சூட்சுமம்

பா.சத்தியமோகன்


மிகவும் தவித்தபின்
சில விஷயங்கள் சிற்சில கணத்தில்
தாமே நடைபெற்றுவிடுகின்றன
மிகவும் தவிக்காமலே இத்தனை காலம்
‘மிகவும் எளிதாக நடைபெற்றவையாயிற்றே ‘
என ஏங்கவும் வைக்கின்றன
பிறந்த குழந்தையின் எளிய விரல் எலும்பைப் போல
வளையும் நெகிழ்ச்சி இழந்து
இரும்பைப் போல எங்ஙணம் ஆயின எனத்
திகைக்க வைக்கின்றன.
பங்கிடுவதற்காக வைத்திருந்த மகிழ்ச்சியை
இதய அறையிலிருந்து ஒவ்வொன்றாய் இழக்குமுன்
இவற்றுக்கெல்லாம் விடை காண இயலுமா தெரியவில்லை.
தட்டாரப்பூச்சியைக் கேள்
விண்வெளியைக் கூட கேட்டுப்பார்
எவைதான் பதில் தரும் நமது தவிப்புக்கு ?
மிகவும் தவித்த பிறகு
மிகவும் விலக்கப்பட்ட பிறகு
மிகவும் வலித்த பிறகு
கிடைக்கப் போகும் அங்கீகாரத்திற்காக
நடக்கவிருக்கும் கனவிற்காக
காத்திருப்பதையோ-
மூச்சு விடுவதையோ-
நிறுத்திவிடாதே வேறொன்றைச் செய்.
நடக்கும் போது நடக்கலாம்
காத்துநில்லேன் தவம் கூடும்
வலிபடேன் புகழ் கூடும்.
—————————————–
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்