிக்குள் இறுதி முடிவு எடுப்பதாகவும் செவ்வாய் மதியமாவது இருபது முப்பது பேர் வந்திருந்தால் விஷயம் சீக்கிரமாக முடிவெடுக்கப்பட்டு விடும் என்றும் பிஷப் சொல்லி கூட்டத்தைக் கலைத்தது அவசரமான ஒரு பிரார்த்தனையோடு. ராச்சாப்பாட்டு அவசரம் அது. தெரிசாவுக்கும் தான் பசித்தது.

பிஷப் வெளியே போனபிறகு குடையையும், கைப்பையையும் இருட்டில் தேடி எடுப்பதற்குள் வெளிவாசல் இரும்பு அழிக் கதவைச் சார்த்திப் போயிருந்தார் அவர். உள்ளே இருந்து அதைத் தள்ளித் திறக்கலாம் தான். வண்டி வண்டியாக மூத்திரம் ஒழிக்கும் குடிகாரன்களும் அவர்களுக்கு நீர் வார்க்கும் மதுக்கடைகளும் வெளியே லோத்தியன் தெருவில் சர்ச்சுக்கு முன்பாகவே அமைந்திருக்கின்றன. உடுப்பு நனையாமல் தெரிசா தெருவில் இறங்க முடியாத சூழ்நிலை.

அவள் கல்லறைகளுக்கு நடுவே மெல்ல நடந்தாள். புதிய கல்லறைகளில் உறங்கிக் கிடந்தவர்கள் சுத்தமான சூழலில் இளைப்பாற, ஒரு நூற்றாண்டு முன்னால் போய்ச் சேர்ந்தவர்களில் சிலரைப் புதைத்த இடத்தில் நட்ட கல்தூண்கள் அடி பெயர்ந்து போய்க் கல்லறை மேல் குறுக்கும் மறுக்குமாகக் கிடந்தன. உள்ளே மூச்சு முட்டி வெளியே வந்து விடலாம் அவர்கள்.

வேவர்லி பிரபு குடும்ப சவ குடீரங்கள் பக்கம் நடக்கும்போது தெரிசாவுக்குப் பழக்கமான குரல்.

அக்கா, செத்தெ நில்லுங்கோ. அக்கா. விசப்பு உசிரு போறது. தாகம்.

அவளுக்குத் தெரியும் அந்தப் பெண்ணை. கூட நிற்கும் பெண் குழந்தையை.

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று

இரா.முருகன்


28 மே 1910 – சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை

ஓய் மகாலிங்கய்யரே, சித்தே இங்கே உட்கார்ந்து சிரம பரிகாரம் பண்ணிக்கும் ஐயா. இப்படியுமா ஒரு உழைப்பு. உடம்பு என்னத்துக்காகும்?

மலையாளத்து பிராமணன் என்னைப் பார்த்து சிரித்தானடி லலிதாம்பிகே. அப்படியே, அப்படியே, என்ன சொல்றதுன்னு தெரியலை பாரு. ரோமாஞ்சனம். மயிர்க்கூச்செறிந்து போச்சுது எனக்கு என்று சொல்லவும் வேணுமோ.

இவன் இங்கே எப்படின்னு பார்க்கறீரோ?

மலையாளத்தான் திரும்ப சிரித்தான். இவன் போடுகிற சத்தத்தில் உள்ளே தூங்கி கொண்டிருந்த காப்பிரிச்சி எழுந்து வந்துவிடலாம் என்று எனக்குப் பயம். உடம்பில் சக்தி இல்லை.

அவள் வந்தாலும் பாதகமில்லே ஓய். நான் உம்ம ரெண்டாம் பாரியாள் கண்ணில் எல்லாம் படமாட்டேன். கூடச் சேர்த்துக் கொண்ட பெண்பிள்ளை வீட்டுக்கு சகல அலங்கார பூஷிதனாக, உல்லாச புருஷனாக நீர் போகும்போது எத்தனையோ தடவை பின்னாடியே வந்திருக்கேன் தெரியுமா. வாசல்லே அந்த பிரம்மஹத்தி படுத்திண்டிருக்குமே. அதான் அந்தப் பெண்பிள்ளையைக் கெட்டின செக்கன். அவனை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு நானும் வெளியே கடல் காற்றை அனுபவித்துக் கொண்டு தூங்கியிருக்கேன். யார் கண்ணிலும் படாமல்தான்.

மலையாளத்தான் அவனுக்கே பிரத்யோகமான உச்சரிப்பில் சொல்லிக் கொண்டே போனான்.

ஏனய்யா, நீர் என்ன பிரேத ஆத்மாவா? கதி கிட்டாது அலைகிறீரா? கழுக்குன்றத்தில் என் கையில் எந்த நேரத்தில் ஒரு ஸ்தாலி செம்பைத் திணித்தீரோ அந்த நிமிஷத்தில் இருந்தே எனக்கு அஷ்டமத்தில் சனி பிடிச்சுதோ. இல்லை, நவகிரகமுமே வக்கரித்து வெவ்வெவ்வே என்று அழகு காட்டிக் கொண்டு திசைக்கு ஒன்றாகப் புட்டத்தைக் காட்டியபடிக்குத் திரும்பி நிற்க ஆரம்பித்ததோ தெரியலை. நரக ஜீவிதம் தான் எனக்கு இந்த நாள் வரை.

குற்றம் சாட்டுகிற உத்தேசத்தோடு அவனைச் சுட்டிக் கொண்டு இரைய ஆரம்பித்தேன். வரட்டும், காப்பிரிச்சி எழுந்து வந்து என்ன என்று விசாரிக்கட்டும். கண்ணில் படாவிட்டால் என்ன? சொன்னால் புரிந்து கொள்வாள். அவள் ஜாதி ஜனத்திலும் பிசாசு எத்தனையோ உண்டு. மனுஷர்களை விட அதுகளே அங்கேயும் அதிகம்.

மலையாளத்தான் கையைக் கட்டிக் கொண்டு எழுந்து நின்றான். வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்த மாதிரி, நரசிம்ம ரூபம் காட்டின மாதிரி இந்தக் குடுமியான் நிற்கிற கோலமும் சிரிக்கிற கோலமும் மனதைப் பதைபதைக்க வைத்தது. போதாக்குறைக்கு என் மனசும் உடம்பும் வேறே அசுத்தமாக இருக்கிறது. மொறிச்சென்று குளித்து பஞ்ச கச்சமாகக் கட்டிய வெள்ளை வேட்டியோடு கம்பீரமாக நிற்கிற இந்த பிராமணன் முன்னால் எனக்கு உரிமையில்லாத ஸ்திரியோடு கூடி வந்து அரையில் ஸ்கலிதம் உலர ஆரம்பித்து நான் இருக்க வேண்டி வந்த அவமானம் அது.

மகாலிங்க அய்யரே, உம்மை அப்படிக் கூப்பிட்டால் உமக்கு இஷ்டப்படாதே. வரதராஜ ரெட்டின்னே கூப்பிடலாமா? அதுக்கென்ன? பேரிலே என்ன இருக்கு? உமக்காவது ஒண்ணுக்கு ரெண்டாகப் பேர், ஒரு உடம்பு, அதுலே சுக்கம், துக்கம் எல்லாம் இருக்கு. எனக்கு? என் ஆத்துக்காரிக்கு? ஓமனக் குட்டி என் பெண்குஞ்ஞம்மைக்கு. என்ன இருக்கு? இனிமேலே என்ன இருக்கு எங்களுக்கு? தணியாத பசியும் தீராத தாகமும் இனியும் எத்தனை காலம்னு தெரியாத எங்கே எதுக்குன்னு புரியாத அலைச்சலும் தவிர வேறே என்ன உண்டு எங்களுக்கு?

அவன் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான்.

நான் அவனுக்கு ஆசுவாசமாக நாலு வார்த்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நாலு பருக்கை சாதமாவது எடுத்து கொஞ்சம் மோர் விட்டு ஒரு உப்புக்கல்லைக் கரைத்து கும்பாவில் நிறைத்து அவனுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். மனுஷன் பசித்து வந்திருக்கிறான். தாகமாக இருக்கிறான். என் மூலம் ஏதாவது உபகாரம் கிடைக்கலாம் என்று நான் போகும் இடம் எல்லாம் துரத்திக் கொண்டு ககன மார்க்கமோ வாயு மார்க்கமோ என்கிட்டே வந்து சேர்ந்து விடுகிறான். தாயாதி, பங்காளி என்று திருக்கழுக்குன்றத்தில் வைத்துப் பார்த்த போது ஏதோ உறவு கூடச் சொன்னான். என்ன என்று தான் நினைவில் இல்லை.

மங்கலாபுரத்துக்கும் அங்கேயிருந்து கொல்லூருக்கும் புறப்பட்ட நேரமே சரியில்லை வரதராஜ ரெட்டியாரே. ஒண்ணொண்ணா துரந்தம்.

துரந்தம்ன்னா? இவன் பேசுகிறது பாதிக்கு அர்த்தமாகிறதில்லை எனக்கு என்று சொல்லியிருக்கேனே லலிதாம்பிகே. நினைவு இருக்கோ இல்லியோ. என்னத்தை நினைவு இருக்க? எழுதுகிறதெல்லலம் உனக்கு எங்கே போய்ச் சேர்ந்தது? எனக்காக நானே எழுதி வைத்துக் கொள்கிற நடப்புக் கணக்கு தானே இதெல்லாம்?

துரந்தம்னா கஷ்டம். துக்ககரம். விபத்து.

அவன் விளக்கினான். இதுக்கு முன்பும் என்கிட்டே சொல்லி இருக்கானோ நினைவில்லை.. நிறுத்தி நிதானமாகச் சொல்லிக் கொண்டே போனான். இப்படி உயிர் மிச்சம் இருக்க, உடம்பின் பிரமையோ இல்லை ஸ்தூலமான அது அவ்வப்போது புலப்பட, கூடவே அவஸ்தைகளாக பசியும் தாகமும் பாதித்தபடி இருக்க, பூலோகப் பரப்பில் இருந்தும் இருக்கப்பட்ட காலத்தில் இருந்தும் பிய்த்து ஆகாச வெளியில் எறிந்தது போல ஒரு குடும்பமே அலைந்து கொண்டிருக்கிற சேதி இதுவரை நான் கேட்டிராத ஒன்று.

இவனை என்ன விதமாக ஆசுவாசப் படுத்துவது என்று புரியவில்லை. நாலு காசு கொடுத்தால் இவனுக்கு எந்த விதமாகவது பிரயோஜனமாக அமையுமா?

நான் குப்பாயத்தில் கைவிட்டுத் தேடினேன். கொண்டு போகிற பணத்தை எல்லாம் கல்யாணியின் முலைக்குவட்டில் செருகி விட்டு எழுந்து வருகிற பழக்கத்தால் குப்பாயம் மட்டும் துடைத்து விட்டமாதிரி சுத்தமாக இருந்தது.

காசு எல்லாம் எனக்கு வேணாமாய்யா. நீர் சவரன் வைர வைடூரியம் கொடுத்தாலும் அதுகளைக் கொண்டு எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை.

அவன் சொன்னான். பார்வை எனக்குப் பின்னால் தூரத்து இருட்டில் அலையடித்துக் கொண்டு சமுத்திரத்தில் நிலைத்திருந்தது. நேரம் தப்பிப் பறந்த நாரை ஒன்று பயந்து அலறிக் கொண்டு இருட்டில் பாய்ந்து போக, சுவர்க் கோழிகள் சரி கிடக்கட்டும் விடு, அதெல்லாம் நடக்கிறது போல் நடக்கும் என்று நீட்டி முழக்கி சம்பாஷணையை ஆரம்பித்திருந்த வேளை. யார் வீட்டிலோ மீன் வறுக்கிற வாடை காற்றில் வந்தது. எனக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.

ஸ்வாமின் மன்னிக்கணும். நான் தேக ஸ்திதி மகா அசுத்தமா இருக்கேன். கொஞ்சம் உள்ளே போக அனுமதிச்சா சுத்தியாக்கிண்டு ஒரு முழுக்குப் போட்டுட்டு வந்துடுவேன். அப்புறம் உம்மோடு உட்கார்ந்து ராத்திரி முழுக்க வேணும்னாலும் பேசத் தயார்.

லலிதாம்பிகே. அவனிடம் என்னமோ பிரியத்தோடு பேசணும் என்று எனக்குப் பட்டது. மனசு சதா காமத்திலும் காசு ஆசையிலும் குரூரத்திலும் அமிழ்ந்து கிடந்தாலும் அப்போதைக்கப்போது அதில் அந்தக் கசடை எல்லாம் சட்டை செய்யாமல் கடவுளோ அங்கி மாட்டின தேவதையோ பறந்து வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். உலகமே அழகானதாகத் தோன்றுகிற அந்த நிமிஷ நேரம் உனக்கு அனுபவப்பட்டிருக்கோ லலிதே? கல்யாணியையும் காப்பிரிச்சியையும் கூட இதைப் பற்றிக் கேட்க வேண்டும். அதுக்கு முன்னால் குளிக்க வேண்டும்.

பரவாயில்லை ஐயா. பித்ரு காரியமா பார்க்கப் போறீர்? என்னோட சித்தே காத்தாட உட்கார்ந்து வார்த்தை தானே சொல்லிண்டு இருக்கப் போறீர். சுத்தமும் பத்தமும் எல்லாம் பார்க்க வேண்டாம். ஆனாலும் இப்படி போற இடத்துலே எல்லாம் பீஜ தானம் பண்ணிண்டே போனா எழுந்து நடக்கக் கூட சக்தி இல்லாமே தவழ வேண்டிப் போயிடும். பிள்ளையில்லாத வீட்டுலே கிழவன் துள்ளி விளையாடறது இல்லே. நீர் கொடுத்த பிள்ளை நெறைஞ்சிருக்கிற வீடுகள்லே நீரே தவழ்ந்து அவஸ்தைப் படற நிலைமை. வேணுமா ஓய்?

மலையாளத்தான் முகத்தில் திரும்பச் சிரிப்பு குடி புகுந்தது. அதுவே எனக்குப் பெரிய ஆசுவாசமாகத் தோன்ற நான் வராந்தா ஓரமாக இருட்டில் உட்கார்ந்தேன்.

நாங்க எப்படியோ அலையறோம். என் அம்மா. அவளைக் கடைத்தேத்த நினைச்சேன். என்ன ஆச்சு? அதிலேயும் பலன் பூஜ்யம்.

அவன் திரும்ப ஆரம்பித்து விட்டான். இவன் காலமும் தேகமுமாக திரும்ப வந்தாலும் இன்னும் தீராமல் சொல்லி அழ ஏகப்பட்ட கவலை மிச்சம் இருக்கும்போல.

அடுத்தாற்போல் அவன் சொன்னது திருக்கழுக்குன்றத்தில் முடிந்தது.

உம்ம கையில் ஒப்படைத்தேனே ஸ்தாலிச் செம்பு.

அவன் சொல்ல ஆரம்பித்தபோது நான் திரும்ப அந்த நொடியில் திருக்கழுக்குன்றத்தில் இருந்தேன். பத்து வருஷத்துக்கு மேலாகியும் அந்த நேரம் ஒரு தசாம்சம் கூட பங்கம் வராமல் மனசில் வந்து போனது. லலிதாம்பிகே அன்றைக்கு நான் மகாலிங்கய்யன். உன்னை பாணிக்கிரஹணம் பண்ணி வீட்டில் பிரஷ்டையாக இருத்தி விட்டு புண்ணிய தரிசனம் போய் பாவத்தை வாங்கி மலையிறங்கி வந்தவன். கிட்டத்தட்ட நக்னமாக. எதிலிருந்து ஓடுகிறேன் என்று புரியாமல் ஓடி வந்தவனை இவன் அன்றைக்கு வழி மறித்தான்.

நான் அம்பலப்புழை மகாதேவய்யன். குப்புசாமி அய்யன் குமாரன். கொல்லூருக்கு என் ஒண்ணுவிட்ட சகோதரன் வேதையன் என்ற பெயருடைய வேதத்தில் ஏறிய பிராமணப் பிள்ளையை சந்திக்க வந்து எப்படியோ காலதேச வர்த்தமானம் தப்பி குடும்பத்தோடு அலைய சபிக்கப்பட்டவன். எத்தனை வருஷம் ஆச்சுதோ ஓர்மையில் இல்லை. வீட்டு ஸ்திரியும் பெண் குழந்தையும் கூட நஷ்டப்பட்டுப் போனேன் தற்போது. இந்த ஸ்தாலிச் செம்பில் என் அம்மா இருக்கா. பத்திரமாக அவளை வைக்க இடம் கிடைக்கலை. நீர் இதை தயை செய்து வாங்கி கோட்டயத்தில் வேதையன் வசம் சேர்க்க வேணும், விலாசம் தருகிறேன். நான் உமக்கு தூரத்து பந்து. அம்பலப்புழைக்கு நீர் சின்ன வயசில் வந்திருக்கறதாக அம்மா சொன்னாள். பகவதி சித்தி கல்யாணத்துக்கு சின்னப் பிள்ளையாக அரைஞாண் கொடியோடு.

அரைஞாண் இல்லாத இடுப்பில் காய்ந்த ஈரம் வரவரவென்று உலர்ந்து துர்வாடை வீச ஆரம்பித்தது எனக்கே தெரிந்தது. ஸ்தாலி செம்பு, அஸ்தி, மகாதேவய்யன். அம்பலப்புழை. பட்டுக் கோணகம். வெள்ளி அரைஞாண். பகவான் கிருஷ்ணன். கும்பாவில் பால் பாயசம். பரிசுத்தம். சுவர்க்கம். நான் மட்டும் பாஷாண்டியாக இப்படி.

ஒரு நிமிஷம் கொடுத்தா குளிச்சுட்டு.

நான் சொல்லியபடி உள்ளே போகப் பார்க்க அவன் திரும்ப இடைமறித்து என் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். என்னைத் தொட்டு இவன் அசுத்தப்படணும் என்று எழுதியிருந்தால் அதை யார் மாற்ற முடியும்?

ஒரு நிமிஷம் தான். நான் இறங்கிண்டே இருக்கேன்.

அந்த ஸ்தாலி செம்பை நான் தேடி எடுத்துத் தரேன்னு உம்ம கிட்டே சொன்னது நினனவு இருக்கு மகாதேவய்யரே. ஆனால் நான் இப்ப இருக்கப்பட்ட காலதேச வர்த்தமானத்துலே.

இதையும் நீர் பாண்டிச்சேரி போற நேரத்திலே சொன்னீர். மறந்துட்டீரா?

இவனோடு எங்கே எப்போது என்ன பேசினேன் என்று கோர்ட்டில் பெஞ்ச் கிளார்க் ரிக்கார்டு எடுத்து வைக்கிற மாதிரி துல்லியமாக நினைவு வைத்திருக்கிறான். எல்லாம் சரிதான். எதுக்கு என் பின்னால் வரணும் இப்போ?

அந்த ஸ்தாலி செம்பை உம்மை கைது செய்த போலீஸ் உத்யோகஸ்தர்கள் கோர்ட்டு கச்சேரியில் எக்சிபிட்டாக வச்சிருந்தா. உம்ம சகோதரன் நீலகண்டய்யன் இருக்கானே அவன் அதை கோர்ட்டிலே இருந்து எடுத்துண்டு வந்து வீட்டுலே வச்சுண்டான்.

யார் நீலகண்டனா? மானம் எல்லாம் கப்பலேற என் மேலே கேசு போட்டு கூண்டில் நிறுத்தி விசாரித்தபோது அவன் வரலை. தூக்கிலே போடற வரைக்கும் அடைஞ்சு கிடடா என்று ஜெயிலுக்கு அனுப்பின போதும் வரலை. அங்கே நான் உசிரைக் கையில் பிடித்துக்கொண்டு அது உடம்பை விட்டுப் போகாமல் இருக்க பிரம்மப் பிரயத்னம் செய்து துரைக்கு கடிதாசுக்கு மேல் கடிதாசாக அனுப்பி கருணை செய்ய பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது எல்லாம் என்னைப் பார்க்க வராதவன் என் சொந்தத் தம்பி. அவன் இந்த மலையாளத்து பிராமணன் என்னிடம் ஒப்படைத்த ஸ்தாலி செம்பை வாங்கிப் போக வந்தானா? அது அவன் கைக்குக் கிடைத்ததா? செம்போடு அவன் என்னைப் பற்றி, என் பிரியமான லலிதாம்பிகே உன் இருப்பிடம் பற்றி எல்லாம் விசாரித்திருப்பானா? நீ எங்கே இருக்கே என்று அவனுக்காவது தெரியுமா? நான் இருக்கப்பட்ட இந்த பிரதேசத்து விவரம் நீலகண்டனுக்குத் தெரிந்திருக்குமா?

அதெல்லாம் கேட்கச் சொல்லி உம்மைப் பெத்தவா அவனை அனுப்பினா. ஆனா அவன் வாயை அந்த நாயுடு வெங்காய வடை கொடுத்து அடைச்சுட்டான்.

புரியாமல் ஏதோ பேசிக் கொண்டு போனான் மலையாள பிராமணன்.

ஸ்தாலி செம்பை அவன் மூலமா காசியிலே சேர்த்து எங்கம்மாவைக் கரையேற்றணும்னு நினைச்சிருந்தேன். ஆனா அந்தக் கழுவேறி என்ன பண்றான் தெரியுமோ?

புரியாமல் பார்த்தேன் நான்.

ஏழு வருஷமா கங்கா ஜலம்னு வீட்டுலே வச்சு பூஜை பண்ணினான். அவன் யாத்திரை போறபோது காசிக்குப் போறபோது எடுத்துண்டு போற திட்டம்.

நீலகண்டன் காசிக்குப் போறானா? போகட்டும். போய்ட்டு வந்து எல்லாருக்குமா பிரார்த்தனை பண்ணி, எல்லோரும் க்ஷேமமா இருக்கட்டும்.

எங்கே போனான்? இன்னும் தான் அதுக்கு நாள் வரல்லே. துரை ரஜா கொடுத்தாலும் மத்த எல்லாம் சேர்ந்து வர மாட்டேங்கறாதாம்.

மலையாளத்து பிராமணன் அலுத்துக் கொண்டான்.

அது எப்படியோ போறது. உம்ம தாயாரோட. அந்த செம்பு.

அது கங்கா ஜலமில்லே. அந்த பாத்திரத்தை வீட்டுலே வச்சதாலே தான் அவனுக்கு சதா துர்சொப்பனம், வீட்டுக்காரிக்கும் குழந்தைகளுக்கும் நோக்காடு, வீட்டுக்கு பீடை பிடிச்ச மாதிரி கிடக்கு. இப்படி ஒரு ஜோசியன் சோழி உருட்டிப் பார்த்துச் சொன்னானாம். போன மாசம் வால் நட்சத்திரம் வேறே தட்டுப்பட்டு லோகம் முழுக்க பயந்து போயிருக்கே. ஜோசியன் அதையும் காட்டி பயமுறுத்தியிருக்கான்.

எந்த ஜோசியன்? லலிதாம்பிகை இருக்கும் இடம் தெரிந்தவனா அவன்?

எனக்கே தெரியலை அவனுக்கு எங்கே தெரியப் போறது?

வானத்தைப் பார்த்துக் கண்ணை உயர்த்தியபடிக்கு சிரித்தான் வந்தவன். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். வால் நட்சத்திரமோ வெற்று நட்சத்திரமோ இல்லாமல் ஒரேயடியாக கருப்புக் கம்பளி போர்த்தின சவம் மாதிரிக் கிடந்தது ஆகாசம்.

ஜோசியன் சொன்னதைக் கேட்டு ஸ்தாலி செம்பை திரும்ப கோர்ட்டுக் கச்சேரிக்கே கொண்டு வந்து நாயுடு கிட்டேயே விட்டுட்டுப் போகப்போறான் உம்ம சகோதரன்.

திரிலோக சஞ்சாரியாக இவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. ஆனாலும் நீ இருக்கப்பட்ட இடம், ஸ்திதி பற்றி மட்டும் தெரியாதாம்.

மகாலிங்கய்யரே, ஒரு காரியம் செய்யும். உம்ம சகோதரனுக்கு கடிதாசு எழுதும்.

என்ன எழுத? இவ்விடத்து வர்த்தமானம் எல்லாம் சொல்லும் தரத்திலா இருக்கு? எழுதி எங்கே அனுப்ப?

நேவிகேஷன் ஆப்பீசு மேற்பார்வைன்னு போடும் விலாசம். சொல்லித் தரணமா உமக்கு இதெல்லாம்.

அவன் ஏதோ நினைத்துக் கொண்டதுபோல் எழுந்தான். இடுப்பு வேட்டியில் இருந்து மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு வேகமாக இருட்டில் நடந்து மறைந்தான். அவன் கையில் வைத்திருந்த காகிதம். நினைவு வந்துவிட்டது லலிதே. நான் உனக்கு எழுத ஆரம்பித்த கடுதாசி தான்.

அந்த ஒற்றைக் காகிதமாவது உனக்குக் கிடைக்கிறதா பார்க்கிறேன்.

(தொடரும்)

eramurukan@gmail.com

Series Navigation

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு

இரா.முருகன்


28 மே 1910 – சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை

அடியே லலிதாம்பிகே.

