செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்

செல்வராஜ் ஜெகதீசன்


இப்போது இந்தக் காதலர் தினத்தில்

நீ கேட்க வந்த
ஒரு ஆலோசனைக்கு நான் சொன்னது
இப்போதும் நன்றாக என் நினைவில்.
சொல்பவர் தன்னைப் பொருத்திப் பார்த்துச்
சொல்லும் எவ்வொரு ஆலோசனையும்
கேட்பவர்க்கு பொருந்துமா என்று.
இப்போது இந்த காதலர் தினத்தில்
நீ நினைத்துக்கொண்டிருப்பாயா
என்னை இல்லா விட்டாலும்
என் ஆலோசனையையாவது.

o
காத்திருந்த வேளை

இறுக்கமான உடைகளின் சிரமத்துடன்
திரும்பத் திரும்ப கோர்த்துக்கொண்டிருந்தாள்
தன் கால்களை அம்மா
ஒரு அதீத சுவாரசியத்துடன் அவைகளை
பிரித்துப் போட்டு விளையாடிக்கொண்டிருந்த
அவள் பையனை
எதிர்ப்புற பார்வையாளனாய்
பார்த்துக் கொண்டிருந்த
என் கால்களை
எவ்விதம் போட்டுக் கொண்டிருந்தேன்
என்பதுதான்
எவ்வளவு யோசித்தும்
நினைவுக்கு வரவில்லை.

o
தொடர்ச்சி

இன்று வந்து சேர்ந்த
மனங்கவர்ந்த கவியின்
புதுவெளியீட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
நேற்று படித்து பக்க அடையாளம் வைத்துவிட்டு
வந்த புத்தக வரிகளின் தொடர்ச்சியாய்
என்பதை எழுதும் இந்தக் கணத்தில்
இன்னொரு மனங்கவர்ந்த
புத்தகத்தை பிரித்துக் கொண்டிருக்கிறேன்.

o

Series Navigationஅணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962) >>

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன்



அங்கு நீர்
வராமல் இருந்திருந்தால்
தச்சன் கவிதைகள்
சர் ரியலிசம்
படிமக் குறியீடுகள்
பற்றியெல்லாம் கதைக்காமல்
இருந்திருந்தால்
அக்குள் இடுக்கில்
அடுக்கியிருந்த
உங்கள் புத்தகமும்
இன்றென் இருப்பென
இருந்திருக்கும்.

o

அதை உங்களிடம்
சொல்லலாமா என்று
தெரியவில்லை.
அதுவரையான
பிம்பமொன்றை
அது எத்தனை தூரம்
கலைத்துப்போடுமென்று
கணிக்கவும் முடியவில்லை.
இத்தனைக்கும் அது
என் பிம்பமும் இல்லை.
இன்னொரு சமயம் கருதி
இன்றும் என்னோடு
எடுத்துப் போகிறேன்.
வேறோர் பொழுதில்
அதை நான் உங்களுக்கு
சொல்லக்கூடும்.
இப்போதைக்கு சுபம்.
பார்ப்போம்.
இன்றே அதை நான்
உங்களிடம்
சொல்லி விடுவதற்கு முன்.

o

பிறந்த நாள் கொண்டாட்டம்
தினமும் ரத்தாகி
திரும்பத் திரும்ப
அமுலாக்கப்படுகிறது
மகனின்
அடம் பிடிக்கும் நடவடிக்கைகளை
அவ்வப்போது சரியாக்க.
சரியான பிறந்த நாளன்று
அவன் சமத்தாய்
இருந்து விடும் பொழுதில்
சவால்தான் எங்களுக்கு.
சரியான இன்னொரு
ஆயுதத்தை
சானேற்றும் வரை.

o

Series Navigation

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன்


ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு பறவை
இன்னொரு சந்தர்ப்பம்
தரப்படுமெனில்
இப்போதைப் போலவே
இருக்கும்
இன்னொரு வாழ்வும்.

o

இவன் முறை வருவதற்கு
இன்னும் இரண்டு பேர் இருக்கையில்
வரிசையை விட்டு விலகி
நடக்கத் தொடங்கினான்
நின்று கொண்டிருப்பதைவிட
சென்று கொண்டிருக்கலாம்
கல்யாண்ஜியின் கவிதை வரிகளை
அசை போட்டவாறே.

O

Series Navigation24 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24 >>

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.

செல்வராஜ் ஜெகதீசன்.


செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.

நண்பர்களே,

எதிர்வரும் புத்தக கண்காட்சியை யொட்டி, எனது இரண்டாவது கவிதைத் தொகுதி
“இன்ன பிறவும்” கவிஞர் சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளியாகிறது.

நூல் விபரம்:

நூல் பெயர்: இன்ன பிறவும்
பதிப்பகம்: அகரம், தஞ்சாவூர்
கிடைக்குமிடம்:

டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில்
அகரம் பதிப்பக ஸ்டால் மற்றும் சென்னை தியாகராய நகர் புக்லாண்ட்ஸ்.

அன்புடன்,
செல்வராஜ் ஜெகதீசன்.
www.selvarajjegadheesan.blogspot.com

Series Navigation

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

You may also like...