நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


“இந்த இல்லத்தில் யாருக்கு நாணம் உள்ளது ? நாம் எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அம்மணக் காட்சியில் நின்றால் என்ன ? நான் முதலில் எனது உடுப்புக்களைக் களைகிறேன் ! என்னைப் பின்பற்றுங்கள் ! நாமெல்லாம் ஒழுக்க நெறி தவறி ஏற்கனவே நமது இதயங்கள் அம்மணமாய் ஆகி விட்டன. வெளி உடல் மட்டும் ஏன் ஆடையால் மூடப்பட வேண்டும் ? என்னால் இந்த உடம்போடு ஒட்டி வாழ முடிய வில்லை ! நானதைத் தண்டிக்க வேண்டும் ! நெறி தவறி நடப்பதால் நீங்களும் உமது உடம்பைத் தண்டிக்க வேண்டும். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். உமது பழிகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்குது என்னுள்ளம் ! ஒவ்வொரு முறையும் உங்களில் ஒருவர் வாயைத் திறக்கும் போது என் கையும் மெய்யும் இப்படிக் கோணிப் போகுது !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (கோமான் மாங்கன், நெஞ்சை முறிக்கும் இல்லம்)

இந்த நாடகத்தைப் பற்றி :

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.

1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர்.

நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் !

நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.

நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.

++++++++++++++++++++++

நாடக உறுப்பினர்:

1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)

2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை

3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை

4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)

5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி

6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.

7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.

8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)

9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.

10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்

11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.

12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)

13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.

(மூன்றாம் காட்சி)

இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.

நேரம் : நள்ளிரவு

அரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.

+++++++++++++++++++++

அங்கம் -3 பாகம் -4

(மூன்றாம் அங்கம்)

ஹெக்டர்: மிஸ்டர் மாங்கன் ! நீங்கள் யாரைக் காப்பி அடிக்கிறீர் ?

மாங்கன்: பிறரைப் போலின்றித் தனிப்பட்டு நானொரு மேதை போல் தெரிவதே என் சாதனைக்கு ஒரு சான்று அல்லவா ?

ஹெக்டர்: இது பித்தர் பேச்சு ! இது இங்கிலாந்து தேசமா ? அல்லது பித்தர் இல்லமா ?

எரியட்னி: அரசாங்க நிபுணராய் இந்த தேசத்தைப் பாதுகாக்கப் போகிறீரா மிஸ்டர் மாங்கன் ?

மாங்கன்: அந்த வேலை செய்ய என்னைத் தவிர இங்கே வேறு யார் இருக்கிறார் ? உமக்குத் தெரிந்த ரான்டல் காப்பாற்றுவாரா ?

எரியட்னி: என்ன ? அந்த ஊதாரி மைனர் ரான்டலா ? நிச்சயம் இல்லை !

மாங்கன்: உனது கத்தி மீசை மைத்துனர் ஹெக்டர் தேசத்தைப் பாதுகாப்பார் தனது பேச்சுத் திறமையால் !

ஹெக்டர்: ஆம். நான் நிச்சயம் பாதுகாப்பேன், என்னைச் செய்ய விட்டால் !

மாங்கன்: உன்னை யார் விடப் போகிறார் ?

ஹெக்டர்: அதற்குத்தான் உன்னை அரசாங்கத்தில் முன்பே தேர்ந் தெடுத்து விட்டார் ! எனக்கு இடமில்லை.

மாங்கன்: ஆகவே எனக்கு நீ மதிப்பளிக்க வேண்டும் ! நீங்கள் எல்லாரும் மதிப்பளிக்க வேண்டும். கேலி செய்யாமல் நாகரீகமாக என்னை நீங்கள் நடத்த வேண்டும். என்னைத் தவிர வேறு யார் இருக்கிறார் இங்கு நாட்டைக் காப்பற்ற ?

எரியட்னி: என் கணவர் ஹேஸ்டிங்ஸ் இருக்கிறார். நகைப்புக் கிடமான உமது கோணக் குடியரசுக் கோட்பாட்டை உதறித் தள்ளு ! என் கணவருக்கு அதிகாரமும் ஆதரவும் அளித்து ஒரு மூங்கில் கம்பைக் கையில் கொடுத்தால் பிரிட்டிஷ் பூர்வீகக் குடிமக்களுக்குப் புத்தி வரச் செய்வார் ! அப்படிச் சிரமமின்றி தேசத்தைக் காப்பார்.

காப்டன்: அது தோல்வியில்தான் போய் முடியும். எந்த முட்டாளும் தடியைக் கையில் ஏந்திக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியும். நான் கூட அப்படி அரசாள முடியும் ! ஆனால் அது கடவுள் வழி இல்லை ! உன் கணவன் ஒரு முழு மூடன் !