இந்தக் கடுதாசியின் ரெண்டாவது தாள் இது. நேற்றைக்கு எழுதின இதன் முதல் பக்கம் தொலைந்து போனது. வைப்பாட்டி வீட்டிற்குக் கிளம்பும் முன்னால் எழுதினது. காப்பிரிச்சி கூடப் படுத்து எழுந்து எழவெடுத்த மூலையில் எல்லாம் தேடியும் அதைக் காணலை. சுக்கிலத்தை அதில் துடைத்து வீசிவிட்டேனா என்று கூட நினைவில்லை. என்ன போச்சு? எப்படியும் நான் எழுதுகிற எதுவும் உன்னிடம் வந்து சேரப் போவதில்லை. நீ அதை யாரையாவது வாசிக்கச் செய்வித்து பதில் அனுப்பி விடுவாய் என்று நம்புவதை விட்டொழித்து எத்தனையோ நாளாகி விட்டது.

இப்போதெல்லாம் உனக்கு எழுதுகிறதாகப் பெயர் பண்ணி நானே எனக்குச் சொல்லிக் கொள்கிற சமாசாரமாகத்தான் இதையெல்லாம் எழுதி பத்திரமாக என் டிரங்குப் பெட்டிக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். நீ இருக்கியோ, செத்துப் போய் எரிச்ச இடத்தில் இன்னும் நூறு பொணம் நித்தியப்படிக்கு விழுந்து எரித்து எல்லோரும் சொர்க்கத்துக்குப் போனீர்களோ தெரியலை.

நீ அங்கே போயிருக்கும் பட்சத்தில் உன்னை இனி எப்போதும் நான் பார்க்கப் பொறதில்லை என்று தெரியும். நான் பண்ணுகிற மகாபாவத்துக்கு நரகம் தான் எனக்கு விதிக்கப்படும். அதெல்லாம் இருக்கோ என்னமோ. அப்படி இருந்தால் நானும் என் ஆசைக் கண்ணாட்டி இந்த வைப்பாட்டிப் பெண்ணாளும் அங்கே இன்னும் கொஞ்சம் சுகம் அனுபவித்துக் கொண்டிருப்போம். உன்னை யாராவது வேலையத்த குப்பன் பெண்டாள வந்து சேர்ந்து, இல்லை நீ எந்தப் பரதேசியையாவது மயக்கிப் போட்டு ஆணாண்டு சுகித்திருந்தால் நீயும் அந்த மயிராண்டி சிரவுதி பிரசவனத்தில் சொல்வானே ரவுராவாதி நரகமோ என்னமோ. அதே பாவக்குழியில் வந்து நாங்கள் கிரீடையில் இருக்கிறதை பக்கத்தில் இருந்து பார்த்து ஆனந்தப்படலாம். வந்துடு.

திருக்கழுக்குன்றம் தெலுங்கச்சி ரெட்டிய கன்யகை தானடி என் வைப்பாட்டி அடி நாசமாகப் போன லலிதாம்பிகே. தனபாரத்துக்கு ஏத்த மாதிரி உடம்பில் கொஞ்சம் சதைப் பிடிப்பும் உதட்டில் மயக்குகிற சிரிப்புமாக இங்கே அவள் எப்படியோ வந்து சேர்ந்து விட்டாள். அவளை நான் வலுக்கட்டாயமாக அனுபவிக்க பிரயத்தனம் செய்தபோது பாறையில் இருந்து சாடி உயிரை விட்டு என்னை காராகிருஹத்துக்கு அனுப்பிய மோகினி திரும்பி விட்டாள். பிசாசாக, மலையாள யட்சியாக இல்லை. உடம்பும் உயிரும் எல்லாத்துக்கும் மேல் சதா போகத்துக்கு ஏங்குகிற மனசுமாக என்னைத் தேடி இங்கே சமுத்திரம் தாண்டி வந்து விட்டாள் கேட்டியோடி. என் கல்யாணி வந்தாச்சு. நம்ப மாட்டே. ஆனாலும் எனக்கு நிஜம்.

அதெப்படி அதே பெயர், அதே கள்ளச் சிரிப்பு, நான் அன்றைக்கு திருக்கழுக்குன்றத்தில் அவளோடு செய்த சில்மிஷம் ஒன்றைக் கூட விடாமல் நினைவு படுத்திச் சொல்வது என்று அவள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது கொஞ்ச நஞ்சமில்லை. இத்தனைக்கும் நான் பலாத்சங்கம செய்த ரெட்டிய கன்யகை கல்யாணி தெலுங்கச்சி. இந்தக் கல்யாணியோ தமிழ் மட்டும் தெரிஞ்ச குட்டி.

தெலுங்கச்சியை ரெண்டாம் கல்யாணம் செய்து கொள்ளக் கழுக்குன்றத்துக்குக் கூட்டி வந்தான் ஒரு கிழங்கன் என்று உனக்கு எதோ த்ரேதாயுக கடுதாசியில் சொன்னேனே ஞாபகம் இருக்கோ. அந்தக் கிழங்கன் போல இந்தக் கல்யாணிக்கும் சொத்தை சொள்ளையாக ஒரு புருஷன். கிழங்கன் கூட இல்லை. செனைப் பூனை மாதிரி பம்மிப் பம்மி நடக்கிற பயந்தாங்கொள்ளி. அவன் பெண்டாட்டியைத்தான் நான் படு சுவதந்திரமாக இந்த நாலைந்து வருஷமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். சூப்பரவைசர் உத்தியோகம் பார்க்கிற எனக்கு சலாம் போட்டுக் கும்பிட்டு விழுந்துதான் பெண்டாட்டியைக் கூட்டிக் கொடுத்திருக்கிறான் அந்தப் பேடி.

அதென்னமோ முதல் நாள் பார்த்ததுமே கல்யாணிக் குட்டி மனசில் ஜிவ்வென்று வந்து குந்தி விட்டாளடி லலிதாம்பிகே. புத்திக்குத் தெரிகிறது இவள் இல்லை நான் கழுக்குன்றத்தில் கார்த்திகை பட்சத்து நாயாகக் காமத்தோடு துரத்திப் போனவள் என்று. அடுத்தவன் பெண்டாட்டியை இச்சிக்கிறது தப்பு என்று அதுக்குத் தெரிகிறது. அதுக்கு இன்னமும் கூடத் தெரிகிறது ஒரே மாதிரி இருக்கப்பட்ட அதிரூபவதிகளான ரெண்டு பெண்களை சிநேகம் செய்து கொள்ள எனக்கு, எனக்கு மட்டும் அதிர்ஷ்டம் ஏற்பட்டிருக்கு என்று.

பழைய கதை எல்லாம் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று கேட்பதை கொஞ்சம் விட்டொழித்தால் ரமிக்கவும் அதில் லயிக்கவும் எந்தத் தடையும் இல்லை. புரியாத விஷயங்களைக் கேள்வி கேட்டு மடியில் வந்து விழுந்த சொர்க்கத்தை வேண்டாம் என்று தூக்கி அந்தாண்டை தூக்கிப் போட்டு விட்டு சத்தியத்தைத் தேடிப் போகிறதை மகான்கள் செய்து கொள்ளட்டும். எனக்கு இந்தப் பெண் கொடுக்கிற சுகமே ஏழேழு பிறவிக்கும் போதும். நீ என்ன சபித்தாலும் மசிரே போச்சு போடி.

நேத்து ராத்திரி ஏழு மணிக்கு வேலை முடிந்து வந்து காப்பிரிச்சி வைத்துக் கொடுத்த ஓட்சுக் கஞ்சி குடித்தேன். தொட்டுக் கொள்ள ஏதோ மீனை வறுத்து வைத்திருந்தாள் அந்தக் கறுப்பி. எல்லா சனியனும் இப்போ பழகி நான் அதை முள் எடுத்து விட்டு ரசித்துச் சாப்பிடவும் அனுபவப்பட்டு ஒரு ஜன்மம் கழிந்த மாதிரி ஆயிடுத்து போ. மகாலிங்கய்யன் போய் ஒழிந்தான். நீ உயிரோடு இருந்தால் அந்தக் கபோதிக்கு திவசம் கொடுக்க ஏற்பாடு செய். எள்ளுருண்டை சாப்பிட்ட வாயோடு சொர்க்கம் போகலாமாம். அலம்பக் கூட வேணாம்.

இப்போ நான் முழுக்க முழுக்க வரதராஜ ரெட்டியாகி விட்டேன். தெலுங்கில் தான் நினைக்கிறேன். சொப்பனத்தில் கூட கல்யாணியோடு தெலுங்கில் தான் கொஞ்சுகிறேன். இருட்டில் அவள் தமிழில் பேசி ராஜா, துரை, செல்லப்பா என்று ஏதேதோ பிதற்றி எனக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறாள். கெட்ட வார்த்தை எல்லாம் அவளைச் சொல்ல வைத்துக் கேட்கிற சுகத்துக்காக இன்னும் அவ்வப்போது தமிழ் தெரியாத தெலுங்கனாக நடித்துக் கொண்டுருந்தாலும் மனசில் ஓரத்தில் மகாலிங்கய்யன் பேசின பார்ப்பனக் கொச்சை உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

உனக்கு என்று சாக்கு வைத்து எழுதி நான் சாக்கிலும் கூடையிலும் வாரிச் சேர்க்கிற பாவத்தையும் சுகத்தையும் சொல்கிற இந்தக் கடுதாசி எழுத லிபியும் தமிழாகத்தான் இன்னும் இருக்கிறது. இனிமேல் தெலுங்கு எழுதக் கற்றுக் கொண்டு என்னத்தைக் கிழிக்கப் போகிறேன் சொல்லு. யாருக்கு எழுதணும்?

பாரேன், நேற்று ராத்திரி கஞ்சி குடித்ததில் ஆரம்பித்து விட்டு நான் வரதராஜ ரெட்டியின் பிரதாபத்தில் முழுகி விட்டேன். சுய பிரதாபம் தான். ஆனாலும் அவ்வப்போது இந்த ரெட்டியோ, செத்தொழிந்து போன அந்த மகாலிங்கய்யனோ நான் இல்லை என்று தோன்றுகிறது. பின்னே நான் யார்?

வேணாம். அதெல்லாம் சத்திய வேட்கை. தேடிப் போய் நேரத்தை வீணாக்காமல் கல்யாணியின் காலடியில் விழுந்து கிடக்கலாம். இல்லை, நாலு காசு வட்டிக்கு விட்டு வருமானம் தேடலாம். ரெண்டையும் சிரத்தையாகச் செய்து கொண்டிருக்கிறேன். பரம சௌக்கியமாக இருக்கேன். நீ எப்படி இருக்கே?

இப்போ நான் லயத்தில் இந்தக் கூலிக்காரக் கழுதைகளோடு இல்லை. சமுத்திரக் கரையிலிருந்து கொஞ்சம் தொலைவில் வீட்டு மனை வாங்கி அதில் ஒரு கல் கட்டிடம் எழுப்பி அங்கே தான் வாசம். தமிழன், தெலுங்கன் என்று வீட்டில் ஒன்றுக்கு ரெண்டு ஆசாமிகளை எடுபிடி உத்தியோகத்துக்கு நியமித்திருக்கிறேன். அப்புறம் இன்னொண்ணு, நான் சொன்னேனே, ஒரு காப்பிரிச்சி எனக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுத்தாள் என்று. அவளை போன வாரம் மோதிரம் மாற்றிக் கல்யாணம் செய்து கொண்டேன்.

நீ இதைப் படிக்காவிட்டாலும் மனதில் நினைப்பு தட்டியோ, உசிர் போய் சவமாகவோ, பிரேத ஆத்மாவாகவோ எங்கோ சுற்றி அலைந்து கொண்டோ என்னைச் சபிப்பது தெரிகிறது. என்ன செய்யட்டும் சொல்லு. காப்பிரிச்சி மடியில் காசையில்லையா முடிஞ்சு கொண்டு வந்தாள்.

கரும்புத் தோட்டம் வைச்சு அவள் வீட்டுக்காரன் சேர்த்து வைத்த பணம் அது எல்லாம். அவன் குழிக்குள் போனதும் தனியாக அலைபாய்ந்தவள் என் நோட்டத்தில் மாட்டினாள். அவள் தான் கல்யாணம் பற்றி பிரஸ்தாபித்தாள்.

நான் கல்யாணி சிநேகம் பற்றி ஆள் அடையாளம் தெரிவிக்காமல் சொன்னேன். அவள் உலக்கை மாதிரி பருத்த கையை மூணு வளைவாக வளைத்து அந்தக் குட்டியின் அங்க லட்சணம் காட்டி உன் கதையெல்லாம் தெரியுமே என்கிறது மாதிரி சிரித்தாள்.

நீ யாரோடு கூட படுத்தாலும் கவலை இல்லை. வீட்டில் என்னோடு இருக்கும்போது அதெல்லாம் நினைக்காமல் கிடந்தால் சரி.

அவளிடம் உன்னைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எதுக்குச் சொல்லணும்? நீ மகாலிங்கய்யன் பாரியாள். அவன் போய்ச் சேர்ந்ததால் சரி போ என் வாயால் கையால் எதுக்கு உன் பொட்டை அழிக்கணும். சவுக்கியமாக இரு.

பாதிரி இல்லாமல், பூசாரி இல்லாமல் எங்கள் கல்யாணம் நடந்தது. கஷ்ட ஸ்திதியில் இருந்து என்னிடம் கடன் வாங்கி இப்போது கரும்பு அரவைத் தொழிலில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் நாலைந்து கருப்பன்களும், வழியோடு போன நம்ம ஊர்க்கார வேலையத்த சுப்பன்கள், சுப்பிகள் ஏழெட்டு பேரும் கூடி இருந்து கரகோஷம் செய்ய லோலாவோடு (என் காப்பிரிச்சி பெண்டாட்டி பெயர் அதுதான்) மோதிரம் மாற்றிக் கொண்டது போன ஞாயிற்றுக்கிழமை பகலில்.

எல்லாருக்குமாக நாகப்பட்டிணத் தமிழன் கடையில் சாப்பாடும் காப்பிரி கடையில் கள்ளும், கவிச்சியும் வாங்கி வைத்திருந்ததால் ஒருத்தரும் ஒரு துரும்பைக் கூட நகர்த்த அவசியமில்லாம விருந்து போட்டு அனுப்பினேன்.

ஞாயிறு ராத்திரி லோலாவை ஒரு மாதிரி திருப்திப்படுத்தி (ராட்சசி அவள், உடம்பே கணுக் கணுவாக வலிச்சுப் போனது) தூங்க வைத்து விட்டு கல்யாணியைத் தேடிப் போனேன். வழக்கம்போல் பக்கத்தில் சொங்கியாகத் தூங்கிக் கொண்டிருந்த அவள் வீட்டுக் காரனை எழுப்பி அந்தாண்டை வெளித் திண்ணயில் படுக்கச் சொல்லிவிட்டு நான் கதவை அடைத்துக் கொண்டு சாய்ந்து படுத்தேன்.

மிச்ச ராத்திரி முழுக்க கல்யாணி கூட இருந்து விட்டு பொழுது விடிந்ததும் தான் என் வீட்டுக்குப் போனேன். உடம்பு வலிக்கு ஒத்தடம் கொடுத்த இதம் அந்த சுகம்.

லோலா எழுந்திருந்து எனக்கு கருப்பாக ஒரு துளி தித்திப்பு கூட இல்லாமல் காப்பி கலந்து கொடுத்தாள். அவளுடைய பேரில் இருக்கப்பட்ட அரவை சாலையில் உண்டு பண்ணின சர்க்கரையைக் கேட்டு வாங்கி அதில் கலந்து குடித்தேன்.

அதை சுத்தம் செய்யாமல் சாப்பிடக் கூடாதாம். காப்பிரிச்சி சொன்னாள். என் உடம்புக்கு ஒண்ணும் ஆகாதுடி என்றேன்.

எனக்கு காப்பிரி பாஷையும் இப்போது அத்துப்படி லலிதாம்பிகே. அந்த ஜனத்துக்கும் நம்மை மாதிரி அனேகம் பாஷை உண்டு. லோலா பேசுகிறது இங்கே சாதாரணமாக மற்றக் காப்பிரிகளும் பேசுகிறது. என்னிடம் கடன் வாங்கி வட்டி கட்ட வாய்தா கேட்டு காலில் விழுந்து கெஞ்சும்போது அவன்களின் பாஷையில் என்னை தெய்வமே என்று தான் கூப்பிடுகிறார்கள். அதுவும் சுகமாகத்தான் இருக்கு கேட்க.

போன ஞாயிற்றுக் கிழமையில் இருந்து வாரம் முழுக்க வேலை. வீட்டை ஒழுங்கு படுத்துகிறதும், வட்டிக்கு கொடுக்கிற பணத்துக்கான கணக்குகளை சீர் பிரித்து சரி பார்ப்பதிலும் நேரம் கழிந்து போனது. நடுவில் ஒரு நாள் மதியத்துக்கு மேல் லோலாவோடு சாரட் வண்டியில் அவளுடைய கரும்பாலைக்குப் போய் வந்தேன். ரொம்பவே சின்ன ஆலை. நாலைந்து பேரே வேலை பார்க்கிற ஸ்தலம். தொழில் அபிவிருத்திக்கு இடம் இருக்கும்போது, ஆள்பலம், நிர்வாக சாமர்த்தியம் இல்லாது போனதால் அந்த இடம் மட்டும் நசித்த ஸ்திதியில் இருக்க, பக்கத்தில் மற்ற ஆலையெல்லாம் பெரிசு பெரிசாக கை கோர்த்து நர்த்தனமாடுகிற காப்பிரிச்சிகள் மாதிரி ஓங்கி உயர்ந்து நின்றன.

நம்மோட ஆலையையும் அதுபோல் ஆக்கிப் போடலாம் என்று லோலாவிடம் உத்திரவாதம் கொடுத்தேன். நானா அவளைப் பிடித்தேன்? அந்தக் களவாணிச்சி என்னை புருஷனாக வளைத்துப் போட்டது அவளுக்குப் படுக்கையில் சுகம் கொடுக்க மட்டும் இல்லை. சொத்தை நிர்வகிக்கிறதும் அதை விருத்தியாக்க ஓடியாடிப் பாடுபடுகிறதும் இந்த அடிமையின் வேலையில் அடக்கம், தெரியுமா?

சொன்னால் சிரிப்பாய். காப்பிரிச்சியோடு கிடக்கும்போதெல்லாம் நான் ஊரில் இருந்த காலத்தில் அரையில் பூசிக் கொண்ட தைலம் நினைவுக்கு வந்து விடுகிறது. அந்த வாடையே பிடிக்காமல் நீ என்னை விட்டு தூரமீனாளாக கிணற்றடியில் பழைய வஸ்திரத்தோடு ஒதுங்கி ஒரேயடியாக எங்கேயோ போய்ச் சேர்ந்தாய். அதை ரொம்ப அனுபவித்த கொருக்குப்பேட்டை பங்காரு தாசியும் அஸ்தி ஜ்வரம் கண்டு உசிரை விட்டது உனக்குத் தெரிந்ததுதானே. என்னமோ பங்காரு தாசி மாதிரி இந்தக் காப்பிரிச்சிக்கும் தைலவாடை ரொம்பவே பிடித்துப் போகும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கல்யாணி? அவளுக்காக நான் அத்தரும் ஜவ்வாதும் வெள்ளைக்காரன் இங்கிலாண்டில் உண்டாக்கிக் குப்பியில் அடைத்த பரிமளகந்த செண்டும் இல்லையோ வாங்கித் தருகிறேன். நானும் பூசிக் கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்கிறேன். இது நாசிக்கு சுகம், கேட்டுக்கோ.

வாரம் முழுக்க காப்பிரிச்சி காரியம் ராவும் பகலும் இருப்பதாலும், கையில் கொஞ்சம் போல ரெண்டு பேர்கிட்டேயும் காசு சேர்ந்திருந்ததாலும் நான் இங்கே வந்தது முதல் பார்த்து வந்த கரும்புத் தோட்ட ஹெட் சூபர்வைசர் உத்தியோகத்துக்கும் தலைமுழுகி விட்டேன். விடிகாலையில் எழுந்து தொப்பியையும் நிஜாரையும் மாட்டிக் கொண்டு ஓட வேண்டியதில்லை என்ற நிம்மதியே மனசில் பெரிசாக எழுந்து நிற்கிறது. விடிந்து வெகு நேரம் போய்த்தான் இப்போதெல்லாம் எழுந்திருக்கிறேன். அந்த நேரத்துக்கு தோட்ட வேலைக்கு எவனாவது தாமதமாக வந்து நின்றால் என் பிரம்பும் நாக்கும் விளாசி எடுத்து விடும். நாலு காசு பார்க்க சீமைக்கு வந்த அந்த ஜந்துக்களுக்கு அதெல்லாம் சரியான தண்டனைதான். நான் தனத்தைப் பார்த்தவன். இன்னும் ஆசை அடங்காமல் அனுபவித்துக் கொண்டிருப்பவன். கல்யாணி, காப்பிரிச்சி, காசு.

நேற்றைக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலம். லோலா மதியத்திலேயே அரிசிக் கள்ளு என்று எதோ பெயர் விளங்காத பானத்தை மூக்கு முட்டக் குடுத்து விட்டு சாயந்திரம் முழுக்க படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். நான் கணக்கு வழக்கு வேலையில் மூழ்கி திங்கள்கிழமை பொழுது விடிந்ததும் யாரைத் தேடிப் போய்க் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்துக் காசு பிடுங்க வேண்டும் என்று ஜாபிதா தயார் பண்ணிக் கொண்டிருந்தேன்.

சட்டென்று இந்தக் கல்யாண விஷயத்தை உன்கிட்டே சொல்லவில்லையே என்று ஞாபகம் வந்தது. சொன்னாலும் உனக்கு போய்ச் சேரப் போவதில்லை, போய்ச் சேர்ந்தாலும் இந்தத் தகவலால் உனக்குக் கால் காசு லாபமில்லை என்றெல்லாம் எனக்குத் தெரியும்தான். ஆனால் என்ன? கல்யாணம், சீமந்தம், வளைகாப்புக்கு பிள்ளையார் பெயருக்குப் பத்திரிகை எழுதி வைக்கிறதுபோல் உனக்குச் சொல்கிறதை இன்று நேற்றா, நான் காராகிருஹத்துக்குப் போன காலம் முதல் செய்து கொண்டு வந்திருக்கிறேன் இல்லையா? அதிலே ஒரு ஒரே ஒரு கடுதாசு, கடுதாசியில் ஒரு காகிதமாவது கிடைத்த சமாச்சாரம் எனக்குத் திரும்ப வந்திருந்தால் நான் இன்னேரம் சமுத்திரம் கடந்து போன காரியத்திலேயே கண்ணாக ஒழுக்க நெறியோடு இருந்திருப்பேனோ என்னமோ.

மசிப்புட்டியில் மசிக்கான மாத்திரை போட்டு தண்ணீர் விட்டுக் கரைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, கட்டைப் பேனாவை முக்கியெடுத்து ஒரு பக்கம் முழுக்க கல்யாணியோடு வைத்துக் கொண்ட பந்தம் பற்றி எழுதி, அவள் போதாமல் இங்கே இன்னொருத்தியையும் கூடச் சேர்த்துக் கொண்ட வைபவம் பற்றி எழுதப் பக்கத்தைத் திருப்பினேன்.

எழுதின பக்கத்தில் மை உலராமல் திருப்பின பக்கத்தில் எழுதக் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. அங்கங்கே திட்டுத் திட்டாக பின்னாலும் அது புடைத்துக் கொண்டு விகல்பமாகத் தெரிந்தது. கல்யாணியும் காப்பிரிச்சியும் மாதிரி. என்ன சொல்லு, அந்த ரெண்டு பெண்டுகளும் உடம்பு சவுந்தர்யத்தில் ஒவ்வொரு ஜாதி புஷ்பம் போல். உன்னை அது போல எல்லாம் நினைச்சுப் பார்க்க முடியலேடியம்மா. மாச விலக்கு ஏற்பட்டு விலகிப்போய் கிணற்றடியில் பழைய வஸ்திரத்தோடு படுத்திருக்கிறவளாகத்தான் சதா நினைவுக்கு வருகிறாய்.

காப்பிரிச்சியும் கல்யாணியும் இல்லாமல் சுத்தபத்தமான ஒரு ஜீவிதம். அதெல்லாம் எனக்கு விதிக்கப்பட்டதில்லை. இந்தக் கறுப்பு தடிச்சி, அந்தக் கறுப்பு சுந்தரி. உலகம் இவர்களோடு தான் இனிமேல் கொண்டு. உடம்பு ஆசையும் காசு ஆசையும் மட்டும் பிரதானப்பட்ட உலகம். அங்கே இருந்து குரல் வருகிறது. வா, வந்து படு.

லோலா போதையில் என்னைப் பார்த்து சொன்னாள்.

ஓய் ரெட்டி. அந்தக் கணக்கெல்லாம் இருக்கட்டும். இங்கே கொஞ்சம் பக்கத்தில் வந்து படுத்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டுப் போம்.

சாயந்திர நேரத்தில் இது வேணுமா என்று சலிப்போடு அவள் பக்கத்தில் போனபோது அவளே ஆரம்பித்து விட்டாள். சொன்னால் நம்ப மாட்டே. யாராவது அந்த நேரத்தில் அதுவும் பெண்பிள்ளை. சரி, இருக்கலாம். ஆனால் நடுவிலேயே தூங்க முடியுமா? காப்பிரிச்சி பாதி வார்த்தை சொன்னபடிக்கு உறங்கிப் போனாள்.

