விஸ்வரூபம் அத்தியாயம் 75

இரா.முருகன்


1915 – நவம்பர் 30 ராட்சச வருஷம் கார்த்திகை 15 திங்கள்கிழமை ,

பட்டணம் இந்தப் பத்துப் பதினைந்து வருஷத்தில் எத்தனையோ மாறிடுத்து.

எல்லோரும் எந்தக் காலத்திலும் சொல்கிற வார்த்தைதான். நாசுக்காக கப்பலில் வந்து இறங்கி குடை பிடித்துக் கொண்டு சாரட்டில் போகிற துரையானாலும் சரி, தெவசம் செய்விக்கிற விஷ்ணு இலைக்கார ஸ்மார்த்த பிராமணனாக இருந்தாலும் சரி, கொத்தவால் சாவடியில் கத்தரிக்காயை மூட்டையாகக் கொட்டி வைத்து கூவிக் கூவி விற்கிற ஆற்காடு முதலியானாலும் சரி ஏகோபித்துச் சொல்கிற சொல். தெரிசாவும் இன்னொரு தடவை தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

நாளை மறுநாள் தான் கப்பல் ஏற வேண்டும். பம்பாய் வரை போய் அங்கே இன்னொரு கப்பல். அது ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு இங்கிலாந்து போய்ச்சேர கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிடும். டோவரில் இறங்கி, லண்டன். வீட்டில் ஒரு வாரம் இருந்து விருத்தியாக்கிவிட்டு, வர்த்தமானங்கள் ஏதும் இருந்தால் கவனித்து விட்டு, எடின்பரோவுக்குக் கிளம்ப வேண்டியதுதான்.

பீட்டர் வந்திருப்பானோ? வந்திருந்தால் எப்பாடு பட்டாவது தந்தி அடித்துச் செய்தி சொல்லி இருப்பானே.

கண்ணூரில் தம்பி வேதையன் வீட்டு விலாசத்தை பீட்டருக்கு இங்கே வர ஒரு மாதம் முன்னதாகவே கடுதாசு எழுதி அறிவித்து விட்டுத்தான் வந்திருக்கிறாள் தெரிசா.

போயர் யுத்தம் முடிந்திருந்தால் எங்கேயாவது அதைப் பற்றி பிரஸ்தாபம் இருக்கும். கண்ணூரில் இருந்தபோது அங்கே கிடைத்த இங்கிலீஷ் பத்திரிகையைப் புரட்டியபோது உள்நாட்டு விஷயங்களோடு லண்டன், எடின்பரோ என்று சொந்த தேசம் போல் இங்கிலாந்து விவரமும் அச்சடியாகியிருந்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

அக்கா, மலையாளப் பத்திரிகை கூட இருக்கு.

துர்க்கா பட்டன் கொண்டு வந்து கொடுத்த, நாலு தாள் பழுப்பு நிறத்தில் மடக்கி, மலையாளத்தில் அச்சாகி வந்திருந்த பத்திரிகையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள்.

ஒண்ணுக்கு ரெண்டாக ரெண்டு மதத்துக் காரர்களும் பத்திரிகை அச்சுப் போட்டு இறக்குவதாகவும் யாரும் யாரையும் தூற்றுவது இல்லை என்றும் முடிந்தால் பரஸ்பரம் பாராட்டவும் செய்கிறார்கள் என்றும் அந்தப் பத்திரிகைகளைப் படித்தபோது தெரிசா புரிந்துகொண்டாள்.

அப்புறம் இன்னொரு விஷயத்தையும் தெரிசா மலையாளப் பத்திரிகைகளில் கவனிக்க மறக்கவில்லை. சரமம் என்று தலைக்கெட்டு கொடுத்து பிரதேச வாரியாக யார் எங்கே மரித்தார்கள், எத்தனை வயசு, கூடப் பிறந்தவர்கள். கட்டியோள், குழந்தை குட்டி இப்படி சகலமான விவரமும் நாலைந்து வரிக்குள் அடக்கி அந்த மரண வார்த்தைச் செய்திகள் இருந்தன.