எரியட்னி: என் கணவர் மூடர் அல்லர் தந்தையே ! இங்கிருப் போரை எல்லாம் ஒருவராக்கினால் அவருக்கு ஒப்பாவார் என் கணவர். இல்லையா மிஸ். எல்லி ?

மிஸ் எல்லி: என் தந்தை வல்லமைசாலி ! அவரைத் தொழிற் சாலையில் எல்லாரும் ஏமாற்றினர் ! வேலைப் பளுவை முதுகில் மிகையாக ஏற்றினர் !

மாங்கன்: மிஸ் எல்லி ! உன் தந்தை மாஜினி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் புகுந்திட முனைகிறார். அல்லது அரசாங்கப் பணியில் நுழைய முயல்கிறார். நாம் அந்த உயர் நிலைக்கு இன்னும் வரவில்லை. இல்லையா ஹெஸியோன் ?

ஹெஸியோன்: அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. யார் ஆண்டால் என்ன ? யார் போனால் என்ன ? நீங்கள் அரசாங்கத்தில் நுழையாமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

ஹெக்டர்: நாம் என்றால் யார் யார் ?

ஹெஸியோன்: தெரிய வில்லையா ? சாத்தானின் பேத்திகள் மைத்துனரே ! அதாவது எம்மைப் போன்ற பேரழகிகள் !

ஹெக்டர்: (படுத்தவன் எழுந்து கைகளைத் தூக்கி) கேடு காலம் வருகுது ! கடவுளே ! எம்மைக் காத்திடு இந்த சாத்தான் தூண்டியிலிருந்து !

மிஸ். எல்லி: இந்த உலகில் நேர்மையான மனிதர் எவரும் இல்லை, என் தந்தை, ஷேக்ஸ்பியரைத் தவிர ! மிஸ்டர் மாங்கனின் செல்வம் மெய்யல்ல ! ஹெஸியோனின் குணாதிசயம் மெய்யல்ல அவளது அழகிய கருங் கூந்தலைத் தவிர ! மேடம் எரியட்னி மேனி எழிலும் மெய்யான தில்லை.

ஹெக்டர்: ஷேக்ஸ்பியர் எங்கே இருக்கிறார் ?

எரியட்னி:: என் முடி பொய்முடி யல்ல ! நிஜ முடி நிறத்தைத் தவிர !

மாங்கன்: (திடீரென்று கோட்டைக் கழட்டிக் கொண்டு கவனத்தைத் திருப்ப) எல்லாரும் பாருங்கள் ! நான் இங்கே அம்மணமாய் நிற்கப் போகிறேன் !

எரியட்னி, காப்டன், ஹெக்டர், எல்லி: (அலறி எழுந்து நின்று) வேண்டாம் மிஸ்டர் மாங்கன் ! நிறுத்து ! கோட்டை எடுக்காதீர் !

ஹெஸியோன்: (சிரித்துக் கொண்டு) உமக்குப் பைத்தியம் பிடித்து விட்டது மிஸ்டர் மாங்கன் ! உம்மைச் சுற்றி மூன்று மாதர் நிற்பது கூட உமக்குத் தெரிய வில்லை ! வயதாக, வயதாக உமக்கு மூளைக் கோளாறு உண்டாகுது ! நாணம் இல்லையா உமக்கு ?

மாங்கன்: நாணமா ? சொல் ! இந்த இல்லத்தில் யாருக்கு நாணம் உள்ளது ? நாம் எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அம்மணக் காட்சியில் நின்றால் என்ன ? நான் முதலில் எனது உடுப்புக்களைக் களைகிறேன் ! என்னைப் பின்பற்றுங்கள் ! நாமெல்லாம் ஒழுக்க நெறி தவறி ஏற்கனவே நமது இதயங்கள் அம்மணமாய் ஆகி விட்டன. வெளி உடல் மட்டும் ஏன் ஆடையால் மூடப்பட வேண்டும் ? என்னால் இந்த உடம்போடு ஒட்டி வாழ முடிய வில்லை ! நானதைத் தண்டிக்க வேண்டும் ! நெறி தவறி நடப்பதால் நீங்களும் உமது உடம்பைத் தண்டிக்க வேண்டும். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். உமது பழிகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்குது என்னுள்ளம் ! ஒவ்வொரு முறையும் உங்களில் ஒருவர் வாயைத் திறக்கும் போது என் கையும் மெய்யும் இப்படிக் கோணிப் போகுது !

(தொடரும்)

*******************************

தகவல் :

Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)

(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(D) Heartbreak House By : Elyse Sommer.

(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)

(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)

(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 24, 2011)

Series Navigation<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station] >>

This entry is part 3 of 42 in the series 20110327_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா