ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12

சத்யானந்தன்


ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதன் என்பதா- சமுதாயத்தின் அங்கம் என்பதா? இந்தக் கேள்வி நம்மை அதிகார மையத்துடன் நெருங்கிய இரு சாராரிடம் அழைத்துச் செல்கிறது. ஒருவர் அதிகாரத்துக்கு மிக அருகாமையில் அதைப் பயன்படுத்தும் பெரு வாய்ப்புக் கொண்டோர். இவரால் பாதிக்கப் படுவோரே இன்னொரு சாரார். சமுதாயம் மற்றும் அரசாங்கம் என்னும் இரு முக்கியமான அமைப்புகள் பற்றிய ஒரு கேள்வி எப்போதும் தொக்கி நிற்கும். “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழியா? மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழியா?” இதற்கான விடை நமக்கு உத்தர காண்டத்தில் கிடைக்கும்.

உத்தர காண்டத்தை வாசிப்பு வசதிக்காக இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதற் பகுதியில் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு பல முனிவர்கள் ராமனை சந்திக்கின்றனர். அப்போது ராவணன், வாலி மற்றும் அனுமனின் தனி வரலாறுகள் நம்முன் வருகின்றன. இரண்டாம் பகுதி யுத்த காண்டத்தின் முடிவில் சீதை அக்கினிப் பிரவேசம் செய்த சூழலின் தொடர்ச்சியாக வருகிறது. லவகுசர்களின் பிறப்பு வளர்ப்பு, மற்றும் ராமனின் அசுவமேத யாகம் வழி தந்தை மகன்கள் சந்திப்பு , பிறகு சீதை பூமித்தாயின் மடியில் மறைதல், இறுதியாக ராமன் மற்றும் சகோதரர்களின் முடிவு ஆகியவை வருகின்றன.

சீதை மீண்டும் வனவாசம் சென்றது மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு வரலாறாகும். முதலில் ஒட்டக்கூத்தரின் சொற்களில் காண்போம்:

வாளணி விசயன் பத்திரன் தந்தவக்கிரன்
காளியன் முதலோர் சொற் பரிகாசக் கதைகள் கேட்டினிது கொண்டாடி
(பாடல் 724 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஆங்கவரிவ்வாறு உரைத்திடக் கேட்ட அரசர் கோன் அவர்களை நோக்கி
நாங்கள் இந்நகரில் நாட்டினில் பிறக்கும் நன்மையுந் தீமையுங் கேட்டுத்
தீங்கவை அகற்றிச் சிறந்தன செய்ததும் செய்யும் இவ்விரண்டும் நீர் கேட்ட
நீங்கள் ஒன்றுக்கும் கூசலீர் என்ன நின் பல கேட்டி என்றுரைப்பார்

(பாடல் 729 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

மன்னவன் ராமன் மானபங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்
கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள்
நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெரு நிலத்தோர்

(பாடல் 728 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஓதநீர் வேலையுலகு உளோர் இல்லது உளது எனில் உள்ளது ஆம் உள்ளது
யாதொரு பொருளை இல்லையென்று உரைக்கில் இல்லையாம் ஈது உலகியற்கை
ஆதலால் அவளை அருந்தவத்தோர்கள் ஆசிரமத்து அயல் விடுத்தும்
ஈது நான் துணிந்த காரியம் இனி வேறு எண்ணுவதொரு பொருளில்லை

(பாடல் 732 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

பொருள்:
ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறிய நாட்டு நடப்பு பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்த ராமன்”நீங்கள் நல்லதும் கெட்டதுமானவற்றைப் பார்த்துச் சொல்லுவதில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளி மீதியைச் சொன்னீர்கள். நடப்பு எதுவோ அதைக் கூசாமற் கூறுவீராக” என்றான்.

பிறகு அவர்கள் “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார். வானவர்களுக்குத் தீங்கிழைத்த ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே” என மக்கள் பேசுகின்றனர் என்றார்கள்.

கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே உண்மை. அவர்கள் இது இல்லை என்று கூறினால் இருக்காது என்று பொருள். இதுவே உலக இயற்கை. எனவே அவளைத் தவம் புரியும் முனிவர்களது ஆசிரமத்துக்கு அருகே விடுவோம். இதுவே என் தீர்க்கமான முடிவு. இதில் மாற்றமில்லை.

இதைத் தொடர்ந்து லட்சுமணன் வால்மீகி ஆசிரமம் அருகே சீதையை விடும் போது கூறுகிறான்.

நன்னெறி நகரும் நாடும் கடந்து போய் அடவி நன்னித்
தன்னுயிர் தன்னை விட்டுத் தடம் புகழ் கொண்ட ஐயன்
இன்னுயிர்த் தோழனாய் வெழில் கொள் வான்மீகி வைகும்
பங்கை சாலையின் பாற் பாவையை விடுதி என்றான்

என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி
இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல
கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை
தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள்

(பாடல் 752, 753 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

பொருள்: நன்னெறியில் வாழும் நாட்டின் மன்னரான தசரதன் நகர் நாடும் தாண்டிப் புகழ் பெற்றவர். அவது உயிர்த் தோழரான வால்மீகியின் ஆசிரமத்திற்கு அருகே அவளை விடுக என்றான்.

அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று உன்னைக் கொண்டு வந்தேன் என்று லட்சுமணன் கூறியது பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் வீழ்ந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச
வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி

பொருள்: தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது. என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது. (பாடல் 3, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா
அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம்

பொருள்: (ராமன் தன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்வது) மனிதருள் உயர்ந்த என் உறவுகளே ! மக்களின் நிந்தனைக்கு அஞ்சி என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார். சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. (பாடல் 14, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

கங்கா வாஸ்து பரே பாரே வால்மீகேஸ்து மவாத்மனஹ
ஆஷ்ரமோ திவ்யாஸ்ன்ஷஸ்தம்ஸாதிரமார்ஷிதஹ
தத்ரைதாம் விஜனே தேஷே விஸ்ருஜ்ய ரகுநந்தன
சீக்ரமாகச்ச சௌமித்ரே குருஷ்ய வசனம் மம
தஸ்மாத் த்வாம் க்ச்ச சௌமித்ரே நாத்ர கார்யோ விசாரணா
அப்ரீதர்ஹி பரா மஹ்யம் த்வயைதத் ப்ரதிவாரிதே

பொருள்: கங்கையின் அந்தக் கரையில் மகாத்மா வால்மீகி முனிவரின் திவ்ய ஆசிரமம் உள்ளது. நீ சீதையை அந்த ஆசிரமத்தின் அருகில் விட்டு விடு. சீதை விஷயத்தில் நீ வேறு எந்த விஷயத்தையும் என்னிடம் கூறாதே

எனவே லட்சுமணா ! நீ இப்போது போ. இவ்விஷயத்தில் எதையும் யோசிக்காதே. நீ எனது இந்த முடிவில் தடை ஏற்படுத்தினால் எனக்கு மிகவும் கஷ்டம்.

(பாடல் 17,18,19,20 ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

ஸாத்வம் த்யத்வா நிருபதினா நிர்தோஷா மம சன்னிதௌ
பௌராபவாத்பீதேன க்ராஹாம் தேவி ந தேஅன்யதா
அஷ்ரமாந்தேஹு ச் மயா த்ய்க்த்வ்யா த்வம் பவிஷ்யஸி
ராக்ஞஹ ஷாஸ்ன்மாதாய ததைவ சில தௌர்வாதம்

பொருள்: நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம் என்றும் நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு விடுவேன். (பாடல் 13,14 ஸர்க்கம் 47 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

லக்ஷ்மணஸ்ய வசஹ ஸ்ருத்வா தாருணம் ஜனகாத்மஜா
பரம் விவிதமாகம்ய வைதேஹி நிப பாத ஹ

பொருள்: லட்சுமணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள். மூர்ச்சையுற்று தரையில் விழுந்தாள். (பாடல் 1, ஸர்க்கம் 48 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி என்பதே ராமனின் தீர்க்கமான முடிவாயிருந்தது. இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே மன்னன் எதிர்பார்க்கிறான். இது ராமனின் தரப்பு.