பத்திரிகை வீட்டு வாசலில் விழுந்ததும் எல்லோரும் பரபரப்பாக அந்த சாவுத் தகவல்களைத்தான் மலையாள பூமி முழுக்க மும்முரமாகப் படிப்பதைக் கவனித்தாள் தெரிசா.

கல்யாணம் விசாரிக்க யார் யாரோ வந்து கொண்டிருக்க, வேதையன் சாய்வு நாற்காலியில் ஓய்வாக உட்கார்ந்து சாவு விவரத்தில் லயித்திருக்க, காப்பியோடு வந்த பகவதி அதை கவனித்து விட்டு இரைந்தது இப்போதும் தெரிசாவுக்கு சிரிப்பு வரும் விஷயம்.

சரியாப் போச்சு. சாருகசேரியில் குந்தி இருந்து சாவுச் செய்தி படிக்க இதான் நேரமாடா வேதையா? ஆத்துலே கல்யாணம் நடந்து குழந்தை கட்டுக் கழுத்தியா, ஆம்படையானோடு வந்திருக்கா. அவளை ஆசீர்வதிக்க எத்தனையோ பெரிய மனுஷா வந்து போயிண்டு இருக்கா. அவாளுக்கு லட்டு உருண்டையும், கை முறுக்கும், நாரிங்கா வெள்ளமும் கொடுத்து, திரிச்சு போறபோது ஒரு பையிலே தேங்காயும் பழமும் நாலு வெத்தலை, அடக்காய் முதலானதும் வச்சுக் கொடுக்க நீதானே நின்னாகணும். ஊர்லே யார் துங்கி மரிச்சா, யார் முங்கி மரிச்சா, யார் ஜீவித காலம் முடிஞ்சு போய்ச் சேர்ந்தா அப்படீன்னு தெரிஞ்சுக்காட்ட என்ன குறைஞ்சு போகும் சொல்லு. நேரம் காலம் விவஸ்தை கிடையாதோடா உனக்கு?

பகவதி அந்தப் பத்திரிகையையும் பிடுங்கி மடியில் செருகிக் கொண்டு ‘போடா, வந்தவாளைக் கவனி’ என்று வேதையனை விரட்ட, அவன் சாடி வெளியே ஓடியதைப் பார்த்து திருப்தியாகச் சிரித்ததில் பரிபூரணம் முதல் நிறையில் இருந்தாள்.

கல்யாணத்தை ஒட்டி பத்து நாள் தம்பி வீட்டில் இருந்ததில் தெரிசாவுக்கும் பத்திரிகை வந்ததும் சரம வார்த்தை படிப்பதே முதல் நித்யக் கிரமமாகி விட்டது.

மலயாளிகள் எல்லோருக்கும் சாவோடு என்னவோ அவ்வளவு சிநேகிதம். இல்லாட்ட காலமானார் சேதிக்கு இவ்வளவு பிராபல்யம் இருக்குமா?

காலேஜ் வாத்தியார்களான மருதையனும் வேதய்யனும் இதைப் பற்றி தீவிர சர்ச்சை செய்து கடைசியில் வேதய்யன் சொன்னது –

மருதையா, இதிலே இருக்கற தால்பர்யத்தை, அதாவது ருஜியை தெரிஞ்சுக்கணும்னா நீ மலையாளியா பிறந்திருந்தாத்தான் சாத்தியம்.

பகவதி அந்தப் பக்கம் வரவே அச்சானியமான பேச்சுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இதர வர்த்தமானங்கள் மட்டுமே பேசப்பட்டன பிற்பாடு.

துர்க்கா பட்டன் குதிரை வண்டியில் அழைத்துப் போக கண்ணூர்க் கடைத் தெருவில் அப்பன் ஜான் கிட்டாவய்யன் அமோகமாக ஆரம்பித்து வைத்து, இப்பவும் குடும்பப் பெயரைச் சொல்லி விருத்தியாகிற சாப்பாட்டுக் கடையில் ஒருநாள் படியேறி எல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தாள் தெரிசா.

