அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து

செந்தில்



—-

அடுத்த மாதம் நடை பெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான இடதுசாரி கட்சிகளும், தேமுதிக, மதிமுகவும் முழு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதோடு அல்லாமல், திமுகவும் காங்கிரசும் முழு வீழ்ச்சியடைந்து தமிழக அரசியலின் வருங்கால வரலாற்றில் இருந்து முழுவதும் நீக்கபடுவதற்க்கான அறிகுறிகளும் தென்படுகிறது எனலாம். (இந்த வெற்றி வாய்ப்பை தட்டிபறிக்க மக்களை திசைதிருப்ப தீவிரவாத செயல்களை அன்னிய சக்திகள் துணையுடன் சிலர் மேற்க்கொள்ளலாம்!!!).

ஊழலினால் இழிவடைந்த திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் (ஆசாமிகள்!) படுதோல்வியடைந்து சிறைக்கு செல்வது, ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் இடதுசாரி தலைவர்களுக்கு மகிழ்வை அளித்தாலும், வெற்றியடையும் கூட்டணிக்கு (வெற்றி யாருக்கு கிட்டினும்!) தேர்தலுக்கு பின் ஆற்ற வேண்டிய சமூக கடைமைகள், அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு செய்ய வேண்டிய நற்காரியங்கள் மிக பல உள்ளன.

ஆட்சி மாறினாலும், தற்பொழுது திமுகவும் காங்கிரஸ் கட்சியும் சந்தித்த அதே பொருளாதார கொள்கை, வெளியுறவு, தமிழீழ தேசிய இன உரிமை, மீனவர்கள் பிரச்சனை, விலைவாசி உயர்வு, கிராமங்கள் மற்றும் விவசாயிகள் நலன், வேளாண்மை உற்பத்தி, ஊழல் லஞ்ச ஒழிப்பு, தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழ் தேசிய உணர்வுகள் குறித்த கொள்கைகள் என பல்வேறு சிக்கல்களை அதிமுகவும் அதன் தோழமைகட்சிகளும் மறுபடியும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்குறித்த பல பிரச்சனைகளில் அதிமுக காட்டிய அழுத்தம் வேகம் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லை என்பது உண்மைதான். அதற்க்கு காரணங்கள் சில. 1) இவையெல்லாம், இந்திய தேசியத்திற்க்கு எதிரானது என போலி தேசபற்று; 2) குறிப்பாக, தமிழீழ மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி குறித்து சில கட்சிகள் மக்களை திரட்டும் போதெல்லாம் அவர்கள் மீது சுமத்தபடும் குற்றசாட்டு “பேரினவாதம்; தீவிரவாதம்; தேச துரோகம்”. இந்த பிரச்சனைகளின் தீவிரம் அதிகமாகும் போதெல்லாம், பல தலைவர்களின் நலம் குறித்து வெளியாகும் செய்திகள்! (அல்ல. பொய் வதந்திகள், அவதூறூகள்!!) அவர்கள் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து என்பதும்தான். 3) இந்த வதந்திகளை அதிகம் பரப்புவது ஊழலை ஒழிக்க முதுகெழும்பில்லாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலைபோய்விட்ட உளவு நிறுவனங்களும், அடுத்த நாடுகளின் வியாபார அரசியல் தலைவர்களுக்கு குடை பிடிக்கும் பத்திரிகையாசிரியர்களும் வெளியுறவு துறை அதிகாரிகளும். இதில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் தலைகளும், சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்களும் உண்டு. இது போன்ற குறுகிய குருட்டுவாத ஆசாமிகளிடம் இருந்தும் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் விலகியே நிற்க்க வேண்டும். 4) இவர்கள் கட்சிகளில் உள்ள இவர்களை சுற்றியுள்ள ஜால்ராக்களையும்(sycophants) ஊழல் பேர்களையும் கவனித்து அவர்களிடம் இருந்தும் விலகியிருக்கத்தான் வேண்டும்.

இந்திய தேசியம் முக்கியம்தான், ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் முதலில் தமிழ் மக்களின் தலைவர்கள் என்பதை ஆழமாக உணர்ந்து அவர்களின் உணர்வுகளுக்கு உண்மையில் மதிப்பளிக்கும் (அண்ணா, காமராஜ், மற்றும் எம்.ஜி.ஆர் போன்று) வகையில் தங்கள் கொள்கைகளை செயல்பாடுகளையும் வகுக்க வேண்டும். இனப்படுகொலையால் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் ஈழ மக்களின் தேசியம்-தனி நாடு குறித்து ஆதரவு தெரிப்பது எந்த விதத்திலும் இந்திய தேசியத்திற்க்கு எதிரானதல்ல. இன்னும் சொல்ல போனால், தமிழ் ஈழ தேசியத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதுதான் இந்தியாவின் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும். ஊழல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்கள் போடும் எழும்பு துண்டுகளுக்கு அடிமையாகிவிட்ட இந்திய உளவு மற்றும் வெளியுறவு துறைகளின் திட்டங்களை மாற்றுவதும் புதிய அரசின் கடமையாகும். சாதிக்கொடுமைகளுக்கு எதிரான கொள்கைகள் எடுப்பது, இந்து மதத்தில் (எந்த மதமாகினும்) உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது, கோவில் மத, வழிபாடுகள் மற்றும் சடங்குகளில் தமிழ் மொழியின் பங்களிப்பிற்க்கு முன்னுரிமை அளிப்பது, சாதிய தாக்கங்களை அகற்றுவது என்பதெல்லாம் இந்து மதம் மற்றும் ஆன்மிக வளர்ச்சிகு எந்த விதத்திலும் எதிரானதோ, துவேஷமோ அல்ல; (சோவும் சுப்பிரமணிய சுவாமியும் சொல்வது போல!!!).

தொழிளாளர்கள் உரிமைகள், விவசாயிகள் நலன் குறித்தும், பொது நல திட்டங்களை ஏற்படுத்தி, அவைகளை செயல்படுத்துவது எந்த விதத்திலும் தொழில் வளர்ச்சிக்கு எதிரானதல்ல. (இந்திய வியாபார திலகங்கள் சொல்வது போல!). அதீத வருமானம் மற்றும் சொத்துகள் குவித்து வைத்திருப்பவர்கள் (பெரும் வியாபாரிகள், கார்ப்பரேட் மேலாளர் முதலாளிகள் மீது சரியான அதிக வரிவிதிப்புகள் செய்து அந்த வரிப்பணதின் மூலம் மக்கள் கல்வி, காப்பீடு, சுகாதார, போக்குவரத்து திட்டங்களை ஊழல் இன்றி திறம்பட செயல்படுத்துவதுதான் இவர்களை வரலாற்றில் நிலை நிறுத்தும். சாராய வியாபாரத்தை ஒழுங்குபடுத்தி, சாராய, மது வியாபாரம் செயல்படும் நேரங்களை வெகுவாக குறைத்து தமிழகத்தை காப்பாற்றுவதும் புதிய அரசின் கடமையாகும். கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களில் உள்ள ஊழலை சீர்கேடுகளை ஒழித்து கல்லூரிகள், பள்ளிகளை மேன்மை படுத்துவது தலையாய கடமையாகும். ஜெயலலிதாவும், விஜயகாந்தும், வை. கோவும், இடதுசாரி கட்சிகளும் இவற்றை கருத்திலும் செயல்திட்டங்களிலும் கொண்டு செயல்படுவார்கள் என நம்புவோமாக

Series Navigation29 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29 >>

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

செந்தில்

செந்தில்