இதன் மறுபக்கமாக மக்கள் மன்னனைக் கடவுளுக்கு அடுத்தபடியாக வணங்கினர். மன்னனும் மன்னன் குடும்பமும் நாட்டை வழி நடத்தாத ஒரு சூழலை யாரும் கனவு கூடச் செய்யவில்லை. ஆனால் ஒரே பரம்பரையில் தந்தைக்கும் மகனுக்கும் வெவ்வேறு அணுகுமுறை இருந்ததைப் பின்னர் நாம் விவாதிக்கப் போகிறோம். தனிமனித அணுகுமுறையால் மன்னர் குடும்பத்துக்குள் இருந்த மிகப் பெரிய போராட்டங்கள் பற்றியும் இறுதியாக விவாதிப்போம். மன்னன் செங்கோல் என்னும் அதிகாரத்துடன் அடையாளம் காணப் பட்டானே ஒழிய சமுதாய மறுமலர்ச்சி அல்லது பண்பாட்டுக்குப் புத்துயிர் என்னும் மிகப் பெரிய சிந்தனைத் தடத்துப் பயணங்கள் அவனுடைய தேர் செல்கிற பாதைகளில் இல்லை.

சீதையைத் தனியே காட்டுக்கு அனுப்பியது இதே சூழலில் தான். அதுவும் அவள் கருவுற்றிருந்தாள் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்று. அந்த நிலையிலும் அவள் காட்டுக்கு அனுப்பப் பட்டாள்.

பிறகு வால்மீகி என்னும் முனிவரின் பராமரிப்பில் மகன்களை வளர்த்து அம்மகன்கள் அசுவமேத யாகத்தின் போது வந்த குதிரையைப் கைப்பற்றி சித்தப்பாக்களுடன் சண்டையிட இறுதியில் அப்பாவை நோக்கி அம்பு எய்யும் முன் சீதை வந்து தடுக்கிறாள். மறுபடி அயோத்தி வந்த அவளைத் தன் தூய்மையை நிரூபிக்கும் படி ராமன் ஆணையிட பூமித்தாயின் மடியில் ஐக்கியமாகிறாள்.

ஒட்டக்கூத்தரின் பாடல்களில் :

வால்மீகி முனிவரை நோக்கி ராமன் கூறுவான்:
முனிவ நீ அறுளிய மொழியை வானவர்
அனைவரும் யானும் முன்னறிவம் ஆயினும்
கனைகடல் உலகு உளோர் காணல் வேண்டும் என்று
இனையன இராகவன் எடுத்து இயம்பினான்

பொருள்: ‘முனிவரே ! தாங்கள் கூறுவதை நானும் வானோரும் ஏற்கனவே நன்கு அறிவோம். ஆயினும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகிலுள்ள மக்கள் சீதையின் கற்பின் சிறப்பை அறிய வேண்டும்.(பாடல் 1257 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

விசைப் பாசத்தை அறுத்த முனி வேள்வி காத்து மிதிலை புகுந்து
எனக்கா ஈசன் வில்லிறுத்து அன்று எனக்கைப் பிடித்த எழிலாரும்
புனக்காயம் பூ நிறத்தானையன்று ம்ற்றொரு பூ மனலான்
மனத்தால் வாக்கால் நினையேனேல் வழிதா எனக்கு மண்மகளே
.(பாடல் 1264 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

பொருள்: பாசம் நீக்கிய பற்றற்ற விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்துப் பிறகு வில்லை ஒடித்து என்னைக் கைப் பிடித்த ராமனை அன்றி வேறு ஒரு மன்னனை நான் மனதாலோ வாக்காலோ நினையாதும் சொல்லாதும் இருந்தது உண்மை என்றால் மண்மகளே எனக்குப் பிளந்து வழி விடு.

