சொர்க்கவாசி;-

தேனம்மை லெக்ஷ்மணன்


கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து
கீழிமைவழி கசிந்தன.
புத்தக வாசத்தோடே
பலகனவுகளும்.

அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும்
ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது
இன்னும் பேர்காணும்
பேரின்பம் வேண்டி.

பெரிய விதையாயிருந்தும்
கிளைப்பது சின்னச்செடி
தலை சுற்றிப் பார்க்கிறது
சிறு விதை விருட்சங்களை.

வீரியம் அடக்கின செடிகளுக்கு
வெடித்தபின் வாய்க்கிறது
எட்ட நினைத்த உயரம்
அளந்து வைத்த அளவு.

ரோஜாக்கள் மரமாவதில்லை
மாட்சிமை விருது பெறுவதில்லை
எனினும் கிடைக்கிறது
விருதளிப்பவரின் இதயத்தில் இடம்

புத்தக அடுக்குகளூடே
ஒரு சோடா புட்டிக் கண்ணாடியும்
ஒரு புதைகல்லறையும்
கிடைக்கப்பெற்றவர் சொர்க்கவாசி.

Series Navigation<< பலூன்பம்பரம் >>

This entry is part 63 of 43 in the series 20110529_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்