இப்படி ஒரு சாப்பாட்டுக் கடையை வெள்ளைக்காரப் பட்டணத்திலே நடத்தினா எடுபடுமா அக்கா?

துர்க்கா பட்டன் வெகு யோசனையோடு விசாரித்தபோது, லண்டன் பட்டணத்தில் அவன் இட்டலியும் தோசையும் காசுக்கு ரெண்டு என்று கூவி விற்கிற கடை போட்டதைக் கற்பனை செய்ய தெரிசாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அப்படி ஒரு கடை இருந்தால் ஆகாரம் பற்றி அவள் ஆயுசு முழுவதுமே கவலைப்பட மாட்டாள். சின்ன வயசில் கழிக்கப் பழகியது அதன் மணம், ருசி, நிறம் இத்யாதி சமாச்சாரங்களோடு மனதில் ஆழமாகப் பதிந்து அப்புறம் மிச்ச வாழ்நாள் முழுக்க அதையெல்லாம் தேடி ஏங்க வைக்கிறது.

இந்த ரொட்டியையும், பழக்கூழையும் புளிக்குழம்பு சேர்த்துப் பிசைந்த சாதமும், உண்ணி மாங்காய் உப்பேறியும் சட்டமாகக் கழித்துப் பழகிய மனுஷி எத்தனை காலம் சாப்பிட்டு ஜீவிக்க முடியும்?

லண்டனில் பிராமணாள் சோற்றுக்கடை போட்டால் இப்படி நாலு ஆத்மாவாவது சாப்பிட வந்து நிற்காதா? துர்க்கா பட்டனை அழைத்துப் போய் ஒரு கடை.

அவளுக்கு இந்தக் கற்பனையே ரசமாக இருந்தது. பகவதி அத்தையிடம் சொல்ல அவள் திருப்பிக் கேட்டாள்.

என்னத்துக்கு இப்படி அன்ன ஆகாரத்துக்குக் கூட ஏங்கிண்டு சமுத்திரம் தாண்டி கண்காணாத தூரத்திலே இருக்கணும். நீயும் ஆத்துக்காரரும் அரசூரோடேயே வந்துடுங்கோ. அவருக்கு போர்ட் பள்ளிக்கூடத்திலே கட்டாயம் ஹெட்மாஷ் உத்யோகம் கிட்டும். இல்லேன்னா சாமாவுக்கு எஜமான ஸ்தானத்திலே டெபுடி கலெக்டர் வாய்க்காம போயிடுமா என்ன?

அத்தைக்கு ஹெட்மாஸ்டர் உத்தியோகம் இந்த காலேஜ் வாத்தியார் வேலையை விட உன்னதமானது. டெபுடி கலெக்டர் உத்யோகமோ மகாவிஷ்ணு அவதாரம்.

மருதையன் பகவதியை ரொம்பப் பாவமாகப் பார்த்துக் கொண்டு சொல்ல, வேதையனுக்கு அது ஒரு சாக்காக அத்தையை கொஞ்சம் கேலி கிண்டல் செய்து ரசிக்க அயனான சந்தர்ப்பம்.

கண்ணூரிலே சாய்ப்பன்மார் சாப்பாட்டுக்கடை வேணும்னா பீட்டர் அளியனுக்கு நான் ஏற்படுத்திக் கொடுத்துடறேன். குரிசுப் பள்ளிக்குப் போற பாதிரி, கன்யாஸ்திரிகள், அப்புறம் இங்கே சதுர்வர்ண பிரமுக மனுஷ்யர்னு அல்லோலகல்லோலப்படும். மாம்சாதி பதார்த்தங்கள்லே தால்பர்யம் பெருத்த ஊர்னா இது. அதுவும் மத்ச்யம் கழிக்கறதுன்னா கேட்கவே வேண்டாம்.

சொன்னபடி பரிபூர்ணத்தைப் பார்க்க, அவள் இல்லையில்லை என்று சக்தமாகத் தலையாட்டி மறுப்புத் தெரிவித்தாள்.