சேணுலாவிய தலமடந்தை சீதை தன்
பூணுலாவிய புலம் பொருந்தப் புல்லுறுஇ
வாள் நிலாவிய கதிர் வழங்கல் செல்கலாக்
கீணிலைப் படலமும் கிழியப் போயினாள்

பொருள்: நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சீதையின் தோள்களைப் பற்றி தேவ லோகத்திலிருந்து வந்தவளான பூமாதேவி சூரியனின் ஒளிகூட நுழைய முடியாத பூமியைப் பிளந்து உள்ளே சென்று மறைந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
ஷீவஹ ப்ரபாதே து ஷபர்த் மைதிலி ஜனகாத்மஜா
கரோது பரிஷன் மத்யே ஷோதனர்த்தே மமைவ ச

பொருள்: நாளை காலை மிதிலை மன்னரின் மகள் நிறைந்த சபையில் வந்து எனது களங்கத்தைப் போக்கும் சபதம் செய்வாராக. (பாடல் 6 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

யனன தத் சத்யமுக்தம் மே வேம்தி ராமாத் பரம் ந ச
ததா மே மாதவி தேவி விவ்ரம் தாதுர்மஹதி
(பாடல் 16 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)
தஸ்மின்ஸ்து தரணி தேவி பாஹூப்யாம் க்ருஹ்ய மைதிலீம்
ஸ்வாகதேனாபி நந்த்யைநாமாசனே கோபவேஷயத்
(பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

பொருள்: சிம்மாசனத்துடன் பூமாதேவி அழகிய வடிவுடன் வந்தாள். அவள் மிதிலாகுமாரி சீதையைத் தனது இரு கரங்களால் எடுத்து மடியில் வைத்து வரவேற்கும் விதமாக அவளை வணங்கி சிம்மாசனத்தின் மீது அமர்த்தினாள். (பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் ராமனையும் அந்த காலத்து மக்களையும் குறை சொல்லி எளிதாக முடித்து விடலாம். மக்களின் மனப்பான்மை பெண்களை நடத்துவதில் இன்று கூட எந்த அளவு மாறி இருக்கிறது?

பெண்ணின் பிரச்சனைகள், அவருக்குத் தரப்பட வேண்டிய சம நீதி பற்றி மட்டும் பார்க்காமல் சமூக நீதி, மாற்றுத் திறனாளிகள் வாழ்வுரிமை, வறியோரின் அவல நிலை என மிகப்பெரிய பிரச்சனைகள் அவை எழுப்பும் கேள்விகளுக்கு நம்மிடையே பதில் இல்லை.

லங்கை சிறை வாசத்திலிருந்து திரும்பி வந்த சீதையை ஏற்பது எவ்வாறு என்னும் கேள்விக்கு கடைசி வரை விடை கிடைக்கவில்லை. அப்போது பூமித்தாயின் மடியில் புதைந்து மறைந்தது சீதை மட்டுமே.

இன்றும் விடை தெரியாத கேள்விகளை சமூகம் புறக்கணிக்கிறது. சீரிய சிந்தனையாளர்கள் அதிகார மையங்கள் முன் கையறு நிலையில் வெட்கமுறுகிறார்கள்.

ராமாயண வாசிப்பை முடித்து விட்டோம். ஒரு மனிதனின் அடையாளம் என்ன தனி மனிதனா அல்லது சமூக அங்கமா என்பது பற்றி அவ்வாசிப்பில் நாம் பெறும் புரிதலை அடுத்த பகுதியில் பகிர்வோம்.

Series Navigation<< கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா. >>

This entry is part 74 of 43 in the series 20110529_Issue

சத்யானந்தன்

சத்யானந்தன்