நான் பலகீனமாக உணர்ந்தபடி கட்டிலில் இருந்து இறங்கி எழுத்து மேஜை மேல் நான் எழுதி வைத்திருந்த கடுதாசியைப் பார்த்தேன். எங்கே தொலைந்தது அந்த ஒற்றைக் காகிதம் என்று தெரியவில்லை. சமுத்திரக் காற்றில் பறந்து போய் அலைக்கு நடுவிலே குதி போட்டுக் கொண்டு உன்னைத் தேடிப் போய்க் கொண்டிருக்கா? இல்லை, கக்கூசுக்குள் காப்பிரிச்சி துடைத்துப் போடத் தோதாகக் கிடக்கிறதா தெரியலை. அதைத் தேடிப் போக ஆயாசமாக இருந்தது.

மேல் கொண்டு கணக்கு வழக்கைப் பார்க்க முடியாத ரெண்டுங்கெட்டான் மன நிலையும், உடம்பில் பெரிசாக எழுந்த பசு தர்ம தாகமுமாக கொஞ்சம் சீக்கிரமே கல்யாணி வீட்டுக்குப் போய் விட்டேன். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்த அவளுடைய புருஷனை எச்சில் தட்டோடு வாசலுக்கு விரட்டி விட்டு கதவைச் சார்த்தினேன். சோற்றையாவது அவன் வெளியே உட்கார்ந்து முழுசாக அனுபவிக்கட்டும்.

நான் முன்னிரவில் வெளியே வந்து என் சொந்தமான காப்பிரிச்சி வீட்டுக்குள் நுழையும்போது தான் வாசலில் பார்த்தேன். யாரோ உட்கார்ந்திருந்தார்கள்.

ஓய், மகாலிங்கய்யரே. சௌக்கியமா இருக்கீரா?

மலையாளத்துப் பார்ப்பான் இங்கே எங்கே வந்தான்?

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று

இரா.முருகன்



ஜனவரி 29 1908 – பிலவங்க வருஷம் தை 16 புதன்கிழமை,

அம்பலப்புழை செக்கனோடு ஞாயிற்றுக்கிழமை பகல் முழுக்க இருக்க வேண்டிப் போனது துர்க்கா பட்டனுக்கு. பரசு அந்தப் பையனுக்கு விழுந்து விழுந்து சகல விபவங்களும் விளம்பி ஊண் கழிக்க வைத்தான். விட்டால் எடுத்து வாயில் ஊட்டி விடுகிற வாத்சல்யம் அவன் செய்கையில் தெரிந்தது.

ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் செக்கனோடு கூட துர்க்கா பட்டன் சமுத்திரக் கரை காண்பித்துக் கொடுக்கப் புறப்பட்டான். பரசு தானும் வருவதாகச் சொன்னாலும், கடையில் வருகிறவர் போகிறவரை கவனிக்க ஆள் இல்லாமல் போய்விடும் என்பதால் அவனை வேணாம் என்று சொல்லி விட்டான் பட்டன்.

ராத்திரி சீக்கிரம் வந்துடுங்கோ. சமுத்திரக் கரையோரமா பய்யாம்பலம் மசானத்துலே யட்சி அலையறான்னு ஊர் முழுக்க பேச்சு. நீங்க ரெண்டு பேரும் பிரம்மசாரிகள். யட்சி தட்டுப்பட்டா, பார்த்த மாத்திரத்திலேயே ஸ்வாஹா தான்.

பரசு சொன்னபோது செக்கன் அடக்க முடியாமல் சிரித்தான்.

ஓய் யட்சியை நீர் பாத்ததுண்டா?

அவன் பரசுவைப் பார்த்துக் கேட்டான்.

பாக்காம என்ன? எங்க புலியூர்க்குறிச்சியிலே சகல சௌந்தர்யத்தோடும், உடம்புலே த்ரிபங்க வளைவோடும் ஒரு யட்சி வந்து சேர்ந்தா. தடி தடியா ரெண்டு முலையையும் சுமக்க முடியாம தோள்லே தூக்கிப் போட்டுண்டு நடுநிசிக்கு அவ தாட்தாட்டுனு நடந்ததைப் பார்த்துத் தொலைச்சேன்.

அப்புறம்?

பையன் சிரிப்பு மாறாமல் கேட்டான்.

பனி பிடிச்சு ஒரு மாசம் கிடக்கையிலே கிடந்தேனாக்கும்.

பரசு பார்த்த யட்சியை தான் பார்த்திருக்கக் கூடாதா என்று துர்க்கா பட்டனுக்கு ஏக்கமாக இருந்தது. அவளுக்கு தோள் வலிக்காமல் சேவை சாதித்திருக்க அவனுக்குக் கூடும் தான். யட்சிகளைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?

கூடக் கூட்டிக் கொண்டு நடந்தபோது செக்கனின் ஜாதகத்தையே அலசி விசாரித்துக் கூறு போட்டுவிட்டான் பட்டன். பையன் வெடிவழிபாட்டுக்கார வயசனின் அனியத்தி வழி பேரன். விசுவநாதய்யன் சாப்பாட்டுக் கடைக்கு காய்கறி வாங்கி வருவது, வாழைக்காயும் சேனையும் அரிந்து தருவது, தொட்டியில் வெள்ளம் நிறைத்து வைப்பது என்று உக்கிராணத்துக்குள் படி ஏற்றாமல் சின்னச் சின்னதாக அய்யன் இவனை வேலை ஏவுகிறது வழக்கம்.

நித்தியப்படிக்கு மூணு வேளை தரக்கேடில்லாத ஊண், தலை சாய்த்து உறங்க கடைத் திண்ணை, கிணற்றடியில் தந்த சுத்தியும் குளியும் நடத்திக் கொள்ள சௌகரியம். செக்கனுக்கு அய்யன் தெய்வம் மாதிரி தெரிந்து கொண்டிருக்கிறான். அவனுக்காக வண்டி ஏறி, நடந்து, வள்ளம் துழாவிப் புழை கடந்து தலையில் பூவன் பழக்குலையைச் சுமந்து கண்ணூருக்கு வந்திருக்கிறான் பையன்.

வழியில் வேதையன் வீட்டிலும் படியேறி பரிபூரணம் மன்னிக்கு செக்கனை பரிசயப்படுத்தி வைத்தான் பட்டன். அதுக்கு முன்னால் வாசலில் கோடு கிழித்துப் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக் கூட்டத்தில் தீபஜோதியையும்.

அம்மாவா, நீயும் வந்து சாடு.

அம்மாவன் புதுச் செக்கனை காரணம் காட்டி தீபஜோதியிடம் இருந்து தப்பித்து உள்ளே போனான்.

பய்யன் வரதுக்குள்ளே அவன் கொண்டு வந்த பூவன்பழம் பரிச்சயமாயிடுத்து.

பரிபூரணம் சிரித்துக் கொண்டே கை காட்டின திசையில் நோக்கினான் துர்க்கா பட்டன்.

வேதையன் பழக்குலையைப் பக்கத்தில் செல்லமாக அணைத்துப் பிடித்து வைத்தபடிக்கு ஏதோ புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். பழக்குலையில் இருந்து ஒவ்வொரு பழமாகப் பிய்த்துச் சாப்பிட்டுவிட்டு தொலியைக் கீழே போட்டபடி இருந்தான் அவன்.

தொழுத்தில் இருந்து நடந்து வந்திருந்த கன்றுக்குட்டி அதை ஒன்று விடாமல் சவைத்துத் தின்றபடி அவன் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தது.

அண்ணா.

பட்டன் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்து என்ன என்று பார்வையால் விசாரித்தான் வேதையன். மனசுக்குப் பிடித்த புத்தகப் படிப்பும் நாக்குக்கு இதமான பூவன் பழமுமாக நேரம் கடந்து போகிற ஆனந்தம் அவனுக்கு.

கன்னுக்குட்டி பாவம் அண்ணா. ரொம்ப தொலி சாப்பிட்டா அதுக்கு சுகக்கேடு ஆயிடும்.

பட்டன் சிரிக்காமல் சொல்ல, அடக்க முடியாமல் சிரித்து விட்டான் வேதையன். கையில் வைத்திருந்த புத்தகத்தை பட்டன் தோள் மேல் குறி பார்த்து எறிந்தபடி அவன் சிரிக்கும்போது பரிபூரணம் சிரித்ததும் அதோடு சேர்ந்து கொண்டது.

எடோ கள்ள பட்டா, நல்லா பேசப் பழகிட்டேடா. இல்லே பரிபூரணம் கத்துக் கொடுத்தாளா?

ஆமா, தொட்டதுக்கெல்லாம் பரிபூரணம். வேறே வேலை இல்லையா எனக்கு?

பரிபூரணம் பொய்க் கோபத்தோடு உள்ளே போனாள்.

நில்லுடீ என் சம்பூர்ண ராமாயணமே. ஒரு சேதி சொல்லணும்.

நான் வேணா இறங்கட்டுமா அண்ணா? பட்டன் அவசரமாகத் திரும்பினான்.

அண்ணாவும் மன்னியும் கொஞ்சிக் கொள்ளும் அத்யந்த வேளையில் அவன் எதுக்கு தேவையில்லாமல் இங்கே?

போகண்டா. உனக்கும் தான் சொல்லியாகணும்.

பரிபூரணம் பூவன்குலையை அந்தாண்டை நகர்த்தி வைத்தாள்.

அடுத்த வாரம் மத்தியிலே அரசூர்லே இருந்து எங்க பகவதி அத்தையும் சாமா, வீட்டுக்காரி, குழந்தைகளும் வரப் போறதா நேத்திக்கு கடிதாசு வந்துது. சொல்ல விட்டுப் போயிடுத்து.

வேதையன் எட்டி இன்னொரு பழத்தைப் பறிக்கக் கையை நீட்ட அதைத் தட்டி விட்டபடி பரிபூரணம் குலையை இன்னும் தூரத்தில் நகர்த்தி வைத்தாள்.

நல்லா வரட்டும் உங்க அத்தையும் மக்களும். ஆனா அவங்க பட்டர் வீட்டம்மா ஆச்சே. நம்ம வீட்டுலே தங்கினா ஆசாரம் போகும்னு சொல்ல மாட்டாங்களா?

பரிபூரணம் நியாயமான சந்தேகத்தைக் கிளப்பினாள்.

அவா எல்லாரும் அம்பலப்புழைக்கு பிரார்த்தனை நேர்ந்துண்டு வரா. முடிச்சுட்டு இங்கே ஒரு நடை எட்டிப் பார்த்துட்டுக் கிளம்பிடறதா உத்தேசம். இங்கே கோவில் மேல்சாந்தி வீட்டிலே தங்க, சாப்பிட சௌகரியம் செய்து கொடுத்தாப் போச்சு.

வேதையன் எளுப்பமாக பிரச்சனையைத் தீர்த்து வைத்தபடி பட்டனைப் பார்த்தான்.

பட்டா, நீ.

மேல்சாந்தி கிட்டே இப்பவே சொல்லிடறேன் அண்ணா. போற வழிதானே.

பட்டன் தோள் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அம்பலப்புழை செக்கனோடு இறங்கினது ஞாயிற்றிக்கிழமை அந்தியும் ராத்திரியும் சந்திக்கிற நேரம்.

ராத்திரி அவனோடு கடைக்குத் திரும்பும்போது மழை பிடித்துக் கொண்டது. மகர சங்கராந்தி கழிந்து எங்கேயிருந்து மழை வருகிறது என்று பட்டனுக்குப் புலப்படாவிட்டாலும், ராத்திரி மழை குளிரை அதிகப் படுத்திப் போயிருந்தது அனுபவிக்கப் பரம சுகமாக இருந்தது.

எடோ பரசு ஒரு லோட்டா சுக்கு வெள்ளம் கொடேன்.

அவன் கேட்டபோது பரசு அவசரமாக அம்பலப்புழை செக்கனை இழுத்து அவன் தலையைத் துவட்ட ஆரம்பித்தான். கோழி மாதிரி நனைந்திருந்த பையன் சாதுவாகத் தலையைக் காட்டிக் கொண்டு நிற்க, பட்டன் சுக்கு வெள்ளத்துக்காக ஒரு யுகம் காத்திருக்க வேண்டிப் போனது.

அண்ணா, சுடச்சுட இட்டலி இருக்கு. சாப்பிட்டுப் போயிடுங்கோ. இனிமே போய் அரி வைப்பும் சம்பாரம் உண்டாக்கறதும் என்னத்துக்கு?

பரசு கேட்டபடி பட்டனுக்கும் அம்பலப்புழை செக்கனுக்கும் கடை உக்கிராணத்திலேயே இலை போட்டு இட்டலி எடுத்து வைத்துப் பரிமாறினான்.

பட்டனுக்கு மறுக்க முடியவில்லை. அவனும் தான் குடும்பம் நடத்த என்ன பிரயத்தனப்பட்டான்? வயதான மாதாவையும் அவள் கூடப் பிறந்த வல்யம்மையையும் கூட்டி வந்து குடித்தனத்தை ஆரம்பித்த நேரம்தான் சரியாக இல்லை.

வல்யம்மைக் கிழவி மங்கலாபுரம் பாஷையும் ஆகாரமும் ஆயுசு முழுக்க பழகினதாலோ என்னமோ கண்ணூர் சூழ்நிலை கிஞ்சித்தும் சரிப்பட்டு வராமல் வந்து நாலே மாசத்தில் வைகுண்ட பதவி வகிக்கப் போய்ச் சேர்ந்தாள்.

ஏலிக்குட்டி, மரியம்மா, கொச்சு தெரிசா, காத்தி, பிலோமீனாள், ரெபக்காள் என்று பரிபூரணம் யார்யாரோ குமர்களை வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கும்போது அவனுக்குப் பரிச்சயப்படுத்தி அதில் ஒருத்தியைக் கட்டியோள் ஆக்கிக் கொள்ளச் சொன்னாள்.

எல்லாமே அதிரூப சௌந்தர்யவதிகள் இல்லையென்றாலும் தரக்கேடு இல்லாத பெண்கள். அவனைக் கல்யாணம் கழிக்க அதில் ஒருத்திக்கும் மடியில்லை.

ரெபக்கா மாத்திரம் கல்யாணத்துக்கு அப்புறமும் திவசேனம் மீன் கழிக்கிற ஏற்பாடு வேணும் என்று அவசியப்பட்டாள். அது செம்மீனாகத்தான் இருக்கணும் என்றில்லை. அயிலை, கேவலம் மத்தி ஆனால் கூடச் சேர்த்திதான்.

மீனுக்குக் கூட இத்தனை ஜாதி வித்தியாசம் இருக்கிறது தெரிந்து பட்டனுக்கு ஆச்சரியம். ஆனால் தினசரி மீன் சாப்பிட்டு வாய் வாடையில் அது மணக்க மணக்கப் படுக்க வருகிற பெண்ணோடு சுகிக்க முடியுமா என்று யோசித்தான் அப்போது.

பழகிப் போகலாம். அவனும் நாளாவட்டத்தில் மத்தியும் குத்தியும் ருஜித்துச் சாப்பிடக்கூடும். ரெபக்காவோ மற்ற யாரோ ஒருத்தியோ, கட்டியவளாக வாய்த்தவள் கேட்ட மாத்திரத்தில் பாகம் செய்து தருவாள்.

அந்தப் பெண்களின் அப்பன்மார் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் வைத்தார்கள். பட்டன் வேதத்தில் ஏறினால் போதும். பெண்ணும் கொடுத்து பொன்னும் கொடுக்க, பயிர் செய்ய பாட்டம் ஒதுக்கித் தரக்கூட அவர்கள் எல்லாம் தயாராக இருந்தார்கள்.

மங்களூர் சிவத்த பார்ப்பானுக்கு மவுசு அல்லே என்று சிரித்தாள் பரிபூரணம் அப்போது.

பட்டனின் அம்மாதான் பிராமணத்தி அல்லாத பெண்ணு மருமகளாக வீட்டுப்படி ஏறக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். அது வேதத்தில் ஏறினவளாக இருந்தாலும் பரவாயில்லை அவளுக்கு. அந்தப் பெண் பிராமணத்தி இல்லாவிட்டால் என்ன? அவள் அப்பனோ அவனுக்கும் அப்பனோ குளித்து அம்பலம் தொழுது விரதம் இருக்கிற பிராமணனாக இருந்திருப்பான். அந்தப் பெண் கையால் வைத்த சாதத்தில் சம்பாரம் விரகிச் சாப்பிட்டாலும் நேராக சொர்க்கம் போகலாம் என்று அவளுக்கு நம்பிக்கை. அந்த சுவர்க்கத்தில் வேறே ஜாதிக்காரர்கள் யாரும் இருக்க முடியாது.

இப்படி கல்யாண ஆலோசனைகள் அரைகுறையாக அலைபாய்ந்து கொண்டிருந்த போது பட்டனின் அம்மாவும் ஜன்னி கண்டு உயிரை விட்டாள். அது போன கொல்லத்துக்கு முந்திய திருச்சூர் பூரத்துக்கு அடுத்த தினத்தில் நடந்த ஒன்று.

குடித்தனம் வைத்த குச்சு சதா அடைத்துக் கிடக்க துர்க்கா பட்டன் வேதையன் வீடும் சாப்பாட்டுக் கடையுமே கதியாக ஆகிப்போனான் அப்புறம். பரிபூரணம் சொந்தத் தமக்கை மாதிரி கவனித்துக் கொண்டாலும், அவளை குரிசுப் பள்ளி காரியங்களுக்கும், தையல் பின்னல் வேலை கற்றுக் கொள்ளவும் சுற்றி வருகிற குமரிகள் பட்டனைத் தொடர்ந்து ஆகர்ஷித்தாலும் என்னமோ கழிசடை கால் தன்னிச்சையாக இங்கே சாப்பாட்டுக் கடைக்கு இழுத்து வந்து வாரத்துக்கு ஒரு தடவையாவது பரசு முன்னால் உட்கார்த்தி விடுகிறது.

ஆனால் பரசு இன்றைக்கு அவனைக் கவனிக்கவே இல்லை. அம்பலப்புழைப் பையன் இங்கே இவனோடு ராத்தங்க வேணுமா என்று பட்டனுக்கு யோசனையாக இருந்தது. பேசாமல் வீட்டுக்குப் போய் அங்கேயே அவனை தங்க வைத்து காலையில் வண்டி ஏற்றி அனுப்பினால் என்ன?

வேணாம். வீடு இருக்கப்பட்ட ஸ்திதியில் அதை விருத்தியாக்கவே ராத்திரி முழுக்க சரியாகப் போய்விடும்.

சாப்பாட்டுக்கடைத் திண்ணையில் இருந்து, ராத்திரி பத்து மணி வரைக்கும் ஊர்க்கதை, வேடிக்கை விநோதம், நம்பூதிரி பலிதம் என்று வாய் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள் மூவரும்.

படுத்துக்கலாமே. இனிமே யாரும் சாப்பிட வரப் போறதில்லே.

பரசு பட்டனிடம் சொன்னான். திரும்ப மழை சன்னமாகப் பெய்ய ஆரம்பித்திருந்தது.

இல்லே, நான் வேதண்ணா வீட்டுக்குப் போறேன். விடிகாலையிலே வாழைக்கு தண்ணீர் பாய்ச்சணும். ஒரு மரத்திலே வாழைப்பட்டை சாறு வடிச்சு மூஸ் வைத்தியருக்குக் கொடுக்கணும். யாருக்கோ மூத்ரகோச சிகிச்சைக்கு வேண்டியிருக்காம்.

பட்டன் கிளம்பின போது பரசு முகத்தில் அலாதி நிம்மதி தெரிந்தது.

எடோ செக்கா, நீ உள்ளே வந்து உக்கிராணத்துலே ஒரு கோரம்பாயை விரிச்சுக் கிடக்கலாமே. காலையிலே கோவில்லே செண்டை உயரும்போது கிளம்பிப் போய்க்கோ. பரசு எழுப்பி விட்டுடுவான்.

பட்டன் சொன்னபோது பையன் சுவரில் சாய்ந்து குந்தி உட்கார்ந்தான்.

பட்டரே, நான் ராத்திரி முழுக்க தூங்கறதே கிடையாது.

ஏன் அப்படி?

ஒரு கொல்லம் முந்தி ராத்திரியிலே தோட்டுப் பக்கம் நடந்து வந்தபோது கரிமூர்க்கன் கடிச்சு ஏற்பட்ட பெலன்.

கரிமூர்க்கன் கடிச்சா காலம் முடிஞ்சு போயிடுமே செக்கா.

துர்க்கா பட்டன் கேட்டான்.

கோவில் எம்பிராந்தரி அது நடக்காம சரி பண்ணிட்டார். ஆயிரத்தெட்டு தடவை மந்திரம் உருவேத்தி அம்பலக் குளத்திலே பதினோரு தடவை குளிக்க வச்சு, விஷம் போச்சு. ஆனாலும்.

ஆனாலும் என்ன? ஆகாட்டாலும் என்ன. நீ வந்து படு. துர்க்கா அண்ணாவுக்கு தலைக்கு மேலே வேலை இருக்கு. அவர் போய்க்கட்டும்.

பரசு சொன்னான். அவன் அவசரம் அவனுக்கு.

கரிமூர்க்கன் தீண்டியதில் இருந்து ராத்திரி ஒரு நிமிஷம் தூங்கினாலும் எங்கேயிருந்தோ எலிகள் எல்லாம் வாடை பிடிச்சு வந்து கால் விரல்லே கடிச்சுட்டுப் போயிடுது.

பையன் சோகமாகச் சொன்னபடி தன் காலை நீட்டிக் காட்டினான். பாதம் முழுக்க தளம் போடக் கொத்தி வைத்த மாதிரி அங்கங்கே அரித்திரிந்தது பார்க்க பட்டனுக்கே பாவமாக இருந்தது.

எம்பிராந்திரி இது ஸ்வஸ்தம் ஆக ஒண்ணும் செய்யலியா? அவன் கேட்டான்.

இது ஜபத்துக்கு இணங்கி வராதுன்னு சொல்லிட்டார். அப்புறம் எங்க பிஷாரடி வைத்தியர் மருந்து கலக்கிக் கொடுத்தார். வெடிவழிபாட்டு அப்பூப்பன் வயசு அவருக்கும். மருந்திலே ஏதோ சரியா அமையலை.

அப்புறம்?

காலைச் செருப்பில் நுழைத்துக் கொண்டு துர்க்கா பட்டன் கதை கேட்கிற சுவாரசியத்தோடு கேட்டான்.

மருந்தை சாப்பிட்டா உடம்பு லேசாகி கோழி மாதிரி தாழப் பறக்கணும் போல இருந்துது.

பரசு கடைக்குள் பாயில் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தான். அது பொய்த் தூக்கமாக இருக்கலாம் என்று தோன்றியது பட்டனுக்கு. அவன் போகிறதுக்காகக் காத்திருக்கிறானோ?

நீ பாட்டுக்குப் பறந்து கோயில் கொடிமரத்துப் பக்கம் போய் நனைச்சுடுவே. வெடிவழிபாட்டுக் காரப் பாட்டன் மேல் விழுந்து அவனையும் பரலோகம் போக வச்சுடுவே. ராத்திரி தூங்காட்டாலும் பாதகமில்லேன்னுட்டார் பிஷாரடி வைத்தியர்.

சரிதான். தூங்கினாலும் முழிச்சிண்டிருந்தாலும் ஜாக்கிரதையா இருடாப்பா.

பட்டன் பரசுவைப் பார்த்தபடியே சொல்லிவிட்டுப் படி இறங்கினது ஞாயிற்றுக்கிழமை ராத்திரி பத்து மணி கழிந்து.

முந்தாநாள் திங்கள் காலையில் வேதையன் வீட்டுத் திண்ணையில் அவன் தீர்க்கமான உறக்கத்தில் இருந்தபோது களேபரமான சத்தம்.

என்ன ஏது என்று புரியாமல் கண் விழித்தபோது ராஜ கொட்டார உத்தியோகஸ்தரா, திருவிதாங்கூர் போலீஸ் உத்தியோகத்தில் இருக்கப்பட்டவரா என்று தீர்மானிக்க முடியாதபடி உடுப்பு தரித்திருந்த ஒரு அதிகாரி வீட்டுப் படி ஏறி வந்து கொண்டிருந்தார். அந்த விடிகாலை நேரத்தில் இத்தனை மிடுக்காக ஒரு மனுஷர் இருக்க முடியுமா என்று பட்டனுக்கு வியப்பு அடங்காமல் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான்.

வேதையன் சொன்னபடி உள்ளே போய் குரிச்சி எடுத்து வந்து அந்த உத்தியோகஸ்தர் உட்கார வேண்டி வாசல் திண்ணையில் போட்டபோது வந்த மனுஷர் ஏகச் சத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

சார்வாள், உங்க கடை சிப்பந்தி அங்கே தங்க வந்திருந்த அம்பலப்புழைக்காரப் பையனை இடுப்புக்குக் கீழே கடிச்சு.

அட கஷ்டகாலமே. பரசுவா?

வேதையன் பதற்றத்தோடு விசாரித்தான்.

ஏன் கேட்கறீங்க சார்வாள். அனாசாரம். அவன் ரத்தம் சொட்ட கச்சேரிக்கு வந்து பிராது கொடுத்தது விடிகாலை நாலு மணிக்கு. செக்கனை வைத்தியசாலைக்கு அனுப்பி வச்சிருக்கு. தனியா வந்துட்டாலும் சேர்த்து வச்சுத் தச்சுடலாம்கறார் டிரஸ்ஸர். சார்வாள் தேஷ்யப்பட வேணாம். கடையிலே ஏன் இப்படியான ஆளுகளை.

உத்தியோகஸ்தர் பட்டனைப் பார்த்து நிறுத்தினார். சத்தம் கேட்டு பரிபூரணமும் வாசலுக்கு வந்துவிட்டாள்.

தலையில் அடித்துக் கொண்டு வேதையன் கண்ணடையைக் கண்ணில் மாட்டிக் கொண்டு கடைக்குப் புறப்பட்டான். கூடவே தந்த சுத்தி கூடச் செய்யாமல் பட்டனும் கிளம்பி விட்டான்.

பரசுவை சகல ராஜாங்க மரியாதைகளோடும் கோர்ட்டுக் கச்சேரிக்குக் கொண்டு போய், அப்புறம் கம்பி அழிகளிக்குப் பின்னால் அடைத்தும் வைத்தார்கள்.

பட்டன் கடையிலேயே நின்று வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும், வேணாம் என்று மறுத்து விட்டான் வேதையன்.

காப்பி குடிக்க வருகிறவனும், இட்டலி தின்ன நாலு சக்கரம் மடியில் முடிந்து கொண்டு படி ஏறுகிறவனும் வம்பு விசாரிப்பார்கள். ஒவ்வொருத்தனாகப் பதில் சொல்லி உனக்கு மாளாது. ஸ்திரியைக் கூட்டிண்டு வந்தான்னு பிராது வந்திருந்தால் கூட பரவாயில்லே. சு-வர்க்க ரதி. கர்த்தர் சொன்னபடி நரகம் போக வைக்கிற பாவம். நம்ம கடையிலே இப்படியும் நடக்கணுமா?

ரெண்டு நாள் கடையை அடைத்து வைத்து இண்டு இடுக்கு விடாமல் கழுவித் துடைத்து சுத்தம் செய்து நம்பூத்திரியையோ பாதிரியையோ அல்லது ரெண்டு பேரையும் வேறு வேறு நேரத்திலோ வரவழைத்துப் பரிகாரம் செய்த அப்புறம் சாவகாசமாகக் கடையை மறுபடியும் திறந்தால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான் அவன். அதுவரை காப்பியும் தோசையும் இல்லாமல் கண்ணூர்க்காரன் எவனும் பட்டினி கிடந்து உயிரை விடப் போவதில்லை.

பரசுவுக்கு எத்தனை வருஷம் சிக்ஷை கிடைக்கும்?

யோசித்தபடி கையில் வைத்திருந்த வாளித் தண்ணீரை பக்கத்தில் வைத்து விட்டு அடுப்படியைத் துடைக்க ஆரம்பித்தான் துர்க்கா பட்டன்.

அண்ணா, இப்படி இந்தக் கள்ளியம்பெட்டி மேலே உக்காருங்கோ.

பரசு குரல் மனசுக்குள் கிசுகிசுத்தது.

பட்டன் இடுப்பில் கை வைத்தபடி அமர்த்தி, முன்னால் குனிந்து தரையில் குந்தினான் பரசு.

ஜீவ பரியந்தம் எனக்கு. வெறும் பத்து நிமிஷம் உங்களுக்கு. ரெபக்காளைக் கல்யாணம் கழிச்சா, மத்தி மீன் வாங்கிட்டு வரணும். அதுக்கு ஆகிற நேரத்திலே ஆறிலே ஒரு பங்கு கூட கிடையாது.

பட்டன் நழுவிக் கொண்டிருந்த இடுப்பு வேஷ்டியை அவசரமாகச் சரி செய்தபடி அந்தக் கள்ளியம்பெட்டி மேல் ஒரு வாளி தண்ணீரை ஊற்றினான். இறங்கிப் போடா கழுவேறி.

பரசு கலைந்து போனான். மனசு மட்டும் இன்னும் கசடு தீராமல் தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது பட்டனை.

மத்தி மீன் எப்படி இருக்கும்? மதியம் பரிபூரணம் சேச்சியிடம் கேட்கலாமா? ரெபக்காளையே நேரடியாகக் கேட்டு விடலாமா?

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது

இரா.முருகன்


ஜனவரி 29 1908 – பிலவங்க வருஷம் தை 16 புதன்கிழமை,

துர்க்கா பட்டன் சாப்பாட்டுக் கடைத் தரை முழுக்க வாளி வாளியாகக் கிணற்றுத் தண்ணீரை அடித்து வீசி அலம்பி விட்டுக் கொண்டிருந்தான். கடையிலும் மனசிலும் கசடு எல்லாம் அந்த வெள்ளத்தில் அடித்துப் போகட்டும்.

ரெண்டு நாளாகச் சாப்பாட்டுக் கடையைப் பூட்டி வைத்திருந்தது. துர்க்கா பட்டனும் வேதையனோடு போலீஸ் கச்சேரி, கொட்டாரம் ஆஸ்பத்திரி என்று அலைய வேண்டிப் போனது. பாழாய்ப் போன பரசு தான் எல்லாத்துக்கும் காரணகர்த்தன்.

இன்னிக்கு என்ன ஆழ்ச்ச? புதன். இல்லே வ்யாழம். ஏதோ ஒண்ணு. ஏதோ ஒண்ணெல்லாம் இல்லை. புதனாழ்ச்ச தான்.

ரெண்டு நாள் முந்தி, ஞாயிறாழ்ச்ச அன்றைக்கு விடிந்ததும் பதிவு போலே குளியும் பட்சணமும் கழிந்து, வேதையன் அண்ணாவும் பரிபூரணம் மன்னியும் குரிசுப் பள்ளிக்கு தொழுது வர இறங்கினார்கள்.

குழந்தை தீபஜோதி வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிற்றாடையை மடக்கிச் செருகிக் கொண்டு மணலில் கோடு கிழித்து கையில் கோலோடு நின்றாள் அவள். கோட்டுக்கு அந்தப் பக்கம் நாலெட்டு தள்ளி கண்ணை இறுக்கமாக மூடி கறுப்புத் துணி கட்டி அவள் துர்க்கா பட்டனையும் நிறுத்தி வைத்திருந்தாள்.

அம்மாவா. சாடி வா.

தீபஜோதி உத்தரவிட்டாள். துர்க்கா பட்டன் ஓடி வரணும். வந்த வேகத்தில் அவள் மணலில் கிழித்திருந்த கோட்டைத் தாண்டிக் குதித்து ஓடி பலாமரச் சுவட்டில் போய் நிற்கணும்.

சரியாகச் செய்தால் அவனுக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மலையாள அட்சரமாலை உரக்கச் சொல்லி விட்டு மற்ற வேலை பார்க்கப் போக அனுமதி உண்டு. இல்லையோ, தீபஜோதி சொன்னபடிக்கு தோட்ட மண்ணில் மலையாள அட்சரம் ஒவ்வொன்றும் பத்து தடவை எழுதியாக வேண்டும்.

குஞ்ஞே அம்மாவனுக்கு மலையாளமும் மண்ணாங்கட்டையும் எல்லாம் எதுக்கு? சேட்டன் கடையிலே ஆயிரத்தெட்டு ஜோலி தலைக்கு மேலே தூங்கிக் கிடக்கு. கோட்டை சாடி அந்தாண்டை போகணுமல்லே. தோ, சாடறேன். சரியா வரல்லேன்னா நாளைக்கோ மற்றைநாளோ திரிச்சும் வந்து சாடறேன் சரியா? மரிச்சாலும் வார்த்தை மாறமாட்டான் உன் துர்க்கா அம்மாவன் குஞ்ஞே.

துர்க்கா பட்டன் கெஞ்சிப் பார்த்தாலும் தீபஜோதி மசியவில்லை.

அம்மாவா, நாலு அட்சரமாவது அறியாதே நீ தெய்வத்திண்டே நேர்க்கு போய் நின்னா, அதுவும் உன்னை பகடி பண்ணும். சொர்க்கத்திலேயும் தாண்டிக் குதிக்க வேண்டி வரும் பாத்துக்கோ. கால் பிழச்சால், தெய்வம் சிக்ஷிக்கும். மனசிலாயோ?

துர்க்கா பட்டன் கண்ணில் கருப்புத் துணியோடு ஓடி வந்தபோது கிருஷ்ண பகவான் கையில் இரும்பில் வார்த்த ஏதோ அஸ்திரத்தை வைத்து அவன் முதுகில் குத்தத் தயாராக அந்தப் பக்கம் நின்றிருந்தான்.

பரசுவோட சுகிக்கவா உனக்கு ஜன்மம் கொடுத்தேன் கழுவேறி.

கிருஷ்ணா அப்படி எல்லாம் இல்லே. பரிபூரணம் மன்னி பார்த்துச் சொன்ன பெண்குட்டியை கல்யாணம் கழிச்சு எந்தக் கழிசடை நினைப்பும் இல்லாம இனிமேல் கொண்டு இருக்கேன். இப்போ என்னை விட்டுடேன்.

சாடு அம்மாவா. கோடு வந்தாச்சு.

தீபஜோதி குரல் கொடுத்தாள். குதிடா மண்டச்சாறே. கிருஷ்ணன் தூண்டினான்.

எழும்பிக் குதித்தான்.

கோடு இன்னும் வரலே. உனக்கு பராஜயம். அட்சராப்யாசம் தான் சிக்ஷை.

தீபஜோதி அவன் முதுகில் குச்சியால் அடித்து தரையில் உட்கார்த்தினபோது பரிபூரணம் புழக்கடைக் கதவைத் திறந்து உரக்கக் கூப்பிட்டாள்.

அடீ தீபஜோதி. பள்ளிக்குப் போற நாள்னு போதமே இல்லியா. அப்பன் காத்திருக்கார். வேகம் வா.

தீபஜோதி மாட்டேன் என்றாள்.

சொன்னா கேளு குழந்தே. போய்ட்டு வா. அம்மாவன் நாளைக்கு அப்யசிக்கறேன்.

துர்க்கா பட்டன் நகரப் பார்த்தான். அவன் குடுமியை எம்பிப் பிடித்து இழுத்து திரும்ப அமர்த்தினாள் தீபம். ஏழு வயசே ஆனாலும் குழந்தைக்கு அசாத்திய வலு கையில். அம்மாவைக் கொண்டிருக்கிறாள் அவள் திடகாத்திரத்தில்.

துருக்கன் எங்கேயும் ஓடிட மாட்டான். வாடி கொழந்தே. கொடியிலே அலக்கின கருப்பு வஸ்திரம் கிடக்கு பாரு. அதை எடுத்து மேலே புதச்சுண்டு வா. மேல் துணி இல்லாமே வெளியிலே இறங்கக் கூடாதுன்னு சீலம் இனிமே வச்சுக்கணும். ஒழிஞ்சு மாறிடக் கூடாது. வல்ய ஸ்திரீயாச்சே நீ இப்போ. இல்லையோடி?

பரிபூரணம் பேசிக் கொண்டே அவரைப் பந்தலில் படபடவென்று காய் பறித்து மடியில் நிறைத்து பச்சை மணக்க உள்ளே எடுத்துப் போனாள். அவளிடம் அது ஒரு குணம். முழிப்புத் தட்டி எழுந்து உட்கார்ந்தது முதல் ராத்திரி கிடப்பு முறியில் உறங்கப் போகிறது வரை ஒரு நிமிஷம் கூட வீணாக்க மாட்டாள்.

தீபஜோதி துர்க்கா பட்டனைப் பார்த்து விளையாட்டாக கண்ணை உருட்டி விழித்துக் கொண்டு வீட்டுக்குள் போனபோது வாசலில் இருந்து வேதையன் ஒச்சை கேட்டது.

எடோ துர்க்கா. இங்கோட்டு வா.

வந்துட்டேன் அண்ணா.

பட்டன் வீட்டைப் பிரதட்சணமாகச் சுற்றி தோட்டத்தின் வழியே கீரைப் பாத்தியை ஒரே எட்டில் தாண்டிக் குதித்து முன்வசத்துக்கு ஓடினதை தீபஜோதி பார்த்திருந்தால் அவனுக்கு கடின சிட்சை விதிக்காமல் அதை லகுவாக்கியிருப்பாள் .

வீட்டு வாசலில் துணி சஞ்சியும் சீலைக் குடையுமாக ஒரு கருத்த செக்கன் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தான். அவன் தலைமேல் ஒரு பூவன் பழக்குலை.

அம்பலப் புழையில் இருந்து வந்திருக்கான் துர்க்கா. விசுவநாத அய்யர் அனுப்பி வச்சிருக்காராம்.

எந்த விசுவநாத அய்யர்? துர்க்கா பட்டனுக்கு உடனடியாக நினைவு வரவில்லை.

அட மண்டா. நாம் நாலஞ்சு கொல்லம் முந்தி கர்க்கடகத்து மழையோட பிரயாணம் போனோமே. ஓர்மை இருக்கா. அப்போ.

அதே. வீட்டுப் பத்திரத்தை அவசரமாகக் கைமாற்றி எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக வேதையன் சொன்னானே. அந்த ஊர்ச் சாப்பாட்டுக் கடை அய்யன் இல்லையோ அந்த மனுஷர்.

அதென்னமோ, வேதத்தில் ஏறினாலும் இருக்கப்பட்ட வேதத்தில் ஊறி அம்பலம் தொழுது இறங்கி ஜீவித்தாலும் தமிழ் பிராமணன்மார் சாப்பாட்டுக்கடை தான் லோகமெங்கும் நடத்தணும் என்று எங்கோ எழுதி வச்சிருக்கு. துர்க்கா பட்டனுக்கு அதுதான் மனசில் பட்டது.

ஊர் வர்த்தமானம் எல்லாம் பறஞ்சு ஏதேதோ எனக்கு தேவப் பிரசாதம் அது இதுன்னு அய்யர் அனுப்பியிருக்கார். நான் பள்ளிக்குப் போய் வந்து சாவகாசமா எல்லாம் நோக்கிக்கறேன். நீ செக்கனை அழைச்சுப் போ.

எங்கே அண்ணா அழைச்சுப் போக?

அடே, நம்ம சாப்பாட்டுக் கடைக்குத் தாண்டா. விசப்பு அடங்கட்டும். பாவம். கடையிலேயே இன்னிக்கு ராத்திரி தங்கிக்கட்டும்.

அதுதான் வினையாகி விட்டது.

வேதையன் மன்னி, குழந்தை சகிதம் வெள்ளை உடுப்பு தரித்து கழுத்தில் குரிசு மாலையோடு வேதக் கோவிலுக்கு நடந்த பிற்பாடு வீட்டைப் பூட்டித் தாக்கோலை மடியில் முடிந்து கொண்டு அம்பலப்புழை செக்கனோடு துர்க்கா பட்டன் கடைத் தெருவுக்கு நடந்தான். அது ஞாயிற்றுக்கிழமை பகலுக்கு கொஞ்சம் முந்திய நேரம்.

கடையில் ஆள் ஒழிந்த நேரமும் அதுதான். வழக்கம் போல் பரசு தான் இருந்தான். மோக வசப்பட்ட தோதில் அவன் துர்க்கா பட்டனை நோக்கி, கூட வந்த செக்கனையும் அப்படியே பார்த்த பார்வை பையனில் நிலைத்து விட்டது.

டேய் பரசு, இந்த அம்பி அம்பலப்புழையிலேருந்து அண்ணாவைப் பார்க்க வந்திருக்கான். விசப்பு தீர என்ன இருக்கு கழிக்க?

காலையில் வார்த்து வைத்து காய்ந்து போன இட்டலியும் வெண்பொங்கலுமாக பரசு இலை நிறையப் பரிமாறும்போது அவன் பார்வை பையனை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவில்லை என்பதை துர்க்கா கவனிக்கத் தவறவில்லை. என்னமோ ஒரு இனம் தெரியாத பொறாமை அவனுக்கு. அடங்கு சவமே என்று மனதில் சொல்லிக் கொண்டாலும் அது மனசில் ஓரமாக கண்ணை உருட்டி விழித்துக் கொண்டிருந்தது.

அம்பலப்புழையில் தற்காலம் என்ன விசேஷம் எண்டெ கொச்சு அனியா?

துர்க்கா கேட்க வந்த பையன் துணி சஞ்சியை தோளில் இருந்து இறக்கிப் பக்கத்தில் வைத்தபடி தீவிரமாக யோசித்தான்.

ஊர் முழுக்க வௌவால் வந்து நிறஞ்சுது தெரியுமோ.

பையன் கண்ணை அகல விரித்துக் கொண்டு சொன்னான்.

வரட்டுமே. மழைக்கு வந்ததா இருக்கும். அதுலே என்ன விசேஷம்?

மழைதான். கொட்டு கொட்டுன்னு கால வர்ஷம் நாளும் ராத்திரியும் விடாமப் பொழியறது. வைகிட்டு நாலு மணி போல. திடீர்னு ஊர் முழுக்க அப்பின இருட்டு.

பரசு கூடக் கரண்டியைக் கையில் பிடித்துக் கொண்டு சுவாரசியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

வெடிவழிபாட்டுக்கார முத்தச்சன் உண்டல்லே அவிடெத்து அம்பலத்துலே.

துர்க்காபட்டனுக்கு நினைவு வந்தது. அவனும் வேதையனும் நாலைந்து கொல்லம் முந்தி அம்பலப்புழை போன மழை காலத்தில் பார்த்த வயசன். நமுத்துப் போன வெடிமருந்துப் பொதியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு இவர்களோடு காளை வண்டியில் வந்தவன்.

காலில் ஒரு விரல் ரெண்டு விரல் அங்கஹீனப் பட்டுப் போன விருத்தன் இல்லியோ?

அதே மனுஷ்யன் தான். குறூப்பு முத்தச்சன். அவன் மரிச்சது வைகும்நேரம் நாலு மணிக்கு. ஏழெட்டு நாளா மழையில் திரிஞ்சும் மறிஞ்சும் புரண்டு வாதனையோட கிடந்தான் என் முத்தச்சன்.

சொந்த முத்தச்சனா உனக்கு?

இல்லாட்டாலும் என்ன? எங்க ஓட்டல்கார பட்டருக்கு வேண்டப்பட்ட நல்ல ஆத்மா. முத்தச்சனை சிஷ்ருஷை பண்ண என்னைத்தான் எல்பிச்சிருந்தார் எங்க ஏமான்.

அனியன் ஆர்ய வைத்யம், யுனானி இப்படி ஏதும் கிரமமாப் படிச்சதாலோ அது?

துர்க்கா கேட்க, பையன் இல்லையென்று தலையாட்டினான்.

மிஷினரி ஆஸ்பத்திரியிலே டிரஸ்ஸருக்குக் கூடமாட ஒத்தாசை செஞ்சு ஏதோ கொஞ்சம் வைத்யம் தெரியும். அத்ரயே உள்ளூ. ஆனாலும் குறூப்பு முத்தச்சன் பாவம் ஆத்மா.

போதம் கெட்டு பொலம்பியபடியே மரிச்சான். நக்னமா ஒரு வயசன் அவன் மேலே விழறதுக்கு வரான்னு அலறல் வேறெ அப்போ அப்போ.

மூத்ர வாடையோட வயசன் கொடிமரப் பக்கம் பறக்கறான் பாரு.

வெடிக்காரன் போல அபிநயித்துச் சிரித்து உடனே வாயை இறுக்க மூடிக் கொண்டான் அம்பலப்புழைப் பையன்.

ஊர் முழுக்க எங்கே இருந்தோ வந்த வௌவால் கூட்டம் நெறஞ்சு இடம் முழுக்க அழுக்குத் தோல் கந்தம். மூச்சு முட்ட எல்லோரும் அலைபாய்ந்து கிடந்த நேரத்திலே யார் கிட்டேயும் சொல்லாமல் முத்தச்சன் யாத்ர ஆயிட்டான்.

அவன் சாப்பிட்ட்டபடியே பேசிக் கொண்டிருக்கும்போதே குரிசுப் பள்ளியில் இருந்து இறங்கி நேரே கடைக்கு வந்திருந்தான் வேதையன்.

எடோ அம்பலப்புழை செக்கா, விருத்தி கெட்ட வர்த்தமானம் எல்லாம் எதுக்கு? விசுவநாத அய்யர் என்ன சொல்லி விட்டார்? அதைச் சொல்லு முதல்லே.

வௌவால் பற்றிய வர்த்தமானம் அவனுக்கு ரசிக்கவில்லை என்று துர்க்கா பட்டனுக்குப் புரிந்தது.

விசுவநாத அய்யர் கொடுத்தனுப்பிய லிகிதத்தை செக்கன் இடது கையால் எடுக்க, துர்க்கா பட்டன் அதை அவசரமாக வாங்கி வேதையனிடம் மரியாதையோடு கொடுத்தான். லிகிதத்தைப் பிரித்து துர்க்கா பட்டனும் கேட்க உரக்கப் படித்தான் வேதையன்.

நம், அதாவது உங்கள் பாட்டத்தில் வாழைச் சாகுபடி செய்து வந்த குலை நமக்கு வேண்டப்பட்ட செக்கன் வசம் அனுப்பியிருக்கிறேன். முதல் குலையை கிருஷ்ணன் அம்பலத்தில் சமர்ப்பித்து விட்டேன். நெல் சாகுபடி நல்ல விதம் நடத்தி முடித்து நாலு கொல்லமும் தவறாது ரெண்டில் ஒண்ணரைப் பாகம் விளையை கோவிலுக்குக் கொடுத்து விட்டு, மீதியை விற்று எனக்கு எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்லாவிட்டாலும், அதில் கால் பங்கு எடுத்து உங்களுக்காக மலியக்கல் செறியதோமையிடம் வட்டிக்கு விட்டுச் சேமித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தேவைப்படும் போது ஒரு வார்த்தை அனுப்பினால் அந்தப் பணத்தை அனுப்பித் தர ஏற்பாடு செய்கிறேன்.

விசுவநாத அய்யர் போல நல்ல மனுஷ்யர்கள் நிறஞ்சதினாலே தானே அம்பலப்புழையிலே மழை கொட்டு கொட்டுன்னு கொட்டறது துர்க்கா.

துர்க்கா பட்டன் ஆமோதித்தான். மங்கலாபுரத்திலும் மழை எப்போதும் பெய்கிறது உண்டுதான். அங்கே அப்படி ஒண்ணும் நல்லதைக் காணாமல்தான் அவன் கண்ணூர் வந்தது.

வேதையன் கடை மேசைப் பக்கம் உட்கார்ந்து உடனடியாகப் பதில் லிகிதம் எழுதிச் செக்கனிடம் கொடுத்தான்.

துர்க்கா, இவனுக்கு கண்ணூரில் காண வேண்டிய ஸ்தலம் எல்லாம் காணிச்சுக் கொடு. முடிஞ்சா பரசீனிக்கடவு க்ஷேத்ரத்துக்குப் ஒரு நடை போய்ட்டு வந்துக்கோ.

பட்டன் தலையாட்டினான்.

செக்கன் ராத்திரி கடையிலேயே தங்கி இருந்துட்டு உதயத்துலே அம்பலப்புழை திரிச்சுப் போகட்டும். சரியா?

வேதையன் சொன்னபடியே பதிலை எதிர்பாராமல் குடையை விரித்துப் பிடித்தபடி இறங்கிப் போனான். பரசு முகத்தில் அலாதியான ஆனந்தத்தைப் பார்க்க துர்க்கா பட்டன் தவறவில்லை.

(தொடரும்)

eramurukan@gmail.com

Series Navigation

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது

இரா.முருகன்


ஜனவரி 11 1903 – சுபகிருது வருஷம் , மார்கழி 27 ஞாயிற்றுக்கிழமை

சமையல் ஆக நேரமாகும்னா கொஞ்சம் காப்பியாவது கண்ணுலே காட்டேண்டி கல்பு.

நீலகண்டன் சமையல்கட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.

இதோ ஆச்சு. அரசூர் அத்திம்பேர் வந்திருக்கார். ஒரு பருப்புப் பாயசமாவது பண்ணிப் போடாம எப்படி? மெட்ராஸ்கார மனுஷா எல்லாம் உறவு சொல்லிண்டு சர்க்கரையா பேசுவா. கை மட்டும் கருணைக்கிழங்குன்னு நினைச்சுட மாட்டாரா?

கற்பகம் சமையல்கட்டிலிருந்தே பதில் கொடுத்தாள்.

நான் எதுக்கு அப்படி நினைக்கப் போறேண்டியம்மா. ஞாயித்துக்கிழமை ஒரு நாளாவது ஓய்வு ஒழிச்சல் உனக்கும் வேணாமா பொண்ணே?

அரசூர் சாமா திண்ணையில் இருந்தே சொன்னான். சாமா பெண்டாட்டி வழியில் அவளுக்கு கற்பகம் ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட தங்கை உறவு. தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் தனக்கு அவள் மச்சினி என்று அந்தச் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டான் சாமா. இத்தனை அழகான மச்சினி கிடைக்க அரசூர் சாமாவுக்குக் கசக்குமா என்ன?