ஏதோ அறியாப் பருவத்துலே சாப்பிட்டிருப்பேன். இங்கே கல்யாணம் கழிச்சு வர்றதுக்கு வெகு நாள் முந்தியே அந்த கருமாந்திரத்தை விட்டொழிச்சாச்சு. பூண்டு மட்டும் ஜன்மவாசனையோ என்னமோ விடாம ஒட்டியிருந்து உசிரை வாங்கறது.

பகவதி அவளைப் பரிவாகப் பார்த்துச் சிரித்தாள்.

என்ன உசிதமானதுன்னு படறதோ சாப்பிடுடி பரி. இவன் கிடக்கான். தொட்டதுக்கெல்லாம் கொனஷ்டையும் கேலியும். பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து மாமனாரும் ஆயாச்சு. இன்னும் பாரு, சாருகசேரயில் சோம்பரா சாஞ்சுண்டு சரம வார்த்தையிலே நாளப்பாட்டு நம்பூதிரியோட சம்பந்தக்கார ஸ்திரியோட மாதா மரிச்ச நூதன சமாசாரத்துலே முழுகியிருக்கான்.

ஒருத்தரை ஒருத்தர் பகடி செய்து சிரித்து, கூடி இருந்து உண்டு, பருகி, பழங்கதை சொல்லி, பகிர வேண்டியதை எல்லாம் பகிர்ந்து அசந்து உறங்கி எழுந்து ஒரு பதினைந்து நாள் விறுவிறுவென்று தெரிசாவுக்கு உதிர்ந்து போனது.

இன்னும் நாலைந்து நாள் தம்பி குடும்பத்தோடு இருக்க ஆசைதான். ஆனால் பகவதி அத்தை கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

அரசூருக்கு வந்து சாமாவையும் மற்றவர்களையும் க்ஷேமலாபம் விசாரித்துவிட்டுத்தான் பம்பாய்க்கு வண்டியேறி அங்கே இருந்து சமுத்திரம் கடக்க வேண்டும்.

மருதையனும் வெகு பிரியமாக அக்கா என்று ஆதரவாக அழைத்து இன்னொரு தம்பியாக அவளை அரசூருக்கு ரயில் வண்டியில் பகவதியோடு கூட்டிப் போனான்.

சாமாவும் அவன் பெண்டாட்டியும் சுபாவமாக தெரிசாவோடு பிரியம் காட்டியது அவளுக்கு இன்னொரு இதமாக இருந்தது. அரசூரில் கோவில் கொண்ட விசாலாட்சி சமேத விசுவநாத சுவாமியோ, சருகணி மாதாவோ, கிறிஸ்து நாதரோ இவர்களின் வாத்சல்யத்துக்கு குறுக்கே போகாமல் பக்கத்தில் இருந்து பார்த்து பூர்ண ஆசீர்வாதம் நல்கினார்கள்.

என்னோட நாத்தனார். லண்டன் பட்டணத்திலே கொடிகட்டிப் பறக்கற சீமானோட ஆத்துக்காரி. கண்ணூர்லே வீட்டு விசேஷத்துக்கு வந்துட்டு அப்படியே விச்சியா இருக்கியாடின்னு என்னையும் ஜாரிச்சுட்டுப் போக எம்புட்டுத் தூரம் வந்திருக்கா.

தாசில்தார் பெண்டாட்டிக்கு விதேசி நாத்தனாரைக் கொண்டு கச்சேரி உத்யோகஸ்தர்கள், ஊர் வர்த்தகப் பிரமுகர்களின் சகதர்மிணிகளோடு கூடுதல் பெருமை ஏற்றிக் கொள்ள வெகு இஷ்டமாக இருந்தது.

