விடுமுறை நாள் கல்லூரி

ச. மணி ராமலிங்கம்



இசை இல்லாமலே
இனிதாய் பாடும்
பறவைகள் …..

தென்றல் வந்து
துரத்த இலக்குஇன்றி
எதையோ தேடி
உதிர்ந்த இலைகள்….

ஆசிரியர் மேஜையில்
அமர்ந்தபடி நெல்லிகாவை
எப்படி சாப்பிடுவது என்று
பாடம் எடுத்து
கொண்டு இருக்கிறது
அவ்வபோது கல்லடிக்கு
தப்பும் அணில்கள்…

விடுமுறை என்றாலும்
மூன்று நொடிகளுக்கு
ஒரு துளி என்ற
விதிமுறை மாறாமல்
கசிந்து கொண்டு
இருக்கிறது ஓர் குடிநீர்
குழாயின் கைபாகம்…

மண் மீது
தேங்கிய மழை
நீரால் தாகம்
தீர்த்து கொண்டு
இருக்கிறது
ஓர் காகம்…

எப்போதும் செடிகளின்
இடையே பயணிக்கும்
ரயில் பூச்சி ஒன்று
சுதந்திரமாய் கடந்து
கொண்டு இருக்கிறது
ஓர் நடைபாதையை….

செய்திதாளை
வரி வரியாக
படித்தாலும் வேறு
வழின்றி மூன்றாவது
முறையாக புரட்டி
கொண்டு இருக்கிறார்
கல்லூரி வாயில்
காவலாளி….

ஆள் இல்லா
வகுப்பு அறைகளை
ஆக்கரமித்து
கொண்டு இருக்கிறது
ஓர் அடர்ந்த அமைதி…

———————-
ச. மணி ராமலிங்கம்

Series Navigation30 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30 >>

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

ச. மணி ராமலிங்கம்

ச. மணி ராமலிங்கம்