இது ஆறு வருடம் முன்னால் திருக்கார்த்திகை நேரத்தில் நீலகண்டய்யனும், கற்பகமும் அரசூருக்கு வந்தபோது நடந்தது.

அந்த மயிலாப்பூர் கற்பகாம்பாளே நேரிலே இந்த கிரஹத்துக்கு வந்த மாதிரி இருக்கு உன் தங்கையைக் காணறபோது. உனக்கு எல்லாம் நன்னா நடக்கும்போ.

அப்போது பகவதியம்மாள் மருமகளிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். கற்பகம் வயிற்றில் குழந்தையைச் சுமந்திருந்த நேரம் அது.

ஆமா அம்மாவுக்கு நீ மதுரை மீனாட்சி. உன் தங்கை மயிலாப்பூர் கற்பகாம்பாள். நீலகண்டன் சாட்சாத் கபாலீசுவரன். நான் தான் வெட்டிச் சொக்கன்.

நீயா வெட்டி. டிபுட்டி தாசில்தார். சுத்துவட்டாரத்துலே பத்து கிராமம் எழுந்து நின்னு மரியாதை கொடுக்கற பெரிய மனுஷன். என்னை மாதிரியா? செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியிலே நேவிகேஷன் க்ளார்க் நீலகண்டனை எத்தனை பேருக்குத் தெரியும்?

நீலகண்டன் சாமா தோளில் ஓங்கி அடித்தபோது பகவதி அம்மாள் ரெண்டு பேர் தலையையும் ஆதரவாகத் தடவி ஆனந்தப்பட்டாள்.

அவர் இருக்கற வரைக்கும் நெனச்சுண்டா அண்ணாவைப் பாக்கணும் மன்னியைப் பாக்கணும்னு உன் தகப்பனாரையும் தாயாரையும் தேடிண்டு பட்டணத்துக்கு வண்டி ஏறிடுவார். பொடிக்கடை காரியத்தை மேற்பார்வை பார்க்கறதுன்னு நொண்டிச் சாக்கு வேறே. கோமதி மன்னி கலந்து கொடுக்கற காப்பி மாதிரி ஈரேழு லோகமும் கிடைக்காதுன்னு சொல்லிச் சொல்லி மாஞ்சு போவார் மனுஷன். அங்கே எல்லாம் தேடிண்டு இருப்பார் இப்போ அதையெல்லாம்.

கண்கலங்க பகவதி உள்ளே போனவள் பூஜையறை வாசலில் ஒரு வினாடி நின்றாள்.

அந்தப் பிரியமும் வாத்சல்யமும் இனிமேலும் தொடரணும். வந்து போயிண்டு இருங்கோ. என்ன, தெரிஞ்சுதா பொண்ணே?

கற்பகத்திடம் சொல்லியபடி பகவதி மருமகளுக்கு ஒத்தாசையாக சமையல்கட்டில் புகுந்து விட்டாள் அப்புறம்.

நாம அரசூர் போனா பகவதி மாமியும் என் அக்காளும் எவ்வளவு பிரியமா நம்மளை நடத்தியாறது. காலம்பற குளிக்க வென்னீர் மொதல் கொண்டு மாமி கோட்டை அடுப்பிலே வச்சுக் கொடுக்கறா. குளிச்சுட்டு வந்தா மல்லிப்பூ மாதிரி இட்டிலி. கொத்துமல்லி சட்டினி. அப்புறம் மணக்க மணக்க மலையாளக்கரை சமையல். மாமி அம்பலப்புழையை விட்டு வந்து மாமாங்கம் ஆகியும் இன்னும் மலையாள ஸ்திரிதான். நான் எப்படி காவேரிக்கரை பொம்மனாட்டியோ அதுபோல.

கற்பகம் ஒரு சின்னக் குவளையில் பாலும் மற்றதில் காப்பியுமாக உள்ளே இருந்து வந்தாள்.

பால் தானே அத்திம்பேரே?

நினைவு வச்சிண்டிருக்கியே பேஷ். நமக்கு இந்த காப்பி எல்லாம் ஒத்துக்காத சமாச்சாரம்.

அரசூர் சாமா டபராவைக் கையில் வாங்கினான்.

அரசூர் அத்திம்பேரைப் பாருங்கோ. சமத்தா பால் தான் எப்பவும். காப்பிப் பக்கமே போறதில்லை. நம்மாத்துலே ஞாயித்துக்கிழமை ஆச்சுன்னா காலம்பறத் திறந்த காப்பிக்கடையை பொழுது சாயற வரைக்கும் மூடற சமாச்சாரமே கிடையாது.

நீலகண்டன் அவளைக் குறும்புச் சிரிப்போடு பார்த்தபடி குவளையை வாங்கிக் கொண்டான். போன வாரம் அவளை எச்சில் படுத்த வைத்து காப்பி குடிக்க அடம் பிடித்த ஞாபகம் வந்தது ரெண்டு பேருக்கும். ராத்திரி கடை திறக்க அச்சாரம் என்றான் அவன் அப்போது கற்பகத்திடம்.

ஆனாலும் இந்த ஞாயிற்றுக்கிழமை பொழுதும் ராத்திரியும் நீலகண்டனுக்கு வெகு சாதாரணமாகவே போக விதிக்கப்பட்டது.

காலையிலேயே வந்து விட்டான் அரசூர் சாமா. நாளைக்கு தாசீல்தார், டெபுடி தாசீல்தார் வகையறாக்களையும் சப் கலெக்டர்களையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து கவ்னர் துரை ஏதோ பிரசங்கம் செய்யப் போகிறாராம். என்ன, எட்வர்ட் சக்கரவர்த்திக்கு விசுவாசமாக எல்லோரும் நடந்து ரூபா அணா பைசா சுத்தமாக வரி வசூல் பண்ணித் தரச் சொல்லி உத்தரவு போடுவாராக இருக்கும் என்றான் சாமா.

இந்தப் பசலிக்கு ஆகக் குறைச்சுத்தான் வரி வசூல் ஆகியிருக்கு. மாகாணம் முழுக்க அதே படிக்குத்தான். மலையாள பூமியிலே மழை பேஞ்சு அழிக்கறது. இங்கேயானா வரண்டு வதங்கி பஞ்சத்திலே பயிர் எல்லாம் கருகிண்டுருக்கு.

சாமா பசும்பாலை சுபாவமாக எச்சில் பண்ணி சாப்பிடுவதைப் பார்த்து தானும் அப்படியே செய்ய ஆரம்பித்தான் நீலகண்டன். இந்த அனாசாரத்துக்கு எல்லாம் கற்பகம் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள். சாமா புண்ணியத்தில் அதெல்லாம் ரெண்டு நாள் கண்டு கொள்ளப்படாமல் போய் ஏதாவது ராத்திரி நல்ல தூக்கத்தில் இருந்து அவளை உசுப்பும்போது பாஷாண்டி என்று கொஞ்சலான வசவில் நினைவு வைக்கப்படும்.

முடிச்சாச்சுன்னா குளிக்கப் போகலாம். அந்தக் காலி டபராவை சித்தெ தாங்கோ.

கற்பகம் திரும்ப உள்ளேயிருந்து வந்தாள்.

அக்காவையும் கூட்டிண்டு வந்தா என்ன குறைஞ்சா போயிடுவேள். நீங்க மட்டும் ராபணான்னு வந்து இறங்கிட்டேளே. அவ கோவிலைக் கண்டாளா குளத்தைக் கண்டாளா? அரசூருக்கு வெளியிலேயும் லோகம் இருக்குன்னு கூட்டிண்டு வந்துதான் காட்டுங்கோளேன் அத்திம்பேரே.

இன்னும் கொஞ்சம் காப்பி தரச் சொல்லிக் கேட்கலாமா என்று யோசித்தபடி நீலகண்டன் காலி லோட்டாவை நீட்டினான் கற்பகத்திடம்.

இன்னொரு டோஸ் காப்பியா? நிச்சயம் கிடையாது. போய்க் குளிக்கற வழியைப் பாருங்கோ. பாஷாண்டி மாதிரி இன்னும் எத்தனை நேரம் தான் ரெண்டு பேரும் வம்படிச்சுண்டு இருப்பேள்?

நீலகண்டன் இடுப்பில் துண்டை சுற்றிக் கொண்டு குளிக்கக் கிளம்பினான். அரசூர் சாமா இன்னும் பசும்பாலைக் குடித்து முடிக்காமல் நூதனமாக அச்சடித்து வந்த நியூஸ்பேப்பரை வரி விடாமல் படித்துக் கொண்டிருந்தான். காலையில் படியேறும்போதே அதோடு தான் உள்ளே நுழைந்தான் அவன்.

கற்பகம் அடுப்பில் எண்ணெயை ஏற்றி அப்பளம் பொறிக்க ஆரம்பித்தாள். வடை தட்டுகிற வாசனையும் நீலகண்டன் மூக்கை எட்டத் தவறவில்லை. வெங்காயம் எல்லாம் இல்லை. வெகு சாதாரண பருப்பு வடைதான் அது என்று தெரியும்.

குளிச்சுட்டு வந்து உங்க கங்கா ஜலத்தை பூஜை மாடத்துலே வச்சுடுங்கோ. மாடத்திலே விளக்கை எடுத்துட்டு இப்ப சிரத்தைக்கு அங்கே வச்சிருக்கேன்.

ரொம்ப நல்லது. அப்புறம் ஏதாவது ஆக்ஞை இருக்கா என் அழகு சுந்தரிக்குட்டி?

சமையல்கட்டுக்குள் எட்டிப் பார்த்துத் தணிந்த குரலில் சொன்னான் நீலகண்டன்.

ஐயோ, சகிக்கலை. வெளியிலோ போங்கோ. அத்திம்பேர் உட்கார்ந்திருக்கார். பட்டப் பகல்லே என்ன சரசம் வேண்டி இருக்கு.

கற்பகம் அவசரமாக கையை அசைத்து அவனை விரட்டினாள்.

நேத்து ராத்திரி எல்லாம் உள்ளே இருந்து ஏதோ சத்தம் வந்த மாதிரி இருந்தது. கங்காதேவியை செம்புலே அடச்சு கோர்ட்டு கச்சேரியிலே எதுக்கு வச்சாளாம்?

நீலகண்டனுக்கு அந்த ஸ்தாலி சொம்பு வீட்டில் இருப்பது அப்போதுதான் நினைவில் உறைத்தது.

நாயுடுவைப் பார்க்க வெள்ளிக்கிழமை மத்தியானத்துக்கு அப்புறம் ஹைகோர்ட்டுக்குப் போயிருந்தபோது கொடுத்தனுப்பினான் அவன். நீலகண்டன் புறப்பட்ட காரியத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் வெங்காய வடை, எலுமிச்சை ஷர்பத்து, காகிதக் கட்டு, ஸ்தாலிச் செம்பு என்று முடிந்த சந்திப்பு அது.

கோர்ட்டுக் கச்சேரியிலே எதுக்குடா இப்படி கங்கா ஜலத்தை எல்லாம் கைப்பத்தி வச்சிருக்கு?

நீலகண்டன் கேட்டபோது கள்ளியம்பெட்டியில் இருந்து தனியாக உதிர்ந்த ஒரு கடுதாசை எடுத்துப் படித்தான் நாயுடு.

திருக்கழுக்குன்றத்தில் சந்தேகத்து இடமான முறையில் இடுப்பில் வேஷ்டி கூட இல்லாமல் நக்னமாக நடமாடிய இளம் வயசு பிராமணரிடம் கைப்பற்றப் பட்டது அந்தச் செம்பு. இந்தக் குறிப்பு மட்டும் எழுதி சர்க்கார் சீல் வைத்த காகிதம்.

நீலகண்டன் செம்பை அசைத்துப் பார்த்தான். மேலே மூடி இறுக்கமாக ஒட்டி இருந்தது. கிட்டத்தட்ட ஈயத்தைக் காய்ச்சி அதை செம்போடு சேர்த்துப் பூசின மாதிரி இறுக்கம். இவ்வளவு பய பத்திரமாக கங்காஜலத்தை எடுத்துப் போய்க் கொண்டிருந்தது யார்? அவன் மேல் என்னத்துக்கு சர்க்காருக்கு சந்தேகம்?

தெரியலியே என்றான் நாயுடு கள்ளியம்பெட்டி மேல் ஏறி ஜன்னல் கதவைச் சார்த்திக் கொண்டு. ஐகோர்ட்டு கச்சேரியில் அவன் உத்தியோக ஸ்தலத்துக்கு வெளியே ஏதோ பொசுங்குகிற வாடை.

பழைய தஸ்தாவேஜ் எல்லாத்தையும் தகனம் பண்ணியாறது.

நாயுடு மூக்கை மேல் துண்டால் பொத்திக் கொண்டு சொன்னான்.

இந்த காயிதத்தையும் எரிச்சுடுவேளா?

கையில் வைத்திருந்த மலையாள டாக்குமெண்டை காட்டியபடி கேட்டான் நீலகண்டன்.

என்ன கசுமாலம் அய்யரே. வெளியே எரிச்சு பொண வாடை. உள்ளே கலத் தூசி மூக்குலே ஏறுது. கோர்ட்டு கச்சேரியிலே உத்தியோகம் பார்க்கறதுக்கு சதுர்க் கச்சேரி போற தாசிக்கு வெத்தலைப் பொட்டி தூக்கி மாமா வேலை பாக்கலாம்.

பெரிய பாப்பா சின்னப் பாப்பா நினைப்போ என்னமோ நாயுடு கண்ணை மூடி ஆகா என்றான். எதுக்கு பாராட்டு என்று நீலகண்டனுக்குப் புரியவில்லை அப்போது.

இந்த மலையாள கடுதாசியையும் எரிச்சுடுவேளான்னு கேட்டேன்.

நீலகண்டன் கையில் பிடித்திருந்த கசங்கிய காகிதத்தை முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தான். அங்கங்கே எண்ணெய் மினுக்கிக் கொண்டு ஒரு அட்சரமும் அழியாமல் இருந்தது அது.

அந்தக் கடுதாசு இருந்த காகிதக் கட்டை எடுத்து அப்படியே நீலகண்டனிடம் கொடுத்தான் நாயுடு.

பாரு அய்யரே, ஆலப்புழையிலே இருந்து கேசு விஷயமா வேறே ஏதோ தஸ்தாவேஜு கேட்டா இதை கைமறதியா முன்குடுமிக்காரன் எவனோ அனுப்பி வச்சிருக்கான். துரை நோட் போட்டு திருப்பி அனுப்பச் சொல்ற கடுதாசு மேலேயே இருக்கு கண்டுக்கிட்டியா?

அனுப்பிட வேண்டியதுதானே?

என்னத்தை அனுப்பி தாலியை அறுக்க? பத்து வருஷம் முந்தின சமாச்சாரம். நோட்டு போட்ட துரை கூட ரிடையர் ஆகி குழிக்குள்ளே போய்ப் படுத்தாச்சு. இனிமே இதுக்கும் தகனம் தான்.

நாயுடு ஜன்னல் பக்கம் பார்த்தான்.

ஏதாவது முக்கியமான டாக்குமெண்டா இருக்கப் போறது.

நீலகண்டன் காகிதக் கட்டைப் பிரித்துப் பார்த்தான். இன்னும் கொஞ்சம் சிரத்தையாக மலையாளம் படித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதெல்லாம் என்ன என்று நொடியில் விளங்கி இருக்குமே.

என்ன முக்கியம் போ. எர்ணாகுளத்திலேயோ ஆலப்புழையிலேயோ எவனோ நாயரும் நம்பூத்திரியும் தென்னந்தோப்பு குத்தகைக்கு சண்டை போட்டு குடுமியைப் பிடிச்சு அடிச்சுக்கிட்ட வம்பு வழக்கா இருக்கும். என்ன சொல்லு, மலையாளத் தேங்காய்க்கு அடிபிடி தகும்தான். எம்மாம் பெரிசு ஒவ்வொண்ணும்.

போறும்டா ஸ்பஷ்டமா விளங்கறது எல்லாம். நீ இன்னிக்கு குஷாலா சின்னப் பாப்பா, பெரிய பாப்பா, மலையாளத்துத் தேங்காய்னு வம்படிச்சுண்டு இருக்கே. நான் போய்ட்டு இன்னொரு நாளைக்கு வரேன்.

நீலகண்டன் கிளம்பினபோது மகாலிங்க அண்ணா பற்றித் தகவல் போலீஸ் கச்சேரியில் விசாரித்துச் சொல்வதாக வாக்குக் கொடுத்திருந்தான் நாயுடு. அதொண்ணும் நடக்கிற காரியமில்லை என்று ரெண்டு பேருக்குமே தெரியும். ஆனாலும் எங்கேயாவது ஏதாவது துப்பு கிடைத்தால் கூட தேடிப் போய் அதன் அந்தத்தை அறிய நீலகண்டன் தயார்தான்.

சும்மா குப்பையிலே கங்கா ஜலத்தை எறிய வேண்டாம். நான் அடுத்த வருஷம் வாரணாசியிலே எங்க தோப்பனாருக்கு திவசம் கொடுக்க ஏற்பாடு பண்ணிண்டு இருக்கேன். அப்போ இதையும் அங்கே சேர்த்துடறேன். எந்த ஆத்மாவோ புண்ணியமான இடத்துக்குப் போய்ச் சேரட்டும்.

நீலகண்டன் நாயுடுவின் மேஜையில் இருந்து ஸ்தாலிச் செம்பைக் கையில் எடுத்துக் கொண்டான்.

அப்படியே இதையும் கங்கையிலே விட்டுட்டு வா புண்ணியமாப் போகும்.

காகிதக் கட்டையும் சேர்த்து நீட்டினான் நாயுடு.

வாங்கிக்கோடா குழந்தை.

நீலகண்டனிடம் யாரோ அப்போது சொன்ன மாதிரி இருந்தது. பெண் குரல். அம்மா கோமதி குரலா இது? இல்லை, வேறே யாரோ.

நாயுடுவோடு நடத்தின வர்த்தமானங்களை கிரமம் இல்லாமல் மனசில் மறுபடி ஓட்டிக் கொண்டு மாடப்புறையைப் பார்த்தபடி நின்றான் நீலகண்டன்.

இன்னமா குளிக்கலே?

கற்பகம் குரல் நீலகண்டனை கிணற்றடிக்கு விரட்டியது.

என்னை சாமா கிட்டே சேத்துடேன். புண்ணியமாப் போகும்டா குழந்தே. உனக்கு ஒரு குறைச்சலும் வராது.

மாடப்புரையில் இருந்து தான் அந்த சத்தம் கேட்டது. நீலகண்டனுக்கு நிச்சயமாகத் தெரியும். கோர்ட்டு கச்சேரியில் கேட்ட அதே பெண்குரல் தான்.

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு

இரா.முருகன்


ஜனவரி 9 1903 – சுபகிருது வருஷம் , மார்கழி 25 வெள்ளிக்கிழமை

நன்னாத்தான் இருக்குடா நாயுடு. பொட்டியும் சட்டியுமா இங்கேயே குடித்தனம் நடத்தற உத்தேசமா?

நீலகண்டய்யன் விசாரித்தபடி குவளை நிறைய நுரைக்க நுரைக்க தளும்பி இருந்த எலுமிச்சம்பழ ஷர்பத்தை வாய்க்கு மேலே உயர்த்தினான்.

துரை அனுமதி கொடுத்தா அதுக்கும் தயார்தான். குடக்கூலி மிச்சமாச்சே. என்ன சொல்றே?

நாயுடு திரும்பிப் பார்த்தபோது நீலகண்டய்யன் கன்னத்தில் எல்லாம் எலுமிச்சை சாறு வடிந்து மூக்கில் புரையேறி இருமிக் கொண்டிருந்தான்.

அய்யரே இப்படி அண்ணாந்து ஊத்தி மூக்காலே குடிக்கணும்னு எந்த வேதத்துலே எளுதி வச்சிருக்கு. லோட்டாவோட மல்லுக் கட்டாம குடியேன்.

எச்சல் பண்றது அனாசாரம்டா நாயுடு.

நீலகண்டன் தலையில் தட்டிக் கொண்டு குவளையை வாய்க்குப் பக்கத்தில் கொண்டு போனான். அப்படியே வைத்துப் பானம் பண்ண என்னவோ தயக்கம்.

உன் எச்சி தானே. என்ன பண்ணிடப் போறது? சொர்க்கத்துலே விடமாட்டேன்னு எவனாவது பன்னாடை சொன்னா இந்த நாயுடு பேரைச் சொல்லு.

ஆமாடா, உன் அதிகாரம் எங்கே தான் கொடி கட்டிப் பறக்கலே. ஜாம்ஜாம்னு, இருக்கப்பட்ட இடம் எல்லாம் ராஜா மாதிரி இருடாப்பா நீ.

நீலகண்டன் சீப்பிக் குடிக்க ஆரம்பித்தான். தப்புக் காரியம் செய்கிற குழந்தையின் குறுகுறுப்பு அவன் முகத்தில் தெரிந்தது. போதாக்குறைக்கு ஷர்பத்தில் நன்னாரி சாறும், ஏகப்பட்ட சர்க்கரையும் சேர்த்திருந்ததால் முட்டாய் சாப்பிட்ட ஆனந்தம்.

ராஜா மாதிரி நான் எங்கே இருக்க? வருஷம் பொறக்கச் சொல்லவே ஏழாம் எட்வர்ட் சக்கரவர்த்தியை இந்துஸ்தானத்து ராஜான்னு ஏற்படுத்தி உத்தரவு வந்தாச்சே. உங்க நேவிகேஷன் ஆபீசுலே கடுதாசி ஏதும் வரல்லியா?

வராம என்ன? எல்லோரும் கூடி நின்னு கொடியேத்தி காட் சேவ் தி கிங்க் பாடிட்டு ஆத்துக்குப் போனோம்.

உத்தமமான காரியம் அய்யரே. பாத்துக்கிட்டே இரு. இனிமேல் கொண்டு நம்ம ஊர்லே திரியற நண்டு சிண்டு பெருந்தலை அதாம்பா, பாரப்பட்டி ஜமீந்தார், கண்டனூர் மகாராஜா, சாத்தூரு சக்கரவர்த்தி எல்லாத் தாயோளியும் ஒளிஞ்சானுக.

நாயுடு முகத்தில் அலாதியான திருப்தி தெரிந்தது. ராஜ வம்ச சொத்து பாகப்பிரிவினை தாவா எதாவது ஹைகோர்ட் வரை வந்து ஜட்ஜ், வக்கீல், சிரஸ்தார், நாஸர், அமீனா, டவாலி என்று மண்டையைக் குழப்பி அவனைத் தூங்க விடாமல் அடித்திருக்கும் போல. நீலகண்டனுக்கு அப்படித்தான் அர்த்தமாகியது.

இப்போதெல்லாம் பழைய மகாராஜக்கள் யுத்தம் புரிகிறது கோர்ட் கச்சேரிப் படியேறித்தான். துரைகளும் மயிலாப்பூர் வக்கீல்களும் திருப்தியாக மூணு வேளை சாப்பிட்டு நித்திரை போய் எழுந்து சுகமாக இருக்க இந்த காகிதக் கட்டு யுத்தங்கள் இல்லையோ வழி செய்கின்றன?

நீலகண்டன் ஷர்பத்தை முழுக்கக் குடித்து முடித்து குவளையை மேஜைமேல் ஜாக்கிரதையாக வைத்தான். மேல் சட்டையில் இருந்து சின்ன உருமாலை எடுத்து வாயைத் துடைத்துக் கொண்டான்.

சொல்லு அய்யரே. வந்த நேரம் தொட்டு கம்முனு உக்காந்திருக்கியே.

அட பாவி, பேச விடாம வெங்காய வடை மண்ணாங்கட்டின்னு கொடுத்து வாயை அடைச்சுட்டு பேச்சு வேறேயாடா உனக்கு?

நீலகண்டன் பரம சந்தோஷமாகச் சிரித்தான். மகாலிங்க அண்ணா விவகாரத்தைக் கூட இன்னொரு விசை இங்கே வரும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்படி நல்ல சிநேகிதமும் வாய்க்கு ருஜியான ஆகாரமும் ஜன்னல் வழியே சுகமாக இறங்குகிற சமுத்திரத்து ஈரக் காற்றும் தினமுமா கிடைக்கும்? மனசு லேசாக, சும்மா வாய் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும் சுகம் போதும் இப்போதைக்கு அவனுக்கு.

கள்ளியம்பெட்டியில் இருந்து நாலைந்து காகிதக் கட்டுகளை மேஜை மேல் தொப்பென்று போட்டுவிட்டு பெட்டியை மூடினான் நாயுடு. மேஜையில் இருந்து சுற்றிவர தூசி பறந்து ரெண்டு பேரையும் அடுக்கடுக்காகத் தும்ம வைத்தது. அந்தக் காகிதத்திலேயே ஒன்றை உருவி மூக்கைத் துடைத்துக் கொண்டான் அவன்.

பாழாப் போறவன் கையை அலம்பிட்டு காகிதத்தைத் தொட்டா என்ன? மூக்கை வேறே அதிலே சிந்தறான் முட்டாள். வம்போ வழக்கோ ஜாதகமோ விருதா விஷயமோ, எழுதி வச்ச பேப்பர் எல்லாம் சரஸ்வதி ஆச்சே?

நாயுடு வெளியே சுவரை ஒட்டி வைத்திருந்த இரும்பு வாளிப் பக்கம் நடந்தான்.

அவன் திரும்பி வந்தபோது நீலகண்டன் நாக்கில் ஷர்பத் அசட்டுத் தித்திப்பு பாக்கி. ஞாபகம் இருக்கும்போதே கேட்டுவிட வேண்டியதுதான்.

ஏண்டா நாயுடு, என் தமையன் சிக்ஷை முடிஞ்சு வெளியே வந்துட்டான்னு தெரியும். அப்புறம் எங்கே போனான்னு கச்சேரி ரிக்கார்டு எதாவது கிடைக்குமா?

எங்கே அய்யரே கிடைக்கப் போறது? பொதுவா, வெளியே போற கைதிகளை கொஞ்ச நாள் தொடர்ந்து விலாசம் வாங்கி அப்பப்போ கண்காணிக்கணும்னு இருக்கு. ஆனா, இப்படி கச்சேரியும் ஜெயிலும் ரொம்பி வழியறபோது அதுக்கெல்லாம் ஏது நேரம்? போறியா, மகாராஜனா போ. திரும்பி மட்டும் வந்துடாதே. அதான் எல்லார் கிட்டேயும் ஜெயில் சூப்ரண்டு துரை சொல்லி அனுப்புவார்.

உனக்கு எப்படிடா தெரியும் அதெல்லாம்? பக்கத்துலே நின்னு பார்த்த மாதிரி சொல்றே. நானும் சர்க்கார் உத்தியோகஸ்தன் தான். கப்பல்லே வரவன் போறவன் விவரணை தவிர ஒரு புண்ணாக்கும் தெரியாது.

நாவிகேஷன் ஹெட் கிளார்க்குக்கு அது தெரிஞ்சா போறும் அய்யரே. சிரஸ்தாருக்கு சர்க்கார் துரைகளோட மர்ம ஸ்தானத்து மசிரு நீள அகலம் கூட அத்துப்படியாகி இருக்கணும். என்ன உத்தியோகம் போ.

துரைகளும் சர்வாங்கம் பண்ணிப்பாளாடா?

அய்யரே, வேணாம். அப்புறம் துரைசானிகளைப் பத்தி கேட்பே. வாயைப் பிடுங்காதே.

அவனுக்கு அதுவும் தெரிந்திருக்கலாம். நீலகண்டனுக்கு சொல்லாவிட்டால் பரவாயில்லை.

அவாள்ளாம் சுபிட்சமா இருக்கட்டும்டா நாயுடு. விட்டுத்தொலை.

அவனுங்க நாசமாப் போகட்டும். மத்தவங்க விவகாரம் எப்படியோ. ஜெயில் சூப்பரண்டு மூச்சு விட்டாக் கூட எனக்கு கேட்கும். கக்கூஸ் களுவ வந்த பையனை, நல்லாக் கேட்டுக்க, பையனை கையைப் பிடிச்சு இளுத்த தடியன் அந்தக் கசுமாலம்.

இதெல்லாம் கூட நடக்குமா என்ன? எப்படி உனக்குத் தெரிய வந்தது?

நீலகண்டன் ஆச்சரியத்தின் உச்சிக்கே போய் விட்டான்.

சூப்ரண்டு துரை குமஸ்தன் நம்ம தோஸ்த் ஆச்சே. துரைக்கு பொண்ணுகளை விட நல்ல வடிவா இருக்கப்பட்ட கறுப்பு பையன்களைத்தான் பிடிக்குமாம்.

அட தேவுடா. இப்படியுமா லோகத்திலே.

நீலகண்டன் இன்னொரு தடவை அடக்க மாட்டாமல் சிரித்தான்.

அட, அது வேறே மாதிரி குஷால் அய்யரே. குசினிக்காரன், தோட்டக்காரன்னு வீட்டு வேலைக்கு சின்ன வயசுப் பிள்ளையா இட்டாறச் சொல்லி குமஸ்தனை நச்சரிக்கிறானாம். சொல்றாம்பா நம்ப தோஸ்த்.

எதுக்கும் குமஸ்தனை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு.

அங்க மட்டும் என்ன வாழுது? அவனும் குஷால் பேர்வழிதான்.

நிசமா?

அட, துரை போல கருத்த பையன் எல்லாம் தேடற கழிசடை இல்லை’பா. திம்சுக்கட்டை மாதிரி பொண்ணு மாட்டினா உன்னைய மாதிரி சரி என்னைய மாதிரி எச்சி விடுவான். திருவாலூர் பெரிய பாப்பா சொன்னேனே. அவ தங்காச்சி சின்னப் பாப்பா தொடுப்பு அவனுக்கு.

இதுவும் தெரியுமா? இனிமேலே என்ன பாக்கி இருக்கு? அவா ரமித்த திதி, நட்சத்திரம், நேரம் இதெல்லாம் தான் சொல்லணும்.

சூப்பிரண்டு குமஸ்தன் ஆதியப்ப முதலி இருக்கானே. அவன் மச்சக் காரன் அய்யரே. உங்க அண்ணாத்தை போலன்னு வச்சுக்கயேன். பொண்ணுங்க எல்லாம் ஓடி வந்து மேலே விளுந்து பிடுங்கற ஆகிருதி களவாணிப் பயலுக்கு. சின்னப் பாப்பா விளுந்தவ எந்திருக்கவே இல்லே. அவளைப் பாத்திருக்கியா? மெத்தை தலகாணியே வேணாம். அப்படி திம்முனு ஒரு உடம்பு கட்டு.

நாயுடுவை சின்னப் பாப்பா, பெரிய பாப்பா அங்க விசேஷங்களில் இருந்து திரும்ப சாமானிய ஸ்திதிக்குக் கொண்டு வர பேச்சை மாற்ற வேண்டிப் போனது நீலகண்டனுக்கு.

ஏண்டா நாயுடு இங்கே கச்சேரியிலே எதுக்கு இடிச்சுப் பொளிச்சு புதுசா ஏதோ கட்டிண்டு இருக்கா? இதெல்லாம் வந்தே அதிக காலம் ஆகலியே?

அதை ஏன் கேக்கறே அய்யரே. ஐகோர்ட்டு இப்ப சொல்ல ஒரே கந்தர்கோளமாயிட்டுக் கெடக்கு. கிரகசாரம்.

நாயுடு சொல்லிக் கொண்டே மேஜை மேல் சப்பணம் கட்டி உட்கார்ந்தான். இது ஆபீசா பிரம்மச்சாரி பிள்ளைகள் குடக்கூலிக்கு திருவல்லிக்கேணி பக்கம் இடம் பிடித்து வாசம் செய்கிற ஸ்தலமா என்று நீலகண்டனுக்கு ஒரு வினாடி சந்தேகம்.

அவன் புறங்கையை அப்படியும் இப்படியும் அசைத்துப் பார்த்தான். கையலம்பி விட்டு வரலாமா? நாயுடு உபயோகப்படுத்தி வெளியே மிச்சம் இருந்த வாளித் தண்ணீர் அதுக்கு சரிப்படாது.

நாயுடு கள்ளியம்பெட்டியில் இருந்து எடுத்துப் போட்ட பழைய காகிதக் கட்டில் இருந்து சுவாதீனமாக இன்னொரு காகிதத்தை உருவி நீலகண்டனிடம் கொடுத்தான். கையில் படிந்திருந்த கடலை எண்ணெய் மிச்சத்தை அதில் துடைத்துக் கொண்டான் நீலகண்டன்.

இது மட்டும் சரஸ்வதி இல்லையோ? மனசு கேட்டது. சாயந்திரம் சந்தி பண்ணும்போது ரெண்டு காயத்ரி அதிகமாகச் சொல்லிவிட்டால் சரியாப் போச்சு.

ஜனவரி ஒண்ணாந்தேதி எட்வர்ட் ராஜாவுக்கு நம்ம தேசத்து சக்கரவர்த்தியா முடி சூட்டினாங்க இல்லே. அதைக் கொண்டாடணுமாம். நம்பெருமாள் செட்டியைக் இந்த ஷணமே கூட்டிட்டு வான்னு அடம்.

அது யாருடா நாயுடு நம்பெருமாள் செட்டி?

கோர்ட்டைக் கட்டிக் கொடுத்த ஆசாமி’பா. நம்மாளுன்னாலும் வெள்ளைக்காரனுக்கே சவால் விடற மாதிரி என்னமா கட்டி இருக்கான் பாரு. அவனை வச்சே கோர்ட்டு உள்ளாற புதுசா கல்லுக் கட்டிடம் எளுப்பி கவ்னர் துரையை வச்சுத் திறந்து வைக்கணும்னு ஜட்ஜ் மாருங்க திட்டம் போட்டாங்க.

நல்ல விஷயம் தானே?

என்ன நல்ல விஷயம். நாசமாப் போறவனுங்க கவ்னரை ப்ரீதிப் படுத்தினா சுருக்கா சீமைக்கு திரும்பி சவுக்கியமா இருக்கலாம்னு ஆலோசனை பண்றாங்க. அவனுங்க தான் இப்படின்னா நம்மாளு வக்கீல் இருக்கானுங்களே, இவங்க பண்ற கொடுமை தாங்கலேப்பா.

என்ன வேணுமாம் நம்மூர் வக்கீல்களுக்கு?

விட்டா கவ்னருக்கு பாதபூஜையே பண்ணி. அதோட நிறுத்துவானுங்கங்கறே? கால் களுவின தண்ணியை சிரசிலே தெளிச்சு வீட்டுக்காரிக்கும் புகட்டி விடுவாங்க. காலுன்னா இடக்கரடக்கல்.

நாயுடு தன் புட்டத்தில் தட்டிக் காட்டிச் சொன்னான்.

அய்யோ, வேணாம்டா. சாப்பிட்டது எல்லாம் எதுக்களிச்சுண்டு வந்துடும்.

நீலகண்டன் அவசரமாக அவனைத் தடுத்துக் கையைக் காட்டினான்.

புதுக் கட்டடம் கட்ட பழசை இடிக்க வேணாமா? உள்ளே வேறே எங்கேயும் சரிப்படாதுன்னு பாதிரியும் சொல்லிட்டான். நம்ம குடுமிக்கார சோசியனும் ஆமான்னுட்டான். நம்பெருமாள் செட்டிக்கு நாலு காசு ஆதாயம்னு ஜாதகத்திலே எளுதியிருக்கு போல. ரிக்கார்ட் ஆபீஸ்லே கை வச்சுட்டானுங்க. பழைய டாக்குமெண்ட் எல்லாம் வச்சிருக்கற இடம்.

எந்த தஸ்தாவேஜ்? கேஸ் நடந்தது, சிக்ஷை விதிச்சது இதெல்லாமா?

ஆமா. வேறே என்ன இங்கே. சின்னப் பாப்பா பெரிய பாப்பா முலையை அளந்து கன பரிமாணம் குறிச்சா வச்சிருக்கோம். கண்றாவி கேசு, வாய்தா, வக்காலத்து, கீழ்க் கோர்ட்டு அப்பீல், ஜட்ஜ்மெண்ட் இந்த எளவு தான் பொளுது முச்சூடும்.

ரிக்கார்ட் ஆபீஸில் மகாலிங்கய்யன் மேலே சர்க்கார் சுமத்திய கேசு விஷயம் இருக்கலாம். மானபங்கப்படுத்தி கொலையும் செய்ததாக குற்றம் நிரூபணம் ஆகாமல் போனதுக்கு தீர்ப்பு கூட அங்கே கிடைக்கக் கூடும். தூக்கு தண்டனை தவிர்த்து அவனை எங்கே கொண்டு போனார்கள்?

ரிக்கார்ட் ஆபீஸ் முக்கிய தஸ்தாவேஜ் எல்லாத்தையும் பத்து இருபது கள்ளியம்பெட்டியிலே அடைச்சு இப்போதைக்கு ஒவ்வொரு ஜட்ஜ் சேம்பரிலும் வைக்கச் சொல்லி உத்தரவு. அதுலே கழிசல் கசம் எல்லாம் பிரிச்சு எடுத்து நம்ம மாதிரி மாச சம்பளக்காரன் கிட்டே எறியச் சொல்லி இன்னொரு ஆர்டர். பாரு, என்ன எல்லாம் நமக்கு வந்து சேர்ந்திருக்கு.

நாயுடு கள்ளியம்பெட்டியைத் திரும்பிப் பார்த்தான்.

நீலகண்டன் கை துடைத்துக் கசக்கிப் போட வைத்திருந்த மக்கிய கடுதாசைக் கவனித்தான். சட்டென்று அவனுக்குள் ஒரு சுவாரசியம். இது என்ன, மதறாஸ் பட்டண ஹைகோர்ட்டில் மலையாளத்தில் எழுதின டாக்குமெண்டு?

தேரடித் தெரு கிருஷ்ணன் கோவில் நம்பூத்ரி தயவில் அவன் கொஞ்சம் போல் மலையாளம் எழுதப் பழகினவன். நம்பூத்ரி பெண் ரதி மாதிரி பெரிய உதட்டோடு இருப்பாள். அவளைப் பக்கத்தில் வைத்துப் பார்க்க அப்பனை சிநேகிதம் பிடித்தபோது அந்தப் பெண்பிள்ளை தெலுங்குக்கார தபால் சேவகனோடு மச்சிலிப்பட்டணத்துக்கு ஓடிவிட்டதால் நீலகண்டய்யனின் மலையாள அப்பியாசம் பூர்த்தியாகாமலேயே நின்று போனது.

ஆனாலும் படிச்சது மறக்குமா என்ன?

அம்பலப்புழை சப் ரிஜிஸ்தர் ஓப்பீஸில் அம்பலப்புழை தேகண்டம் தொழிலாகக் கொண்ட குப்புச்சாமி அய்யன் மகனான முப்பது வயசு திகைந்த மகாதேவய்யன் சொந்த புத்தியோடு தன் சிற்றப்பன் ஜான் கிட்டாவய்யன் என்ற கிருஷ்ணமூர்த்தி அய்யன் குமாரன் வேதையனுக்கு எழுதிக் கொடுத்த நிலப் பட்டா கை மாற்றம் ரிஜிஸ்தர் ஆன தேதி கொல்ல வருஷம். எழுத்து எழுத்தாகப் படித்தான் நீலகண்டன்.

மேஜை மேல் வைத்திருந்த காகிதக் கட்டை எடுத்துப் பிரித்தான் அவன். என்னவென்று சொல்ல முடியாத சுவாரசியம். அம்பலப்புழை, குப்புசாமி அய்யன், மகாதேவ அய்யன், கிட்டாவய்யன் இதெல்லாம் என்னமோ ரொம்ப நாள் பழகின இடம், மனுஷ்யர்கள் மாதிரி எலுமிச்சை ஷர்பத்தாக மனதில் ஈரமாக நிறைகிறது.

நாயுடு திரும்ப கள்ளியம்பெட்டியைத் திறந்தான்.

விச்சியா இருக்கியாடா குழந்தே?

யாரோ வயதான ஸ்திரி பேசினது போல் இருந்தடு. நீலகண்டய்யன் காதில் பிரியமாகக் விசாரித்தது அந்தக் குரல்.

நாயுடு ஒரு ஸ்தாலிச் செம்பை பெட்டியில் இருந்து எடுத்து மேஜை மேல் வைத்தான்.

(தொடரும்)
eramurukan@gmail.com

Series Navigation

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஏழு

இரா.முருகன்


ஜனவரி 9 1903 – சுபகிருது வருஷம் , மார்கழி 25 வெள்ளிக்கிழமை

நீலகண்டய்யன் கையில் மடக்கிப் பிடித்த கருப்புக் குடையோடு ஹைகோர்ட்டு இருக்கப்பட்ட வீதியில் நுழைந்தபோது சாரட்டுகளில் ஜட்ஜ் மற்றும் வக்கீல் துரைமார்கள் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நாமம் போட்ட இரண்டு மயிலாப்பூர் அய்யங்கார்கள் அல்பாகா கோட்டும் தலைப்பாகையுமாக அவசரமாக ஜட்கா வண்டி ஏறிப் போனார்கள். என்னமோ விக்டோரியா மகாராணியே நேரில் வந்து சன்னத்து கொடுத்து சாம்ராஜ்ஜியத்திலேயே முக்கியமான தாவா தீர்த்து வைக்க அனுப்பியது போல ஸ்பஷ்டமான திருப்தி அவர்கள் முகத்தில் தெரிந்தது.

கோர்ட்டு கச்சேரி உள்ளே தூசியும் துப்பட்டையுமாக எதையோ இடித்துக் கட்டிக் கொண்டிருந்ததும் நீலகண்டய்யன் கண்ணில் படத் தவறவில்லை. புதுசாக எழுப்பின கட்டிடத்தில் இடிப்பானேன், திரும்பக் கட்டுவானேன் என்று அவனுக்குப் புரியவில்லை. நாலு பேர் நாலு காசு பார்க்க சர்க்கார் வகையில் செய்து கொடுத்த ஏற்பாடாக இருக்கும்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் மட்டும் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் ஒரு செங்கலைக் கூட நகர்த்தி புதுசாகச் சாந்து குழைத்துப் பூசுகிற வழக்கம் இல்லை. தெய்வங்கள் இருக்கப்பட்ட இடம் ஆச்சே. இடித்துக் கட்டினால் கும்பாபிஷேகம் தான் பண்ண வேணும் அந்த வெள்ளை மூஞ்சிகள் பரிபாலனம் செய்யும் புண்ணிய ஸ்தலத்தில்.

நீலகண்டய்யன் வலது கைப்பக்கம் திரும்பினான். நீள அப்படியே நடந்தால் மங்களூர் ஓடு வேய்ந்து ஒரு பெரிய காரைக் கட்டிடம் இருக்கும். அதுக்கு உள்ளே விதவிதமான உத்தியோகப் பெயர்களோடு அழுக்கு வேட்டியும், சுருங்கின குப்பாயமும், மூக்குப் பொடி மணமுமாக ஏகப்பட்ட பேர் காகிதக் கட்டுக்களை கக்கத்தில் இடுக்கிக் கொண்டும் கையில் அட்டை வைத்துக் கட்டிச் சுமந்து கொண்டும் சதா திரிந்தபடி இருப்பார்கள்.

இந்த பரிவார தேவதைகளை எல்லாம் கடந்து இன்னும் உள்ளே போனால் கொஞ்சம் பெரிய காவல் தேவதைகள். சிரஸ்தார் புருஷோத்தம நாயுடு போல. இதுகளுக்கு எல்லாம் புறாக் கூண்டு போல உத்தியோக இடம் சித்தம் செய்து வாசலுக்குக் கதவும் உள்ளே கம்பி அழி வைத்த ஜன்னலும் மர மேஜையும் நாற்காலியும் போட்டு பிரதிஷ்டை பண்ணுகிறது வாடிக்கை.

நாயுடு கொஞ்சம் கவுரதையான உத்தியோகம் பார்க்கிறபடியால் அவனைப் பார்க்க வருகிற முக்கியஸ்தர்கள் உட்கார்ந்து வார்த்தை சொல்ல அவன் மேஜைக்கு முன்னால் ரெண்டு குரிச்சி போட்டிருக்கும். வாசலில் டவாலி தரித்த ஒரு சேவகன் யார் என்ன என்று தீர விசாரித்து உள்ளே அனுப்பி வைக்கிறதும் வழக்கம்தான்.

நீலகண்டய்யன் போனபோது மேற்படி சேவகன் ஓரமாக நின்று பங்கா இழுத்துக் காற்றை உள்ளே அனுப்பிக் கொண்டிருக்க, நாயுடு மேஜை மேல் சாய்ந்த படிக்கே அரைத் தூக்கத்தில் இருந்தான்.

ஐயா கேசு விஷயமா ஏதோ ரோசனை பண்ணிட்டிருக்காரு. எந்திருக்க நேரம் பிடிக்குமே.

டவாலி மரியாதையாகச் சொன்னதைக் கேட்டது போல் காட்டிக் கொள்ளாமல் நீலகண்டய்யன் நாயுடு முன்னால் பிரத்யட்சமானான்.

டரடரவென்று நாற்காலியை இழுத்துப் போட்டு அவன் உட்காரப் போனபோது கோட்டு வாய் எச்சிலைத் துடைத்துக் கொண்டு நாயுடு முழித்துக் கொண்டான்.

ஏண்டா, இன்னிக்கு வேலை இல்லையா? ஆனந்த சயனத்திலே இருக்கே?

நாயுடு மேலே தேகம் படாமல் கையில் வைத்திருந்த குடையால் அவன் தோளில் விளையாட்டாக அடித்தான் நீலகண்டன்.

ஏண்டா அய்யரே, வந்ததும் வராதுமா ஆயுதத்தை ஏவறே?

நாயுடு சிரித்தபடி மேஜை மேல் வைத்திருந்த காகிதக் கட்டை ஓரமாக நகர்த்தி வைத்தான். நீலகண்டனை ரொம்ப நாள் கழித்துப் பார்த்த சந்தோஷம் அவன் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

ஆகாரம், பானம் ஏதாவது கொண்டு வரச் சொல்லட்டுமா அய்யரே?

நாயுடு விசாரித்தான்.

ஆத்துக்கு வெளியிலே அதெல்லாம் நான் சாப்பிட மாட்டேண்டா பழி. உனக்குத் தெரியாதா என்ன?

போடா புடலங்கா, இங்கே கச்சேரி உள்ளேயே கீத்துக் கொட்டகை போட்டிருக்கான் மதுரைக்கார அய்யன் ஒருத்தன். ஆளு அட்டைக் கறுப்பு. என்னைய விடக் கருப்பன்னா பாத்துக்கயேன். ஆனா, வக்காளி என்ன காரசாரமா சுடச்சுட வெங்காய வடை போடறான். வாங்கிட்டு வரச் சொல்றேன். தின்னு பாத்துட்டு சொல்லு. ஆத்துக்காரி கைமணம் கூட அப்புறம் சாதாரணமாப் போயிடும்.

வேணாம் வேணாம் என்று நீலகண்டய்யன் மறுத்தாலும் உள்ளூர அவனுக்கும் இப்படி வரவழைத்துச் சாப்பிடுவதில் ஆசைதான். வீட்டிலே வெங்காய வடை எல்லாம் பண்ண மாட்டாள் கற்பகம். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாளில் தொடக்கூடாத சமாச்சாரம் அந்த சனியன் பிடித்த ஆனால் வாய்க்கு வெகு ருஜியான வெங்காயம். அதுவும் ஞாயிற்றுக்கிழமையன்று அமாவாசை வந்து வாய்த்தால் கிடையாது.

நாயுடு மேஜை இழுப்பறையைத் திறந்து துட்டு எடுத்து டவாலி கையில் போட்டான். சுக்குக் காப்பித் தண்ணி வேணுமா ஐயா என்று விசாரித்தான் அந்த சேவகன்.

எலுமிச்சம்பழ ஷர்பத்து போட்டிருக்கானா மதுரைக்காரன்னு கேளு. இருந்தா.

சரி எசமான்.

இவன் ஒருத்தன். ராகுகாலத்திலே பொறந்த பய. எதுலேடா வாங்கிண்டு வருவே? நீ பாட்டுக்கு கருத்த பார்ப்பான் கடை லோட்டாவிலே வாங்கிட்டு வந்தா இந்த செவத்த பார்ப்பான் குடிக்க மாட்டேன்னு களுத்தறுப்பான். கொஞ்சம் இரு.

நீலகண்டய்யன் மறுக்க ஆரம்பிப்பதற்குள் கையைக் காட்டித் தடுத்தபடி மேஜைக்கு இடது பக்கம் நடந்தான் நாயுடு. மர பீரோ மேல் வைத்திருந்த ஒரு குவளையை எடுத்து சேவகனிடம் கொடுத்தான் அவன்.

கழுவி எடுத்துட்டுப் போ. உள்ளே விரல் படாமப் பிடிச்சு எடுத்து வரணும்.

சேவகனுக்கு அடுத்த உத்தரவையும் பிறப்பித்து விட்டு போதுமா என்று கேட்கிறது போல் பார்த்தான் நாயுடு.

இன்னிக்கு வீட்டுக்குப் போய் குளிச்சுட்டுத்தான் மத்ததெல்லாம்.

நீலகண்டன் தீர்மானித்துக் கொண்டான். சாயந்திரம் சந்தியாவந்தனம் பண்ண வெங்காய வடையும் எலுமிச்சங்காய் சாறும் ருசித்த நாக்கு புரளுமா என்ன? சந்தியையும் மாத்தியானத்தையும் நித்யப்படிக்கான நியம நிஷ்டையாகச் செய்து வைத்த ரிஷிகளும் மற்றவர்களும் மணக்க மணக்க வெங்காயம் சாப்பிட்டு வழக்கப்படுத்தியிருந்தால் எல்லாம் புரளும்.

வடை வர இன்னொரு யுகம் காத்திருக்க வேணும் போல் இருந்தது நீலகண்டனுக்கு. அதுக்குள் வந்த விஷயம் என்ன என்று நாயுடுவிடம் சாங்கோபாங்கமாகச் சொல்ல ஆரம்பிக்கலாம் என்று வாயெடுத்தபோது வாசலில் சத்தம்.

யாரோ ரெண்டு பேர் தடதடவென்று நாயுடு இருப்பிடத்துக்குள் நுழைந்தார்கள்.