அவர்களும் சரளமாக தமிழும் மலையாளமும் கூடவே திவ்ய பாஷையான இங்கிலீஷும் சரளமாக நாக்கில் புரளும் இந்த உயர்ந்து மெலிந்த துரைசானியைப் பார்த்து அதிசயப்பட்டுப் போனார்கள். வெளுப்பு கலக்காத கறுத்த துரைசானி. நாகரீகமும், பழக்க வழக்கமும் கரைகண்டவள். தோசை சாப்பிட பிரியம் காட்டுகிறவள். கொடுக்காய்ப்புளிப் பழம் கூட கேட்டு வாங்கித் தின்றாள்.

சாமா உனக்கு பட்டணத்துலே ஹைகோர்ட் உத்யோகஸ்தர், என்னாக்க, கொஞ்சம் உயர்ந்த ஸ்தானம் வகிக்கறவா யாராவது தெரியும்னா சொல்லு. ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு.

விசாலம் பெரியம்மா புகை ரூபமாக தீபஜோதி கல்யாண நேரத்தில் வந்து பேசினதோ, அல்லது பேசினதாக தனக்கு பிரமை ஏற்பட்டதோ, ஏதோ ஒரு தருணத்தில் சொன்னது தெரிசாவுக்கு நினைவு வரவே சாமாவைக் கேட்டாள்.

கோர்ட் உத்யோகஸ்தன் வீட்டுப் பரண்லே ஸ்தாலிச் சொம்புலே பிடி சாம்பலாக் கிடக்கேண்டி குழந்தை. மத்தவா எல்லாம் உசிரோடு இருந்தும் உடம்பு விலகி நடந்துண்டு இருக்கா.

விசாலம் பெரியம்மாவை மட்டுமாவது அஸ்திக் கலசம் கிடைத்தால் வாங்கி, சாமா மூலமோ பகவதி அத்தை மூலமோ காசிக்கோ ராமேஸ்வரத்துக்கோ போகச்சொல்லி கடைத்தேற்ற முடியும். மகாதேவ அய்யன் குடும்பத்தின் மிச்சப்பேர் ஸ்திதி அவள் எத்தனை பிரயத்தனப்பட்டாலும் சரியாகாது போல.

நாளைக்கோ, இன்னும் நூறு இருநூறு வருஷம் போயோ விஞ்ஞானம் முன்னேறி மனுஷன் காலத்திலும் யாத்திரை செய்ய ஒரு சூழ்நிலை வருமானால் அவர்களுக்கு ஒரு நல்ல கதி திரும்பக் கிடைக்கலாம். அதுவரை உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குக் கிடைக்க என்ன செய்தால் முடியும்?

அவளுக்குத் தெரியவில்லை. கில்மோர் தெரு கன்யாஸ்திரிகளிடம் பேசலாம். அவர்கள் ஆவிகளோடு பேசுகிறதே கிறிஸ்து மதத்தில் தடைசெய்யப் பட்டது. இப்படிக் காலம் கடந்து ஜீவிக்கிறவர்களோடு அதே ரீதியில் பேச முயற்சி செய்து, அவர்களை நல்லடக்கம் செய்ய யூதமொழி உச்சாடனங்களை உருவேற்றியது அதைவிடப் பெரும் தவறு.

மாற்றித் தரமுடிந்தால் அது தெரிசாவுக்கு நன்மையாக இருக்கும். குட்டியம்மிணியும் பர்வதவர்த்தினியும் அவ்வப்போது கண்ணில் பட்டு, ரொட்டியும் வஸ்திரமும், ரெண்டு வார்த்தை ஆறுதலான பேச்சுமாக கூட இருந்துவிட்டுப் போகட்டும். தெரிசா ஆயுசோடு இருக்கும்வரை இதை நடத்தித்தர எந்தத் தடையும் அவளுக்கு இல்லை.