துரை இங்கே வைக்கச் சொன்னார் எசமான்.

அவர்கள் பெரிய கள்ளியம்பெட்டி ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கி வந்திருந்தார்கள்.

எந்த துரை?

நாயுடு அசிரத்தையாகக் கேட்டபோது நீலகண்டனுக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. எல்லா துரைகளுக்கும் கேள்வி கேட்காமல் சலாம் போட்டுத்தான் அவனுடைய நாவிகேஷன் கிளார்க் உத்தியோகம் சமீபத்தில் ஹெட் கிளார்க்காக உயர்ந்திருக்கிறது. நாயுடுவுக்கு புரமோஷன் பற்றி எல்லாம் அக்கறை இல்லையா?

எந்த துரைன்னு கேட்டேன்.

பதில் வராமல் போகவே திரும்ப விசாரித்தான் நாயுடு.

ஜட்ஜி துரை எசமான். டவாலி குப்பையா செட்டி வந்து சொன்னாரு.

சரி சரி, இப்படி ஓரமா வச்சுட்டுப் போங்க.

அவசரமாகச் சொன்னான் நாயுடு. ஜட்ஜ் துரையை விட குப்பையா செட்டிக்கு அங்கே செல்வாக்கு என்று நீலகண்டனுக்குப் பட்டது. சிரஸ்தாருக்கு உத்தியோக உயர்வு என்னவாக இருக்கும்?

அங்கே இங்கே இழுத்து, நீலகண்டன் உட்கார்ந்திருந்த குரிச்சியில் மோதி, நாயுடு மேஜை மேல் வைத்த காகிதக் கட்டைக் கீழே தள்ளிவிட்டு எடுத்து வைத்து ஒரு வழியாக கள்ளியம்பெட்டியை நாயுடுவுக்குப் பின்னால் அமர்த்தினார்கள் வந்தவர்கள்.

அங்கேயிருந்து பின்னால் இருக்கப்பட்ட ஜன்னலைத் திறக்கவோ மூடவோ பெட்டி மேல் ஏறி நின்றால் தான் முடியும்.

ஜட்ஜ் துரைக்காக அது கூட செய்ய மாட்டானா என்ன நாயுடு?

பெட்டியை இறக்கி நகர்த்தி வைக்கிற களேபரத்துக்கு நடுவே நாயுடுவின் சேவகன் கையில் பூவரசு இலைத் தொன்னைகளும் ஜாக்கிரதையாக உயர்த்திப் பிடித்த குவளையுமாக வந்து சேர்ந்தான்.

இவன் கையால் ஆகாரம் கொடுத்து சாப்பிடுவதற்காக இன்னொரு வாளி இரைத்து ஊற்றி சாயந்திரம் குளிக்க வேணும் என்று நீலகண்டன் மனதில் முடிச்சு போட்டுக் கொண்டான்.

சாப்பிடு அய்யரே. ஆறினா சவசவன்னு போயிடும்.

நாயுடு ஒரு வடையை எச்சில் படுத்திக் கடித்தது அன்ன திரேஷமாக இருந்தது நீலகண்டனுக்கு. ஆனாலும் அந்த வாசனை ஆகர்ஷிக்கும் ஒண்ணு. அவனும் முன்னால் வைத்த தொன்னையில் இருந்து விண்டு வாயில் போட்டுக் கொண்டான்.

மதுரைக்கார கறுப்பன் கோர்ட்டு கச்சேரிக்குள் கீத்துக் கொட்டகை போட்டு பொறித்தெடுத்துக் கொடுத்த வெங்காய வடை அமிர்தம் தான். இதைச் சாப்பிட்டால் ரிஷிகள் சந்தியாவந்தனம் செய்யும் முன்னால் அவசியம் வெங்காயம் சேர்த்துக் கொள்ளச் சொல்லி நியமம் உண்டாக்கியிருப்பார்கள்.

வேதகாலத்தில் வெங்காயம் இருந்ததா? என்னத்துக்கு அதெல்லாம் இப்போ? சம்போக நேரத்தில் எலிப்பொறியைப் பற்றி நினைக்கிற மாதிரி,

இதைப் பொட்டலம் கட்டி வாங்கிப் போய் கற்பகத்துக்கு ஊட்டி விட்டால் என்ன என்று தோன்றியது நீலகண்டனுக்கு. வீட்டுக்குள்ளேயே இந்த மாதிரிப்பட்ட சமாசாரத்தை நுழைய விடமாட்டாள் அந்த காவேரிக்கரை பெண்பிள்ளை.

சொல்லு. என்ன சமாச்சாரம்?

நாயுடு சாப்பிட்டபடியே விசாரித்தான்.

ஒண்ணுமில்லேடா. என் தமையன் மகாலிங்கய்யன் இருக்கானே.

ஆமா. நீ உங்க ஆத்துக்கு வெளியே ஆசாரமா வெங்காய வடை தின்றே. அவரு கீரை வடை தின்னாரு.

நாயுடு தன் ஹாஸ்யத்தைத் தானே ரசித்தபடி வாயில் ஆகாரத்தை அடைத்துக் கொண்டு சிரித்தான்.

சே போடா, எப்பவும் எசகு பெசகாத்தான் பேசுவே நீ.

நீலகண்டனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

அண்ணாத்தை கூத்தியா வச்சிருந்தாரில்லே.

அதுக்கு என்ன இப்போ?

ஆடத் தெரிஞ்சவளான்னு தெரியுமா?

ஆமா, ரொம்ப அவசியம்டா அது.

நீலகண்டன் திரும்பச் சிரித்தான். பேச வந்த விஷயத்தை எடுக்கவே விடமாட்டேன் என்கிறான் கடங்காரன்.

பின்னே. ஆட்டமும் பாட்டும் அவசியம் இல்லியா? இன்னிக்கு ராத்திரி திருவாலூர் பெரிய பாப்பா சதுர்க்கச்சேரின்னு சவுகார்பேட்டையிலே தண்டோரா அடிச்சுட்டுப் போனான். போகலாம் வாயேன்.

நாயுடு கண் அடித்தான்.

அய்யோ, ஆத்துக்குப் போய்க் குளிச்சுட்டு கோவிலுக்குப் போகணும். சூனிய மாசம் ஆச்சே. பகவானை நினைக்கறதுக்காகவே இந்த மாசத்திலே சுப காரியம் எதுவும் வச்சுக்கக் கூடாதுன்னு பெரியவா சொல்லியிருக்கா.

நீலகண்டன் கடைசி விள்ளலை வாயில் போட்டு மென்றபடி சொன்னான்.

சதுர்க் கச்சேரி பார்த்துக்கிட்டே பகவானை நினைச்சுக்கோ. காளிதாசன் பண்ணின மாதிரி.

நாயுடு திரும்ப பூடகமாகச் சிரித்தான்.

காளிதாசன் என்ன பண்ணினான், கம்ப ராமாயணத்துலே என்ன சொல்லியிருக்குன்னு எல்லாம் எனக்குத் தெரியாதுடா. உன் கிட்டே இப்ப நான் பேச வந்தது.

அட வாயேன்’பா, நடந்துக் கிட்டே கிட்டே பேசலாம். வீட்டுக்குப் போறதும் கோவிலுக்குப் போறதும் பொண்டாட்டி முந்தானையிலே பத்திரமா முடிஞ்சிக்கறதும் எப்பவும் தான் இருக்கே. சதுர், சங்கீதம்னு எப்ப அனுபவிக்கறது?

போன வருஷம் மார்கழியில் நாயுடுவோடு கூட சதிர்க் கச்சேரி பார்க்க சிந்தாதிரிப்பேட்டை போனது ஞாபகம் வந்தது அவனுக்கு.

என்ன அய்யரே அநியாயம். கும்மோணம் தனலட்சுமி சதிர்னு கூப்பிட்டானுங்க. லட்சுமியைத்தான் முகரையிலே காணோம்னு பார்த்தா தனத்தையும் காணோம். இம்மாந் தூரம் கும்மோணத்துலே இருந்து வந்தவ அக்கம் பக்கத்துலே கடன் வாங்கியாவது மாட்டிக்கிட்டு வந்திருக்கலாமில்லே.

அன்றைக்கு கச்சேரி முடிந்து வெளியே வந்தபோது அவன் சொன்னது நடுராத்திரியில் நினைவு வரப் பலமாகச் சிரித்தபோது விஷயம் புரியாமல் கற்பகம் அவனை இறுக்கிக் கொண்டு நெஞ்சில் முத்தினாள்.

நாயுடு காலி தொன்னையை நகர்த்தினான்.

திருவாலூர் பெரிய பாப்பா ஆடிப் பார்த்திருக்கியா? கால் ஆடுதோ என்னமோ மேலே ரெண்டும் என்னமா குதிக்கும்.

அது பாட்டுக்குக் குதிக்கட்டுமடா. மகாலிங்கய்யர் பத்தி கொஞ்சம் பேசலாமா? என் தமையனார்.

நாயுடு பதில் சொல்லாமல் எச்சில் கையோடு எழுந்து, பின்னால் வைத்த கள்ளியம்பெட்டியைத் திறந்தான்.

(தொடரும்)

Series Navigation

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு

இரா.முருகன்


ஜனவரி 9 1903 – சுபகிருது வருஷம், மார்கழி 25 வெள்ளிக்கிழமை

நீலகண்டய்யன் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே வந்தபோது சமுத்திரக் காற்று இதமாக வீச ஆரம்பித்திருந்தது. அதென்னமோ தெரியலை, இன்னிக்குக் காலையிலே கண் முழித்து பாயைச் சுருட்டி வைத்தது முதல் நாள் கிரமமாக முன்னால் போய்க் கொண்டிருக்கிறது.

அது முந்திய ராத்திரியே ஆரம்பமாகி விட்டது. அவன் பெற்ற ஏக சந்தானமான பிள்ளைக் குழந்தை ரொம்ப சுருக்காகவே ராத்திரி நித்திரை போய்ப் பிள்ளையார் சுழி போட்ட சுபவேளை அது.

அகத்துக்காரி கற்பகம் தூரம் குளித்து நாலு நாள் ஆன உடம்பு மினுமினுப்பும் தேக வாசனையும், வாயில் தாம்பூலமும் தலை கொள்ளாமல் மல்லிகைப்பூவுமாக நீலகண்டன் படுத்து உருண்டு கொண்டிருந்த மச்சு உள்ளுக்குள் எட்டிப் பார்த்தாள் அப்போது.

சுடச்சுடப் பசும்பால் குடித்து விட்டு தூங்கினால் என்னவாம்? சர்க்கார் உத்தியோகம் உடம்பை உருக்கி இப்படி நோஞ்சானாக்கிடுத்தே. பெலம் வேணாமா எல்லாத்துக்கும்?

கரிசனமாக அவள் விசாரித்து விட்டு பாலோடு சூடாக வந்தபோது சுபஹோரை கனிந்து வந்தது. மார்கழி மாசத்து ராத்திரி என்பதால் குளிரக் குளிர கற்பகத்தை ஆலிங்கனம் செய்து பக்கத்தில் கிடத்தி ராத்திரி கிட்டத்தட்ட முழு நேரமும் போகம் முந்தாமல் கிரீடை செய்ய முடிந்ததில் இன்னும் உடம்பும் மனசும் கெக்கலி கட்டிப் பறக்கிறது.

ஆனாலும் நீர் ராட்சசர்ங்காணும். இப்படியா நாலு தடவை ஒரே ராத்திரியிலே.

தஞ்சாவூர்க்காரியான கற்பகம் முகத்திலும் உடம்பு முழுக்கவும் திருப்தி எழுதியிருக்க அந்த இருட்டில் நீலகண்டய்யனோடு காலைப் பிணைத்து இறுக்கமாக ஒட்டிக் கொண்டு படுத்தபடி காதுமடலைக் கடித்தது இன்னும் சுகமாக வலிக்கிறது அவனுக்கு.

விடிய கொஞ்ச நேரம் முந்தி அவன் முதுகை இதமாக நீவி, குடுமியைப் பிரித்து இழை நீள உருவி ரெண்டு காது ஓரமும் மறைத்தாற்போல் பரத்தியவள், அவன் வாயில் முத்தம் ஈந்தபடி எழுப்பினாள்.

நீலகண்டய்யன் இன்னொரு தடவை ரமிக்கத் தயாரானவனாக அவள் பக்கம் திரும்பி கழுத்தில் பல் பதித்தபோது அவள் அவசரமாக விலக்கினாள்.

விடிகாலை அஞ்சு மணி. வேலைக்காரி வந்துடுவா. குழந்தைகள் பாடசாலை போயாகணும். நீங்க உத்யோக ஸ்தலம் போகணும். நினைப்பு இருக்கோ இல்லியோ.

எல்லாம் இருக்கு, வாடி என்றான் நீலகண்டன்.

இன்னிக்கு வெள்ளிக்கிழமையாக்கும். வாசல் தெளிச்சு செம்மண் கோலம் போடணும். சீக்கிரம் குளிச்சாகணும். மார்கழி. சூனிய மாசத்திலே நீங்க வேறே ராக்கூத்து அடிச்சு.

அவள் வெட்கத்தோடு நிறுத்தி எழுந்து நின்றாள்.

கூத்துக் கொட்டகையிலே படுதா எறக்க முந்தி மங்களம் பாட விட்டுப் போச்சு. வாடி என் செல்லமே.

நீலகண்டன் விடாமல் சீண்டினான்.

பார்த்துண்டே இருங்கோ. நேத்திக்கு அடங்காம ஆடினது சூல் வச்சு ஒண்ணுக்கு நாலா ஒரே பிரசவத்திலே உண்டாகப் போறது. ராஜதானியிலேயே முதல் தடவையா நாலு கர்ப்பம் ஒருசேரத் தாங்கின ஸ்திரின்னு என்னை பார்க்க ஊரோட திரண்டு வரப் போறா. போறும்’ன்னா. சொன்னாக் கேளுங்கோ.

அவள் சிரித்தபடி நீலகண்டய்யனின் இடுப்புக்குக் கீழ் அழுத்திப் பிடித்தாள்.

ராட்சசி, விடுடி, உசிரு போறது. நாலு என்ன கணக்கு? இன்னும் அஞ்சு நிமிஷம் சாஞ்சு படுத்துண்டா இன்னொண்ணு கழுக்கு முழுக்குன்னு உன்னை மாதிரிப் பெத்துக்கலாம். தயவு பண்ணி இப்படி வாடி என் ராஜாத்தியோன்னோ.

நீலகண்டன் யாசித்தான்.

அதுக்கு வேறே யாராவது இரும்புலே இடுப்பும் மத்ததுமா கிடைக்கறாளா பாருங்கோ. உள்ளே எல்லாம் அனல் மாதிரி காந்தறது. ஆனாலும் மகா முரடு.

அவள் நீலகண்டன் காதில் சொல்லி விட்டு தலையை முடிந்து கொண்டு நடந்தாள்.

இருடி, போகலாம். ஆபீஸ்லே போய் தஸ்தாவேஜ்லே கையெழுத்தா போடப்போறே?

நீங்க தான் உடம்பு முழுக்க ராத்திரி போட்டு வச்சிருக்கேளே. அதெல்லாம் தொடச்சு அலம்பி விட்டுக் குளிச்சாகணும் முதல்லே.

காப்பி சேர்த்துட்டுக் குளிக்கப் போயேண்டி கண்ணுக்குட்டி.

இன்னிக்கு என்ன கொஞ்சல் ஜாஸ்தியா இருக்கு? ஆபீஸ் எல்லாம் போறாப்பல உத்தேசமா இல்லே மத்தியானமும் இதே லஜ்ஜை கெட்ட கூத்துதானா?

கற்பகம் ஜாக்கிரதையாக ஒரு அடி தள்ளி நின்று அவன் குடுமியைப் பிடித்து இழுத்து கேட்டாள்.

எதுடி லஜ்ஜை கெட்ட கூத்து. நீயும் தானே சேர்ந்து ஆடினே?

மோகம் தலைக்கேறி அவளுக்காக கை நீட்டிய நீலகண்டய்யனை சுய ஸ்திதிக்குக் கொண்டு வந்தது வாசலோடு போன மார்கழி பஜனை கோஷ்டிதான். திருப்பாவை முப்பதையும் அனுசந்தானம் பண்ணிக் கொண்டு நாலு வீதி சுற்றி தெருக் கோடி கோவிலில் முடிக்கிற அந்தக் கோஷ்டியில் வேலைக்குப் போன புதுசில் நீலகண்டய்யனும் அவன் தமையன் மகாலிங்கய்யனும் தாளம் தட்டிக் கொண்டு போனது உண்டு. அந்த ரம்மியமான நேரத்தில் வீதி முழுக்க கோலம் போட வருகிற சின்ன வயசுப் பெண்டுகளைப் பார்க்கத் தோதான ஏற்பாடு அது. தஞ்சாவூரிலே கற்பகத்தைப் பார்க்க அப்படி ஒரு கோஷ்டி அலைஞ்சிருக்குமோ என்னமோ.

அதே நினைப்போடு கூட தந்த சுத்தி செய்து காலலம்பி வந்து அவள் சேர்த்துக் கொடுத்த கள்ளிச்சொட்டுப் பால், முதல் டீக்காக்ஷன் சர்க்கரை தூக்கலாகக் கலந்து கொடுத்த காப்பியை மச்சு அறையில் உட்கார்ந்தபடிக்கே சுடச்சுட ரசித்துக் குடித்தான்.

எச்சப் பண்ணாம அண்ணாந்து லோட்டாவை வைச்சுண்டு குடிங்கோ.

ரொம்பப் படுத்தினா திரும்ப எச்சல் பண்ண வேண்டி வரும்.

கற்பகம் அவசரமாகக் குளிக்கப் போனபோது பச்சைப் பெட்டியோடு நாவிதர் வந்து சேர்ந்தார். கை நடுங்கும் வயசில் கிழவர். அவரிடம் தலையையும் முகத்தையும் சர்வாங்கத்தையும் மழிக்கக் கொடுத்துத்தான் நீலகண்டய்யனின் தகப்பன் சுவர்க்கஸ்ரீ வைத்தியநாதய்யன் தன் பெண்டாட்டி கோமதியம்மாளை ஆகர்ஷித்துப் ரெண்டு குழந்தை பெற்று வளர்த்துவிட்டது. சர்வாங்கம் வேண்டாம் என்று வைத்ததாலோ என்னமோ நீலகண்டனுக்கு ஒரு சந்ததி ஏற்பட கல்யாணத்துக்கு அப்புறம் ஏழு வருஷம் காத்திருக்க வேண்டிப் போனது.

சாமி, அப்படியே திண்ணையிலே சாஞ்சு உட்காருங்கோ. நிமிஷத்துலே முடிச்சுடறேன்.

போன வருஷம் வரைக்கும் கந்தசாமி நாவிதனுக்குத் துணையாக அவன் பிள்ளை ஆண்டியப்பனும் வந்து கொண்டிருந்தான். அவன் மழித்து விட்டுப் போனால் கன்னம் ஒரு ரோமம் கூட உறுத்தாது மழுமழுவென்று ராத்திரி வரைக்கும் இருக்கும்.

எங்கே மூஞ்சியை வச்சுக்கறதுன்னு விவஸ்தையே இல்லையா? பிருஷ்டத்துலே போய்.

ரெண்டும் ஒரே மாதிரி தாண்டி.

கற்பகம் ஆரம்பத்தில் முகத்தைச் சுளித்தாலும் அவளுக்கும் ரசிக்க ஆரம்பித்தது. அப்புறம் சூல் பிடிக்க அதிக நாள் ஆகவில்லை.

ஆண்டியப்பன் வேதத்தில் ஏறி சோசப்பு ஆன பிற்பாடு கந்தசாமி தனித்துப் போய் இருக்கப்பட்ட வாடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். அங்கங்கே அறுத்து ரத்தம் வர வைத்தாலும் மொத்தத்தில் முகம் வெளியே காட்டுகிற தோதில் சிரைக்கிறது கந்தசாமிக்குக் கைவந்த வித்தை.

உள்ளே குளித்து தலைக்கு வேடு கட்டிக் கொண்டு சமையல் கட்டுக்குப் போன கற்பகத்தைப் பார்த்தபடிக்கு கத்தி புதுசா என்று கந்தசாமியை விசாரித்தான் நீலகண்டய்யன்.

மளுமளுன்னு சரைச்சு விட நானாச்சு சாமி. குந்துங்க.

கற்பகம் உள்ளே இருந்தபடிக்கே ஐந்து விரலையும் விரித்துக் காட்டிக் கொண்டு வாய்க்குள் சிரித்தபடி போனபோது, உள்ளபடிக்கே இந்த சம்சார வாழ்க்கை மாதிரி உவப்பான சங்கதி வேறே ஏதும் இருக்க முடியாது என்று தோன்றியது நீலகண்டனுக்கு.

அப்போது தான் சட்டென்று இன்றைக்கு கோர்ட்டு கச்சேரி போய் தன் ஆப்தன் புருஷோத்தம நாயுடுவைப் பார்த்து வர ரெண்டு நாள் முந்தியே ஏற்பாடு செய்து வைத்திருந்தது ஞாபகத்தில் பட்டது அவனுக்கு.

அது அவனுடைய மாதா பிதா ஆக்ஞைப்படியான ஒண்ணு. சமீபத்தில் ஒரு தினம் நீலகண்டனுடைய சொப்பனத்தில் வந்து அவர்கள் சொல்லிப் போனது.

அன்றைக்கு விடிந்தும் எழுந்திருக்க மனசே இல்லாமல், விடிகாலை கடந்து போன பின்பும் அரையும் காலுமாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒண்ணு.

பிதா வைத்தியநாதய்யனும் அம்மா கோமதியும் வீட்டு வாசல் படியேற மாட்டேன் என்று அடம் பிடிக்கிற கனவு அது.

ஆத்துக்காரி பிரஷ்டைங்கறதாலே நாங்க உள்ளே வரல்லேன்னு நினைச்சுக்காதே.

வைத்தியநாதய்யன் அமெரிக்கையாக வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடி வெற்றிலை மடித்து வாயில் குதப்பியபடி சொல்ல, படி ஏறாமல் ஓரமாகவே நின்றாள் கோமதியம்மாள்.

என்ன குத்தம் நான் பண்ணி இருந்தாலும் மனசுலே வச்சுக்காதீங்கோ. நீங்க இல்லேன்னா நான் யாரை அண்டிப் போய் அம்மா அப்பான்னு பூஜிச்சுண்டு நிப்பேன்? அடுத்த மாசம் அப்பா திவசம் வரும்போது வாத்தியார் சம்பாவனையா பட்டுக்கரை வேஷ்டி, கால் பவுன் மோதிரம், கோதானம் எல்லாம் கொடுக்கப் போறேன் தெரியுமா. உங்க புண்ணியாத்மாவை வைதாரணி தாண்டிப் போக வைக்கறேன் நம்புங்கோ. அடுத்த வருஷம் துரை கிட்டே சொல்லி ரஜா வாங்கிண்டு போய் வாரணாசியிலே பித்ருக் காரியம் பண்றேன். அம்மா, உள்ளே வாம்மா. என்னத்துக்கு வாசல்லேயே நிக்கறே. இது உன் வீடு. வா அம்மா.

நீலகண்டய்யன் அழ ஆரம்பித்தபோது வைத்தியநாதன் கண்டிப்பான குரலில் சொன்னான்.

ஏண்டா சின்னம்பி, நானும் இவளும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அடக்க முடியாம இப்போ கேட்க வந்திருக்கோம். அது என்னடா உனக்கு அப்படி ஒரு நெஞ்சழுத்தம்?

என்ன தப்பு செஞ்சேம்பா? எப்போ? எதா இருந்தாலும் மன்னிச்சு.

இத்தனை நாள் போயும், உன் உடன் பிறந்தவன் என்ன ஆனான்னு விஜாரிச்சியோ? அவனை காராகிருஹத்துலே அடைச்சதும் கோர்ட்டிலே கேஸ் நடந்ததும் எல்லாம் தெரியும்தானே? ஒரு விசையாவது போய்ப் பார்த்தியோ? அப்படி என்னடா மனசிலே வன்மம் பெரியம்பி மேலே உனக்கு?

வன்மம் எல்லாம் இல்லேப்பா. ராஜாங்க உத்தியோகமாச்சே. நாளைக்கு கோர்ட்டு கச்சேரி, ஜெயில்னு அலைஞ்சா என்ன விஷயம்னு துரை மூக்கை நுழைச்சு விசாரிக்கலாம். அப்புறம் என் நேவிகேஷன் ஹெட்கிளார்க் உத்தியோகத்துக்கு சீட்டு கிழிச்சுடுவானேன்னு பயம். அதான் போறதைத் தள்ளிப் போட்டுண்டே இருந்தேன்.

நிறுத்துடா. அது ஒரு நொண்டிச் சாக்கு. ஆத்துக்காரி அங்கேயெல்லாம் போகாதே, அண்ணா சகவாசம், மன்னி சகவாசம் எல்லாம் மறந்துடுன்னு கண்டிச்சு உன்னை அடக்கி வச்சுட்டது தெரியாதோ எங்களுக்கு?