ஹைகோர்ட் உத்யோகஸ்தர் விவரம் கேட்டியே அக்கா. ராத்திரி முழுக்க உக்கார்ந்து யோஜிச்சு விடிகாலையிலே நினைவு வந்தது. நம்ம நீலகண்டன் அங்கே தான் நேவிகேஷன் ஆபீஸ்லே பெரிய உத்யோகத்துலே இருக்கான். உறவு என்னன்னு கேட்காதே. சொல்ல ஆரம்பிச்சா என் தலையும் உன் தலையும் பொடிக்கடை பொம்மை மாதிரி சுத்த ஆரம்பிச்சுடும். எனக்கு தாயாதி. அம்புட்டுத்தான். அவன் விலாசம் தரேன். கப்பலேற முந்தி போய்ப் பாரு. அவனுக்கு ஹைகோர்ட்லே ஜட்ஜ்மார் கூட அன்னியோன்யமான சிநேகிதம்னு சொல்வான்.

சாமா கொடுத்த நீலகண்டனுடைய விலாசத்துக்கு மதராசில் தெரிசா போனபோது வீட்டு வாசலில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைக்கு மொட்டை பிரார்த்தனை நிறைவேத்தறதுக்காக திருப்பதிக்கு குடும்பத்தோடு போயிருக்கார் துரைசானியம்மா.

பக்கத்து வீட்டுக்காரர்கள் புடவை கட்டிய துரைசானிக்கு ஏக மரியாதையாக விவரம் சொன்னார்கள்.

விசாலம் பெரியம்மா, இன்னும் கொஞ்ச நாள் பரணில் கஷ்டத்தை சகித்துக் கொண்டிரு. வேறே ஏற்பாடு செய்யமுடியுமான்னு பார்க்கிறேன்.

கப்பல் பயணமானபோது மேல்தளத்தில் நின்று சென்னைப் பட்டணத்தை வெறித்த தெரிசா தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

போடி போக்கத்தவளே. உன்னாலே ஒரு குசுவும் முடியாது.

மேலே கூவிக்கொண்டு பறந்த பறவையை அவளுக்குத் தெரியும்.

கிடக்கு போ சவமே.

கையை வீசி அதை விரட்ட, அலைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிச் சிரித்தபடி கூடவே வந்து கரைந்து போனது.

தெரிசா மட்டும் கப்பல் மேல்தளத்தில் இன்னும் நிற்கிறாள்.

(தொடரும்)

Series Navigation<< வரிக்காடு<< சிநேகப் பொழுதுகள்!<< வேனில் தமிழ் விழா<< சூரல் பம்பிய சிறுகாண் யாறு 0 நூல் வெளியீட்டு விழா<< வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும் நூல் வெளியீட்டு விழா<< சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் – ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாக்கள்<< மியம்மார் அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப்<< ராமபிரானை வன்புணர முற்பட்டவள் சூர்ப்பனகை<< பரீக்‌ஷா நாடகம் :<< ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011<< வாக்கு பெட்டி<< ப.மதியழகன் கவிதைகள்<< உன்னிடம் நான்<< காணாமல் போனவைகள்<< வன ரகசியம்<< சுமை தூக்குபவன்<< சாட்சி<< ஓர் பரி ….<< கால தேவா<< ‘இவர்களது எழுத்துமுறை’ – 34 வாசவன்<< ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6<< இருப்பின் நிலம்..<< ராஜா கவிதைகள்<< ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு – பகுதி ஒன்று (1)<< (66) – நினைவுகளின் சுவட்டில்<< பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு<< எப்ப போவீங்க..?<< “அமீருக்கு இரண்டு பங்கு கேக்!”<< ஏமாற்றாதே.. ஏமாறாதே<< மிதந்தது கொண்டிருந்தது மேகம்<< வீடு<< பின்தொடர்கிறேன்..<< “தரையில் இறங்கும் விமானங்கள்” நூல் விமர்சனம்<< கீழவெண்மணி நிகழ்வும் பதிவும்<< உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி<< திரைக்குள் பிரதிபலிக்கும் நிழல்<< இலையாய் மிதந்தபடி..<< நானென்னை தொலைத்துவிடும்படி<< தோழி பொம்மை..:_<< பின்னிரவின் ஊடலில்…<< ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -1) >>

This entry is part 1 of 46 in the series 20110417_Issue

இரா.முருகன்

இரா.முருகன்