வைத்தியநாதய்யன் கனவில் சொல்லிவிட்டு இன்னொரு பிடி வெற்றிலையும் சீவலும் கேட்க, நீலகண்டய்யன் வீட்டுக்குள் சமையல் கட்டில் போய் ரெண்டையும் எடுத்து வந்து அப்பனிடம் பயபக்தியோடு கொடுத்தான்.

நான் பாத்துப் பாத்துக் கட்டின கிரஹத்தை நீங்க அண்ணா தம்பி ரெண்டு பேரும் வித்ததிலே எனக்கும் உங்கம்மாவுக்கும் ரொம்பவே மனசு வருத்தம் தான். ஆனா, அதுக்கு அப்புறம் ஏழெட்டு வருஷம் கழிஞ்சு போச்சு.

வாஸ்தவம் தான் அப்பா.

நீ ஆமோதிக்கணும்னு சொல்லலே. பெரியம்பி உசிரே சர்க்கார் தூக்குக் கயிறு மாட்டி முடியற ஸ்திதி வந்தும் நீ பழைய வன்மத்தோடேயே இன்னும் இருக்கியே அதாண்டா எங்களுக்குத் தாங்கலே. அவன் ஆயுசு கெட்டி. பொழச்சுட்டான். அதாவது தெரியுமோ?

கோமதியம்மாள் சொல்லிக் கொண்டு போனபோதே முழிப்பு உண்டாகி, அதிகாலைக் கனவு என்பதால் பலிக்கும் என்ற பயம் ஏற்பட, அடுத்த தெருவுக்கு ஓடினான் நீலகண்டன் அப்போது.

கிருஷ்ணக் கோனாரின் தொழுவத்தில் சாதுப் பசுவாகப் பார்த்து அதன் காதில் சொப்பனத்தைச் சொல்லி முடித்தபோது இது என்ன கஷ்டம்டா நீலகண்டா என்று அந்த மிருகம் பல்லைக் காட்டி சிரித்த மாதிரி இருந்தது.

பெரியம்பி மகாலிங்க அண்ணா உசிரோடு இருக்கான் என்பது அவன் காதிலும் விழுந்த சங்கதி. அவன் இப்போது எங்கே இருக்கான் என்று முதலில் தேடணும். மன்னி லலிதாம்பாளையும் ஒரு விசை கற்பகத்தோடு கூடப் போய்ப் பார்த்து விட்டு அகத்துக்குக் கூட்டி வரணும்.

மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்தில் பெரியம்பி வீடு கட்டி கிரகப் பிரவேசம் என்று மூணாம் மனுஷ்யர் மூலம் சொல்லி அனுப்பினபோது வேணுமென்றே போகாமல் தவிர்த்து விட்டான் நீலகண்டன். வீட்டு விலாசம் கூடத் தெரியாது. ஆனால் இப்போ அதையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பித்ரு கட்டளை. தட்ட முடியாது.

மகாலிங்க அண்ணா தற்போது இருக்கப்பட்ட இடம் என்னவாக இருக்கும்? சூளைமேட்டில் பங்காருவோ, வெள்ளையம்மாளோ ஒரு தாசியோடு அடிக்கடி குலவிக் கொண்டிருந்தது, ரெட்டிய ஸ்திரியோ, செட்டிச்சியம்மாளோ ஒரு சின்ன வயசு பெண்ணை பலாத்சங்கம் செய்து கொன்றும் போட்டு விட்டதாக அவன் மேலே குற்றம் சாட்டி சிக்ஷை விதித்தது, அதை மேல் கோர்ட் தள்ளி வைத்தது என்று அரசல் புரசலாக ஏதேதோ விஷயம் யார் யார் மூலமாகவோ தெரிய வந்தபோது அவனுக்கு அண்ணா மேல் பொறாமை தான் முதலில் வந்தது.

அற்பமாக மூக்குத் தூள் மடித்துக் கொடுக்கிற உத்தியோகத்தில் இருக்கப்பட்ட அவனுக்கு எப்படி சகல ஜாதி ஸ்திரிகளும் வாய் எச்சில் வாடை தெரிகிற தூரத்தில் பரிச்சயமானார்கள் என்று புரியாத விஷயம் அது. நேவிகேஷன் ஹெட் கிளார்க் நீலகண்டய்யனுக்கு அகத்துக்காரி கிடைத்ததே பெரிய சங்கதி. ஆனாலும் அண்ணா ஆகிருதி கெம்பீரம் தான். அவனுக்கு வாய்க்காதது அது.

மகாலிங்க அண்ணா காராகிருஹத்திலிருந்து வெளியே வந்தது பற்றியும், அவனுடைய தற்போதைய இருப்பு பற்றியும் யாரை விசாரிக்கலாம்?

ராஜாங்க உத்தியோகஸ்தன்? கோர்ட்டு கச்சேரி குமஸ்தன்?

சட்டென்று புருஷோத்தம நாயுடு நினைவு வந்தது நீலகண்டனுக்கு. தன் கூடப் படித்து இப்போது ஹைகோர்ட் கச்சேரியில் சிரஸ்ததாராக இருக்கும் நாயுடுவைப் போய்ப் பார்த்துக் கேட்கலாம் என்று மனசில் பட்டபோது அப்பா வைத்தியநாதய்யனும் கோமதியும் ஆசிர்வதித்த மாதிரி இருந்தது.

நேவிகேஷன் ஆபீசில் உத்தியோகம் கம்மியான வெள்ளிக்கிழமை பின் மத்தியானம் புருஷோத்தம நாயுடுவைப் பார்க்க வருகிறதாக லிகிதம் அனுப்பினான். அவனும் வரும்படிக்கு பிரியத்தோடு அழைத்து உடனே பதில் கொடுத்தனுப்பினான்.

ஆக, இப்போது நீலகண்டய்யன் தான் உத்தியோகம் பார்க்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை விட்டுக் கிளம்பி கோர்ட் கச்சேரிக்குப் போகிற காரியம் விக்னமில்லாமல் நிறைவேறி கொண்டிருக்கிறது.

சாமி, எங்கே போகணும்? நம்ம வண்டியிலே ஏறுங்க. பூஞ்சிட்டா பறிஞ்சு கொண்டாந்து சேர்த்துட மாட்டேன்?

முன்னால் வந்து நின்ற ஜட்கா வண்டிக் காரன் வண்டித் தட்டில் இருந்து குதித்து நீலகண்டய்யனைக் கேட்டான். வண்டியில் பூட்டிய குதிரை மெல்லக் கனைத்தது.

மதர்த்து நின்ற அந்தக் கருப்புக் குதிரையைப் பார்த்ததும் கற்பகம் ஞாபகம் வந்தது.

நாளைக்கு புருஷோத்தம நாயுடுவைப் பார்க்கப் போனால் என்ன? இப்போ இப்படியே ஜட்கா ஏறி வீட்டுக்குப் போய்.

போடா. பொண்டாட்டி தொடைக்குள்ளேயே எத்தனை நாள் வாசம் பண்ற உத்தேசம்?

வைத்தியநாதய்யன் வெற்றிலை எச்சிலை திண்ணையில் இருந்து துப்பினான்.

பெரிய கோர்ட்டு கச்சேரி போப்பா.

நீலகண்டய்யன் அவசரமாக ஏறி உட்கார வண்டி நகர்ந்தது.

(தொடரும்)
**
eramurukan@gmail.com

Series Navigation

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து

இரா.முருகன்


29 நவம்பர் 1900 – சார்வரி வருஷம் கார்த்திகை 15, வியாழக்கிழமை

வேல்ஸ் இளவரசரின் ஸ்கோட்லாண்ட் விஜய யாத்திரையை வர்ணிக்கும் இந்தப் பத்திரிகைக் குறிப்பை நேற்று நம் பயனியர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வாசகர்கள் படித்து மகிழ்ந்திருக்கலாம். அதைப் படித்து விட்டு நேரில் நம் பத்திரிகைக் காரியாலயத்துக்கு வந்த லண்டன் வாசகர் ஒருவர் நம் விசேஷ நிருபர் ஸ்ரீமான் ஜான் க்ளீ அவர்கள் பயனியர் பத்திரிகையில் உத்தியோகம் செய்கிறவரா அல்லது ரயில்வே நிர்வாகம், க்ரேட் நோர்த்தர்ன் ரயில்வே கம்பேனி இப்படி வெளியே உத்தியோகத்தில் இருக்கப்பட்டவரா என்று கேட்டார்.

ரயில் கம்பேனி, ரயில்வே நிர்வாகம் பற்றி தன் மனதில் பட்ட நல்ல கருத்துகளை திருவாளர் ஜான் க்ளீ தன் வியாசத்தில் சொல்லியிருப்பத்தால் அவர் அந்த ஸ்தாபனங்களில் வேலை செய்கிறவர் அல்லது அவற்றை ஸ்தோத்ரம் செய்து எழுதி ஜீவனோபாயத்தை மேற்கொள்கிறவர் என்று நம் ப்ரியமான வாசகர்கள் யாரும் அந்த நேயரைப் போல நினைக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

மேலும் இன்று நம் பத்திரிகை காரியாலத்துக்கு வந்த இன்னொரு வாசக அன்பர், பக்கிங்ஹாம் அரண்மனையில் சக்ரவர்த்தினி அம்மையார், வேல்ஸ் இளவரசர், எடின்பரோ மகாப்ரபு இன்னும் இவர்களின் சகுடும்பம் முழுவதற்கும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான சின்னச் சின்ன வாயு ரோகங்கள் ஏற்படுவது வழக்கம் என்றும் மகா கனம் பொருந்திய வேல்ஸ் இளவரசர் நேற்று யாத்திரை கிளம்பும்போது வயிற்றில் மந்த நிலைமை காரணமாக முகம் இறுகியிருந்திருக்கலாம் என்றும் அபிப்ராயம் தெரிவித்தார்.

அவருக்கு வந்தனம் தெரிவித்துக் கொள்வதுடன், ராஜ குடும்பத்து ஆரோக்கியம் குறித்த வியவகாரங்களை நம் பத்திரிகை சர்ச்சை செய்யாது என்பதை இன்னொரு முறை வாசகர்களுக்குத் தெளிவு படுத்திக் கொள்கிறோம். நம் விசேஷ நிருபர் ஜான் க்ளீ எழுதிய வியாசத்தின் தொடர்ச்சி கீழே தரப்படுகிறது – ஸ்காட்டீஷ் பயனியர் பத்திரிகை அதிபர் ஹென்றி டூலிட்டில்.

ஜான் க்ளீ அவர்களின் வியாசத் தொடர்ச்சி –

நேற்றைய பத்திரிகைக் குறிப்பில் ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டதற்கு வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம். ஸ்கோட்லாண்ட்டில் அமைக்கப்படும் மிகப் பெரும் பாலங்களை வடிவமைத்து கட்டித்தரும் பெரும் பொறுப்பில் மகாராணி அவர்களால் நியமிக்கப்பட்ட மிஸ்ஸே ஈபல் என்ற பிரான்சு தேசத்து எஞ்சினியரும் அவருடைய சீஷர்களான கிட்டத்தட்ட பத்து உப எஞ்சினியர்களும் வேல்ஸ் இளவரசரின் யாத்திரா கோஷ்டியில் அங்கமாக வந்திருக்கிறார்கள்.

பாலம் நிர்மாணக் கம்பேனியான நார்த்தன் பிரிட்ஜஸ் பிரைவேட் லிமிடெட் கம்பேனியின் சேர்மன் கால்வில் பிரபுவும் அவருடைய இளைய சகோதரர் கர்னல் லீ கார்வில் அவர்களும், கம்பேனி டயரக்டர்கள் ஸ்ரீமான் ஆண்ட்ரூ பேர்பாரின், ஸ்ரீமான் ப்ரோபின் ஆகியோரும் கூட யாத்திரா கோஷ்டியில் உண்டு.

கிரந்தம் ரயில்வே ஸ்டேஷனை நம் விசேஷ ரயில் அடைந்தபோது ராத்திரி எத்தனை மணி என்று இடுப்பு கடியாரத்தில் பார்த்தோம். நடுராத்திரி தாண்டி ஐந்து நிமிஷம் ஆகியிருந்தது.

கிரந்தம் ஸ்டேஷனில் வழக்கமில்லா வழக்கமாக அந்த ராத்திரியில் வண்டி நின்றது ஏன் என்று நாம் பெட்டிக்கு வெளியே வந்து பார்க்க, நார்த்தன் ப்ரிட்ஜஸ் கம்பேனி துணைத் தலைவர் ஹிண்ட்லிப் பிரபு அங்கே வண்டி ஏறக் இருப்பதாகத் தெரிந்தது.

ப்ளாட்பாரத்தில் காத்து நின்ற உயர்ந்த ஸ்தானம் வகிக்கும் ரயில்வே உத்தியோகஸ்தர் ஒருவரை நாம் விசாரித்தபோது வண்டி யார்க் ஸ்டேஷனை ராத்திரி ஒரு மணி நாற்பது நிமிஷத்துக்கு அடையும், ஆனால் அங்கே நிற்காது என்றும் தெரிய வந்தது.

அதேபடி பெர்விக் ஸ்டேஷன் விடிகாலை நாலு மணி ஐம்பத்தொன்பது நிமிஷத்துக்கு வந்து சேரும். எடின்பரோ நகரை இந்த விசேஷ ரயில் அடையும்போது பொலபொலவென்று விடிந்து காலை ஆறு மணி பத்து நிமிஷம் ஆகியிருக்கும்.

தினசரி பகலில் யாத்திரையாகும் ப்ளையிங் ஸ்கோட்மேன் ரயில் போல் இல்லாமல் வேல்ஸ் இளவரசரும் கோஷ்டியினரும் பிரயாணம் செய்யும் இந்த விசேஷ ப்ளையிங் ஸ்கோட்மேன் ரெண்டு ரயில் லண்டனுக்கும் ஸ்கோட்லாண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தை கொஞ்சம் மிதமான வேகத்திலேயே கடந்தது.

அதாவது முதல் இருநூறு மைல் தொலைவு வண்டியின் வேகம் மணிக்கு நாற்பத்தைந்து மைல் வேகம் வீதமும், யார்க் – பெர்விக் இடையே மணிக்கு நாற்பத்தெட்டு மைல் வேகம் வீதமும், மேட்டுப் பாங்கான பெர்விக் – எடின்பரோ இடைப்பட்ட தூரத்தை அதி ஜாக்கிரதையாக மணிக்கு முப்பத்தாறு மைல் வேகத்திலும் இந்த வண்டி கடந்தது.

வேகமாக நகர்ந்து அசம்பாவிதம் ஏதும் சம்பவிக்காமல் இருக்க முன்னேற்பாட்டு நடவடிக்கையே இந்த வேகக் குறைப்பு என்று பெயர் குறிப்பிட விரும்பாத ரயில்வே உயர் உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார். (அடுத்த வாக்கியத்தை நீக்கவும் – பத்திரிகாசிரியர்). அப்படி ஏதும் தெய்வ கோபம் காரணமாக நடந்தால் ரயில்வே உத்தியோகஸ்தர்களில் பெரும்பாலானோருக்கு உத்தியோகச் சீட்டு கிழிந்து விடும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

(பத்திரிகாசிரியர் குறிப்பு – இனி வரும் ஐந்து பத்திகளைப் பிரசுரிக்க வேண்டாம். நம் நிருபர் ஸ்ரீமான் ஜான் க்ளீ அவர்களை வேலை நேரத்தில் அதிகமாகக் குடிக்க வேண்டாம் என்று கோர வேண்டியது உதவி ஆசிரியர்கள் செய்ய வேண்டியதாகும்.)

நாம் பிரபுவின் வருகைக்குக் காத்திருந்தபோது முப்பது வயது மதிக்கத் தகுந்த ஓர் இந்திய அல்லது ஆப்பிரிக்க ரீதியில் உடுத்திய ஸ்திரியும் சிறுமியான பெண் குழந்தையுமாக ரெண்டு பேர் வண்டியில் காலியாக இருந்த புகை பிடிக்கும் பெட்டிக்குள் நுழைந்ததைப் பார்த்தோம்.

நடு ராத்திரி நேரமானதால் யாரும் சுருட்டு பிடிக்க உள்ளே செல்லாத அந்தப் பிரதேசத்தில் அர்த்த ராத்திரியில் ஏறிய ஸ்திரியை நான் வியப்போடு பார்க்க, அவள் இந்த இடமும் சூழ்நிலையும் ஏற்கனவே பழக்கமானது போல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்கைகளுக்கு இடையே வெறுந்தரையில் குழந்தைப் பெண்ணோடு படுத்து நித்திரை போய்விட்டாள்.

உள்ளே போய் அவளை எழுப்பி வெளியே அனுப்பலாம் என்று நாம் உத்தேசித்தபோது, ஹிண்ட்லிப் பிரபு வருகை நிகழ்ந்ததால் அவருக்கு முகமன் கூறும் ரயில்வே உத்தியோகஸ்தர்களோடு நாமும் சேர்ந்து கொண்டோம்.

பிரபு வந்ததும் வேல்ஸ் இளவரசர் நல்ல வண்ணம் உறங்குகிறாரா என்று அரண்மனை மருத்துவர் எல்லீஸ் பிரபு அவர்களை விசாரித்து தகுந்த வார்த்தை பதிலாகக் கிடைக்கத் திருப்தியுற்று தானும் நித்திரை போக இருக்கையை சித்தம் செய்யச் சொன்னார்.

நாமும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு நித்திரை போகத் தொடங்கினோம். ரயிலில் ஏறிய கருப்பு ஸ்திரி பற்றியும், ராஜாங்க யாத்திரை கோஷ்டி பிரயாணம் செய்யும் வண்டியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பங்கப்படுவது குறித்தும் யோசித்தபடி நாம் நல்ல உறக்கத்தில் ஆழ வெகுநேரம் செல்லவில்லை.

(பத்திரிகாசிரியர் குறிப்பு – இனி வரும் பத்தியில் இருந்து பிரசுரத்தைத் தொடரலாம்)

நாம் உறக்கத்தில் இருக்கும்போதே யார்க் ஸ்டேஷனைக் கடந்து போனதால் அங்கே வண்டி நின்றதா என்று நினைவு இல்லை. ஆனால் பெர்விக் வந்து சேர்ந்து வண்டி நின்றபோது நமக்கு விழிப்பு தட்டியிருந்தது. இடுப்பு கடியாரத்தை ராத்திரி அங்கியின் பையில் வைத்தது மறந்துபோய் ரயில் பெட்டி முழுக்க, கழிப்பறைகளிலும் விடாமல் தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்து மணி பார்க்க, நேரம் காலை ஐந்து மணி பதினெட்டு நிமிஷம்.

அந்த அதிகாலை நேரத்திலேயே வேல்ஸ் இளவரசர் துயில் எழுந்ததாகவும், பெர்விக் ஸ்டேஷன் காபி வழங்கும் நிலையத்தில் நல்ல காபி கிடைக்கும் என்பதை அவர் அறிந்திருந்த காரணத்தால் அங்கேயிருந்து சூடான ஒரு கோப்பை பால் சேர்க்காத காப்பி வரவழைத்துக் குடிக்க இஷ்டம் தெரிவித்ததாகவும் ராஜாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் ஓட்டத்துக்கு நடுவே சொன்னதைக் கேட்க நமக்குப் பெருவியப்பாக இருந்தது.

ஒரு சாதாரண பிரஜை போல் எட்வர்ட் இளவரசரும் இம்மாதிரி விஷயங்களில் ஆர்வம் காட்டுவது அவருக்கும் பிரஜைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இல்லாமல் இருக்க காரணமாக அமைந்திருப்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இளவரசருக்காக தயாரிக்கப்பட்ட காபியின் சேஷ பாகத்தை நாமும் குடித்துப் பார்த்தோம். நல்ல தரமானதாகவே அது அமைந்திருந்தது என்றாலும் சற்று நீர்க்க இருந்தது. தண்ணீரையும் இன்னும் அதிக நேரம் சுட வைத்திருக்கலாம்.

இளவரசருக்கு காலை நமஸ்காரம் சொல்லலாம் என்று நாம் உத்தேசித்து முன்னால் நடந்தபோது அது தற்போது சாத்தியமில்லை என்றும் இளவரசருடைய ஆஸ்தான நாவிதர் (இவரும் யாத்திரா கோஷ்டியில் உண்டு) முகம் மழிக்கும் முன்னர் யாரையும் சந்திப்பதில்லை என்றும் மன்னரின் அந்தரங்க காரியதரிசி அறிவித்ததால் நாம் முயற்சியைக் கைவிட்டு புகை பிடிக்கும் பெட்டியை நோக்கி நடந்தோம்.

(இனி வரும் பத்தியை வெட்டி விடவும் – பத்திரிகாசிரியர்)

நேற்று ராத்திரி நாம் பார்த்த இந்திய அல்லது ஆப்பிரிக்க கறுப்பு இன ஸ்திரியையும், சிறு வயதுப் பெண்ணையும் பார்க்க முடியவில்லை. அவர்கள் ரயில் பெட்டியின் கழிப்பறை ஒன்றில் ஒளிந்திருக்கலாம் என்றும் வண்டியில் வருகிறவர்களின் மூக்குக் கண்ணாடி, பொடி டப்பா, சிகரெட் பெட்டி, இடுப்பு கடியாரம் போன்ற வஸ்துக்களையும் பணம் வைத்த பர்ஸ்களையும் திருடிப் போக உத்தேசித்து வந்தவர்களாக இருக்கும் என்று தோன்றியது. க்ரேட் நோர்த்தர்ன் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது எல்லா வண்டிகளிலும் பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டியதன் அவசியம் பற்றி தனியாக ஒரு வியாசம் எழுதி வெளியிட உத்தேசம்.

(இனி வரும் பத்தியில் இருந்து பிரசுரத்தைத் தொடரலாம் – பத்திரிகாசிரியர்).

நோர்த் பிரிட்டீஷ் கம்பேனி சேர்மன் ட்வீட்டேல் பிரபு, காரியதரிசி ஸ்ரீமான் வீய்லாண்ட், பயணிகள் யாத்திரா சவுகரியப் பொறுப்பு வகிக்கும் ஸ்ரீமான் மக்லாரன் ஆகியோரும் பெர்விக் ஸ்டேஷனில் காப்பி குடித்துவிட்டு வண்டி ஏறினார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்குப் பத்து நிமிடம் தாமதமாக, சரியாக காலை ஆறு மணி இருபது நிமிஷத்துக்கு எடின்பரோ வேவர்லி ஸ்டேஷனை நம் விசேஷ யாத்ரா ரயில் அடைந்தது. அந்த விடியற்காலை நேரத்திலும் குளிரைப் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட நானூறு பேர் அடங்கிய ஒரு கூட்டம் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நெம்பர் ஒண்ணு ப்ளாட்பாரம் தெற்கு வசத்தில் காத்திருந்தது.

ஸ்காட்டீஷ் தேசிய உடுப்பான கில்ட் அணிந்து குளிர் உறைக்காமல் இருக்க உச்ச ஸ்தாயியில் தேசீய இசைக் கருவியான ஸ்காட்டீஷ் பேக் பைப் ஆகிய பைக்குழல் வாத்தியத்தை ஊதிக் கொண்டே ஏழெட்டு வித்துவான்கள் ஸ்டேஷனை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது பார்க்கப் ரம்மியமாக இருந்தது.

எடின்பரோ நகரின் திலகம் போன்ற வேவர்லி ஸ்டேஷனில் வேல்ஸ் இளவரசருக்கு அரசாங்க வரவேற்பு வைக்காமல் அதற்கு அடுத்த வைக்கோல் சந்தை ரயில் நிலையத்தில் அந்த வைபவம் நிகழவிருப்பதில் ஆச்சரியும் கொஞ்சம் அதிருப்தியும் அடைந்தவர்களாக அங்கே கூடியிருந்த கூட்டத்தில் பலரும் இருப்பதைக் காண முடிந்தது.

எடின்பரோ நகர போலீஸ் சூப்ரண்டண்ட் ஸ்ரீமான் பெய்ன் அவர்கள் வரவேற்க, தன் சொகுசு ரயில் பெட்டியின் வடக்கு ஓரத்து கழிப்பறையை ஒட்டிய தாழ்வாரத்தில் வேல்ஸ் இளவரசர் நின்று கரத்தை கூட்டத்தை நோக்கி அசைத்தார். அவர் முகத்தில் இறுக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் நிறைவான மகிழ்ச்சி தெரிந்தது.

கழிப்பறையை உபயோகித்து விட்டு அவர் வெளியே வந்தபோது எடின்பரோ வேவர்லி ஸ்டேஷனுக்கு வண்டி வந்து சேர்ந்திருக்கக் கூடும்.

(கீழ்க்கண்ட பத்தியை வெட்டவும். இப்படியான கருத்துகளை வைத்து வியாசம் எழுதும்போது நாசுக்கான மொழியில் எடுத்துச் சொல்லும்படிக்கு நிருபர்கள் கையேட்டில் ஒரு ஷரத்து புதிதாகச் சேர்க்கவும் – பத்திரிகாசிரியர்)

பொது ஜனங்கள் தன்னை வரவேற்க வந்த மகிழ்ச்சியில் அவர் முகத்தில் இறுக்கம் காணாமல் போனதாக நாம் சொன்னபோது, தான் ராத்திரி கலக்கிக் கொடுத்து இளவரசரைக் குடிக்க வைத்த மருந்து நன்றாக வேலை செய்வதாகவும், இளவரசர் எந்த